அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


அதிகாரம் அவர்களிடம் அறைகூவல் நமக்கு!
2

போராடினோம், பலன் பெற்றோமா?

மேலே ஓடிக் கொண்டிருக்கிற ஆற்று நீரைப் பார்க்கிறீர்கள் – காவிரி என்கிறீர்கள், ஆண்டுக்கொரு தடவை குளிக்கிறீர்கள் – புண்ணியம் வரும் என்று கருதுகிறீர்கள், வாய்க்கால் வெட்டுகிறீர்கள் – நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுத்துகிறீர்கள்.

“ஆனால், இந்தக் காவிரி ஆற்றின் கரையோரத்தில் பூமிக்கடியிலே பெட்ரோல் கிணறுகள் இருப்பதாக ரஷ்ய நாட்டு நிபுணர்கள் பல ஆண்டுகட்கு முன்னாலே சொன்னார்கள்“.

“தோண்டிப் பாருங்கள் – கிணற்றைத் தோண்டிப் பாருங்கள், பெட்ரோலை எடுத்துப் பாருங்கள், தொழில் திட்டத்தை நிறைவேற்ற பூமி அடியிலே வைத்துக் கொண்டிருக்கும் எண்ணெயை எடுங்கள், எடுங்கள்“ என்று நாங்கள் சட்டமன்றத்திலே வாதாடிப் பார்த்தோம். பொது மேடைகளிலே பலமுறை பேசிப் பார்த்தோம், இதுவரை அதற்கான முயற்சிி எடுத்துக் கொள்ளப்படவில்லை.

சிவப்பு கோடிட்டு அழித்தனர்!

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் முடிந்து, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலாகிலும் காவிரி நதிக்கரையிலே இருக்கிற எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுகிற திட்டத்தை நீங்கள் இணைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்த, எங்கள் வலியுறுத்தலுக்காகத் தமிழகத் துரைத்தனம், அதைத் தங்களுடைய திட்டத்திலே சேர்த்து மத்திய அரசுக்கு அனுப்பினார்கள்.

மத்திய அரசு அதை சிவப்புக் கோடிட்டு அழித்து, ‘அதை மூன்றாவது திட்டத்தில் நிறைவேற்றுவதற்கில்லை, நான்காவது திட்டத்திலே பார்க்கலாம்‘ என்று அனுப்பி விட்டார்கள்.

காவிரி நதி தீரத்திலே கரைக்குக் கீழே எண்ணெய் ஓடிக் கொண்டிருக்கிறது – மேலே பெரியவர்கள் வாடிக் கொண்டிருக்கிறாக்ாள் – மேலே உலாவிக் கொண்டிருக்கிற மக்கள், ‘தலைக்கொரு உச்சி் ககரண்டி எண்ணெய் இல்லையே‘ என்று சொல்லத் தக்க தரித்திர நிலையிலே இருக்கிறார்கள், ஆனால், அவர்கள் நடந்து செல்கிற பூமியின் அடியிலே பெட்ரோல் கிணறுகள் ஏராளமாக இருக்கின்றன.

கட்சிப் பாகுபாடு மறப்பீர்!

பெட்ரோல் கிணறுகள் என்றால், பல இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலை கிடைக்கும் என்பது மட்டுமல்ல, பல கோடிக்கணக்கான ரூபாய் அதன் மூலமாக இலாபமும் கிடைக்கக்கூடும்.

