இதைப் போலவே இன்றைக்கு சட்டத்தின்
மூலம் மணமக்களுக்கு விவாகரத்து உரிமைதரப் போகிறார்கள்.
இதற்கான சட்டம் டில்லியில் தயாராகி வருகிறது. இதற்கும் நமது
பிரச்சாரம்தான் முக்கிய காரணமாகும்.
மணவாழ்க்கையில் இருவரும் ஒன்றுபட்டு வாழமுடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டால்,
அந்த நிலைமையில் அவர்கள் விவாக விடுதலை பெறும் உரிமை இருக்க
வேண்டும் என்று நாம் கூறிவந்தோம்.
நாம் இப்படிக் கூறிய நேரத்தில் பலரும் ஏளனம் செய்தனர். எதிர்க்கவும்
எதிர்த்தனர். ஆகாத வேலை, தகாத காரியம் என்று கூட கூறினர்.
கட்டிய மனைவிக்கு விடுதலை உரிமை தருவதா என்றெல்லாம் ஆர்ப்பரித்தனர்.
இவைகள் அனைத்தையும் தாங்கி, நாம் தொடர்ந்து செய்து வந்த
பணி இன்று பலன்தர ஆரம்பித்து விட்டதே!
எத்தனையோ குடும்பங்களில் நாம், கணவனால் கவனிக்கப் படாத
மனைவியரைக் காண்கிறோம். குடிகாரக் கணவனின் அடிக்கும் உதைக்கும்
தினந்தினம் ஆளாகி அவதியுறும் மனைவி மாரின் கண்ணீரைக் காண்கிறோம்.
கட்டிய மனைவியைக் கண்ணெடுத்தும் பாராது, விலைமாதரிடமே திரிந்துவரும்
வீணர்களால் மனம் வெதும்பித் துடித்திடும் பெண்களையும் நாம்
பார்க்கிறோம்.
ஆகவேதான் கணவனால் கொடுமைப்படும் மனைவியும் சரி, அல்லது
மனைவியினால் தொல்லைக்கு ஆளாகும் கணவனும் சரி, தங்களுக்குள்
பிடித்தமில்லாத போது விவாகரத்து செய்து கொள்ளும் உரிமை
பெற்றாக வேண்டும் என்று நாம் வலியுறுத்தி வந்தோம்.
விவாகரத்துரிமை இருந்தால், பொருத்தமற்ற திருமணங்கள் தவறுதலாக
நடந்து விட்டாலும் பின்னர் அதனைத் திருத்திக் கொள்ள வழிவகை
பிறக்க முடியும். பிடித்தமற்றவர்கள் காலமெல்லாம் கூடிவாழ்வதென்பது
நடவாத காரியந்தானே. எனவே பிடித்தமற்றவர்கள் விவாகரத்து கோரி
விடுதலை பெறும் உரிமையைப் பெறுவது நன்மைதானே!
விவாகரத்து உரிமை வழங்கும் சட்டம் அமுலாக்கப்பட்டு விட்டால்,
கண்டபடி திரியும் கணவனை மனைவி தட்டிக் கேட்டு திருந்தாவிடின்,
விவாக விடுதலை பெற்றுக்கொள்ள முடியும். குடிகாரக் கணவனின்
கொடுமைக்கு நாளெல்லாம் ஆளாகி அவதியுறும் மனைவி அவனிடமிருந்து
விடுதலைபெற வழி பிறக்கும்.
மனைவியைக் கவனியாது பிறபெண்கள் மீது நாட்டம் செலுத்தும்
கணவனிடமிருந்து விடுதலை பெற மனைவி கோர்ட்டில் வழக்குத்
தொடர முடியும். என் கணவன் வீட்டுக்கு இரவில் வெகுநேரம்
கழித்தே வருகிறார். வந்தாலும் என்னிடம் பேசுவதில்லை. சம்பாதிக்கும்
பணத்தையும் செலவுக்குக் கூட தருவதில்லை. தூக்கத்தில் காந்தா,
சாந்தா என்று கனவு கண்டு வாய் பிதற்றுகிறார். இவருக்கு என்
மீது பிரியமில்லை. வேறு பெண்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்
என்று தெரிகிறது. ஆகவே தான் இவரிடமிருந்து விவாகரத்துக்
கோருகிறேன் என்று மனைவி கோர்ட்டில் கூற முடியும்.
கோர்ட்டாரும் இதைத் தீர விசாரித்து, கேள்விகட்கு மேல் கேள்விகள்
போட்டு, ஒழுங்கான வாழ்க்கை நடத்த கணவன் இலாயக்குள்ளவன்தானா
என்பதை ஆராய்ந்து பார்த்து, அவசியமாயின் அந்த மனைவிக்கு
விவாகரத்து உரிமையைத் தருவார்.
இதைப் போலவே குடும்பத்திற்கு சிறிதும் பொருத்த மற்ற மனைவியையும்
ஒழுங்கீனமான பெண்ணையும் விலக்க ஆண்களும் உரிமை கோரலாம்.
