அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வேலை இருக்கிறது நிரம்ப!
1

மொழிகள் -
அரசியல் சட்டம் திருத்தப்படுதல்,
நேருவும் குடியரசுத் தலைவரும் உறுதி
இந்தி மொழி திணிப்பு

தம்பி!

வெற்றி விழாக்கூட்டம் நடத்தி, தமிழகத்துக்குத் தனிச் சிறப்பினைத் தேடிக் கொடுத்த உன்னை வாழ்த்துகிறேன். அன்று கடற்கரையில் கூடிய மிகப் பெரிய கூட்டம், தமிழர் தரணி மெச்ச வாழ்ந்த நாட்களிலே பெற்ற வெற்றிகளை மக்களுக்கு அறிவிக்க நடாத்திய விழாக்கள் பற்றி இலக்கியம் காட்டுகிறதே, அதனை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தது.

குடியரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் பிறப்பித்த ஆணை, முன்பு பண்டித நேரு மொழிபற்றி அளித்திருந்த அருமை நிறைந்த வாக்குறுதியை உள்ளடக்கியதாக இலாது போனதால், பலரும் ஐயமும் அச்சமும் கொண்டனர்; அறிக்கைகள் விடுத்தனர். "ஐயகோ! ஈதென்ன கொடுமை. இந்தியைத் திணித்திட அன்றோ, குடியரசுத் தலைவரின் ஆணை வழிகோலுகிறது. பண்டிதர் பரிந்தளித்த வாக்குறுதி கேட்டு, நம்பிக்கையில் ஆழ்ந்து கிடந்தோமே - அதனை இப்போது நொறுக்கித் தூள் தூளாக்கி விடுகிறதே இவர்தம் ஆணை! இந்தி பேசாதாரின் இதயக் குமுறலை மதித்து, இந்தித் திணிப்புக்கு எழுந்துள்ள எதிர்ப்பினை உணர்ந்து, இந்தி நுழைவைத் தடுத்து நிறுத்த இன்னுயிரையும் தந்திடும் உறுதியுடன் தமிழ்ப் பெருங்குடி மக்களில் தாசரானோர் தவிர, மற்றையோர் அனைவரும் திரண்டெழுந்து நிற்கின்றனர் என்பதனையும் அறிந்து, இத்துணை பெரும் எதிர்ப்பினைப் பொருட்படுத்தாது இருப்பது அறிவுடைமை அல்ல, இதனை அடக்குமுறை கொண்டு அழித்திட முனைவது அறவழி ஆகாது என்பதனை எல்லாம் எண்ணிப் பார்த்தன்றோ, நேரு பண்டிதர், "அஞ்சற்க! இந்தித் திணிப்பு இல்லை. இந்தி பேசாதாரின் எண்ணம் கண்டறிந்து ஒப்பம் பெறா முன்னம், ஆங்கிலத்தை அகற்றப்போவதில்லை'' என்றெல்லாம், வாக்குறுதி அளித்தார், பாரே கவனிக்கத்தக்க முறையில், பண்பாளர் போற்றத்தக்க வகையில், பாராளு மன்றத்தில், பண்டித நேரு அதனை முறியடிக்கும் முறையிலே இருக்கிறதே, குடியரசுத் தலைவரின் ஆணை என்று எடுத்துக் கூறினர் பலர்; விளக்கிக் காட்டினர் வித்தகர்; அறிக்கைகளை விடுத்தனர் அறிவிடம் அமர்ந்து பணிபுரிவோர்; எதிர்த்துப் பேசினார் ஆச்சாரியார்; வங்கத்தில் ஓர் மாநாடு கூட்டினர் வல்லுநர்கள்; மற்றும் சிலர் அழுது காட்டினர்; தம்பி! ஆர்த்தெழுந்து அணிவகுப்புகளைத் திரட்டிக் களம் காணத் துடித்த பெருமை, நம்மை மட்டுமே சாரும்.

