விஷநோய்! கேடுதரும் கிருமிகள்!
– ஆஹா! இவற்றைக் கொண்ட தண்ணீரை, பொதுமக்களுக்குத் தர
இருந்தேனே! பெரியகேடு செய்ய இருந்தேன்! என்ன பேதைமை! என்ன
அவசரம்! ஊருக்கு அழகு, அலங்காரம் வாய்க்கு வழி என்று எண்ணி
குளிக்குமிடம் கட்டும் திட்டம் தீட்டினேன் – இப்போதல்லவா
தெரிகிறது, இது அழிவுக்கு வழி என்று! பொதுமக்கள் உயிரைக்
குடிக்கும் கிருமிகளை, நான் என் அறியாமையாலும் அவசரத்தினாலும்
மக்கள்மீது ஏவிவிட இருந்தேனே. மாபெரும் துரோகமல்லவா செய்ய
இருந்தேன் – நல்ல வேளை, இந்த ஆராய்ச்சியாளர் உண்மையை உரைத்தார்
– ஊர் மக்களைக் காப்பாற்றினார் – உலகுக்கே பெரிய நன்மையைச்
செய்தார்! பொதுமக்களுக்கு என் அவசரபுத்தியால் பெருந்தீங்கு
இழைக்க இருந்தேன் – குளிக்குமிடம் கட்டும் திட்டம் கொலைக்காரத்
திட்டம்! பொதுமக்களின் உயிரைச் சூறையாடும் திட்டம்! நீசத்தனமான
திட்டம்! என்றெல்லாம் டாக்டர் எண்ணினார். எவ்வளவு பெரிய
கேடு நேரிட இருந்தது என்பதை எண்ணிப் பார்க்கும்போதே அவருடைய
குலை நடுங்கிற்று. மனக்கண்முன்னே, குளிக்குமிடத்து ஆணும்
பெண்ணும் குதூகலமாக வருவது – குளித்து மகிழ்வது – வீடு
திரும்பியதும் அவர்களுக்கு விஷ ஜூரம் வருவது – வீட்டிலே
குய்யோ முறையோ என்று கூவுவது – பலர் மாண்டு போவது –
போன்ற காட்சிகள் தோன்றின. பதறினார். எடுத்தார் பேனாவை,
மளமளவென்று எழுதலானார். புதிய திட்டம் தீதாவது – கைவிட்டுவிட
வேண்டும் என்ற எழுத்துகள் வேக வேகமாக உருண்டோடி வந்தன.
ஊர் மக்களின் உயிருக்கு வரவிருந்த ஆபத்தைத் தடுக்க முடிந்தது.
தக்க சமயத்திலே என்ற ஆர்வத்துடன் எழுதினார். எழுதினார்
விளக்கமாக, ஆதாரத்துடன். எழுதி முடிந்ததும் திருப்தி ஏற்பட்டது.
பொதுஜனத்துக்குச் செய்ய வேண்டிய மகத்தான சேவையைச் செய்தாகிவிட்டது!
கடமையை நிறைவேற்றிவிட்டோம், என்று களிப்புண்டாயிற்று.
கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார். மூத்தவர் – முகத்தில்
புன்னகையுடன் ஆர்வத்துடன் டாக்டர். அண்ணா! நான் ஒரு முட்டாள்
– அவசரப்புத்திக்காரன், அநியாயம் செய்ய இருந்தேன்! பெருங்கேடு
நேரிட இருந்தது என்னால். பொதுமக்களுக்குப் பெரிய நாசம்
வர இருந்தது என் பேதமையால் என்று கூறலானார் – அண்ணன்,
“இதென்ன, புதிய உளறல்” என்று எண்ணிக்கொண்டு, “தம்பீ!