ஒத்த கருத்தின்மை ஏற்படும் போது விலகிவாழ உரிமை பெறுவது
இருவருக்கும் நல்லதுதானே. இதனால் சமூகத்திற்கும் நன்மை உண்டு.
விவாகரத்து உரிமைக்கான சட்டம் வருவதைப் போலவே, நாம் நெடுநாட்களாகத்
தேவையென்று பாடுபட்டு வரும் மற்றொரு பிரச்சினைக்காகவும்
சட்டமியற்றப்படுகிறது டில்லியில்.
நாம் பல ஆண்டுகளாகக் கூறிவருகிறோம். பெண்களுக்கும் ஆண்களைப்
போலவே தகப்பன் சொத்துக்களில் உரிமை இருக்க வேண்டும் என்று.
நாம் இப்படிக் கூறிய போதும் பெரும்பாலோர் எதிர்த்தனர்.
ஏளனம் செய்து தூற்றவும் தூற்றினர். பெண்ணுக்குச் சொத்துரிமையா?
பெண்ணிடம் பணம் இருந்தால் ஆணை அவள் எப்படி மதிப்பாள் என்று
கூக்குரலிட்டனர். நாம் எதற்கும் அஞ்சாது இதனை வலியுறுத்திப்
பிரச்சாரம் செய்து வந்தோம்.
அதன் பலன் இன்று பெண்களுக்குச் சொத்துரிமை தரும் மசோதா
விரைவில் டெல்லிப் பாராளுமன்றத்தில் சட்டமாக்கப் படுமென்ற
நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாம் எந்தக் காரணங்களுக்காகப் போராடி வந்தோமோ அவைகள்
எல்லாம் இன்று சட்டமாகி வருகின்றன என்பதைக் காணும்போது
நாம் செய்துவரும் பணி எவ்வளவு மகத்தானது என்பது மட்டுமல்ல,
நாட்டுக்குத் தேவையான நல்லபணியைச் செய்து வந்தோம் என்பது
தெரிகிறது.
இந்த நிலையக் கண்டு நாம் பெரிதும் மகிழ்கிறோம் பெருமைப்படுகிறோம்.
இந்த முறையில்தான், நாம் சீர்திருத்தத் திருமணங்கள் செய்து
வருவதிலும் வெற்றிகண்டோம்! மேலும் மகத்தான வெற்றிகளைக்
காண்போம் என்பதும் உறுதி.
சீர்திருத்த முறையில் திருமணங்களை நடத்த வேண்டும் என்பதற்காக
நாங்கள் கூறும் காரணங்களை ஒருவராலும் மறுக்க முடியவில்லை
என்று குறிபிட்டேன். இப்படி மறுக்க முடியாமற் போனாலும்
சிலர் அந்தக்கால முதல் இருந்துவரும் பழக்கங்களையா தள்ளி
விடுவது என்று கேட்கிறார்கள்.
அந்தக் காலம் அந்தக்காலம்! என்று பேசிவரும் தோழர்களையும்,
பெரியவர்களையும் நான் கேட்கிறேன், நிர்ணயமாக அந்தக்காலம்,
எந்தக்காலம் என்பதை! சென்னையில் ஒரு பகுதிக்கு ‘சூளை’ என்று
பெயரிடப்படுகிறது இங்கிருந்து இதுவரை சூளை என்பதற்குக் குறிப்பிட்ட
நிர்ணயம் இருக்கிறது. புரசைவாக்கம் என்பது அங்கேயிருந்து
அதுவரையுள்ள பகுதிகள் என்பதற்கு அத்தாட்சியான வரம்பு கூறப்படுகிறது!
ஒரு ரூபாய் என்றால் 16 அணா என்று ஒரு திட்டம் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு வீசை என்பது 40 பலம் கொண்டது என்று ஒரு நிர்ணயம் உண்டு.
ஒரு கஜம் என்றால் இத்தனை அடி அல்லது இத்தனை முழம் என்று
அறுதியிட்டுக் கூறமுடியும்.
இதைப் போலவே அந்தக் காலம் அந்தக் காலம் என்று பேசிவரும்
பெரியவர்கள் ‘அந்தக்காலம்’ எதிலிருந்து எதுவரை அந்தக்காலம்?
அவர்கள் எடுத்துக்காட்டிக் கூறும் காலம்? என்பதற்கு ஒரு
நிர்ணயம் கூறட்டுமே! கூற முடியுமா அவர்களால்?
என்னுடைய மகன் இன்று பத்தாவது வகுப்பில் படிக்கிறான். அவன்
படிப்பில் ஏதாவது தவறுகள் செய்யும்போது நான் கூறுகிறேன்.
‘இதெல்லாம் என்ன படிப்படா? இதற்கே இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே!
அந்தக் காலத்தில் நான் படித்தபோது? என்று பேசுகிறேன்.
