அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நல்ல தீர்ப்பு
2

காலத்திற்கும் கருத்திற்கும் ஒத்தேதான் கடவுள் நீதி இருக்க வேண்டும்:
கடவுளைப்பற்றிய நீதியும் காலத்திற்கும் கருத்திற்கும் ஏற்றபடிதான் இருக்க வேண்டும். அதிலும் ஒரு நல்ல தீர்ப்புக்கு வர வேண்டும். சைவம் தழைத்தோங்கத் தொண்டாற்ற வந்த சமயாச்சாரியர்களுள் ஒருவரான திருநாவுக்கரசரால் உருவம், நிறம் அற்றவனாகக் (இந்நிறத்தான், இவ்வண்ணத்தான் எடுத்தியம்ப ஒண்ணாதே) காணப்படும் கடவுளை மற்றொரு சமயாசாரியராகிய அம்மையின் அருட்பாலையுண்ட ஆளுடைய பிள்ளையாராகிய சம்பந்தர், தோடுடைய செவியனாக்கி விடையேற்றி, தூவெண்மதிசூட்டி, காடுடைய கடலைப் பொடி பூசி, உள்ளங்கவர் கள்வனாக்கிக் காண்கின்றார். இதில எவருடைய தீர்ப்பு நல்ல தீர்ப்பு, எல்லோருக்கும் ஏற்ற தீர்ப்பு? சிந்தியுங்கள்!

துறவறத்தைப் பற்றித் தாயுமானார் கூறும்போது, கனியோ காயோ, உதிர்சருகோ, கந்தமூலமோ அதுவும் இன்றேல் நீரோ அருந்தி உயிர்வாழ் என்று கூறுகிறார். அவர் துறவியாயினும் முதலில் நினைப்பது நன்மைப்போலவே கனிதான். இதிலென்ன துறந்த தன்மை உளது? துறவறத்தைப் பற்றிப் பட்டினத்தடிகள், இருக்குமிடந“தேடி என் பசிக்கு உருக்கமுடன் உணவு தந்தால் உன்பேன“. என் தேசம் இளைத்தாலும் ஏகேன், சிவன“மேல் ஆணை என்று மடாதிபதி மனப்பான்மையோடு பாடுகிறார். இதில் எந்தத் துறவறம் துறந்த நிலையில் உள்ளது?

எல்லாம் வல்ல எம்பிரானுக்குக் கூத்திகளேன்? குடும்பங்
களேன்?

நமக்குக் கடவுளுணர்ச்சி வேண்டும். அது மாற்றியமைக்கப்பட வேண்டும். கயமைத்தனமற்றதாக, கண்மூடித்தனமற்றதாக இருக்க வேண்டும். எல்லாம் வல்ல எம்பெருமானுக்குக் கோயில் ஏன்? குளம் ஏன்? குடும்பம் ஏன்? கூத்திகள் ஏன்? காணி ஏன்? பூமி ஏன்? மதம் ஏன்? சாஸ்திர சம்பிரதாயச் சடங்குகள் ஏன்? ஏன் என்று கேட்கிறேன். இவைகளால் எவ்வளவு பணம் பாழ்! பகுத்தறிவு பாழ்! காலம் பாழ்! கருத்து பாழ்!

பொருளாதாரத் துறையில் கல்வி கற்கும் மாணவர்களே! உங்ளுக்கு ஒரு வேண்டுகோள்! சிந்தியுங்கள்! உங்கள் வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் சிந்தியுங்கள். இந்தக் கோயில், மதம், சாஸ்திரம், சம்பிரதாயச் சடங்குகளின் பேரால் நாட்டு மக்கள் செய்யும் செலவு எவ்வளவு என்று, அது நாட்டின் சமுதாயத்திற்கு எவ்வித நலனுமின்றி எவ்விதம் நாசமாக்கப்படுகின்றது என்று கோயில்களின் பேரால் எத்தனைக் கோடி பணம் முடங்கிக்கிடக்கிறது என்று, அதைக் கொண்டு எத்தனை எத்தனை பிர்லாத் திட்டம் போட்டு நிறைவேற்றலாம் என்று சிந்தியுங்கள். சிந்தித்து இவைகள் சரியா என்று ஒரு நல்ல தீர்ப்பு அளியுங்கள்!