நிரம்ப வேலை செய்து கொண்டிருந்தாயே?” என்று கேலியாகக்
கேட்டார்...” “ஆமாம் அண்ணா, நிரம்ப வேலை! என் வாழ்நாளிலே
இதுவரையில் இப்படிப்பட்ட முக்கியமான வேலையில் ஈடுபட்டதே
இல்லை என்று கூறலாம் – அப்படிப்பட்ட அருமையான காரியம்”
என்று டாக்டர் மேலும் ஆர்வத்துடன் கூற மூத்தவர் சாவதானமாக,
“குளிக்குமிடம் அமைக்கும் திட்டம் சம்பந்தமாகத்தானே தம்பி
வேலை செய்து கொண்டிருந்தாய்?” என்று கேட்டார்.
“சந்தோஷம்! அந்தத் திட்டம் சம்பந்தமாக எவ்வளவு வேலை செய்தாலும்
தகும். முக்கியமான திட்டம்” என்றார் மூத்தவர் – புதிய
திட்டத்தின்மூலம் தனக்குக் கிடைக்க இருக்கும் இலாபத்தை
எண்ணிக்கொண்டு. அவர் எந்த நோக்கத்÷õடு இதைப் பேசுகிறார்
என்பதை அறியாத டாக்டர், “முக்கியமான திட்டம் என்று சாதாரணமாகப்
பேசுகிறீர்களே அண்ணா! பொது ஜனத்தின் உயிரைப் பற்றிய திட்டமல்லவா
அது” என்றார் – ஆமாம் என்று அசைபோட்டார் மூத்தவர் – பொதுஜனத்தின்
சேவையைக் கருத்தில்கொண்டு தயாரித்த திட்டமல்லவா அது –
அது பற்றி மேலும் பல ஆராய்ச்சிகளை நடத்தியபடிதானே இருந்தேன்”
என்று துவக்கினார் டாக்டர். “நானும் ஒவ்வோர் இரவும் நடுநிசி
வரையில் உன் அறையில் விளக்கெரியக் கண்டேன்” என்றார் மூத்தவர்
– வீண் செலவு செய்கிறான் தம்பி, என்பதைக் குறிப்பாக உணர்த்தினார்.
“வீண்போக வில்லையே, அண்ணா! என் உழைப்பு வீண் போகவில்லை.
விபரீதம் நேரிட இருந்தது. நான் மட்டும் சற்று அக்கறையற்று
இருந்துவிட்டிருந்தால், பொதுமக்கள் பெரியதோர் நாசத்துக்குள்ளாயிருப்பர்.
சரியான சமயத்திலே கிடைத்தது ஆராய்ச்சியாளரின் ஆய்வுரை,
தப்பினர் மக்கள்” என்று எழுச்சியுடன் பேசினான் தம்பி.
அண்ணன் அதன் பொருள் விளங்காமல் திகைத்தான்.
“தம்பி! என்ன இப்படிப் பேசுகிறாய் – புரியவில்லையே?” என்று
அண்ணன் கேட்க, “ஆர்வத்தால் அடிப்படையை மறந்துவிட்டேன்
அண்ணா! மன்னிக்க வேண்டும்” என்ற முன்னுரையுடன், நீர் நிலைய
அமைப்பு பற்றிய புதிய முடிவை – அதாவது அத்தகைய நிலையம்
கூடாது என்பதை விவரமாக விளக்கினான் – தம்பி. அண்ணனுக்குக்
கோபம், அருவருப்பு, “முட்டாள்! உன் திட்டங்கள் இப்படித்தான்
இருக்கும் என்று நான் அடிக்கடி கூறிக்கொண்டு தானே இருந்தேன்.
இப்போதாவது புரிகிறதா! ஊர் மக்களுக்கு நன்மை செய்யக்
கிளம்பினாய் – உனக்குத்தான் ஏதோ அந்த உரிமையும் திறமையும்
இருப்பதாக எண்ணிக்கொண்டு, வேண்டாமடா, உன் வேலையைக் கவனி
– தொழிலைக் கவனி – குடும்பத்தைக் கவனி என்று ஆயிரம் தடவை
கூறினேன் – கொட்டி அளந்தாய் – இப்போது?” என்று கோபமாகப்
பேசினான் அண்ணன். “ஆர்வமிகுதியினால் நான் முழு ஆராய்ச்சி
செய்யாமலிருந்துவிட்டேன் அண்ணா! ஆபத்து வர இருந்தது. ஆனால்
இப்போது பயம் இல்லையே. நாம், அந்தப் பாதக திட்டத்தை நிறுத்திவிடலாம்”
என்றான் தம்பி.