நான் குறிப்பிடும் ‘அந்தக் காலத்தை’யா இந்த வைதீகப் பெரியவர்கள்
அந்தக்காலம் என்று பேசுகிறார்கள்?
நான் சிறுவனாக இருந்தபோது நான் என்னுடைய மகனைப் பார்த்து
கேட்டதைப் போலவே என்னுடையத் தகப்பனார் என்னைப் பார்த்துக்
கேட்டார். நீ படிப்பது என்னடா படிப்பு. அந்தக் காலத்தில்
நாங்கள் படித்த படிப்பு என்ன அருமையானது தெரியுமா? என்று
இதைப் போலவே எனது தகப்பனாரைப் பார்த்து அவரது தகப்பனார்,
அதாவது எனது பாட்டனார் இதே முறையில்தான் கேட்டார். நீங்கள்
படிப்பதற்கு இப்படி அழுகிறீர்களே! அந்தக் காலத்திலே நாங்கள்
எல்லாம் மணலைக் கொட்டி அதில் ஹரிநமோத்தசிந்தம் என்று கை
விரலால் எழுதி முடிவதற்குள், கைவிரலிலுள்ள இரத்தம் எல்லாம்
சுண்டியேவிடும் என்று.
இவர்களில் யார் குறிப்பிடும் அந்தக் காலத்தை வைதீகர்கள்
அந்தக் காலம் என்று கூறுகிறார்கள். நான் குறிப்பிடுகிற அந்தக்
காலத்தையா? எனது தகப்பனார் குறிப்பிட்டாரே அந்தக் காலத்தையா?
எனது அல்லது எனது பாட்டனார் சொன்னாரே அந்தக் காலமோ? அதைவிட
அவரது தகப்பனார் கூறினாரே அந்தக் காலமா? எந்தக் காலத்தை
இவர்கள் அந்தக் காலம் என்று கூறுகிறார்கள். அந்தக்காலம்
எது என்பதற்கு ஒரு நிர்ணயம் ஏற்படுத்திவிட்டுப் பிறகு கூறட்டும்
அந்தக் கால பழக்கங்கள் என்று அதற்குப் பிறகு நல்லதா கெட்டதா
என்பதைப் பற்றி பேசுவோம். அந்தக்காலம் எந்தக் காலம் என்பதைக்
குறிப்பிட்டுக் கூறிவிடாமல் வெறும் அடிமூச்சுக் குரலால்
அந்தக்காலம் அழிவதா? அந்தக் கால ஏற்பாடுகள் தொலைவதா? என்று
உரத்துப் பேசுவதால் என்ன பயன்?
இன்று வெள்ளைக்காரன் கூடத்தான் பேசுகிறான். ‘நாங்கள் அந்தக்
காலத்தில் இந்தியாவை ஆண்டபோது என்ன செய்தோம் தெரியுமா?’
என்று இதைப் போலவே முஸ்லீம்களுந்தான் சொல்லுகிறார்கள்.
‘அந்தக் காலத்தில் டெல்லியில் ஓளரங்கசீப் ஆண்டபோது முஸ்லீம்களுக்கு
இருந்த செல்வாக்கே செல்வாக்கு’ என்று முஸ்லீம்கள் பேசுகிறார்கள்.
அந்தக் காலத்தில் ஆண்ட விக்கிரமாதித்ய ராஜாவின் காலமே காலம்’
என்று இந்துக்களும் பெருமையோடு பேசுகின்றனர். பௌத்தர்கள்
அந்த காலத்தில் ஆண்ட அசோகனை நினைக்கிறார்கள். இப்படி பலரும்
அந்தக் காலத்தைப் பற்றி பலவிதமாக பேசுகிறார்களே! பெருமைப்
படுகிறார்களே! இதில் எதை அந்தக்காலம் என்று திட்டவட்டமாக
ஏற்பது? பின்பற்றுவது.
அந்தக்காலம் எது என்பதற்கு யாராலும் திட்டமான முடிவு கூறமுடியாது.
நிர்ணயத்தையும் காட்ட முடியாது. அந்தக்காலம் என்பது முடிவற்றது,
அளவிட்டுக் கூறமுடியாதது, அளக்க அளக்க நீண்டு கொண்டே போகிற
கஜக்கோல் அது!
ஆகவே அந்தக்காலம் என்று பேசுவதும் அந்தக்கால ஏற்பாடுகள்
என்று கூறுவதும், பழக்கங்கள் என்று சுட்டிக்காட்டுவதும்
நிச்சயமற்றவைகளாகும். பொருத்தமானதாகவும் இல்லாத வைகளாகும்.
வைதீக நண்பர்களையே கேட்கிறேன். அவர்கள் புராணப்படி பார்த்தாலும்
அந்தக்காலம் என்பதைக் கூற முடியுமா? ஹரிச்சந்திரன் ஆண்ட
காலமா? இராமன் ஆண்டான் என்று கூறப்படும் காலமா? அவருக்கு
முன்னர் அறுபதினாயிரம் மனைவியரை மணந்த வாழ்ந்ததாகப் பேசப்படும்
தசரதன் காலமா? அதற்கு முன்னால் இருந்ததாகக் கூறப்படும் இட்சுவாகு
பரம்பரையினர் காலமா? அது எந்தக் காலம்? கூறுங்கள்?