ஆண்டவனுக்கு ஆயிரம் வேலி அதிற்பாடுபடும் பண்ணைகளுக்குப் பாதி வயிற்றுக்கஞ்சி:
நாட்டிலே நஞ்சை அதிகம். அதனால் ஆண்டவனுக்கு ஆயிரம் வேலி நிலம். சரி ஆனால் ஆண்டவனுக்காக அதே நிலத்தைப் பயன்படுத்தி பாடுபடும் பண்ணையாளுக்கு அந்தப் பரமசிவன் பாதி வயிற்றுக் கஞ்சி அளிக்கிறானா? இல்லை. ஏன்? தங்கம் விளையும் நாடு நந்தம் தமிழ்நாடு. ஆகவே தில்லைத் தாண்டவமூர்த்திக்குத் தங்க ஓடுபோட்ட சன்னிதானம். சரி ஆனால் பாறை வெடிப்புக்கும் மணலின் சரிவுக்கும் அஞ்சாது பூமியிலிருந்து தங்கம் வெட்டி யெடுப்பவன் தொழிலாளி. அவன் அறிவானா தங்க நகை? அணிய வசதியுண்டா அவனுக்கு? அல்லது அரைவயிற்றுக் கஞ்சிக்காவது அலைச்சல் இல்லாமல் இருக்கிறதா? அதுதான் இல்லை. அவன் தன் குடும்பத்தை அரை வயிறாவது நிரப்ப என்றும் அலைந்தாக வேண்டும். ஏன் இந்த நிலைமை?

இயற்கையிலேயே இல்லாததல்ல நம் நாடு. நஞ்சை புஞ்சை மலிந்துள்ள நாடு நம் நாடு. ஜீவநதிகள் பெருக்கெடுத்தோடும் நாடு நம் நாடு. தங்கம் விளையும் நாடு நம் நாடு. இவ்வளவிருந்தும் இன்று கோடானுகோடி தோழர்கள் அன்ன ஆகாரமின்றி அல்லற்படுவது எதனால்? பல்லாயிர மக்கள் சிங்கப்பூருக்கும் நெட்டாலுக்கும் மலாய்க்கும் வயிறு வளர்க்கப் போவது எதனால்? இந்தத் தீர்ப்பு நாட்டிலே நடக்கும் தீர்ப்பு இது நல்ல தீர்ப்பா? இந்த நிலைமைக்கு காரணம் நம் நாட்டுச் செல்வம், மதத்திற்கும் சடங்கிற்கும் மடமைக்கும் கண்மூடி கபோதித்தனத்திற்கும் செலவிடப்படுவதே யாகும். நாட்டிலே மக்கள் உணவற்று, உடையற்று, இருக்க இடமற்று, நிர்க்கதியாய் நிலவும்போது, ஏன் இந்த சாமிகளுக்கு ஆயிரமாயிரம் வேலி நிலங்கள், பட்டு பஞ்சணை பீதாம்பரங்கள், மயிர்ப்பீலிகள், கோட்டை கொத்தளங்கள் போன்ற கோவில்கள்? திருவிழாக்கள், பொன், வெள்ளி, குதிரை, யானை சவாரிகள் 3 லட்சம் 4 லட்சம் மதிப்புள்ள நகைகளை எப்படிச் சுமக்கின்றன இந்தத் தெய்வங்கள் என்று கேட்கின்றோம். சற்றும் நாணயமின்றி, எப்படி நடமாடுகின்றன இந்தத் தெய்வங்கள் என்று கேட்பதில் குற்றமென்ன தோழர்களே! இதற்கு நல்ல தீர்ப்பு அளியுங்கள்.