அப்படிப்பட்ட கிணறுகளைத் தோண்டி எண்ணெய் சுத்தகரிப்புத் தொழிற்சாலை விரைவில் தஞ்சைத் தரணியிலே ஏற்பட வேண்டுமென்பதைக் கட்சிப் பாகுபாட்டை மறந்து – கட்சியிலும் உள்ள முற்போக்காளர் அத்தனை பேரும் ஒரு தனி மாநாடு கூட்டி – எண்ணெய்க் கிணறு தோண்டப்பட வேண்டும் என்பதற்காக திட்டத்தை அவர்கள் அம்மாநாட்டில் நிறைவேற்றி, மாவட்டத்தில் வெற்றி பெற்ற நான்கு தி.மு.க. தோழர்களிடத்திலும், அதைக் கொடுத்துச் சட்டமனற்த்திலே பேசம்படி சட்டமன்றத்திலே வலியுறுத்தும்படி கேட்டுக் கொள்ள வேண்டுமென்று பணிவன்போடு நான் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இது மட்டுமல்லாமல் தஞ்சைத் தரணியிலே ஒரு அருமையான பொருள் பூமிக்கடியிலே – ஆனால், நெடும் ஆழத்திலே அல்ல – தோண்டி எடுக்கக் கூடிய தூரத்தில் இருக்கிறது, ஆங்கிலத்திலே அதனை ‘ஜிப்சம்‘ என்கிறார்கள். தமிழிலே கொச்சையாக, ‘சுண்ணாம்புப் படிவக்கற்கள்‘ என்று அதனை அழைக்கிறார்கள்.

தேவையற்றுக் கிடக்கின்றதே!

அந்த ‘ஜிப்சம்‘ என்பது வேதாரண்யப் பகுதியிலே ஏராளமாகக் கிடைக்கிறது! ‘ஜிப்சம்‘ என்ற அந்தப் பொருள் எஃகுத் தொழிற்சாலைக்கும், மற்ற பல உருக்குத் தொழிற் சாலைகளுக்கம் ஏராளமாகத் தேவைப்படுகிறது.

இன்றைய தினம் வட இந்தியாவிலே ஒன்றுக்கு நான்கு இரும்புத் தொழிற்சாலை அமைக்கப்பட்டிருக்கிறதென்றால் இரும்பு உருக்கு அங்கே தயாரிக்கப்படுகிறது என்றால் – ரூர்கோலாவிலும், பிலாயிலும், துர்காபூரிலும, பொக்காரோவிலும் இரும்புத் தொழிற்சாலை இருக்கிறதென்றால், அந்தத் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படுவது தேவைப்படுவது, ‘ஜிப்சம்‘ என்ற அரும் பொருளாகும்.

‘ஜிப்சம்‘ என்ற அந்தப் பொருளின் பெரும் பகுதியை இன்றைய தினம் இந்தியத் துரைத்தனத்தார் பாகிஸ்தானிலிருந்து தான் வரவழைக்கிறார்கள், பாகிஸ்தானிலிருந்த வருகிற அந்த ஜிப்சம் உயர்தரமான ஜிப்சம் அல்ல.

“உயர்தரமான ஜிப்சமாக அது இல்லாத காரணத்தால் இரும்பு உருக்குத் தொழிற்சாலையில் உற்பத்திக் குறைவு ஏற்பட்டிருக்கிறது, இயந்திரங்கள் பழுது பட்டிருக்கின்றன“ என்று நானல்ல – கருணாநிதியல்ல – முன்னேற்றக் கழகத்தார் அல்ல – துரைத்தனத்தால் அமைந்த ஒரு ஆராய்ச்சிக் குழுவினரே அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

மறைந்தவர் கேட்டார் – இருப்பவர் கேட்கவில்லை!

அங்கே கிடக்கிற ஜிப்சம் உயர்தரமான ஜிப்சம்அல்ல, ஆனால், அந்த பாகிஸ்தான் ஜிப்சத்தை உருக்குத் தொழிற்சாலைக்குப் பயன்படுத்தி, உருககு உற்பத்தியும் குறைந்து, இயந்திரங்கள் பழுதுபட்டிருக்கிற இந்த நிலைமைக்குப் பிறகும், தஞ்சாவூரிலே வேதாரணியம் பக்கத்தில் கிடைக்கக்கூடிய உயர்தரமான ஜிப்சத்தை ஏன் பயன்படுத்தக்கூடாது, அதை இதுவரையில் இந்தத் தொகுதியிலே வெற்றி பெற்றுச் சட்டமன்றத்திலே அமர்ந்திருந்த நம்முடைய அருமை நண்பர் பரிசுத்த !நாடார்) கேட்டாரா? மேல் சபையிலே இருக்கிற பூண்டி !வாண்டையார்) கேட்டாரா? மற்றும் பெற்றிருந்த வேறு பல காங்கிரசு உறுப்பினர்கள் அதைப் பற்றிக் கேட்டார்களா? என்றால், இவர்கள் யாரும் கேட்கவில்லை.