உலகம் தோன்றியது எனக்கூறப்படும் காலமா? அல்லது உலகம் தோன்றாத
அநாதிகாலமா? மகாவிஷ்ணு ஆலிலைமீது திருப்பாற்கடலில் பள்ளிக்
கொண்டிருந்தார் என்று கூறும் புராண காலமா? அப்படிப் பள்ளி
கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் உந்திக் கமலத்திலிருந்து முளைத்த
தாமரைமீது பிரம்மா வீற்றிருந்த காலமா? பிரம்மாவின் நாவில்
இருந்து சரஸ்வதி வேதங்களை ஓதிய காலமா? எது அந்தக்காலம்?
புராணங்களின்படி பார்த்தாலும் அந்தக்காலம் இதுதான் என்றோ,
அதுதான் என்பதற்காகவோ உறுதியாகக் கூறமுடியுமோ? முடியாதே!
முடியவில்லையே.
எந“தக் காலத்தையாவது குறிப்பிட்டு அதுதான் அந்தக்காலம் என்று
நாங்கள் கூறும் காலம் என்று சொல்லி விடட்டும். அந்தக் காலத்தில்
உள்ள பழக்கவழக்கங்களை மட்டும்தான் பின்பற்ற வேண்டும், என்றாவது
நிர்ணயம் செய்யட்டும்.
அப்படி ஏதாவது ஒரு காலத்தை ‘அந்தக்காலம்’ என்று தீர்மானித்துவிட்டாலும்,
அதன்படி நடக்க, வாழ யாராலும் முடியாதே!
அந்தக்காலம் போலவே இந்தக் காலத்திலும் நடக்கத்தான் வேண்டுமென்றாலும்,
காஞ்சிபுரத்திலுள்ள நான், இந்தத் திருமணத்திற்கு வரவேண்டுமானால்,
நான்கு நாள் முன்னதாகவல்லவா புறப்பட்டு இருக்கவேண்டும்.
கட்டுச்சோறு கட்டிக்கொண்டு கட்டை வண்டியில் பிரயாணம் செய்யவேண்டும்.
அல்லது கால்நடையாக காடுமேடு சுற்றித்தானே வந்தாக வேண்டும்.
ஆனால் இன்று அப்படி நடக்கமுடியுமா? அல்லது நடப்பதுதான் நல்லதா?
இராமன் காலந்தான் அந்தக்காலம் என்று முடிவுகட்டினால் அந்த
நாளைப் போலவே இந்த நாளிலும் வாழ முடியுமா? வாழத்தான் வேண்டுமென்றாலும்
முடியுமா? இராமர் காலத்தை நல்லகாலம் என்று போற்றிப் புகழ்பவர்களால்
கூட அப்படி வாழ முடியாதே!
இராமர் காலத்தில் இரயில் கிடையாது. ஆகவே ரயில் கூடாது என்று
இந்த நாளில் தள்ளிவிடமுடியுமா? அல்லது இராமரே ஏறாத ரயிலில்
நாம் ஏறுவதா? என்று ரயிலில் ஏறாமல் எத்தனை இராமபக்தர்கள்
இருக்கிறார்கள். இருக்க முடியும்! இராமர் காலத்தில் இல்லாத
ரயிலில் ஏறித்தானே இராமேசுவரம் போகிறார்கள். அதைப்போலவே
அரிச்சந்திரன் காலத்தில் ஆகாய விமானம் இல்லையென்று ஆகாயவிமானம்
ஏறாமலா இருக்கிறார்கள். தர்மராஜா காலத்தில் தபால் கார்டு
இல்லை, தந்தி கிடையாது என்றா தள்ளிவிடுகிறார்கள், கிடையாதே!
எனவே அந்தக்காலம் அந்தக்காலம் என்று பேசுவதும் அந்தக் கால
பழக்கங்கள் என்று கூறி அவைகளை அப்படியே பின்பற்ற வேண்டும்
என்று பிடிவாதம் செய்வதும் பொருத்தமற்றவைகள் என்பது நன்கு
விளங்குகிறது.
எந்தக் காலத்துப் பழக்கமானாலும் சரி அது. இந்தக் காலத்துக்குப்
பொருந்துகிறதா? வாழ்க்கைக்குத் தேவையானது தானா? அறிவுக்கு
ஏற்றதா? என்றுதான் நாம் பார்த்துப் பின்பற்ற வேண்டுமே தவிர
அந்தக் காலத்துப் பழக்கம் என்பதற்காகவும் கண்ணை மூடிக்கொண்டு
எதையும் அர்த்தமற்றும், பொருத்தமில்லாமலும் பின்பற்றக்
கூடாது.