எழிலுள்ள நாடே எடுத்தாற்வோர் நாடானாயே!
சமீபத்திலே நான் ஒரு பேசும் படக்காட்சியைப் பார்த்தேன். அதில் பெவின் திட்டத்திலே ஒரு பகுதியைச் செய்திப் படமாகக் காண்பித்தனர். அதில் ஒரு கையற்றவனுக்கு இரும்பிலே கை செய்து வைத்து மற்றொரு கையில் அரம் கொடுத்து அசைத்துத் தொழிற்சாலைகளிலே தொழில் செய்யக் கற்பிக்கின்றனர். காலில்லாதவனுக்கு செயற்கைக் கால்களை ஈடு செய்கின்றனர்.
ஆனால் நம்நாட்டிலோ! ஒரு மதவாதி ஹோட்டலுக்குள் சென்று வயிறு புடைக்கத் தின்றுவிட்டு வாயில் வெற்றிலை மென்றுக் கொண்டே வெளியே வருவார். வெளியே, கையற்ற, காலற்ற கண்ணற்ற பிச்சைக்காரர்கள் அவரிடம் ஒரு காலணா வேண்டுவர். ஆனால் அவர்கள் நிலைகண்டு இரங்கான், அவர்கள் செய்த கர்மத்தை அனுபவிக்கிறார்கள் என்று வறிதே செல்வான் அவர்கள் அங்கம் பழுதுபட்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படமாட்டான், ஆனால் அதே மதவாதி கந்தக் கோட்டத்திலோ, ஏகாம்பரநாதர் கோயிலிலோ மற்று எந்தக் கோயிலிலோ உள்ள குதிரை வாகனத்தின் வாலோ, காளை மாட்டின் வாலோ, மயில் வாகனத்தின் தோகையோ ஒடிந்து விட்டதாகத் தெரிந்தால் அதற்காக கவலைப்படுவார். உடனே ஒரு திருவோலை ஏந்திக் கொண்டு வீடுவீடாக, ஊர் ஊராக, நகரம் நகரமாகவேனும் சுற்றித் திரிந்து மக்களின் மடமையைத் துணைக்கொண்டு மாட்டு வாகனத்தைப் புதுப்பிக்கும், திருப்பணிக்காகத் திரவியம் சேர்த்து ஒடிந்த பாகத்தை ஈடு செய்வார். வாகனத்தின் வால் உடைந்தது என்று சொல்வது பிழை. ஆனால் உடைக்கப்பட்டுவிட்டது. உடைக்கப்பட்டு உருக்கி வேறு நகை ஆக்கப் பட்டுவிட்டது என்பதுதான் உண்மைஉரை! உறுதியுங்கூட மக்கள் கை காலற்றிருப்பதைக் கண்டு கவலையுறார், அவர்தம் விதியை இவர்தம் விதியால் மாற்ற மனமின்றி மிகுதியும் இரங்குவார். ஆனால் எல்லாம்வல்ல எம்பெருமானின் எருது வாகனம் பழுதுபட்டால் அதைப் புனருத்தாரணம் செய்யப் புறப்படுவார் புளகாங்கிதத்தோடு. எனவே இவர்தம் இழிநிலை! இத்தகைய மக்கட் சமுதாயம் முற்போக்கடையுமா? அல்லது பெவின் திட்டப்படி கை காலற்றோரைக் கருத்துடன் கவனித்து ஆவன செய்யும் நாடு முன்னேறுமா? நல்ல தீர்ப்பு அளியுங்கள் தோழர்களே! மக்களை மாக்களாகக் கருதி மகேஸ்வரனுக்கு மண்டபங்கள் கட்டும், மக்கள் மடமையை விட்டு என்றாவது மதியைப் பெறுவார்களா? நம் உழைப்பு, ஊதியம், அறிவு, ஆற்றல், சிந்தனை, சிறப்பு, கருத்து, கல்வியாவும் இனத்திற்கு இம்மியும் பயன்தராத இழிமுறையிலே சென்றால், இத்தாலி நாட்டைக் கண்டு டாண்டன் என்னும் கவி எழிலுள்ள நாடே! எடுத்தாள்வோர் நாடானாயே என்று இரங்கியது போல் நாமும் நம் நாட்டைக் கண்டு இரங்கத்தான் வேண்டும்.