“இவ்வளவு ஏற்பாடுகள் பூர்த்தியான பிறகா! கட்டடம் அமைக்கக்
‘காண்ட்ராக்டுகள்’ ஏற்பாடாகி விட்டன – முன்பணம் கொடுத்தாகிவிட்டது.
இவ்வளவு ஏற்பாடுகள் நடைபெற்றான பிறகு, திட்டத்தை விட்டுவிடுவது?
தம்பீ! உனக்கு ஏதாவது தெளிவு இருக்கிறதா! என் கோபத்தைக்
கிளறாதே. உன் பேச்சை நம்பிக்கொண்டு, நான் நகராட்சி மன்றத்திலே
உன் திட்டத்துக்கு ஆதரவு திரட்டினேன் – எவ்வளவு கஷ்டம்
– எவ்வளவு செலவு!” என்று அண்ணன் கூறி ஆயாசப்பட்டான். “தொந்தரவுதான்
கொடுத்து விட்டேன் கஷ்டம் அதிகம்தான் தங்களுக்கு” என்று
ஆறுதல்மொழி கூறினான் தம்பி. “நஷ்டம்! அதைக் கவனிக்க மறுக்கிறாயே,
ஏடு தாங்காப் பணச்செலவு ஆகியிருக்கிறதே தெரியுமோ? கவலைப்பட
வேண்டாமோ? செலவு செய்த தொகை. திரும்பக் கிடைக்கவா போகிறது”
என்று வெகுண்டுரைத்தான் அண்ணன். டாக்டர், “எதற்குச் செலவு?”
என்று கேட்டான். பீறிட்டுக்கொண்டு வந்தது ஆத்திரம் அண்ணனுக்கு.
உன் பைத்தியக்காரத் திட்டத்தை, நகராட்சி மன்றம் ஏற்றுக்
கொண்டதே, காரணம் என்ன? உன் திட்டத்திலே அறிவும் அருமையும்
ததும்புகிறது என்றார் மடையா! இருபது ஆயிரம் செலவு எனக்கு
– ஆளுக்கு ஆயிரம் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டுதான்,
‘நகரத்தந்தைகள்’ உன் திட்டத்துக்கு ஆதரவாளர்களாக்குவதற்கு
நான் செலவிட்டது கொஞ்சமல்ல, உலக அனுபவமற்றவனே! உன் படம்
போட்டு, திட்டத்தைப் பற்றிக் கொட்டை எழுத்துக்களிலே
அலங்காரமாக அச்சிட்டு வழங்கினார்களே, அது, உன் திட்டத்தைப்
பார்த்துப் பூரித்துப் போனவர்கள் செய்த ‘பொதுஜன சேவை’
என்றுதான் நீ எண்ணிக் கொண்டாய். நோட்டுகளை எண்ணிக் கொடுத்தேன்
அதற்கான செலவுக்கு! இவ்வளவுக்குப் பிறகு நீ யோசனை கூறுகிறாய்
திட்டத்தைக் கைவிட்டு விடலாம் என்று! துளியாவது பணத்தின்
அருமை பெருமை தெரிந்தால் இப்படி நடந்து கொள்வாயா?” என்று
கடிந்துரைத்தான் அண்ணன்.
