அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஆனால்... ஆகவே...!
1

தமிழர் பிரச்சினையும் காமராஜரின் போக்கும் - அடக்குமுறையும்

தம்பி!
ஆனால்... ஆகவே... எளிதாகப் பொருள் விளங்கி விடுகிறது என்று எவரும் கருதிக்கொண்டுள்ளனர்; அன்றாட உரையாடலிலிருந்து பாராளுமன்றப் பேச்சுவரையில் மிகத் தாராளமாகப் பயன்படுத்துகின்றனர், இந்த இரு சொற்களை. ஆனால்... ...? பார்த்தாயா, தம்பி, நாலு வரி முடிவதற்குள் இந்த ஆனால் எனும் சொல் வந்து தொலைக்கிறது. ஆகவே இதிலிருந்து என்ன புரிகிறது?... ... மீண்டும், பார், தம்பி. ஆனால் எனும் சொல்போலவே, ஆகவே என்ற சொல்லையும் அழைத்துக் கொண்டேன். அந்த அளவுக்கு எவருடைய பேச்சிலும் எழுத்திலும், தோழமை கொண்டாடிக்கொண்டு, ஆனால், ஆகவே எனும் இந்த இரு சொற்களும் இடம்பெற்று விடுகின்றன.

பேச்சிலும் எழுத்திலும் தோழமை கொண்டாடி இடம் பெற்றுள்ள இந்த இரு சொற்களும், தம்பி, காண்பதற்கு மிக எளிதாகப் பொருள் தரத்தக்கன போல் இருக்கும். ஆனால், இந்தச் சொற்களிலே புதைந்து நிற்கும் பொருளை விளக்கிக் கொள்வது உண்மையில் எளிதல்ல.

அணு என்ற உடன், ஓஹோ! அணுவா? என்று எப்படி எவரும் மிகமிகச் சாதாரணமாகக் கூறிவிடுவதன் மூலம் அணு குறித்து அனைவரும் அறிந்துகொண்டுள்ளனர், அத்துணை எளிது, அதன் தன்மையை அறிதல் என்று எண்ணும்படிச் செய்துவிடுகிறார்களோ, அது போன்றே, இந்த ஆனால், ஆகவே எனும் இரு சொற்கள் குறித்தும், ஒருபோக்குக் காட்டப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல, இந்த ஆனால், ஆகவே எனும் இரு சொற்களையும், "அசை'க்குப் பதிலாகப் பயன்படுத்துவோரும் நிரம்ப உள்ளனர்!

ஏதேது, அண்ணா! தமிழ் இலக்கணம் பேசுவது போன்ற போக்குக் கொண்டு, தமிழ் ஆசிரியர்களின் "ஓட்டுக்களை'ப் பறிக்க முயலுகிறாயா? என்று, தம்பி, நீ கேட்க மாட்டாய் - என்னிடமும் உன்னிடமும் கடுப்புள்ளவர் பேச்சல்லவா, அது. நான், தமிழ் இலக்கணம் குறித்து அல்ல இதனை எழுதுவது - எனது இரு தமிழ்ப் பேராசிரியர்களும் - மணி திருநாவுக்கரசு, மோசூர் கந்தசாமியார், இருவரும் வெகு பாடுபட்டனர், எனக்கு இலக்கணம் கற்பிக்க, நான் தமிழின் இனிமை பற்றி மட்டுமே அறிந்துகொள்ள முடிந்தது. இலக்கணப் பயிற்சியில் என்னை வெற்றிபெறச் செய்வதிலே, எனது இரு ஆசிரியர்களும் வெற்றிபெறவில்லை, ஆகவே... பார், பார், தம்பி! மீண்டும் அந்த ஆகவே வந்து ஒட்டிக்கொள்கிறது! அடா, அடா, இந்த இரு சொற்களும், பொதுவாழ்வுத் துறையினரின் நாவிலே இருந்துகொண்டு, அவர்களையும் அவர்களிடம் தொடர்பு கொண்ட பொது மக்களையும், படுத்தும் பாடு இருக்கிறதே, தம்பி, சொல்லுந்தரத்ததல்ல.