எவர் கூற்றை நம்பி இலக்கியம் படிப்பது:
மற்றும் நமது இலக்கியங்கள் நமக்குத் தேவையா? அவற்றால் மதி பெருகுமா? மடமை மறையுமா? என்று ஒரு நல்ல தீர்ப்புக்கு வரவேண்டும்.

புராண இதிகாசங்களைப் பாடும் இலக்கியங்களின் அவசியத்தைப் பற்றிக் கூறி, அவற்றைப் படிக்க வேண்டும் என்று பறைசாற்றினோர் யாவரும் வெவ்வேறு காரணங்கள் கூறினர். அதிலே எதை நம்புவது? எதைப் பின்பற்றுவது? அதுதான் முடிவா? முதலாவதாக, அவைகள் புண்ணிய சரித்திரங்கள் அதனால் அவற்றை அறிய வேண்டும் என்றனர். இது திருமறைமலையடிகள் காலமாகும். பின்னர், அவற்றில் உள்ள பாத்திரங்கள் சற்பாத்திரங்கள். ஆகவே அவற்றை படிக்க வேண்டும் என்றனர். இது திரு.வி.கலியாணசுந்தரனார் காலம். அடுத்தபடியாக அவ்விலங்கியங்களிலே காவிய ரசம், கலை உணர்வு, பண்பாடுகள் சொட்டுகின்றன. அதனால் அவற்றைப் படிக்க வேண்டும் என்றனர். இது திரு.ரா.பி. சேதுபிள்ளையவர்கள் காலமாகும். இதனை இன்னும் சிலர் வேறு மொழியிலே கூறுவர். அதாவது, அவைகளிலேயுள்ள பாவத்திற்காகப் படியுங்கள் என்று இது டி.கே.சிதம்பரநாத முதலியார் காலம். இவை யாவற்றையுங் கடந்து மேலே கூறப்பட்டவைகட்காகப் படிக்காவிட்டாலும் அவைகளிலுள்ள நீதிகட்காகப் படியுங்கள் என்கின்றனர். இது திரு.சோமசுந்தரபாரதியார் போன்ற புராணமும் பகுத்தறிவும் கநல்தோர் காலமாகும்.

பத்துத்தலை இராவணன்-தத்துவார்த்தம் பலிக்குமா?
புண்ணிய சரிதம், சற்பாத்திரங்கள் நிறைந்த சரிதம், காவியரசம், கலையுணர்வு, பண்பாடு பொருந்திய காவியம், பாவமுள்ள காவியம் என்ற நிலைகளெல்லாம் கடந்து நீதிக்காவது இவைகள் நிலைத்திருக்க வேண்டும் என்ற நிலைமைக்கு வந்துள்ளது இன்றைய இலக்கியங்களுடைய நிலை. மற்றும் சில பகுத்தறிவாளர் கேட்கும்போது மட்டும் இவர்கள் சில தத்துவார்த்தங்கள் கூறித் தகிடுதத்தம் செய்கின்றனர். இவர்கள் கூறும் தத்துவார்த்தங்கள் நாட்டு மக்களிடைப் பரவியுளதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியிருக்க, இவர்கள் கூறும் தத்துவங்களால் யாருக்கு என்ன பயன்? சான்றாக, புலவர்கள், இராவணனுக்குப் பத்துதலைகள் இல்லை. அது கவியின் கற்பனைத் திறன். இராவணன் பத்துப்பேர் ஆற்றலை உடையவன். பத்துவித குணமுள்ளவன். ஆகவே அதனைப் பத்து முகங்கள் என்று பாடியுள்ளார். அதிலுள்ள பண்பாடு பாவம்தான் என்னே! என்னே! என்று இறும்பூதெய்துயர். நான் கேட்கிறேன் உங்களை, நீங்கள் கிராமத்திற்குச் சென்று கிராமத்தானிடம், இராவணனுக்குப் பத்துத்தலைகள் இல்லை. இது வெறும் கற்பனை. கருத்துக்குக் களிப்பூட்ட கையாளப்பட்ட கைத்திறன்! நாங்கள் இராமாயணத்தை நன்றாகப் படித்தோம். பட்டம் பெற்றுள்ளோம் என்று கூறுவீர்களா? பத்துத் தலைகள் என்பது பிழை என்பது குறித்துப் பேசப் புகுந்த உங்களால் அவர்கள் கல்லடிகட்குப் பத்துப் போட முடியுமா என்றுதான் ஏங்குகிறேன்! ஏன்! எதனால்? அவன் உங்கள் பேச்சை நம்பாததனால். ஏன் நம்பமாட்டான்? அவன் ஏட்டிலே படிப்பது பத்துத் தலைகள் என்று புராணப் பிரசங்கத்திலே கேட்பது இராவணனுக்குப் பத்துத் தலைகள் என்று நாடகத்திலே, சினிமாவிலே காண்பது பத்துத்தலைகள் என்று. ஆகவே உங்கள் தத்துவார்த்தத்தால் என்ன பயன் என்று கேட்கிறேன். எனவே இவை மாற்றப்பட வேண்டும் என்றால் குற்றமா?
“பார்ப்பானை ஐயரென்ற காலம் போச்சு”