தம்பி தத்தளித்தான் – தன்னால் இவ்வளவு தொல்லை அண்ணனுக்கு
ஏற்பட்டுவிட்டதே என்பதை எண்ணி மட்டுமல்ல – பொது மக்களுக்காகத்
தயாரிக்கப்பட்ட திட்டத்துக்கு ஆதரவு தர நகராட்சி மன்ற
உறுப்பினர்கள் பணம் பெற்றுக் கொண்டார்களாமே ஆளுக்கு ஆயிரம்
– இப்படியா பொதுஜன சேவை இருக்கிறது! என்பதை எண்ணி இப்படிப்பட்டவர்களை
ஏன் பொதுமக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்! எப்படி இவர்களின்
கபடம் வெளியே தெரியாமலிருந்து விடுகிறது என்றெல்லாம் எண்ணி
ஆயாசமுற்றான். அண்ணன் சில விநாடிகள் ஆழ்ந்த யோசனையில்
இருந்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவனாகி, தம்பியைப் பார்த்து,
“சரி – இதுவரையில்தான், புத்தியில்லாமல் நடந்து வந்தாய்
– இனியாவது ஒழுங்காக நட, உன் புதிய ஆராய்ச்சியை, மனத்தோடு
வைத்துக்கொள். வெளியே கொட்டி ஊரைக் கலக்காதே” என்றான்.
தம்பிக்குத் திகில் பிறந்தது. “திட்டப்படி காரியம் நடந்துவிடட்டும்”
என்றான் அண்ணன். தீ மிதித்தவன் போலானான் தம்பி. “என்ன,
மக்களைச் சாகடிப்பதா! நாட்டைச் சுடுகாடு ஆக்குவதா! நானா!
என்ன துணிவு உனக்கு! எவ்வளவு கல் நெஞ்சம்!” என்று கூவினான்.
“திட்டம் நிறைவேற்றப்பட்டாக வேண்டும். இனி அதை நிறுத்த
முடியாது – இலட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் – இந்தத்
திட்டத்தை நம்பித் தனவந்தர்கள் ஏராளமான ‘முதல்’ போட்டுவிட்டார்கள்
– திட்டத்தை நிறுத்திவிட்டால் பெரு நஷ்டம் ஏற்படும் எனக்கேகூடப்
பெருநஷ்டம் உண்டாகும்.”
“அதற்காக மக்களைச் சாகடிக்கும் மாபாதகம் புரிவதோ?”
“மாபாதகமோ – சும்மா பாதகமோ எனக்குத் தெரியாது. நீ முதலிலே
சொன்னபடி பல கட்டடம் கட்டியாக வேண்டும்.”
“அண்ணா! நச்சுப் பொய்கையை நாம் வெட்டுவதா, நமது மக்களைச்
சாகடிக்க!”
நம்பினவர்களின் பணம், பாழாவதா? நடுவிலே திட்டத்தைத் தகர்த்துவிட்டால்,
நஷ்டம்தானே ஏற்படும். உன்னைச் சும்மா விடமாட்டார்கள்.”
“பணம் செலவிட்டீர்கள், சரி – அதற்காக, மக்கள் பிணங்களாவதா?
என் அவசரப் புத்தியினால் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது.
பண நஷ்டம். அதைத் தடுப்பதற்காக மக்களை மடியச் செய்வதா?
பொதுமக்களைப் பூச்சிப் புழுவென்று எண்ணிக் கொண்டிரோ!
பேசாமல் எழுந்து போய்விடும் மரியாதையாக.”
“மடத்தனத்தை விடு. திட்டத்தை முறைப்படி நிறைவேற்றிவிடுவோம்.
பிறகு, பொதுமக்கள் சாகாதபடி தடுத்துக் கொள்ளலாம்.”
“பிறகு தடுப்பதா? பிறகு? எப்படி?”
“குளிக்குமிடம் கட்டி முடித்துவிட்டு, திறப்புவிழா நடந்தேறிய
பிறகு.”
“மக்கள் நோயால் தாக்கப்பட்டு மடியும்போது.”
“மடிவதற்கு முன்பு. நாமே பெரியதோர் வைத்திய சாலை அமைத்துவிடலாம்
– நீ, சர்ஜன்... ஜெனரல் – மாதம் ஐயாயிரம் சம்பளம்!”
தம்பியால் இதைக் கேட்கச் சகிக்கவில்லை.
“போ, வெளியே – போ, வெளியே” என்று முழக்க மிட்டான்.