ஒரே ஒருவர் கேட்டார் – அவ்வளவு நல்ல உள்ளத்தோடு இருக்கிறவர் இந்த நாட்டிலே இருக்கக்கூடாது என்று அவர்கள் கருதினார்களோ என்னவோ – ‘அந்த ஜிப்சத்தை ஏன் எடுக்கக்கூடாது?“ என்று கேட்ட சர்தார் வேதரத்தினம் மறைந்து போனார்!

அமைச்சர்கள் பார்வையில் அலட்சியமானார்!

அந்த ஒருவர் தான் சட்ட மன்றத்தில் ‘வேதாரண்யம்‘ பக்கத்திலே இருக்கிற ஜிப்சத்தை வெட்டி எடுங்கள் – தோண்டி எடுங்கள்‘ என்று ஒரு தடவைக்கு நான்கு தடவை கேட்டார். அவரை, மந்திரிகள், பார்த்த பார்வை எனக்குத் தெரியும் – நான் எதிரிலே இருந்து அதைப் பார்த்தேன் – ‘என்ன இந்தப் பைத்தியக்காரர் அண்ணாதுரை பேசுவதைப் போல, அன்பழகன் பேசுவதைப் போல், கருணாநிதி பேசுவதைப் போல, இதையெல்லாம் சொல்லுகிறாரே, தனியாகச் சொல்லக்கூடாதா? சட்டமன்றத்திலே சொல்ல வேண்டுமா? இது வெறும் வாயை மெல்லுகீற அவ்வையாருக்கு ஒரு படி அவல் கிடைத்ததைப் போல், நம்மைச் சதா வாட்டி எடுக்கம் அண்ணாதுரைக்கு ஒரு பிடி அவலாகி விடுமே – என்ற பரிதாப உணர்ச்சியோடுதான் சர்தார் வேதரத்தினத்தைப் பார்த்தார்கள்.

அவரால் பேசக்கூடிய அளவுக்கு அவர் பேசிப் பார்த்தார், ஆனால், காரியம் நடக்காமலே அவர் காலமாகிப் போய்விட்டார்! ஜிப்சமும் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த ஜிப்சம் தொழிற்சாலை இந்தத் தஞ்சைத் தரணியிலே விரைவிலே அமைக்கப்பட்டதால், எத்தனையோ, இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலை கிடைப்பது மட்டுமல்ல – கோடிக்கணக்கான செல்வம் நமக்கு வந்து சேரும்.

நான் இந்த இரண்டையும் ஏன் வலியுறுத்துகிறேன் என்றால் ஜிப்சம் தொழிற்சாலை ஏற்பட்டால், தனிப்பட்ட முதலாளி வளரமாட்டான்! எண்ணெய்க் கிணறு தோண்டப்பட்டால் தனிப்பட்ட முதலாளி வளரமாட்டான்!

நிலத்திலே கரும்புத் தோட்டங்கள் வைத்தால் – சர்க்கரை ஆண்கள் வைத்தால் அவை வடபாதி மங்கலங்களை வளர்க்கும்! ஆனால், ஜிப்சம் தொழிற்சாலை ஏற்பட்டால் உங்களுக்கும் எனக்கும், ஏழை மக்களுக்கும் பாட்டாளிகளுக்கும் இது இலாபத்தைக் கொடுத்துத் தஞ்சைத் தரணியின் வளத்தை மேலும் அதிகப்படுத்தும்!