பார்ப்பானை அய்யரென்னும் காலமும் போச்சே, வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே என்று காலத்திற்கேற்ற கருத்துடன் பாடிச் சென்றார் பாரதியார். அதைக் கண்டும் உங்கட்கு உண்மை தெரியவில்லையா? நம்முடைய இலக்கியங்களிலே உள்ள நீதி நமக்குத் தகுமா? நமக்குத் தேவையா? என்று ஒரு நல்ல தீர்ப்பு அளியுங்கள். எடுத்துக்காட்டாக கம்பராமாயணத்திலே உள்ள நீதியைக் காண்மின். இராமனுக்கு முடிசூட்டு விழா நிச்சயிக்கப்பட்டது. தசரதன் தன் மந்திரி சுமந்திரனை அழைத்து இராமனுக்கு அரச நீதிகளை அறிவுறுத்துமாறு ஆணையிட்டான். சுமந்திரன் இராமனுக்குக் கூறுகிறான். அந்தணர் ஏவுகின்ற முறைப்படி நட என்று. இது இந்தக் காலத்திற்கும் கருத்திற்கும் ஏற்றதா என்று சிந்தியுங்கள். இந்தத் தீர்ப்பு நல்ல தீர்ப்பா?

அந்தணரென்போர் யாவர்?
இங்கு நம் புலவர் குழாங்கள் ஒன்று கூற முன்வருவர் மிக ஆவலுடன். அதாவது கம்பன் கண்ட அந்தணர் பார்ப்பனக் குலத்தைக் குறிப்பதல்ல. ஆனால் அந்தணரென்போர் அறவோர்மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் என்ற திருக்குறளுக்கு எடுத்துக் காட்டாக உள்ள அறிவாளரைக் குறிப்பதன்று! குலத்தைக் குறித்ததேயாகும் என்றே துணிதல் வேண்டும். எடுத்துக்காட்டாக, வேண்டுமானால் சுந்தரர் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதிக்கு வாருங்கள். அதிலே, தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்ற அடியிலே அந்தணர் என்பது நம் புலவர் பெருமக்கள் புகலும் புனிதரையே குறிக்கிறதா என்று பாருங்கள். இல்லை! அது குலத்தைத்தான் குறிக்கிறது என்பது முக்காலும் உண்மை. அவ்விதம் குலத்தைக் குறிக்கவில்லை என்றால், அறிவாளராகிய தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று கூறிய அதே வாயால் அடுத்த அடியிலேயே திருநீலகண்டக் குயவனார்க்கும் அடியேன் என்று கூறி குயவனார்க்கு என்ற குலத்தைக் குறிக்கும் சொல்லை வைத்திருக்க மாட்டார் ஏன்? அந்தணர் என்பது செந்தண்மை பூண்டொழுகும் செம்மல்களையே குறிப்பதனால், திருநீலகண்டரையும் அந்தணர் என்று குறித்திருத்தல் வேண்டும். அவ்விதம் குறிக்காதது ஏன்? அவர் அந்தணர் என்று அழைக்கப்பட அவ்வளவு அருகதையற்றவரா? சிவநேசச் செல்வர் அல்லவா? அம்மையப்பனின் அருள் திருவிளையாடல் அவரை அண்டவில்லையா? இல்லை என்று எவரும் மறந்தும் மறுக்க முடியாது. எனவே இங்கு அந்தணர் என்பது குலத்தைக் குறிக்கும் சொல்லே என்று கொள்வதே முறை.