“போகிறேன் – ஆனால் போவதற்கு முன் இதைக் கூறிவிடுகிறேன்
மரியாதையாக என் யோசனையின்படி நடந்துகொண்டால், தலை தப்பும்
– பிடிவாதம் செய்தாயோ அழிவுதான் உனக்கு” என்று எச்சரித்தான்
அண்ணன். “அழிவு! யாரால்? உன் போன்ற பணந்தேடிகளால்தானே!
உன் போன்றோரின் பகை என்னை ஒன்றும் செய்துவிடாது. நான்
பொதுமக்களின் ஆதரவு பெற்றவன்” என்றான் தம்பி. “பித்தம்
பிடித்தவனே! பொதுமக்கள்தான் உன்னை எதிர்க்கப் போகிறார்கள்–
எதிர்க்கும்படி, என்னால் ஏவிவிட முடியும். வேண்டாம் விஷப்பரீட்சை.
கடைசி எச்சரிக்கை. தம்பியாயிற்றே என்ற பாசத்துக்காகக்
கூறினேன் – என் புத்திமதியைக் கேள். பொதுஜன விரோதி!
யார்! நானா! மக்கள் சாகட்டும் பரவாயில்லை. பணம் வேண்டும்
எனக்கு என்று பேசும் நீயா இதைக் கூறுகிறாய்!! நான் பொதுஜன
விரோதியா! மக்களின் நலனுக்கு எது தேவை, என்ன செய்யவேண்டும்.
இந்தத் திட்டம் நல்லதா, இன்னோர் திட்டம் தேவையா என்று
எண்ணியபடி, ஆராய்ச்சிகள் செய்தபடி, அவர்களுக்காக உழைத்தபடி
உள்ள நானா பொதுஜன விரோதி!! என்று ஆத்திரமும் அழுகுரலும்
கலந்த முறையில் பேசினான். அண்ணன் பதறாமல், துடிக்காமல்
நிதானமாக, “தம்பி! பொதுஜன விரோதியாகப் போகிறாய் நீ.
அதற்கான ‘தூபம்’ போடுவது என்று தீர்மானித்துவிட்டேன்.
வீணாக நாசமாகாதே. திட்டத்தைத் தகர்க்காதே – நீ தகர்ந்து
போவாய் – உனக்கும் பொதுமக்களுக்கும் உள்ள தொடர்பு,
நேசம் தகர்ந்து போகும் – தானாக அல்ல – எங்கள் தாக்குதலால்!!
நான், அடிக்கடி கூறி வந்ததை மீண்டும் கவனப்படுத்துகிறேன்
– பொதுஜனத்தை ஆட்டி வைக்க முடியும் – எப்படி வேண்டுமானாலும்”
என்றான்.
“தலையாட்டிப் பொம்மைகளல்ல, பொதுமக்கள்! போய்க் கூறுவோம்
வா இருவரும். மரணத்தை ஏவுகிற நீயும், மக்களின் வாழ்வு
வளமாக வேண்டும் என்று எண்ணுகிற நானும் – இருவரும் சென்று
பேசுவோம், பொதுமக்களிடம் வா, தைரியமிருந்தால் வா, வல்லமை
இருந்தால்! வந்து பேசு – பிறகு பார் யாரைப் பொதுமக்கள்
பொதுஜன விரோதி என்று கூறுகிறார்கள் – கண்டிக்கிறார்கள்
என்பதை, வரத் தயாரா? நான், திட்டத்தால் வரக்கூடிய நாசத்தை
எடுத்து விளக்கிப் பேசுகிறேன். நீ அந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டால்
சீமான்கள் சிலருக்கு ஏற்படக்கூடிய நஷ்டத்தை எடுத்துக்
கூறு. கற்களால் அடித்து விரட்டுவர் உன்னை” என்று டாக்டர்
ஆக்ரோஷத்துடன் பேசினார். அண்ணன் அவனைச் சுட்டுத் தள்ளி
விடுவது போன்ற விதமாக முறைத்துப் பார்த்துவிட்டு சரெலெனப்
போய்விட்டான். போர் மூண்டுவிட்டது!!