ஆகையினால், தஞ்சை தரணியில் அப்படிப்பட்ட ஒரு தொழில் வளத்தை ஏற்படுத்துவதற்கேற்ற நல்ல வாய்ப்பு இருக்கிறதென்பதை இந்த வெற்றி விழாக் கூட்டத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மூங்கில் மூலப் பொருளாக மாறட்டும்!

இது மட்டுமல்லாமல், தஞ்சைத் தரணியின் ஒவ்வொரு குடும்பத்தினுடைய தோட்டத்திலேயும் மூங்கில் வளர்ந்திருப்பதை நாம் பார்க்கிறோம். ஒவ்வொரு வீட்டிற்குப் பின்னாலேயும் நான்கு ஐந்து மரமாகிலும் மூங்கில் மரங்களாக இருக்கின்றன. இந்த மூங்கிலை நாம் சாதாரணம் என்று கருதுகிறோம.

மூங்கிலுக்கு ஆங்கில நாட்டுக்காரர்கள், ‘ஏழையினுடைய தேக்கு மரம்‘ என்று பெயர் வைத்திருக்கிறார்கள், பணக்காரர்களிடத்திலே பணமிருந்தால் தேக்கு வாங்கிக் கட்டிடங்களுக்குப் பயன்படுத்துவார்கள்! ஏழையினிடத்திலே அதிகப் பணமில்லாமல் அவனால் தேக்கு வாங்க முடியாத நிலை இருக்கிற காரணத்தால் உறுதிப்பாடு மிகுந்த – விலை மலிவாக இருக்கிற மூங்கிலைத்தான் அவன் தேக்காகப் பயன்படுத்துகிறான்!

அப்படிப்பட்ட நல்ல மூங்கில் காடுகளைத் தஞ்சைத் தரணியிலே நல்ல திட்டமிடப்பட்டு வளர்த்தால், மூங்கில் கிடைப்பது மட்டுமல்ல – அந்த மூங்கிலிலே இருந்து செய்யக் கூடிய காகித ஆலைகளைத் தஞ்சைத் தரணியிலே ஏராளமாக வைக்கலாம்!

அவவநிலைக்கு முடிவு காண அரியதோர் திட்டம்!

காகிதத்திற்கு நாளுக்கு நாள் உபயோகம் வளர்ந்த வருகின்ற காலமிது! ஆளுக்கொரு பத்திரிக்கை வேளைக்கொரு பத்திரிக்கை – நாளைக்கொரு பத்திரிக்கை வந்து கொண்டிருப்பதைப் பார்த்தால், காகிதத்தினுடைய தேவை எந்த அளவுக்கு வளருகிறது – உபயோகம் மிகுந்ததிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்!

அப்படிப்பட்டட காகிதம் இன்றைய தினம் சைனாவிலிருந்து ஷில்லாங்கிலிருந்து வரவேண்டியிருக்கிறது. யுகோஸ்லேவியா விலிருந்து வரவேண்டியிருக்கிறது கனடாவிலிருந்து வர வேண்டியிருக்கிறது.

இந்தியத் துரைத்தனத்தார் நடத்துகின்ற ‘நேப்பர்‘ ‘பேப்பர்‘ என்பது எடுத்தவுடனே கையிலே ஒட்டிக் கொள்ளும், அப்படிப்பட்ட சாணிக் கலரிலே இருக்கிறது) அதை ஒரு தடவை இயந்திரத்திலே ஓட்டி கீழே இறக்கினால் எழுத்துக்கள் இயந்திரத்திலே தங்கிவிடும்! காகிதம் கையோடு வந்துவிடும்‘ அப்படிப்பட்ட காகிதைத்தான் அங்கே தயாரிக்க முடியகிறது.

அதற்குக் காரணம், இங்கே கிடைக்கக் கூடிய மூங்கிலைப் போல் அங்கே கிடைக்காததால் நல்ல வெண்மை நிறம் பொருந்திய காகிதத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை.