விளக்கம் அளிப்போம், மேலும் மேலும். காரணங்களைக் காட்டுவோம் திறமையுடன், வாதாடுவோம் வல்லமை விளங்கிட என்றுதான் பலர் கருதினரேயன்றி, இந்தப் பேராபத்தைப் போக்கப் போரிட்டாக வேண்டும், அறம் வெல்லும் என்பது ஆன்றோர் மொழி எனினும், அறங்காத்திட அஞ்சா நெஞ்சும் வேண்டும் என்று எண்ணிச் செயலாற்ற முன்வந்தார்களில்லை.

குடியரசுத் தலைவரின் துணைகொண்டு, இந்தியை எப்படியும் ஆட்சி மொழியாகத் திணித்து, ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தி பேசாதவர்களை அடிமைகளாக்கிடலாம், ஆணவ அரசினை நிலைநாட்டி விடலாம் என்று எண்ணிடும் வன்கணார்கள், இந்தி பற்றிய விளக்கம் தெரியாமல், இந்தி பேசாதாரின் மனம் அறியாமல், பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதுபோல எண்ணிக்கொண்டு, மெத்தவும் கற்றறிந்த வித்தகர்கள், பேசினர், எழுதினர்! வடக்கே இன்று ஆணவம் தலைக்கேறிய நிலையில் உள்ள இந்தி வெறியர்கள், தலைவர்கள் என்ற நிலை பெற்றுள்ளனர். எப்படி, காந்தியாரின் சமரச நோக்கத்தை, கோழைத்தனம் என்று திரித்துக் கூறி, அவருக்கு எதிர்ப்பு மூட்டி, இறுதியில் கயவனொருவன் அவரைச் சுட்டுக் கொன்றிடும் கொடுமைஏற்பட்டதோ, அதுபோல இந்தி பேசாதாரின் உணர்ச்சிகளையும் உரிமையையும் மதித்து, அவர்களை இந்தி மொழி மூலம் அடிமைப்படுத்த முற்படுவது கூடாது என்பதை வெளிப்படை யாகத் தெரிவித்து, அத்தகைய அக்ரமம் நடைபெற நான் இடந்தரமாட்டேன், உடந்தையாக இருக்கப் போவதில்லை என்று உறுதியாக உரைத்திடும் எவரையும், எதிர்த்து ஒழிக்கவோ, குழி பறிக்கவோ, குலவிக் கெடுக்கவோ தயாராக உள்ள ஓர் கூட்டம், மாடமாளிகைகள், வாணிபக் கோட்டங்கள் எனும் இடங்களில் மட்டுமல்ல, கல்விக் கழகங்கள், துரைத்தன மன்றங்கள் ஆகியவற்றிலும், நிரம்பி உள்ளனர். அவர்கள், இந்திக்காக வாதாடுவதுகூடத் தேவை இல்லை; கட்டளை பிறப்பிக்க வேண்டியதுதானே! இதிலென்ன காரணம் கூறுவதும், கனிமொழி பேசுவதும்; இந்தி படித்துக்கொள்ளுங் கள், அப்போதுதான் ஏற்றம் பெறுவீர்கள் என்றுகூட எடுத்து இயம்ப வேண்டும், படித்தால், பிழைக்கட்டும், இல்லையேல் சாகட்டும். நமக்கென்ன; நாம் ஆணையிடும் நிலையில் இருக்கிறோம்; அவர்கள் அடிபணிந்து கிடக்கிறார்கள். நாம் வேங்கைகளாகி உள்ளோம்; அவர்கள் வெள்ளாடுகள்! இந்நிலையில் அவர்களிடம் நாம் ஏன் கெஞ்சிக் கிடக்கவேண்டும்; கொஞ்சு மொழி பேசவேண்டும், இந்திதான் ஆட்சிமொழி! அறிந்திடுக! அதற்கேற்ப நடந்திடுக! என்று கட்டளையைப் பிறப்பித்து விட்டு, அதனைச் செயல்படுத்தக் கடுமையான நடவடிக்கைகளைத் திறம்பட எடுத்துக்கொள்ள வேண்டியது தானே முறை! என்று கொக்கரித்துக் கிடக்கும் கெடுமதி யாளர்கள், ஆட்சியின் எடுபிடிகளாக அல்ல, ஆட்டிப்படைப் போராக உள்ளனர். இதனைப் பண்டித நேரு மிக நன்றாக அறிவார். அறிந்திருந்தும் தமிழகம் எத்தகையது என்பதையும் தெரிந்துகொண்டதால் வாக்குறுதி வழங்கினார்; வாழ்த்தினோம் அவரை.