உலகத்தில் மற்ற நாடுகள் எவ்வளவோ முன்னேற்ற மடைந்துள்ளன.
இந்த நாடு மட்டுமேதான் எல்லாத்துறைகளிலும் பழம்பெருமை பேசிக்கொண்டும்,
அந்தக்காலம் என்று கூறிக்கொண்டும் முன்னேறாமல் பின்தங்கிக்
கிடக்கிறது. நாமும் மற்ற நாடுகளைப் போலவே எல்லாத் துறைகளிலும்
முன்னேறியாக வேண்டும். நாம் அறிவுத் துறையில் முன்னேறியாக
வேண்டும். நாம் அறிவுத்துறையில் முன்னேற்றமடைந்தால்தான்
நம்மிடமுள்ள பழமைக் கருத்துக்கள் அகலும். பாசிப் படித்துப்போன
கண்மூடி பழக்கங்களும் தொலையும், மதமூடநம்பிக்கைகள் முறியடிக்கப்படும்
என்பதை நாம் உணரவேண்டும்.
இப்படிப்பட்ட சுயமரியாதைத் திருமணங்கள் செய்து கொள்வதும்,
சீர்திருத்த திருமணங்களைப் பரப்புவதும் அறிவுத்துறையில்
நாம் முன்னேறுவதற்கான அடிப்படைகளில் முக்கியமானதாகும். சீர்திருத்தம்
திருமணத்திலிருந்து துவங்குவது, வாழ்வில் நல்லதொரு நிகழ்ச்சியாகும்.
எனவே இதைக்கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லையென்று மீண்டும்
கேட்டுக் கொள்கிறேன்.
உலகம் அறிவுத்துறையில் எவ்வளவோ முன்னேறி இருந்துங்கூட இந்த
நாடு மட்டும் உலக முன்னேற்றத்துடன் ஒட்ட முன்னேறாது பழமையிலே
பெருமை கண்டுபின் தங்கிக் கிடக்கிறது என்று குறிப்பிட்டேன்.
இதனை நாம் நாட்டில் தினமும் காணும் காட்சிகளிலிருந்தே காணலாம்.
அண்மையில் வடநாட்டில் நடந்த கும்பமேளா என்ற விழா எதைக் குறிக்கிறது?
அதில் நடந்த நிர்வாண ஊர்வலம் எதைக்காட்டுகிறது? அல்லது இன்னமும்
இந்த நாட்டில் காட்டுமிராண்டித் தனம் மக்களிடம் இருக்கிறது
என்பதைத்தானே காட்டும்! இத்தகைய காட்சியைக் காணும் எந்த
வெளிநாட்டானும் நம்மைப்பற்றி எவ்வளவு கேவலமாக எண்ணுவான்!
இதைப் போலவே, நான் அடிக்கடி குறிப்பிட்டுத் தரும் கோவைக்கு
அருகிலுள்ள காத்தாமடை என்கிற ஊரில் நடக்கும் அர்த்தமற்ற
ஆபாசத் திருவிழாவும் இருக்கிறது! அங்கே அனுமார் ஆவேசமாடும்
ஒரு சாமியார் வாயிலிட்டு மென்று கீழே துப்பும் எச்சில் வாழைப்பழத்தைப்
புசிப்பதால் பிள்ளைப்பேறு கிடைக்குமென்று நம்பி, எத்தனையோ
பெண்கள் எடுத்துப் புசித்து வருகிறார்களே! இதெல்லாம் சரியா?
இந்தக் காலத்திற்கும் தேவைதானா?
அண்மையில் எங்கோ ஒரு இடத்தில் பாரத பிரசங்கம் நடந்ததாம்.
அதன் கடைசி நாளன்று பீமன் வேஷம் போடுபவன் துரியோதனனைக்
கொல்வதற்காகப் படுகளம் நடந்தது. அன்று 6 அடி நீளமுள்ள துரியோதனன்
உருவம் மண்ணினால் செய்யப் பட்டிருந்தது. இதனை பீமவேடதாரி
வெட்டி வீழ்த்தினான். இதனைச் சுதேசமித்திரன் பத்திரிகை படம்பிடித்து
பெரிதாகப் போட்டுக் காட்டியிருக்கிறது.
இப்படிப்பட்ட படத்தைப் பார்க்கும் வெளிநாட்டான் என்ன நினைப்பான்?
‘இன்னமும் இந்த நாட்டில் மண்பொம்மை வெட்டுவதில்தான் வீரம்
காட்டுகிறது’ என்று தானே கருதுவான்!
இப்படிப்பட்ட கேவலமான பழக்கங்களையும், அர்த்தமற்ற திருவிழாக்களையும்,
பொருத்தமற்ற சடங்குகளையும் விட்டொழிந்தால்தான் நாம் உண்மையிலேயே
முன்னேற முடியும். ஆகவேதான் சீர்த்திருத்தத் திருமணங்கள்
நடப்பதின் மூலம் அறிவுப்பணி நன்கு வேரூன்றி நிலைத்துப் பரவ
வழியிருக்கிறதென்று குறிப்பிடுகிறோம்.