* * *
“இனிக் காலதாமதம் கூடாது – உண்மையை உடனே ஊரறிய செய்யவேண்டும்
– சீமான்களின் சதிச்செயல் ஆரம்ப
மாகும் முன்பு, பொதுமக்களின் ஆதரவைத் திரட்டி விடவேண்டும்.
பொதுமக்கள் அறிவர் நமது தொண்டு எப்படிப்பட்டது என்பதை.
சீமான்களின் போக்கும் அவர்களுக்குத் தெரியும். சீறினான்
அண்ணன், பணம் நஷ்டமாகுமே என்பதால். ஆனால் என்ன செய்துவிட
முடியும்! பொதுமக்கள், என்ன உண்மையைத் தெரிந்து கொள்ள
முடியாதவர்களா? மக்களாட்சிக் காலம் இது! மயக்கும் புரோகிதனும்,
மிரட்டும் மன்னனும் ஒழிந்துபோய், மக்களுக்காக, மக்களால்
அமைக்கப்பட்ட மக்களாட்சி நடக்கும் காலம். இதிலே மமதையாளர்களின்
ஆர்ப்பரிப்பு தவிடுபொடியாகும். இந்தக் கட்டுரை, மக்களுக்குமுழு
உண்மையை உணர்த்திவிக்கும். விளக்கமாகத் தீட்டியிருக்கிறேன்.
மூன்றுமுறை நானே படித்தேன். ஆதாரங்கள் ஏராளம். ஆராய்ச்சியாளரின்
கருத்தை வெளியிட்டிருக்கிறேன். இதைக் கண்டால், மக்கள்
உண்மையை உணர்வர். இன்றே பத்திரிகையில் வெளிவந்தாக வேண்டும்.”
டாக்டர் கட்டுரையைத் தீட்டியபிறகு இதுபோல எண்ணினார்.
ஓட்டம், பெருநடையாகச் சென்றார் பத்திரிகை அலுவலகத்துக்கு.
ஆசிரியரிடம் விஷயத்தை விளக்கினார் டாக்டர். குறுக்குக்
கேள்விகளுக்கெல்லாம் தக்க பதிலளித்தார். கட்டுரையைப் படித்துக்
காட்டினார். ஆசிரியரின் கண்களிலே நீர்த் திவலைகள்!! எழுந்து
வந்து, டாக்டரைக் கட்டி அணைத்துக்கொண்டு, “டாக்டர்! நீர்
மேதை! பரோபகாரி!! சிலை நாட்டிச் சிறப்பிக்கவேண்டும் உம்மை!
பொதுமக்கள், உம்மை, ‘ரட்சகர்’ என்று போற்றப்போவது திண்ணம்.
எவ்வளவு பெரிய ஆபத்தை, நாசத்தைத் தடுத்துவிட்டீர் தெரியுமா!
உம்மால் உமது பெருமையைப் பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது.
என் போன்றவர்களால் மட்டுமே முடியும்! டாக்டர்! நான்,
தங்கள் தோழனாக இருப்பதைப் பெரியதோர் பாக்கியம் என்றே
கருதுகிறேன். இந்த நூற்றாண்டின் ‘மகாபுருஷர்’ தாங்கள்”
என்று முகஸ்துதியாக அல்ல உள்ளன்புடனேயே, கூறினார். டாக்டர்
பூரித்துப் போனார்! பொதுஜன விரோதியாக்குகிறேன் என்று
மிரட்டினானே அண்ணன், என்று எண்ணிப் புன்னகை புரிந்தான்.
அன்றைய இதழில் முதல் பக்கம், டாக்டரின் கட்டுரை வெளியிடுவது
என்று ஆசிரியர் ஏற்பாடு செய்தார்.