கைகாலில் தளைபூட்டிச் சிறையில் தள்ளப்பட்டிருப் போனுக்குக் கடும் தாகம் ஏற்பட்டு, நாவுலர்ந்து, பேசவும் இயலா நிலைபெற்றுக் குறிகாட்டிக் குடிக்கத் தண்ணீர் கேட்டிடக் கண்ட, இரக்க மனம் கொண்ட காவலாளி குவளையில் தண்ணீர் கொண்டுவந்து, தருவதுகண்டு, செருக்கு மிகுந்த இரக்கமற்ற மேலதிகாரி குறுக்கிட்டு, குவளையைக் காலால் உதைத்துக் கீழே விழச்செய்து, "தண்ணீரா, தண்ணீர்! ஏடா! இவனுக்கு உபசாரம் செய்யவா, உன்னை இங்கு அமர்த்தினோம்! நாளையோ மறுநாளோ சாகப் போகிறான்; இவனுக்குத் தண்ணீர் ஒருகேடா! ஏன்! கண்ணீர் மொழிகிறான் என்பாயே! அது போதாதோ! தண்ணீர் வேறு தரவேண்டுமோ!'' என்று கேட்டு இடி இடியெனச் சிரிப்பதைத் தம்பி! நாடகங்களிலே கண்டிருப்பாய்.

குடியரசுத் தலைவர் பிறப்பித்த ஆணையைப் பார்த்ததும், பலருக்கும், இதுவும் அதுபோன்றதோர் நிலையே என்ற எண்ணம் தோன்றிற்று. ஐயோ! பாவம்! என்றனர் சிலர்; உனக்கோ இந்தக் கதி என்று கேட்டனர் சிலர்; காலக் கொடுமை, நாம் என்ன செய்யலாம் என்று ஆயாசப்பட்டனர் பலர் என்று வைத்துக்கொள், கைகாலில் தளைபூட்டப்பட்டவன் கொடுமைப்படுத்தப்படுவது கண்டு பலன் என்ன? அவர்களின் பரிவுரையும் பெருமூச்சும், தளைகளை நொறுக்கிடுமோ? அவர்கள் அன்புரை காட்டுவதால் அவன் இருக்கும் சிறை சிங்காரச் சோலையாகிவிடுமோ? அஃதேபோல, இந்த ஆணை ஆகாது, இது செயல்படுத்தப்படுமானால் வரும் பெரும் தீது, இது நேரு தந்த வாக்குறுதியை மதித்ததாகாது என்று விளக்கம் தந்தனரே, விவேகிகள் பலர். அதனால் விபத்து விலகிட வழி கிடைத்ததோ! இல்லை!! மாறாக, வாதத்துக்கு எதிர்வாதம்; மறுப்புக்கு மறுப்புச் சரமாரியாகக் கிளம்பி, மாலைநேரப் பேச்சுக்குச் சுவை தந்தது.

தம்பி! மறத்தமிழ் மரபினன் நீ, மார்தட்டி நின்றாய்! வஞ்சகர்களே! வாழ்ந்தால் தமிழொடு வாழ்வேன்! வீழ்வதேனும், இந்தியை எதிர்த்தபடி வீழ்வேன்! என்று சூளுரைத்தாய், துடித்தெழுந்தாய், வெற்றி உனை நாடி வந்தது, தேடி அடைந்தது. வெற்றி விழாக்கூட்டத்தில், மலர்ந்தமுகம், எவருக்கும்.