சுயமரியாதைத் திருமணங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கத்
தொடங்கிவிட்டால், நாட்டிலே பரவிக்கிடக்கும் மூடக்கொள்கைகள்
தாமாகவே சீந்துவாரற்றுப் போய்விடுமே! ஆகவேதான் இப்படிப்பட்ட
மணம் செய்து கொள்ளும் இந்த மணமக்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
மனதார வாழ்த்துகிறேன்.
இந்த திருமணத்தில் தேவாரம் ஒன்று பாடுவார்களா? ஒரு திருவாசகமாவது
பாடக்கூடாதா? என்று சிலர் கேட்டதாக நண்பர்கள் குறிப்பிட்டார்கள்.
இப்படிப்பட்ட திருமணங்களிலே அப்படிப்பட்ட பாடல்களைப் பாடத்தான்
மாட்டோம். பாடவும் கூடாது என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்துவிடுகிறேன்.
அந“தக் காலத்தில் ஊசிமுனையில் நின்றும், ஒற்றைக் காலில்
நின்றும் பற்பலவிதமாக அகோர தவம் செய்த முனிவர்கள் அனைவரும்
ஆண்டவனைப் பார்த்து எதைக் கேட்டார்கள்? மற்ற ஆழ்வார்களும்
சரி, நாயன்மார்களும் சரி கடவுளிடம் எதைக் கோரினார்கள்.
மக்கள் வாழவேண்டும் உலகம் உருப்பட வேண்டும் வறுமை ஒழிய வேண்டும்.
உலகத்தில் உண்மை தழைக்க வேண்டும் என எந்த முனிவராவது எந்தப்
பக்தனாவது நாயன்மாராவது கேட்டிருக்கிறார்களா? இல்லையே! பொது
நன்மைக்காகக் கடவுளை வரம் கேட்ட பக்தர்களை யாராவது காட்ட
முடியுமா? ஒருவரும் கிடைக்கமாட்டார்கள்.
எல்லோரும் தங்கள் சுயநலத்தைத்தானே பெரியதாகக் கருதியிருக்கிறார்கள்.
எனக்கு இந்திர பதவியைக் கொடு என்றொரு முனிவர் கேட்பார்.
எனக்குக் காமதேனு வேண்டும், கற்பக விருட்சம் தேவை என்றொரு
மற்றொரு தவசி கேட்டிருக்கிறார். மேனகை, ரம்பை, திலோர்த்தமை,
ஊர்வசி போன்ற தேவலோகத்து நடனமாதர்களின் சுகத்தை யனுபவிக்க
சொர்க்க வாசம் தேவை என்று ஒரு நாயன்மார் கேட்பார்.
வைகுந்த பதவியும் சிவலோக வாசத்தையும் தங்களுக்காகக் கேட்ட
அந்த முனிவர்களையும், அவர்கள் பாடிய பாடல்களையும் இந்தத்
திருமணத்தில் அழைப்பதும், பாடுவதும் பொருத்தமற்றது தானே.
இங்கே வந்தாலும் அவர்கள் தங்களுக்குத்தான் எதையாவது கேட்பார்களே
தவிர நமக்காக ஒன்றும் பேசமாட்டார்கள், கேட்க மாட்டார்களே!
ஆகவேதான் இங்கே எந்த பக்தரையும் சரி, அய்யரையும் சரி நாங்கள்
அழைக்க வில்லை. அழைப்பதுமில்லை. அதைப்போலவே நமக்காக எழுதப்படாத
பாடப்படாத எந்தப் பாடலையும் பாடுவதில்லை. பாடவும் விடுவதில்லை.
நம்மைப் பற்றியும், நமது வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்படும்,
அக்கறை காட்டும் நண்பர்களைத்தான் நாம் அழைக்கிறோம். அப்படிப்பட்டவர்களால்
தானே நாம் முன்னேற வழிவகைகளைக் காட்ட முடியும், கூற முடியும்!
ஆகவே தேவாரம் பாடவில்லை, திருவாசகம் படிக்கவில்லை, அய்யரைக்
கூப்பிட்டு மந்திரம் ஓதவில்லை என்பதற்காக எவரும் கவலைப்படத்
தேவையில்லை என்பதை மறுமுறையும் வலியுறுத்திக் கூறுகிறேன்.
கடைசியாக சில பெரியவர்கள் இங்கே அம்மி மிதித்து அருந்ததி
காட்டவில்லை, அக்கினி வளர்க்கவில்லை? ஆண்டவனைப் போற்றவில்லை
என்று குறைபடுவதற்கும் அர்த்தமில்லையென்று சொல்லிவிடுகிறேன்.