மூங்கில் மூலமாகச் செய்யக்கூடிய காகிதம், வெளிநாட்டுக் காகிதத்தைவிட – நல்ல விதத்திலே அமையக் கூடிய காகிதமாக இருக்கும், அப்படிப்பட்ட தொழிற்சாலை தஞ்சைத் தரணியிலே அமைக்கலாம், அதற்கேற்ற நல்ல வாய்ப்புக்கள் எல்லாம் தஞ்சைத் தரணியிலே இருக்கின்றன.

ஆகையினால், வெற்றி பெற்றுவந்திருக்கின்ற எங்கள் கழகத் தோழர்கள் இப்படிப்பட்ட தொழில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கேற்ற வகையில் அவர்களுக்கு நீங்கள் உறுதுணையாக இருந்து உங்களுக்குத் தோன்றுகின்ற நல்ல யோசனைகளை அவர்களுக்கு எடுத்துச்் சொல்ல வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இடமுண்டு – ஆனால் அதிகாரம்?

அந்தத் தொழில் திட்டங்களைப் பற்றியெல்லாம் எப்ஙகளுடைய தோழர்கள் சட்டமன்றத்திலே எடுத்துச் சொல்லுவார்கள் என்று மட்டும் ஏன் சொன்னேன் என்றால், சொல்லுவதற்கு மட்டும்தான் எங்களுக்கு இடமிருக்கிறது. அதிகாரமிருக்கிறது இப்பொழுதும் 130 பேர் காங்கிரசுக் கட்சியின் சார்பிலேதான் சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள்! எனவே, இப்பொழுதும் செய்கின்ற அதிகாரம் காங்கிரசுக் கட்சியினிடத்திலேயும், செய்யச் சொல்லுகின்ற கடமை மட்டும் எங்களிடத்திலேயும் இருக்கின்றன.

காங்கிரசுக்காரர்கள் நல்ல யூகமுள்ள அரசியல்வாதிகளானால், ‘முப்பத்து நான்கு இலட்சம் மக்கள் நம்மை எதிர்த்து முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்தார்களே ஏன், வாக்களித்தார்கள்? என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

இன்றைய தினம் ஒர எதிர்க்கட்சியிலே உள்ள முன்னேற்றக் கழகத்தவர்கள் பெற்றிருககிறார்கள் என்றால், இந்த முப்பத்து நான்கு இலட்சம் மக்களும், ‘இன்று காங்கிரசு ஆட்சியை நம்பவில்லை – காங்கிரசு ஆட்சியினாலே விலை குறையாது – காங்கிரசு ஆட்சியினாலே வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியாது – காங்கிரசு ஆட்சியினாலே ஏழைக்கு வாழ்வு கிடைக்காது‘ என்று தெரிவித்துதான் உங்களுக்கு ஓட்டுப் போடாமல் கோ.சி.மணிக்குப் போட்டார்கள். துரையரசனை வெற்றி பெறச் செய்தார்கள், கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தார்கள், நாவலரை வரவழைத்துக் கொண்டார்கள் – என்று தானே பொருள்!

எப்படி வெற்றி பெற்றார்கள் தெரியுமா?

அப்படிப்பட்ட வகையிலே 34 இலட்சம் மக்கள் நம்மிடத்திலே நம்பிக்கை இல்லை என்று தெரிவித்திருக்கிறார்களே என்பதைப் பொறுப்புணர்ச்சியோடு – நாட்டை ஆளுகிற முதலமைச்சர் உட்கார்ந்து, சிந்தித்து, பிறகு மக்களைப் பார்த்து, என்னமோ உங்களில் முப்பத்தி நான்கு இலட்சம் பேர் எங்களுக்கு வாக்களிக்கவில்லை, எங்களுக்கு இருக்கிற அதிருப்தியை நாங்கள் உணருகிறோம். இனி உங்கள் திருப்தியைப் பெறத்தக்க வகையில் நாங்கள் ஆட்சியை நடத்துவோம், விலையைக் குறைப்போம் – என்று பேச வேண்டியதிருக்கும், இவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் தெரியுமா?