ஆடவர் அனைவரும் அறப்போரில் ஈடுபடக் கிளம்புவர். எவரையும் அழித்துப் பழக்கப்பட்டுவிட்ட எதேச்சாதிகாரம். என்னென்ன ஏவுமோ, எதை எதைப் பறித்திடுமோ என்றெல்லாம் எண்ணி ஏக்கத்தால் தாக்குண்டு கிடந்த தாய்க்குலத்தவர் எண்ணற்றவர் கூடினர்; தமிழகம் போர்க்கோலம் பூண்டது கண்டதுமே, மாற்றார் மருண்டனர் என்ற செய்தி அறிந்து, அந்தச் செந்தேனைப் பருகி, அவர்தம் உரிமையாளரே, களிப்பில் திளைத்தனர். கழகம் நடாத்திச் சென்றிடும் பேறு பெற்றோர், காணற்கரிய காட்சி இது என்று களித்தது மட்டுமல்ல, இன்றுள்ள ஆற்றலும், கட்டுக்கோப்பும் மாசுபடாமல் வளர்ந்து, முறையும் திறனும் மேலும் செம்மை பெற்று, விடுதலைப்போர்நடாத்திக் காணவேண்டிய பெரியதோர் வெற்றிபற்றி எண்ணிக் களித்தனர்.

"வண்ணக் கிளியே வா! வா! வைரச் சிலையே! அருகே வா! தத்தி நடந்திடும் தங்கக் கொடியே! தாவி வந்திடும் மானின் கன்றே! தோகை காட்டிடும் கோலமயிலே! எனை வாழ வைத்திடும் எழிலே, வா! வா!'' என்று தான் பெற்ற செல்வத்தைத் தாய் அழைத்து, மகிழ்ந்திடும் காட்சி ஒன்று.

நரைதிரை மூப்பு மேலிட்டு, கையில் தடி ஊன்றிடும் பருவத்தினரான முதியவர், வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அகமகிழ்ந்து, திருவும் புகழும் நிரம்பப் பெற்றுச், சான்றோனாகி வீரனுமாகி, நாட்டுக்குழைத்து நற்பெயரெடுத்து, வீட்டிற்கு வந்து விளக்கினைக் கண்டு, சுடும் என்றார்கள், சுவைதான் கண்டேன், அழுதாய் என்றார்கள் கண் அலர்ந்திடக் காண்கிறேன்; மேனி கருத்தது என்றனர் கண்டோர், செம்பொன் சிலை இது என்றறியாமல்! என்றெல்லாம் மகன் தன் துணைவியுடன் பேசி மகிழ்வது அறிந்து, பெருமிதம் கொண்டிடும் காட்சி மற்றொன்று.

முன்னையதற்கு ஈடு, சென்னைக் கடற்கரையில் கழகம் நடாத்திய வெற்றி விழா! பின்னையதோ, விடுதலைபெற்ற திருநாட்டில், வீரர்கள் மகிழ்ந்திருக்கும் நாளைக் குறிப்பிடுவதாகும்.

பெற்ற வெற்றி, தம்பி! பெறவேண்டிய வெற்றியினை யன்றோ நினைவூட்ட வேண்டும். அன்று அங்கு கூடினோர் அனைவரும் அதே எண்ணம் கொண்டவராகவே இருந்தனர்.

வெற்றி பற்றிய விளக்கங்களைக் கேட்டு இன்புற்றனர். எனினும், இதுபோதும் என்று எண்ணி அல்ல; இதுபோல்' பலப்பல வெற்றிகள் பெறப்பெறப் பாதை துலங்கும், பயணம் பாங்கானதாகும், இலட்சியம் நிறைவேறும், இன்பத் திராவிடம் காண்போம் என்ற எண்ணத்துடன்! "

என்னைப் போலவே, மாந்தர் ஏதேது தேடிப் பெற்றிடினும், வாலுக்கு எங்கே போவர்!'' என்று மந்தி கேட்கிறதாம், மனித குலத்தை நோக்கி. பாரதியார் சொன்னார் தம்பி! நானல்ல. அதுபோல, நாம் பெற்ற வெற்றி கண்டு மனம் பொறாதார், வாலுண்டோ? என்று பேசிடுகின்றனராம், பாவம்! வேறு என்ன பேசி அவர்களுக்கு இயல்பாக எழுந்திடும் வேதனையை நீக்கிக் கொள்வது.