ஒரு பிரச்சினையை விளக்கிக் கொண்டே போகிறார் ஒரு தலைவர் என்று வைத்துக்கொள் - ஏன் வைத்துக்கொள் என்று தயவாகக் கேட்டுக்கொள்கிறேன் என்றால், இப்போதெல்லாம் பிரச்சினைகள் விளக்கப்படுவதில்லை, புகுத்தப்படுகின்றன, புதிராக்கப்படுகின்றன! எல்லாத் தலைவர்களுமா அவ்விதம் என்றால், தம்பி, பெரும்பாலோர் இம் முறையைத்தான் கையாள் கிறார்கள் - வேறு சிலர், நல்ல விளக்கம் தருகிறார்கள், ஆனால் பிரச்சினைகளுக்கு அல்ல - இந்த நிலைமை இருப்பதனால்தான் பிரச்சினையை விளக்குவதாக வைத்துக்கொள் என்று தயவு கோரும் தன்மையில் கேட்டுக்கொண்டேன் - இனிக்கேள், பிரச்சினையை விளக்கியானதும், ஆனால் அல்லது ஆகவே எனும் இரு சொற்களும் துள்ளிக் குதித்து வந்து நிற்கின்றன - அந்தத் தலைவர், இந்த இரு சொற்களிலே, எதனைத் தன் பேச்சுக்கும், அதை அடுத்துத் தன் செயலுக்கும் துணையாகக் கொள்கிறாரோ, அதைப் பொறுத்துத்தான், சமுதாயத்துக்குக் கிடைக்கும் பலன் இருக்கிறது. இதைச் சொல்லத்தான் நான் இலக்கண பாடம் போன்ற முறை துவக்கினேன் - இலக்கணம் போதிக்க அல்ல.

நமது நாட்டிலே, இந்த இரு சொற்களுக்கிடையே கடுமையான போட்டிலிதலைவர்கள் திணறும்படியான நிலை ஏற்பட்டுவிடுகிறது - கடைசியில் அவர்கள், ஆனால் போடவேண்டிய கட்டத்தில் ஆகவே யையும், ஆகவே என்று கூறவேண்டிய கட்டத்தில் ஆனால் என்று கூறியும்,
பிரச்சினைகளைப் பாழடித்து விடுவதைத்தான் பெரிதும் காண்கிறோம்.

நம் நாட்டிலேயே பல பிரச்சினைகளுக்கு, எத்துணையோ முயற்சிக்குப் பிறகும், தக்கதோர் பரிகாரம் கிடைக்காமற் போனதற்குக் காரணம், இந்த ஆனால் ஆகவே எனும் இரு சொற்களும், தலைக்குப் போட வேண்டியதைக் காலுக்கும் காலுக்குப் போடவேண்டியதைத் தலைக்கும் போட்டுக் கொள்ளும் அலங்கோலம் போலப் பயன்படுத்தப் பட்டுவிடு வதுதான் என்பதை, பல்வேறு அரசியல் சம்பவங்களையும் ஆய்ந்தறிந்தால், அறிந்துகொள்ளலாம்.

பொதுவாகக் கவனிக்கும்போது ஒரு உண்மை புலப்படும்; ஆனால்... என்றசொல், இழுப்பு, வழுக்கல், திகைப்பு, திணறல், அச்சம், தயை, தாட்சணியம் போன்ற மனப்போக்கின் விளைவாக முளைப்பதையும், ஆகவே எனும் சொல், உறுதிப்பாடு, செயல்படுதிறன், எழுச்சி, முயற்சி போன்ற
போக்கிலே மலர்வதையும் உணரலாம், பெரிதும்.

எழுச்சி கொண்டோர்போல நடித்துவிட்டு, பிறகு வழுக்க விரும்புவோர், பிரச்சினை பற்றிப் பேசிக்கொண்டே வரும்போது; சரி சரி, பிரச்சனையைக் காரசாரமும் வீரதீரமும் ததும்பும் வகையில் விளக்குகிறார் இந்தத் தலைவர், ஆகவே இந்த அக்ரமத்தை ஒழிக்க வேண்டும் என்று முழக்கமிடப் போகிறார் என்று கேட்போர் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருப்பர். ஆகவே என்று சொல்வதற்குப் பதிலாக அந்த அருந்தலைவர் ஆனால் என்று இணைப்புப் போட்டு, இழுப்புப் பேச்சில் இறங்கி, வழுக்கி விழுந்து, தமது அச்சத்தையோ, அல்லது தயவு தாட்சணியத்துக்குக் கட்டுப்பட்டு விட்ட தன்மையையோ காட்டிக் கொண்டுவிடுவார்.