நிற்க, சுமந்திரன் இராமனிடம், அந்தணர் ஏவுகின்ற முறைப்படி நட, ஏன் எனில், விதியும் அவர் ஏவ நிற்கும். அவரால் அரசை ஆக்கவும் அழிக்கவும் முடியும் என்று கூறுகிறான். இது நல்ல நீதியா? நடக்குமா? நடக்க விடலாமா? என்று சிந்தியுங்கள் எதிர்கால நீதிபதிகளே!

கம்பன் காவியத்தில் காண்பது தமிழ்நாடு தானா?
பிறிதொரு புலவர், கம்பன் காவியத்திலே தமிழ்நாட்டைக் கண்டான் என்று கம்பன்பால் மாறாக் காதல் மிகக் கொள்கின்றார். ஆனால், தமிழ்நாட்டிலே கம்பன் கண்ட காட்சிகளிருந்தனவா? பாருங்கள்! கம்பன் காவியத்திலே மாதர் வர்ணனை மிக மோசம். மனத்தாலும் நினைக்கொணாத மாசுடையது. மிதிலை, அயோத்தி முதலிய நகரங்களிலே மாதர்கள் மதுகுடித்தும் தம் நிலை மறந்து ஆடிக்கொண்டிருந்தனர். பெண்கள் பந்தயம் வைத்து சூதாடினர். பந்தயத்தில் தத்தம் காதணி, கையணி முதலிய யாவற்றையும் தோற்றபின் தத்தம் மேலாடைகளையும் பணயம் வைத்து ஆடுகின்றனராம்! இதுதானா கம்பன் கண்ட தமிழ்நாட்டு மகளிர் மாண்பு? இத்தகைய இழிசெயல்கள் தமிழ்நாட்டில் இருந்தனவா? இருந்தது என்று இயம்பப் பண்டை ஏட்டிலே இடம் உண்டா? அல்லது இத்தகைய தமிழ்நாடு நமக்கு வேண்டுமா? வேண்டும் என்று எவரும் விழையார் என்பது திண்ணம்.

பக்திப் பாடலா? கொக்கோக வைபவமா?
மற்றும் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் மகாமோசம். மற்றெங்கும் காணமுடியாத காமரசக் களஞ்சியம். எல்லாம் பாரிஸ் நிர்வாணப் படங்களைப் பாடும் பாசுரங்களாகவே பரிணமிக்கின்றன. சான்றாக அருக்கு மங்கையர் கழலடி வருடி, கருத்தறிந்தபின் அரைதனிலுடைதனை அவிழ்த்து ஆங்குள்ள அரசிலை தடவி எனப் போகிறது. இவைகளை வேண்டாம் என விழைவோர் ஏன் இவைகளை விரித்துப் பாட வேண்டும்? இவைகள் பக்திப் பாடல்களா? கொக்கோக வைபவம் என்று கூறினால் மிகப்பொருத்தமாக இருக்கும். அததற்குத் தனித்தனி இலக்கியங்கள் இருக்க வேண்டும்.