பணக்காரர்களாக இருப்பதாலேயே இவர்கள் வெற்றி பெற்றார்கள்‘ ‘ஏழைகளாக இருப்பதாலே இவர்கள் வெற்றி பெற்றார்கள்‘ என்று இன்னொரு இடத்திலேயும், ‘படித்தவர்களாக இருப்பதாலே வெற்றி பெற்றார்கள்‘ என்று இன்னொரு இடத்திலேயும், ‘பாமரர்களாக இருப்பதாலே வெற்றி பெற்றார்கள்‘ என்று இன்னொரு இடத்திலேயும் நாளுக்கு ஒரு ஆராய்ச்சி, வேளைக்கு ஒரு ஆராய்ச்சி மந்திரிக்கு மந்திரி ஆராய்ச்சியிலே முரண்பாடுகள் என்ற விதத்திலே இருக்கிறார்களே தவிர, வேறு எந்த விதத்திலே இருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

விளையாட்டுச் சிறுவர்களா?

விளையாட்டுச் சிறுவர்கள் இரயிலிலே ஏறிக் கொண்டு போனால், இரயிலினுடைய சப்தத்தை அவர்களாகவே யூகிப்பார்கள்! ஒரு சிறுவன் சொல்லுவான் – ‘‘இந்த இரயிலினுடைய சப்தத்தைக் கேட்டவுடனே, ‘வந்து விட்டேன், வந்து விட்டேன்‘ என்று சொல்லுகிறது பார்“ என்பார்ன், பக்கத்தில் இருக்கும் இன்னொரு பையன், ‘வந்து விட்டேன் என்று சொல்லவில்லை போய்விட்டேன்‘ என்று சொல்லுகிறது பார்‘ என்று சொல்லுவான். அதை எண்ணிக் கொண்டே உட்கார்ந்தால் அந்தச் சப்தம் அப்படியே காதிலே கேட்கும்.

அந்தப் பள்ளிக்கூடத்துச் சிறுவர்கள் இரயிலிலே ஏறிக் கொண்டு நடத்துகிற ஆராய்ச்சியைப் போல், ‘மந்திரி பதவியிலே இருந்துகொண்டு இந்தப் பெரிய பிள்ளைகள் இந்த ஆராய்ச்சியா நடத்த வேண்டும்? என்று நானல்ல – வெளியுகத்திலே உள்ளவர்கள் கை கொட்டிச் சிரிப்பார்கள்!

காங்கிரஸ் ஆட்சியின் எதிர்காலத் திட்டம் என்ன?

ஆகையினால், புதிதாக மறுபடியும் மூன்றாவது ஆட்சி்ப் பொறுப்பை ஏற்றிருக்கும் காங்கிரசு ஆட்சியாளரை நான் கேட்க ஆசைப்படுகிறேன் – உங்களுடைய எதிர்காலத் திட்ட்மென்ன? எங்களைப் பார்த்துக் கேட்கிறீர்களே – நாங்கள் ஆளும் கட்சி அல்ல – எங்களுடைய திட்டம் என்னவென்றால் – நீங்கள் நல்லது செய்தால் ஆதரிப்பது, நீங்கள் கெடுதல் செய்தால் தடுத்து நிறுத்துவது – நீங்கள் நல்லதுக்க அழைத்தால் ஒத்துழைப்பது – நீங்கள் கோணல் வழியிலே சென்றால் தடுத்து நிறுத்துவதுதான்.

இது எங்களுக்கு மட்டுமல்ல – எந்த எதிர்கட்சியாக இருந்தாலும் அந்த் எதிர்கட்சிக்கு இருக்கிற இலக்கணம், கடமை அதுதான், அந்தக் கடமையை நாங்கள் செம்மையாக நிறைவேற்றுவாம்.