பொதுமக்களுக்காக உண்மையில் தொண்டு செய்பவரை எந்தப் பகையும்
ஒன்றும் செய்துவிட்டது என்ற திடமனத்துடன் டாக்டர் பத்திரிகை
அலுவலகத்தை விட்டு வெளியே வரப் புறப்பட்டார் – வெளிவாயிற்படியிலே
அண்ணனைக் கண்டார். அண்ணன் அலட்சியமாக டாக்டரைப் பார்த்துவிட்டு,
பத்திரிகை நிலையத்துக்குள் சென்றான். ஆசிரியரோ, கட்டுரைக்குப்
பொறுத்தமான தலைப்புகள் தயாரிக்கும் தொல்லையான வேலையில்
ஈடுபட்டிருந்தார். இரண்டு பேனா பழுதாகிவிட்டன. காகிதம்
பல கெட்டுவிட்டது! சீமான் உள்ளே நுழைந்தார் கனைத்துக்கொண்டே
– ஆசிரியர் டாக்டரின் கட்டுரையைப் பற்றிப் புகழத் தொடங்கினார்.
ஆசிரியர் பேச்சில் குறுக்கிடவில்லை. சீமான் – பேசி முடித்ததும்
நிதானமாக “என் தம்பி! தந்த கட்டுரையைப் பிரசுரிக்க வேண்டாம்.
அதைக் கூறிவிட்டு போகவே நான் வந்தேன்” என்றான். ஆசிரியர்
திடுக்கிட்டுப் போனார்.
“அதை வெளியிட்டாக வேண்டுமே – பொதுஜன நன்மையை உத்தேசித்து”
“பொதுஜன நன்மையை உத்தேசித்துத்தான் நான் கூறுகிறேன்,
அதை வெளியிடக்கூடாது என்று”
“மக்களுக்கு விளைய இருக்கும் ஆபத்து இது என்பதை டாக்டர்
விளக்கி இருக்கிறார்.”
“என்னிடம் இதைவிட அதிகமாக விளக்கம் கூறினான்.”
“திட்டம் தீமை தருவது என்பதை மக்கள் அறியும்படிச் செய்தால்தானே,
திட்டத்தைக் கைவிட்டுவிடுவது பற்றிப் பொதுமக்கள் தவறாக
எண்ணாமலிருப்பர்.”
“ஆமாம், ஆனால் திட்டத்தைக் கைவிட்டுவிடப் போவதில்லை.
திட்டப்படி காரியம் நடைபெறும்.”
“நச்சுப் பொய்கையை வெட்டப் போகிறீர்களோ! இதைத் துணிந்து
என்னிடமே கூறுகிறீரே. நான் யார் என்பது தெரியாமல்...”
“நன்றாகத் தெரியும் – ஆசிரியரே! ஆனால் நீர் தெரிந்து கொள்ள
வேண்டியது ஒன்று இருக்கிறது. நீர் ஆசிரியர், உரிமையாளரல்ல
– பத்திரிகையின் உரிமையாளருக்குத் திட்டம் கைவிடப்பட்டுவிட்டால்
ஐம்பதாயிரம் நஷ்டம் என்பது உமக்குத் தெரியாது.”
“தெரியவேண்டிய அவசியமில்லை. நிச்சயம் தயை தாட்சண்யமற்றுச்
சேவை செய்வதே பத்திரிகாசிரியன் கடமை. எது பொதுமக்களின்
நன்மைக்கு உகந்தது என்பதைத்தான் நாங்கள் கவனித்துப் பணியாற்றுவோம்.
மற்றவை எமக்குத் தூசு.”
“வேறோர் சமயம், பத்திரிகாசிரியரின் கடமையைப் பற்றி இதைவிடத்
தெளிவாகவும் வீரமாகவும் கூடக் கட்டுரை தீட்டலாம் – படித்து
நானும் இன்புறுகிறேன். இப்போது என் யோசனையைக் கேளும்
– என் வேண்டுகோளைச் சற்று மதித்து நடவுங்கள் – தம்பி
தந்த கட்டுரையை வெளியிட வேண்டாம். விபரீதம் நேரிடும்.”
“உங்கள் வேண்டுகோளின்படி நடப்பதற்கு இல்லை மன்னிக்கவும்.”
“பரவாயில்லை. நான் போய் வருகிறேன். என் வேண்டுகோளை நிராகரித்து
விட்டீர், சரி, உங்கள் சுபாவமே இதுதான்; உத்தரவுக்குத்தான்
இறங்கி நடக்கப் பிரியம் போலும்!”