இதோ ஓர் எடுத்துக்காட்டு -

"நமது திட்டம் சமதர்மம், சமதர்மம்தான் நீதியையும் நேர்மையையும் அடிப்படையாகக் கொண்டது.

சமதர்ம திட்டத்தைத்தான் மக்களாட்சியின் மாண்பறிந்த நாடுகளெல்லாம் ஏற்றுக்கொண்டுள்ளன.

பாரதமும் சமதர்ம திட்டத்தை ஆவடி காங்கிரசின் போதே, ஏற்றுக்கொண்டுவிட்டது.

நேரு பண்டிதர், தமது ஆட்சியின் குறிக்கோள் யாது என்ற பிரச்சினையை இவ்விதம் விளக்குகிறார். மாம்பழத்தை, தோலைப் பதமாகச் சீவி எடுத்துவிட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கிறார். மாம்பழத் துண்டு கிடைக்கப் போகிறது, சுவை பெறப்போகிறோம் என்றுதானே எவருக்கும் தோன்றும். கிடைக்கிறதா என்று பார், தம்பி.

பிரச்சினையை இந்த ஆர்வத்துடன் நேரு பண்டிதர் விளக்கிக் கொண்டு செல்வது கண்டு, என்ன எண்ணிக் கொள்வோம்.

விளக்கத்தின் இறுதியில் ஆகவே என்று வீரச்சொல் தந்து,

ஆகவே, இந்த நாட்டிலே தொழில்களை முதலாளிகளிடம் விட்டுவைக்கப் போவதில்லை. கொள்ளை இலாபக்காரனை விட்டு வைக்கமாட்டோம்.

உழைப்பவனை வாட்டி வதைத்து ஒரு சிலர் உல்லாச வாழ்வு நடத்துததற்கு அனுமதிக்கமாட்டோம்.

என்றெல்லாம் நேரு பேசப்போகிறார். ஆர்வம் கொந்தளிக்கும், வீரம் வீறிட்டெழும் என்றுதானே எண்ணிக்கொள்வோம். அவரோ, பிரச்சினையை விளக்குவதிலே விவேகம் காட்டி விட்டு, இறுதியாக உறுதிப்பாட்டைக் குறித்திடும் கட்டம் வந்ததும், ஆகவே என்ற சொல்லை, மெல்லச் சிரமப்பட்டுத் தள்ளிவிட்டு, ஆனால் எனும் இழுப்புச் சொல்லினை இழுத்தணைத்தபடி,

ஆனால் சமதர்மம் வெற்றி பெறுவதற்கு முதலாளிகளை ஒழித்தாக வேண்டும் என்பதில்லை.

தொழில்கள் தனிப்பட்ட முதலாளியிடம் இருக்கக் கூடாது என்று சட்டம் போடத் தேவையில்லை.

இலாபம் தேடுவோரைத் தடுக்கவேண்டும் என்பதில்லை.

என்றெல்லாம் பேசுகிறார்.

திகைத்து நிற்கிறோம், திணறிப் போகிறோம், சமதர்மத் திட்டமே திக்குத்தெரியாத காட்டிலே விடப்பட்ட சிறகொடிந்த பறவை போலாகிவிடுகிறது.

தம்பி, இந்தக் கட்டத்தில் மட்டும் ஆனால் என்ற அவலச் சுவை தரும் சொல்லைக் கொள்ளாமல், ஆகவே என்ற சொல்லை இணைத்துத் தம் ஆற்றலைக் காட்டினால் எத்துணை நன்மை கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்கும்போது, ஏக்கம் பிறக்கத்தான் செய்கிறது.