ஆளுங்கட்சியாக இருக்கிற காங்கிரசே, உன்னை நான் கேட்கிறேன் – காங்கிரசுத் தலைவர்களை நான் கேட்கிறேன் – ‘நான் ஒரு குடிமகன், நான் ஒரு வாக்காளன், நான் ஒரு வரி செலுத்துபவன்‘ என்ற முறையிலே கேட்கிறேன் – ‘மூன்றாவது முறையாக அரசு அமைத்திருக்கும் காங்கிரசு கட்சி என்ன திட்டத்தை இதுவரையில் மக்களிடத்திலே சொல்லியிருக்கிறது“ என்ற, ஆனால் சொல்லியிருக்கிற திட்டமெல்லாம், ‘அண்ணாதுரையை ஒழித்துக் கட்டுகிறேன் பார், முன்னேற்றக் கழகத்தை முறியடிக்கிறேன் பார்‘ என்ற இப்படிப்பட்டவைதான்!

கடையை விட்டுக் கீழே இறங்கு!

‘விலையைக் குறைக்கிறோம், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைத்துக் காட்டுகிறோம், தொழில் வளத்தைப் பெருக்கிக் காட்டுகிறோம்‘ என்ற இந்தத் திட்டங்களை அவர்கள் எடுத்துச் சொல்லாமல் இது வரையிலே இருப்பதற்குக் காரணம் என்ன?

இன்னும் சில நாட்களில் சட்டமன்றம் கூடுகிற பொழுது புதிதாக வரி போடத் திட்டமிட்டிருக்கிறார்கள், அந்தப் புதிய வரிகள் ஏழை மக்களின் தலையிலே விழப் போகின்றன, அந்த வரியினாலே ஏழை திண்டாடுவான் – தி்கைப்பான் – திணறுவான் – எதிர்ப்பான் – என்ற காரணத்தினாலே அவனுடைய கவனத்தைத் திருப்புவதற்காக, ‘அண்ணாதுரையைப் போய்க் கேள், ரூபாய்க்கு 3 படி அரிசி போடுவான்‘ என்று திருப்பி விடுகிறார்கள்.

அரிசிக் கடையிலே நீ இருந்து கொண்டு என்னைப் போடச் சொன்னால், மரியாதையாகக் கடையை விட்டு நீ கீழே இறங்கி விட வேண்டுமல்லவா?

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்...!
அதை விட்டு விட்டு ஆட்சிப் பொறுப்பிலே அவர்களே இருந்து கொண்டு ‘ரூபாய்க்கு 3 படி அரிசி போட முடியுமா?‘ என்று கேட்டால் என்ன பயன்?

நண்பர்களெல்லாம் சொன்னார்கள் – ரூபாய்க்கு 3 படி அரிசி என உதய சூரியன் எழுதியிருக்கிற இடத்திலெல்லாம் காங்கிரசார் எழுதியிருப்பதாக! தோழர்களுக்குச் சொல்லுவேன்! ‘திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால்‘ என்று அதற்கு மேலே ஒருவரி எழுதி விட்டால் நாட்டுக்குத் திருப்தியாகிவிடும்!

‘திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால், ரூபாய்க்கு 3 படி அரிசி கிடைக்கும், ரூபாய்க்கு 3 படி அரிசி கிடைக்க வேண்டுமானால், பக்கத்திலே இருக்கிற உதய சூரியனைப் பார்த்துக் கொள்ளுங்கள்‘ என்று நீங்கள் இப்பொழுதே தேர்தல் பிரச்சாரம் செய்து கொள்வதற்கு அந்த எழுத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்!

ரூபாய்க்கு 3 படி அரிசி போட முடியவில்லையென்றால் மந்திரிகள் ஒரு அறிக்கை விடட்டும் – ‘எங்களுக்கு விலையைக் குறைக்கிற திட்டம் தெரியவில்லை, எங்களாலே விலையைக் குறைக்க முடியாது, இதைப் போலத்தான் அரிசி விற்கும்‘ என்று, இப்படியாகச் சொல்லுகிறார்களா என்றால் அதுவுமில்லை!