"கடிதம் கிடைத்ததாமா, கடிதம்! நேரு ஒரு கடிதம் போட்டுவிட்டாராம், இதுகள் அதைத் தூக்கி வைத்துக் கொண்டு குதிகுதியென்று குதிக்கின்றனவே'' என்று குமுறலைக் குளறலாக்கித் திரியும் கும்பல் நமக்குத்தான் மிக நன்றாகத் தெரியுமே, தம்பி!

கொண்டை அறுந்த பெண்டொருத்தி செண்டு கண்டு இகழ்ந்தாளாம்! இந்தித் திணிப்பைத் தடுத்திட முடியாது என்று ஒதுங்கி நின்றார், இன்று கொண்டை அறுந்து பெண்டு போல, நாம் பெற்ற வெற்றிச் செண்டு கண்டு இகழ்கின்றனர், வேறென்ன!

ஏதோ இவர்கள் துவக்கிடும் போராட்டம் ஒவ்வொன்றின் போதும், துணைக்குக் குருஷேவையும் ஐசனோவரையும் உடனழைத்துக் கொண்டு, நேரு பண்டிதர் பறந்து வந்து பேட்டிக்குக் காத்துக்கிடந்து, இவர்கள் பாசறை அலுவலை முடித்துக்கொண்டு, பாரிலுள்ளோருக்கு அறிவுரைகள் அனுப்பி விட்டு, வந்து பார்க்கச் சொல்லு பண்டிதர் குழுவை என்று "சேதி' விடுப்பதுதான், வாடிக்கை போலவும், நாம் ஏதோ ஒரு காகிதத்தைப் பெற்றுக் களிப்படைவது போலவும் அப்பாவிகள் எண்ணிக் கொள்ளட்டும் என்ற நினைப்பில், ஏதேதோ பேசுகின்றனர். எனக்கிருக்கும் வருத்தம், தம்பி! நம்மை இவர்கள் இகழ்கிறார்களே என்பதனால் அல்ல. ஆனால், நம்மை இகழ்வதாக எண்ணிக்கொண்டு இவர்கள் பேசுவது, நம்மை அல்ல, நேரு பண்டிதரின் தரத்தை அல்லவா தாக்குவதாக ஆகிறது! நேரு பண்டிதர் என்ன மிகப் பெரிய தலைவரா! அவர் அமர்ந்திருக்கும் இடம் என்ன, மிக உயர்தரமானதா! அவரிடமிருந்து கடிதம் வந்தது என்பதிலே, என்ன குறிப்பிடத்தக்க சிறப்பு இருக்கிறது!! என்று, இவர்கள் பேசுகிறார்கள் என்பதல்லவா தொக்கி நிற்கிறது, இவர்கள் கூற்றிலே!!

நாம் நேரு பண்டிதர் தனிப்பட்ட முறையிலும் சரி, அவர் இன்று பெற்றுப் பெருமை அளித்திடும் பதவியைக் கவனித்தாலும் சரி, மதிக்கத்தக்கவர் என்பதனால்தான், அவர் உறுதிமொழி தருவதையும், அதை மீண்டும் வலிவுபடுத்திக் கடிதம் எழுதியதையும் பாராட்டி மதிப்பளிக்கிறோம்.

கடிதம் பெற்றது ஒரு பெரிய காரியமா! பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய விஷயமா? என்று பேசகிறார்களே, இவர்கள், நேரு பண்டிதர், மதிக்கத்தக்கவர் என்று கருதுகிறார்களா!!

ஏனோ பாவம், எரிச்சலை அடக்கிக்கொள்ள எண்ணி, நம்மை இகழ்வதாக எண்ணிக்கொண்டு, உலகத் தலைவர்களில் ஒருவர் என்ற உயர்நிலையினைப் பெற்றுள்ள பண்டித நேருவை இகழ்ந்து பேசித் திரிகின்றனர். பொருள் தெரியாததாலா? மனமருள் அவர்களை அப்படி ஆக்கிவிட்டதா!!