ஆசிரியர் இந்தக் கேலிப் பேச்சைக் கேட்டுக் கோபம் கொண்டார்.
சீமான், இதை அறிந்து கொண்டவர்போல வெளியே சென்றார். மடையன்,
காதகன், கயவன் என்று ஆசிரியர் சீமானை மனத்துக்குள் திட்டியபடி
தலைப்பு என்ன தருவது என்று யோசித்தபடி இருந்தார். மணி
அடித்தது – உரிமையாளர் அறையிலிருந்து ஆசிரியர் அழைக்கப்பட்டார்.
உரிமையாளர் எதிரே, சீமான்!
“டாக்டர், ஏதோ கட்டுரை அனுப்பினாராமே...?”
“ஆமாம் – மிகவும் முக்கியமான ஆராய்ச்சி முடிவு.”
“சொன்னார்.... இவர்... சரி... அந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க
வேண்டாம்... இன்று..”
“என்ன! என்ன! நமது நகர மக்களின் உயிரைப் பாதிக்கக் கூடிய
பிரச்சனை... ஆபத்து நேரிட இருக்கிறது. அதை அறிந்து, டாக்டர்
தடுக்கிறார். பல ஆயிரம் மக்களுடைய உயிரைக் காப்பாற்றுகிறார்
– அப்படிப்பட்ட கட்டுரையை, ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிடாமலிருப்பதா!
உண்மையை மறைப்பதா! நமது பத்திரிகையின் தரம் என்ன! நமது
கொள்கை எப்படிப்பட்டது! ஜனநாயக முரசு! இதிலே அக்கிரமம்,
அநீதிக்கு இடமளிக்கலாமா? நான் இதற்கு ஒருபோதும் சம்மதியேன்.
“சம்மதிக்க வேண்டாம், நீ பத்திரிகை நடத்தும் போது!”
“அவ்வளவு அலட்சியமாகவா, ஓர் எழுத்தாளனைப் பேசுகிறீர் –
இந்தச் சீமானின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தாங்களும்
ஓர் எழுத்தாளர்.”
“முன்பு! இப்போது இந்தப் பத்திரிகையின் இலாப நஷ்டத்துக்குப்
பொறுப்பு என்னுடையது. டாக்டரின் கட்டுரை வெளிவந்தால்
நகராட்சி மன்றத்தினர் மான நஷ்ட வழக்குத் தொடுப்பார்கள்
– என்று இவர் கூறுகிறார் தெரிகிறதா – உன் எழுத்துக்களை
எண்ணிக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள் – பணம் கொட்டித் தர வேண்டும், வழக்கு அவர்கள்
தொடுத்தால்”
“பொதுமக்களின் ஆதரவைத் திரட்டி வழக்கு நடத்தியே பார்க்கலாம்.”
“இதை ஏற்றுக் கொள்ளும் இடமாகப் பார்த்து நீர் ஆசிரியர்
வேலை பார்க்கலாம். போய் வாரும். இன்று முதல் பச்சை மலை
ஆசிரியராக நியமிக்கப்படுவார்.”
* * *
வேலை இழந்த ஆசிரியரும் டாக்டரும் சந்தித்தனர். வீரத்தை
விடமறுத்தனர் இருவரும் – வேல் பாய்ந்த வேழமாயினர். வேறு
இதழ்கள் இல்லை. வேதனை, டாக்டருக்கு உண்மை மறைக்கப்படுகிறதே
என்று துடித்தார். அவருடைய இதயத்தை மேலும் குத்துவதுபோல,
அன்றைய இதழில், திட்டத்தில் சிறப்புகளைப் பற்றி அவர் முன்பு
தீட்டிய கட்டுரை, மீண்டும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இதழைச் சுக்குநூறாகக் கிழித்தெறிந்தார். மேஜையைக் குத்தினார்.
கை வலித்தது! நாற்காலிகளைப் போருக்கிழுத்தார். என்ன செய்வதென்று
தெரியாமல் திகைத்தார். பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.