நமக்குக் காமரசம் கலவாத, மதம் கலவாத, மதியை வளர்க்கும் இலக்கியங்கள் தேவை. காலத்துக்கும் கருத்துக்கும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தொடர்புள்ள ஏடுகள் தேவை.

ஒன்றே குலமும், ஒருவனே தேவனும் என்ற மனப்பான்மை தேவை. அருளை மட்டும் கேட்கும் ஆண்டவன் தேவை. கோயில் குருக்கள், குடும்பம், கூத்தி, மானியம், அதிர்வெடி கேட்கும் ஆண்டவன் வேண்டாம் நமக்கு. கோயிலுக்கு வெளியே வறுமை, கொடுமை, இல்லாமை கோயிலிலே மலைபோன்ற செல்வம், இன்பம் என்றிருக்கும் நிலையற்ற நிலைமை வேண்டாம். கடவுளுக்குப் பேசும் சக்தியிருந்தால் அவர் உங்களைப் பார்த்துக் கேட்பார், அடே அறிவற்றவனே! நான் இந்த அண்டசராசரங்களைப் படைத்தேன். நிலத்தைப் படைத்தேன், நெல்லைப் படைத்தேன். நீரைப் படைத்தேன், அதிலே முத்தைப் படைத்தேன், அறிவைப் படைத்தேன் எதையும் எண்ணி செய்ய, பகுத்துச் செய்ய உனக்குப் பகுத்தறிவைப் படைத்தேன். ஆனால் இவற்றிற்குப் பதிலாக நீ எனக்கு அரை வீசை பொங்கல் படைக்கிறாயா? நாட்டிலே உள்ள நலிந்தோரைப் பார் என்று தான் கூறுவார். அவர் அறிவுள்ள கடவுளானால்.

இறைவனை நிந்திக்கும் இரட்டைப் புலவர் நாத்திகரா?
கடவுளை நாங்கள்தான் குறைகூறுவதாக நினைக்க வேண்டாம். நெடுங்காலத்திற்கு முன்னரே உங்கள் இரட்டைப் புலவர்கள் கூறியுள்ளதை நினைவிற்குக் கொண்டு வாருங்கள். அவர்களின் ஒருவர் பாடுகிறார் பசியால் மிக நொந்து, தேங்கு புகழாங்கூர் சிவனே யல்லாளியப்பா நாங்கள் பசித்திருக்க ஞாயமோ? என்று, நாத்திகம் பேசி நாத்தழும்பேறிய நாங்கள் பசித்திருக்கலாம். ஆனால் சிவநேசர்களான இரட்டைப் புலவர்கள் பசித்திருக்கலாமா?

அதற்குச் சிவனே விடையளிப்பது போன்று மற்றொரு புலவர் பாடுகிறார்.

போங்காணும்
கூறுசங்கு தோல்முரசு கொட்டோசையல்லாமற்
சோறுகண்ட மூளியார் சொல்-என்று!
மற்றும் அதே இரட்டையர்கள் வறுமையால் வாடி வருந்தின போது பாடுகின்றனர்.
கேட்ட வரமளிக்கும் கீர்த்தியுள்ள தெய்வங்கள்
கூட்டோடே எங்கே குடிபோனீர்-என்று.

அதுவும் கூட்டோடே குடும்பத்தோடே எங்கே போனீர்கள் என்று கேட்கின்றனர். இதற்குத் தெய்வத்தின் விடையாக மற்றவர் பாடுகிறார்.

பாட்டாய் கேள்
செல்காலமெல்லாஞ் செலுத்தினோம் அல்காலங்
கல்லானேனா செம்பானோக்காண்-என்று
இது எத்துணை உண்மையானது சிந்தியுங்கள்.