இவர்களிலே ஒருவராயிருக்கும் ஜோதி அம்மையார் சில தினங்களுக்கு முன்பு ஒரு இடத்திலே பேசுகிறபொழுது ‘கொஞ்சம் பொறுங்கள், இன்னும் இரண்டொரு மாதங்களிலே ரூபாய்க்கு ஒன்றரைப்படி அரிசியாவது போடுகிறோம்‘ என்று சொன்னார்கள். ஆனால், சொன்னவர் சுகாதார மந்திரியே தவிர உணவு மந்திரி அல்ல?

ரூபாய்க்கு ஒன்றரைப் படி!

‘உணவுப் பொருள்களின் விலையைக் குறைக்கிறேன்‘ என்று சொல்ல வேண்டியவர் உணவு மந்திரி! நல்ல சாப்பாடு சாப்பிட்டால் தான் சுகாதாரம் கெடாமல் இருக்க முடியும், அதை எண்ணியோ என்னவோ, ஜோதி அம்மையார் அவர்கள் என்னிடத்திலே சுகாதாரத்தைக் கொடுத்து மக்களுக்குச் சோறு போடா விட்டால், நான் எப்படிச் சுகாதாரத்தைக் கவனிக்க முடியும்‘ என்று கருதி, மற்ற மந்திரிகளை இடித்துக் காட்டுவது போல், ‘கொஞ்சம் பொறுங்கள், ரூபாய்க்கு ஒன்றரை படி அரிசி போட்டுக் காட்டுகிறேன்‘ என்று சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் அதை அங்குச் சொன்னதற்குப் பதில் அமைச்சரவைக் கூட்டத்தில் சொல்லியிருக்க வேண்டும். ஏனென்றால் தனிப்பட்ட அமைச்சர்களின் வார்த்தைக்கு அதிகமான மரியாதை ஜனநாயகத்திலே இல்லை. அமைச்சரவை கூடி ஒரு முடிவெடுத்தால்தான் அது சட்டமாக உருவெடுக்க முடியும். ஆகவே அமைச்சரவை கூடி, ‘ரூபாய்க்கு ஒன்றரை படி அரிசி ஆகஸ்ட் மாதத்திற்குள் போடுகிறோம், செப்டம்பர் மாதத்திற்குள்ளே போடுகிறோம்‘ என்று சொல்லுவார்களேயானால், அதை நிறைவேற்றுவதற்காக அமைச்சர்கள் பேசினார்கள் – என் றுபொருள். அமைச்சர் கக்கனிடத்திலேதான் உணவு இலாகா இன்றைய தினம் இருக்கிறது. அவராவது ‘இருங்கள்‘ ஒன்றரைப்படி அரிசி போடுகிறேன்‘ என்று சொன்னாரா என்றால், அவரும் சொல்லவில்லை, ஆனால், ஜோதி அம்மாள் சொல்லுகிறார்கள் – ‘நான் ஒன்றரை படி அரிசி போடுகிறேன்‘ என்று!
அரிசி விலை இறங்குமா?

எனவே உணவுப் பிரச்சினையில் உணவு விலை இறங்கும் பிரச்சினையில் இந்தச் சர்க்காரினுடைய திட்டவட்டமான கொள்கை என்ன? விலை இறங்குமா? இறங்காதா? இறக்கப் போகிறார்களா? ஏற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்களா? இதை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

இதை அவர்கள் மக்களுக்குத் தெரிவிப்பதுதான் மிக முக்கியமான – தேர்தலுக்கு பின்பு அறிவிக்க வேண்டிய மிக முக்கியமான பிரச்சினைகளாகும்.

(நம்நாடு - 18, 19, 20, 21, 23, 25-4-1962)