கழுநீர்ப் பானையினைத் தலையில் சுமந்துகொண்டு செல்பவன், பன்னீர்ச்செம்பினைக் கரத்தில் எடுத்துச் செல்பவனைக் கண்டு, "பூ இந்தச் சின்னச் செம்புதான் உனக்குக் கிடைத்ததா! என் தலையில் பார்! எத்தனை பெரிய கழுநீர்ப் பானை!!' என்று கூறினால் எப்படி இருக்கும்? யாரண்ணா! அப்படிப் கூறுவார்கள்! என்று கேட்கிறாயா தம்பி! இதோ இவர்கள் பேசுகிறார்களே, கடிதம் ஒரு பிரமாதமா! என்று, அதற்கென்ன சொல்லுகிறாய்?

சட்டசபையில், நான்கூட, ஒரு காங்கிரஸ் உறுப்பினர் இது பற்றிப் பேசும்போது கேட்டேன்:

எங்களுக்குக் குடியரசுத் தலைவரும் முதலமைச்சர் நேருவும் உறுதிமொழிக் கடிதங்கள் அனுப்பியதால், அவர்களின் தரம் குறைந்துவிட்டதாகக் கனம் அங்கத்தினர் கருதுகிறாரா?

என்று. பதில் இல்லை!

அந்தக் கடிதத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இத்தனை ஆர்ப்பாட்டமா என்று பேசுபவர்கள், ஒன்று, நேரு பண்டிதரின் தரம் இப்படி ஒரு கடிதம் எழுதியதால் குறைந்துவிட்டது என்ற கருத்துடன் இருக்க வேண்டும் அல்லது நேரு பண்டிதருக்கு, தரமே கிடையாது என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

இரண்டில் எது அவர்கள் எண்ணமாக இருப்பினும், இழிமொழியை அவர்கள் நேரு பண்டிதர்மீது வீசுகிறார்கள் என்று பொருளாகுமே தவிர, நம்மீது அல்ல! நம்மீது என்றுதான், விவரமறியாமல் அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

அவர்கள் கிடக்கட்டும்; நமக்குக் கிடைத்துள்ள வெற்றி, தம்பி! நமக்கு மட்டுமல்ல, நம் தமிழகத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி - அதுமட்டுமல்ல, இந்திபேசாத மாநிலங்கள் அனைத்துக்கும் கிடைத்துள்ள வெற்றி, இதுதான், இந்தித் திணிப்பு இல்லை; ஆங்கிலம் அகற்றப்படமாட்டாது; இந்தி பேசாத மக்களின் கருத்தறியப்படும்; ஆங்கிலத்தைகாலக்கெடுவின்றி நீடித்திடச் செய்யும் சட்டம் நிறைவேற்றப்படும் என்ற திட்டவட்டமான, அறிவிப்புகள் கிடைத்துவிட்டன. அவை நேரு பண்டிதர், தனிப்பட்ட முறையில் தருவனகூட அல்ல; அவர் நடாத்திச் செல்லும் அரசின் சார்பிலே அளித்திருக்கிறார்.

இது நல்லதோர் வெற்றி, எனவே மகிழ்ச்சி. இது நல்லதோர் வாய்ப்பு, எனவே இதனை பயன்தரத்தக்கதாக்கும் பொறுப்பும் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

உறுதிமொழிகள் அபின் மாத்திரைகள், நம்மை மயக்க, என்பார் உளர்.

நான், அந்த வகையிலே எண்ணவில்லை; எனினும் அந்த விதமாக எண்ணுபவர் கூறுகிறபடி, நாம் விழிப்பாக இருக்கத்தான் வேண்டும்.

உறுதிமொழிகளை ஒரு கரத்தால் அளித்துவிட்டு, மறு கரத்தால் நிலைமையை உருக்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்; அது கண்டிக்கத்தக்கது; தடுத்து நிறுத்தப் பட்டாக வேண்டும்.

உறுதிமொழிகளுக்கேற்ப, ஆங்கிலம் காலக்கெடுவின்றி ஆட்சிமொழி அலுவலுக்கு இருந்துவரச் செய்வதற்கான சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிகிறோம்.

ஆனால், அப்படி ஒரு தனிச்சட்டம் கொண்டு வந்து, பிறகு, அதிலே ஏற்படக்கூடிய நேர்முக, மறைமுகக் குறைபாடுகளால் விபத்துக்கள் ஏற்படுமானால், பிறகு தொல்லை நாட்டினைத் தாக்கும்.