திருமணத்தில் அக்கினி வளர்ப்பது எதற்காக திருமணத்திற்கு
அக்கினிதேவன் சாட்சியாக இருக்கிறான் என்பதற்குத்தானே? அந்த
அக்கனி பகவான் யோக்கியதை என்ன? அருந்ததி என்று ஒரு சினிமா
கூட வந்ததே. அதைப் பார்த்தவர்களுக்கு மிக நன்றாக தெரியும்,
நான் கூறப்போவது.
ஒரு காலத்தில் சப்தரிஷிகள் ஒரு யாகம் செய்தனராம். அந்த யாகத்திற்குச்
சென்று அவிர்ப்பாகம் வாங்கிச் சென்ற அக்கினி பகவான் அந்த
ஏழு ரிஷிபத்தினிகள் மீதும் காமுற்றானாம். இதனை வெட்கத்தைவிட்டுத்
தன் மனைவியிடமே கூறினானாம். இந்தக் காலத்தில் எப்படிப்பட்ட
கேடுகெட்ட மனிதனுங்கூட கட்டிய மனைவியிடம், தான் பிற பெண்ணின்
மீது ஆசை வைத்திருப்பதாகக் கூறமாட்டான். ஆனால் ஆண்டவனான
அக்கினி தன் மனைவியிடம் தான் ரிஷிபத்தினியடம் காமுற்று இருப்பதைக்
கூறியவுடன் தன் மனைவியையே அதற்கான ஏற்பாடுகளையும் செய்யும்படிக்
கேட்டானாம். அவன் மனைவியும் சப்தரிஷிகளில் ஆறுபேர்களின்
மனைவியரைப் போலவே உருவமெடுத்து தன் கணவனின் காமத்தைத் தணித்தாளாம்;
ஆனால் ஏழாவது முனிவரின் மனைவியான அருந்ததியைப் போல மட்டும்
உருவம் எடுக்க முடியவில்லை என்றும், அதற்குக் காரணம் அருந்ததி
ஆதிதிராவிடப் பெண்மணி என்றும் புராணம் மேலும் தொடருகிறது.
பிறர் மனைவியை காமுறும் தீய குணம் படைத்த அக்கினியையா நம்முடைய
திருமணக் காலங்களிலே சாட்சிக்கு அழைப்பது? கூடாது, கூடவே
கூடாது ஆகவேதான் அக்கினி வளர்ப்பதில்லை.
இப்படித்தானே மற்ற கடவுள்களும் இருக்கிறார்கள்! புராணங்கள்
சொல்லுகிறபடியே பார்த்தாலும் எந்தக் கடவுளும் யோக்கியமான
கடவுளாகத் தெரியவில்லையே! பிரமன் திலோர்த்தமையை கெடுத்தான்.
சிவன“ தாருகா வனத்து ரிஷி பத்தினிகளைக் காமுற்றான். இந்திரன்
அகலிகையையும், சந்திரன் குருபத்தினி தாரகையையும் மகாவிஷ்ணு
சந்திரன் மனைவியையும் கெடுத்தனர். இப்படித்தான் புராணங்கள்
சொல்லுகின்றன.
இப்படிப்பட்ட ஒழுக்கக் கேடான கடவுளரையா நாம் நமது வாழ்வின்
வழிகாட்டியாகக் கொள்வது?
காமக் குரோதம் மிகுந்த அக்கினி பகவானை அழைத்து அவனைச் சாட்சியாக
வைத்துத் திருமணம் நடத்துவது அறிவுக்குப் பொருத்தமானதுதானா?
அதைப்போலவே கண்மூடித்தனமாக நடந்து காமக் களியாட்டங்களில்
ஈடுபட்ட மற்ற கடவுளையும் திருமணக் காலங்களிலே எண்ணுவதும்
கூடாதே! இவைகளை நாம் கூறும்போது சில ஆத்திக நண்பர்களுக்குக்
கோபம் ஏற்படலாம்! கோபம் ஏற்பட்டு என்ன பலன்? நாங்களாகக்
கதைகட்டி எதையும் கூறவில்லையே!
நாங்கள் எடுத்துக்காட்டி விளக்குவதும் ஆபாசங்கள் என்று கூறிக்
கண்டிக்கும் ஆண்டவன் திருவிளையாடல்களும் எங்கள் கற்பனைகள்
அல்லவே அல்ல! அவைகள் அத்தனையும் பக்தர்கள் பக்தியோடு படித்துப்
பாராயணம் செய்து வரும் புராணங்களில் காணப்படுபவைகள் தான்
என்பதை ஆத்தீக நண்பர்கள் உணர்ந்து திருத்த வேண்டுகிறேன்.
கடவுள் என்றும், மதம் என்றும் சாஸ்திர சடங்குகள் என்றும்,
மக்கள் தங்கள் காலத்தையும் கருத்தையும், நேரத்தையும், நினைப்பையும்,
உழைப்பையும், ஊக்கத்தையும், பணத்தையும், பகுத்தறிவையும்
சிறிதும் பயன்படுத்தாது பாழாக்குவதைத் தடுத்தாக வேண்டும்!