சூயஸ் கால்வாய் எகிப்தின் உடமை: அதனை நிர்வாகிக்கும் உரிமையை எழுச்சி பெற்ற எகிப்து நிலைநாட்டிக்கொண்டு விட்டது - என்ற இந்த விளக்கத்தின் தொடர்ச்சியாக, ஆகவே, ஆனால் எனும் இரு சொற்களில் எது பயன்படுத்தப்படுகிறதோ அதைப் பொறுத்து, இன்றைய உலகப் போக்கே இருப்பதனை எண்ணிப் பார்த்திடும்போது, ஆனால் - ஆகவே எனும் இருசொற்களும் வடிவில் சிறியன, மகத்தான வலிவுடையன என்பதை அறிந்து கொள்ளலாம்.

சூயஸ் வரையிலே செல்வானேன், தம்பி, நமது குடும்ப விவகாரம் போதுமே. பெரியாரின் திருமணப் பிரச்சினை கிளம்பியபோது ஆனால் போட்டவர்கள் ஒரு சிலர் ஆகவே போட்டவர்கள் ஒரு சாரார் - திராவிடர் கழகம் திராவிடர் முன்னேற்றக் கழகம் எனும் இரு வடிவமே அல்லவா ஏற்பட்டு விட்டன!

தம்பி, சாமான்யமான சொற்களல்ல, இந்த, ஆனால் ஆகவே - என்பவைகள், மிகப் பொல்லாதன!!


தேவிகுளம் பீர்மேடு பிரச்சினையின்போது, அவை தமிழருக்கு உரியன என்பதற்கான காரணங்களை, வரலாற்று ஆதாரங்கள், புள்ளி விவரங்கள் ஆகியவற்றினைத் துணை கொண்டு நிதியமைச்சர் சுப்பிரமணியம் நேர்த்தியாகப் பேசினார், சட்டசபையில் - தேவிகுளம் இழந்தோம் - காரணம் என்ன? - இவ்வளவு பேசியவர், ஆகவே என்று ஆர்த்தெழவில்லை, ஆனால் என்று ஆமையானார்; சிறிது நாட்களிலே அந்தப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் ஊமையுமானார்.

ஆகவே என்ற சொல் கொலுவிருக்கவேண்டிய கட்டத்தில், ஆனால் எனும் சொல் குடிபுகுந்தது; காடும் மலையும் கவினுற விளங்கிடும் தேவிகுளம் பீர்மேடு, நெய்யாற்றங்கரை போன்ற இடங்களை இழந்தோம்.

ஆகவே என்ற சொல்லினை அமைச்சர், அரியாசனத்தில் அமர்த்தியிருந்தால், தேவிகுளம் ஆகிய பகுதிகள் தமிழர்க்குக் கிடைத்திருக்கும் அமைச்சர் பதவி ஒருக்கால் அவருக்கு இல்லாது போயிருக்கும்!

தமிழர் வாழும் இடம் இது தமிழரின் தாயகம் - ஆகவே தமிழ்நாடு என்றே பெயர் அமைதல்வேண்டும் என்று பெரியாரே கூறினார். அவருடைய பேரன்பைப் பெற்றுப் பெருமிதம் கொண்டுள்ள காமராஜரோ, ஆகவே இதற்குத் தமிழ்நாடு என்று பெயரிடலே பொறுத்த முடைத்து என்று கூறாமல், ஆனால், உலகில் சென்னை என்றால்தான் புரியும், சென்னை ராஜ்யம் என்றே பெயர் இருக்கும் என்று அறிவித்துவிட்டார். தமிழருக்குத் "தமிழ்நாடு' என்ற பெயர் அணியும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

ஆகவே இப்படிப்பட்டவரின் ஆட்சியை ஆதரிப்பது அறமாகாது என்றல்லவா தம்பி! நீ கூறுகிறாய். தமிழ்நாடு என்ற பெயர்கூட வைக்கத்தான் காமராஜர் முன்வரவில்லை, ஆனால் அவர் நல்லவர், நம்மவர், தமிழர், அவர்தான் மீண்டும், மீண்டும் ஆட்சி செய்யவேண்டும் என்றல்லவா பெரியார் சொல்கிறார்.