ஆகாய விமானத்திற்கும் அதர்வண வேதத்திற்கும் முடிச்சு:
மற்றும் சிலர், நம் நாட்டில் எல்லாம் உளது. நமது அதர்வண வேதத்தில் இருந்துதான் ஜெர்மானியன் பறக்கும் குண்டு. ஆகாய விமானம் முதலியவற்றைத் தெரிந்து கொண்டான். நம் நாட்டில் இல்லாத விமானமா? என்ன என்ன அஸ்திரங்கள் இருந்தன அக்கினியாஸ்திரம், வாயுவாஸ்திரம், வருணாஸ்திரம் என்று. இன்று என்ன புதுமையாய் வந்துவிட்டது? என்று நாட்டைப்பற்றி பெருமையோடு பேசுகின்றனர். ஆனால் அந்தப் பழம் பெருமை எங்கே இப்போது? ஏன் அன்னியனுக்கு நாட்டை விட்டு ஆந்தைபோல விழிப்பது? இதனால் உண்மையிலேயே நமக்குப் பெருமையா? இல்லை சிறுமைதான். சுயமரியாதைக்குப் பங்கம்தான். இது அன்னியனுடன் கொஞ்சிக் குலாவும் அழகிய அணங்கைக் கண்டு அருகில் இருப்பவரிடம், இவள் யாரோ என்று எணணாதேயும் இவள் நம்முடைய மனைவியாக இருந்தவள்தான்! இப்போது இவளை அவன் ஏமாற்றி அழைத்துச் சென்றுவிட்டான். ஆனாலும் என்ன? என்னிடம் இருந்தவள்தானே! இதனால் எனக்கு எவ்வளவு பெருமை? என்று கூறுவதற்குச் சமமாகும் என்பது திண்ணம்.

இனக் கொலைக்கு கலைக் கொலைதான் மருந்து:
மக்கள் சமுதாயத்தைச் சீர்திருத்தப் பலப்பல அறிஞர்கள் அரிய பெரிய வேலை செய்தனர். ஆனால் அவர்கள் யாவரும் தோற்றனர். அடிப்படையை ஆராயாததால் எனவே இளந்தோழர்களே! வருங்கால உலகம் உங்களைத்தான் நம்பியிருக்கிறது. ஆகவே நீங்கள் உங்களுக்கு அளித்துக் கொள்ளும் நல்ல தீர்ப்பால் இனத்தை எதிர்காலத்திலே எழுச்சியுறச் செய்வீர்களாக! பெரியோர்களை நம்பின காலம் போய்விட்டது. புதுமை, இளைஞர்களால்தான் நிகழ வேண்டும். நிகழ முடியும். சீனாவிலே சன்யாட்சென், இளைஞர்கள் உதவியால் தான் பழைய சீனாவை மடித்துப் புதிய சீனாவை உண்டாக்கினார். ஆண்களின் ஜடையைக் கத்தரித்தார். ஒரே ஆண்டவனை வழிபடும்படிச் செய்தார்.

ஐரோப்பாவின் நோயாளியாகக் கருதப்பட்ட துருக்கி இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் கமால் பாஷா இளைஞர்கள் உதவியைப் பெற்றதாலேதான்.

தோழர்களே! நீங்கள் நல்ல தீர்ப்பு அளியுங்கள். இன்று மக்கள் சமுதாயத்தை மாற்றவல்ல தீர்ப்பு, மனிதனை மனிதனாக வாழவைக்கும் தீர்ப்பு, வீணர்களை வீழ்த்தும் தீர்ப்பு, விதியை விரட்டும் தீர்ப்பு அளியுங்கள். அதை அமுலுக்குக் கொண்டு வாருங்கள்! அதற்குத் தடையாகக் கடவுளே வரினும் கலங்காதீர்! சிவனே வரினும் சிதறாதீர்! மதமே வரினும் மயங்காதீர்! கலை கலை என்று இனக்கொலை செய்தால் கலைக்கொலை செய்யுங்கள்! அடிமை வாழ்வை அறுத்தெறியுங்கள்! மானமே பெரிதென மதியுங்கள்! சிந்தித்து நல்ல தீர்ப்புக் கூறுங்கள்! செயலில் காட்டுங்கள்!

19-2-1945 இல் தாம்பரம் கிறித்துவக் கல்லூரி தமிழ்ப் பேரவை ஆண்டு விழா சொற்பொழிவு