எனவே, நாம், ஆட்சிமொழி பற்றி, இந்திய அரசியல் சட்டத்திலே உள்ளதைத் திருத்தி அமைக்க வேண்டும் என்பதை, நாட்டவருக்கும் நாடாள்வோருக்கும், செயற்குழுத் தீர்மான வாயிலாக எடுத்துக் கூறி இருக்கிறோம்.

இந்திய அரசியல் சட்டத்துக்கு ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டால், நிலைமை தெளிவாகும் என்பது மட்டுமல்ல, இந்தி பேசாத மாநில அரசுகள் நிம்மதி பெற முடியும்.

தம்பி! வெற்றி விழாக் கூட்டத்துக்காக, நான் காஞ்சிபுரத்திலிருந்து, அ.க. தங்கவேலருடன் அவருடைய மோட்டாரில் வந்து கொண்டிருந்தேன். திடீரென்று, வண்டி நின்றது; ஓட்டுபவர் பதறினார், கீழே இறங்கிப் பார்த்தோம்; சக்கரங்கள்பொருத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து புகை குபுகுபுவென வரக்கண்டோம். என்ன இது? என்று கேட்டோம்.

"மோட்டாரில், தடுத்து நிறுத்தும் கருவி பழுதாகிவிட்டது. சக்கரங்களை அடி பிடித்து அழுத்துகிறது. உராய்ந்து உராய்ந்து சூடேறிவிட்டது'' என்று கூறிடவே, நாங்கள் பதறி, இப்படியே போனால், என்ன ஆகும்? என்று கேட்டோம், "தீப்பிடித்துக் கொள்ளும்'' என்ற பதில் கிடைத்தது.

பிறகு...? என்று கேட்கிறாயா? ஒன்றும் ஆகவில்லை, தம்பி! இருக்கிறேனே! அதே மோட்டாரில்தான் சென்னை வந்தோம்; தீப்பிடித்துக் கொள்ளவில்லை. எப்படி? அந்தக் கருவியைப் பழுதடையச் செய்த, குழம்பிப்போன, பழைய எண்ணெயை, வெளியே எடுத்துவிட்டுச் சிறிது பழுது பார்த்திடவே, வண்டி விபத்து ஏதுமன்றி நகர்ந்தது.

இந்திய அரசியல் சட்டத்திலே இப்போது உள்ள மொழி பற்றிய விதிமுறை, பழைய எண்ணெய் ஆகிவிட்டது, துரைத்தனம் எனும் கருவியே பழுதுபட்டு, புகை சுருள் சுருளாக வெளிவந்தபடி இருக்கிறது. அந்த எண்ணெய் வெளியே எடுத்துவிடப்பட வேண்டும்; கருவி பழுதுபார்க்கப்பட வேண்டும், என்பது போன்றதுதான், இந்திய அரசியல் சட்டத்திலே, மொழிபற்றிய விஷயத்திலே, ஒரு திருத்தம் செய்திட வேண்டும் என்று கூறுவது.

"இதென்ன புதிய நிபந்தனை?'' என்றார் ஒரு காங்கிரஸ் நண்பர்.

"கருப்புக்கொடிக்கு அச்சப்பட்டுக்கொண்டு, முதலமைச்சர் நேரு, கடிதம் கொடுத்தவுடன், உங்களுக்குத் துணிவு அதிகமாகிவிட்டது. அதனால்தான், இந்திய அரசியல் சட்டத்துக்கே திருத்தம் வேண்டும் என்று கூற வந்துவிட்டீர்கள்'' என்றார், எளிதாக ஆத்திரப்பட்டுவிடும் மற்றோர் காங்கிரஸ் நண்பர்.

"இதை ஏனண்ணா' முன்பே சொல்லக்கூடாது?'' என்று கேட்டார், நாம் செய்துவரும் காரியத்தைச் சரியானபடி கணிக்காமல், யோசனைகளைக் கூறுவதிலே ஆர்வம் காட்டும், நமது கழகத்தோழர் ஒருவர்.