இதன்பயனாக அரசியல் நிலைமையும், போக்கும், எவ்வளவு எதிர்பாராதமுறையில் உருவாகிவிட்டது, உணருகிறாயல்லவா?

பொதுமக்கள் பேசுவதை சற்று உற்றுக் கேட்போம், வா, தம்பி,

பெரியார், தமிழ்நாடு என்று தான் பெயர் இருக்க வேண்டும் என்கிறார்.

ஆர்வத்தோடு சொல்கிறார் : எழுச்சியூட்டும் முறையில் எடுத்துரைக்கிறார்.

இந்தப் பெயர் கிடைப்பதற்காகப் பெரும்போரே நடத்துவேன் என்று எச்சரித்திருக்கிறார்.

காமராஜரோ, அதெல்லாம் அர்த்தமில்லாத பேச்சு, ஆனாவசியமான ரகளை, வீணான குழப்பம், சென்னை ராஜ்யம் என்ற பெயர்தான் இருக்கும். ஆமாம், யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கூச்சல் போடட்டும் என்று பிடிவாதமாகப் பேசுகிறார்.

ஆகவே பெரியார், காமராஜரின் இந்தக் குருட்டுப் போக்கை வன்மையாக எதிர்த்துப் போராடக் கிளம்புவார் -

இப்படித்தானே பொதுமக்கள் - பெரியார், தமிழ்நாடு என்ற பெயர் தேவை என்பதற்கான விளக்கமளித்தபோது பேசிக்கொண்டனர். பிறகோ, காமராஜர், தமிழ்நாடு என்ற பெயர் சூட்டக்கூட ஒப்பாதது கண்டு, பரணி பாடினாரோ என்றால், இல்லை.

ஆனாலும் காமராஜரை ஆதரிக்கிறார்! ஏன்? ஏன்? என்று பொதுமக்கள் கேட்கின்றனர்.

இவ்வண்ணம், தம்பி, ஒவ்வோர் பிரச்சினையிலும், இந்த ஆனால், ஆகவே எனும் சொற்கள், வண்ணத்தை, வடிவத்தை வலிவை, விளைவை, நிலையை, நோக்கை, மாற்றிவிடக் காண்பாய். ஒவ்வொன்றாகவும், ஒவ்வோர் முனையில் நின்றும் எண்ணிப் பார்த்தால், முழுவதையும் காண்பாய் - இல்லையேல், குருடர் கண்ட யானைக் கதையாக முடியும்.

என்னோடு இருந்தார்கள், என்னால் ஆளானார்கள், என் திருமணத்தின்போது விட்டுப் பிரிந்தார்கள், தனிக் கட்சியானார்கள்.

என்ற பேச்சுடன், பெரியார் ஆனால்

திராவிடநாடு பிரச்சினை, பொருளாதாரத் திட்டம் சமுதாயப் பிரச்சினை

ஆகியவற்றிலே, முன்பு கொண்டிருந்த கருத்தினையே கொண்டு இருக்கிறார்கள்.

தனியாக இருக்கிறார்கள், வேறு கட்சிகளிலே குடிபுகுந்துவிடவில்லை.

என்று மட்டும் சேர்த்துப் பேசுவது என்ற போக்கு இருந்தால், இன்று அவர்,

என்னை விட்டுப் பிரிந்து போனதுகள், ஆனாலும் என் கொள்கைகளையே கொண்டோராக இருப்பதால், தேர்தலில் ஆதரிக்கிறேன் என்றல்லவா கூறுவார்!

ஆனால் - ஆகவே எனும் இரு சொற்களும், பயன்படுத்தப்படவேண்டிய முறைதவறிப் போவதால், தாலாட்ட வேண்டியவர்கள் தடிகொண்டு தாக்க வருவது போன்ற வேதனைதரும் விசித்திரம் விளைகிறது.

மற்றோர் வேடிக்கை, கேள், தம்பி!

வடநாட்டு நேருவுக்கு நாம் கருப்புக் கொடி காட்டினோமல்லவா? நையப் புடைத்தார்கள்! சிறையில் போட்டுச் சிதைத்தார்கள்!!