பழைய காலத்தைப் போல நாம் நடக்க முடியாது நடக்கத் தேவையுமில்லை.
புதிய கருத்துக்களைத் தைரியத்துடன் கவனித்து ஏற்று புதுவாழ்வு
நடத்த நம்மை நாம் தயாராக்கிக் கொள்ள வேண்டும்.
மக்களைப் பழமைப் பிடியிலிருந்து மீட்டு, பகுத்தறிவுப் பாதையில்
நடத்திச் செல்ல திராவிட முன்னேற்றக் கழகம் பெரிதும் பாடுபட்டு
வருகிறது.
பழமைக் கருத்துக்களையும், மத மூட நம்பிக்கைகளையும் அர்த்தமற்ற
சடங்குகளையும், கண்மூடி வழக்கங்களையும் மக்கள் அடியோடு
விட்டொழிக்க வேண்டுமென்று, தி.மு.க. பல காலமாகவே வற்புறுத்தி
வருகின்றது.
சுயமரியாதைப் பிரச்சாரந்தான், சமுதாய சீர்திருத்தமும் முன்னேற்றமும்தான்
தி.மு.கழகத்தின் அடிப்படை வேலையாகக் கருதப்பட்டு வருகின்றது.
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கருத்துடன் வாழ்ந்த திராவிட
இனத்தைச் சேர்ந்தவர்கள் நாம் என்பதை மக்கள் உணர்ந்து, இனத்தால்
ஒன்றுபட்டு வாழும் முறையை மக்களிடையே எங்கள் கழகம் ஏற்படுத்தி
வருகின்றது.
சுயமரியாதைப் பிரச்சாரந்தான், சமுதாய சீர்திருத்தமும் முன்னேற்றமும்தான்
தி.மு.கழகத்தின் அடிப்படை வேலையாகக் கருதப்பட்டு வருகின்றது.
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கருத்துடன் வாழ்ந்த திராவிட
இனத்தைச் சேர்ந்தவர்கள் நாம் என்பதை மக்கள் உணர்ந்து, இனத்தால்
ஒன்றுபட்டு வாழும் முறையை மக்களிடையே எங்கள் கழகம் ஏற்படுத்தி
வருகின்றது.
நாம் திராவிடர், நமது இனம் திராவிடம், நமது கலை கலாச்சாரம்
இவையிவை என்பதை மக்கள் நன்றாக உணர வேண்டும். அப்போதுதான்
பிறப்பால் உயர்வுதாழ்வு கற்பிக்கும் மனப்பான்மை வேரோடு
அழியும். மத மூட நம்பிக்கைகள் இருந்த இடந்தெரியாமல் மறையும்,
கருத்தற்ற கண்மூடிப் பழக்க வழக்கங்களும் மாய்ந்தொழியும்.
ஆகவே நாமெல்லாம் திராவிடர், நமது இனம் திராவிடம் என்ற உணர்ச்சி
மக்களிடையே ஏற்பட்டுப் பெருகி திராவிட சமுதாயம் நல்வாழ்வு
வாழ வழி வகுப்போம்.
நாம் எந்தெந்தக் கொள்கைகளை வலியுறுத்திப் பாடுபட்டு வருகிறோமோ
அவைகளில் சில இன்று சட்டமாகி வருகின்றன என்று குறிப்பிட்டேன்.
இதனால் நமது பணி நாட்டு மக்களுக்கு மிகவும் தேவையானது அவசியமானது
என்பதை நாம் அறிகிறோம். நமது எண்ணம் ஈடேறியதைக் கண்டு மகிழ்கிறோம்.
இந்த மகிழ்ச்சியால் பெறும் ஊக்கத்தையும் உணர்ச்சியையும்
சமுதாயத்துறையில் உள்ள சீர்கேடுகளைப் போக்கவும், மக்களிடையே
மேலும் தீவிரமான முறையில் அறிவுப்பணி புரியவும் பயன்படுத்தி
பாடுபட வேண்டும்.
சமுதாயம் சீர்திருத்த இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமணங்கள்
நல்லதொரு அடிப்படை என்று குறிப்பிட்டேன்.
எந்தக் காரணங்களைக் கொண்டு பார்த்தாலும் நாம் நடத்தும்
இந்த சீர்திருத்தத் திருமணம் நடத்தும் முறை தவறு என்று எடுத்துக்காட்டவோ
அல்லது பழைய முறைதான் சரி என்று வாதிடவோ ஒருவராலும் முடியாது.
இந்நிலையில் நாம் அறிவுத் துறையில் முன்னேறவும் சமுதாயம்
சீர்திருத்தவும் அடிப்படையான இத்தகைய சீர்திருத்தத் திருமணங்களைத்
தொடர்ந்து செய்துவர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
(வெளியீடு: கே.ஆர்.நாராயணன், சென்னை,
நான்காம் பதிப்பு-1961)
|