அன்புள்ள தோழர்களே!
பல நாட்களுக்குப் பின்னர் கூடியிருக்கிறோம். இக்கூட்டம்
நமது நோக்கத்தைத் தெரிவிக்கக் கூடிய கூட்டமாகும். மழையோ
பலமாய்ப் பெய்கிறது; வந்திருக்கும் கூட்டமோ ஏராளம் பேச
இருப்போரும் பலர் பல மாவட்டங்களிரிருந்தும் வந்துள்ள தோழர்கள்,
இயக்கத்தின் முக்கிய பணியிலே ஈடுபட்டுள்ளவர்கள், அவர்கள்
யாவரும் பேச இருக்கிறார்கள். மழை பலமாகப் பெய்து கொண்டிருக்கிறது.
பலர் பேச வேண்டும், சற்று சங்கடமான நிலைதான். அடாத மழை பெய்கிறது.
அளவற்ற கூட்டம். தாய்மார் களும் தவிக்கின்றனர் மழையால்.
நின்று கொண்டேயிருக் கின்றீர்கள்; சங்கடம் தான். ஆனாலும்
சமாளிக்கிறீர்கள். இது போன்ற நிலைதான் நாட்டிலே சிலகாலம்
கழகத்தின் வேலைகள் செயலற்றுக் கிடந்து, சங்கடமான நிலை ஏற்பட்டது;
சரி செய்தோம். திராவிட முன்னேற்ற கழகம் தோன்றியது. புதிய
அமைப்பு ஏற்பட்டுவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற
பேரால் ஏன் ஏற்பட்டது. எதற்காக ஏற்படுத்தப்பட்டது என்பதை
விளக்கும் கூட்டமே இது.
நானா காரணம்?
நான் தான் காரணம் இந்த நிலைக்கு ஏற்பாட்டிற்கு என்று கூறுவர்
சிலர். நான் பேசுகிறேன் இப்போது; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்;
பலத்த மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. இப்போது, நனைகிறீர்கள்.
இதற்கு நானா பொறுப்பாளி? நானா மழையை வரவேற்கிறேன்; வருவித்தேன்,
இல்லை! மழை வரவும், அதனால் சங்கட நிலை ஏற்படவும் இன்று,
இப்போது நான் எப்படிப் பொறுப்பாளியல்லவோ, அப்படித்தான்
கழகத்தில் ஏற்பட்ட மத்த நிலைக்கும் நான் பொறுப்பாளியல்ல.
மழைக்கு நான் பொறுப்பாளியல்ல வென்றாலும், என்ன ஏசுவர் கூட்டத்திற்கு
வந்துள்ள மக்கள், தாய்மார்கள்? “என்னப்பா அந்த அண்ணாதுரை
கூட்டத்திற்குப் போனேன், ஒரே மழை, நன்றாக நனைந்துவிட்டேன்.
நீர் சொட்டச் சொட்டக் கேட்டுக் கொண்டிருந்தேன்” என்றுதான்
பேசுவர்.
கூறியது குற்றமா?
நான் என்ன செய்துவிட்டேன்; தலைவர் தவறினார் கொள்கையினின்றும்,
பகுத்தறிவுப் பாதையினின்றும் தவறு என்று மனதார நம்பினேன்;
தெரிவித்தது குற்றமா? கூடாது என்று கருதினேன்; கருதியது
குற்றமா? கருத்தைத் தெரிவித்தேன் காரணத்தோடு; வேதனையை வெளிப்படுத்தினேன்;
வெளிப்படுத்தி யது குற்றமா? கொள்கையைக் கூறுவது குற்றமா?
கூறுங்கள் தோழர்களே!
நான் மட்டுமல்ல; என் போன்ற பல தோழர்கள் பல தாய்மார்கள்,
பல கழகங்கள், பாட்டாளி மக்கள், தொழிலாளித் தோழர்கள், பட்டி
தொட்டி எங்கும் உள்ளோர் கூறினர்; கூடாது இந்த ஏற்பாடு,
திருமணம் என்ற பேச்சை விட்டு விடுங்கள், என்று.
பெரியார் திருமணம் என்ற செய்தி கேட்டதும் அழுதவன் நான்,
ஆயாசம் கொண்டவன் நான், அதுமட்டுமல்ல, ஒதுங்கி விடுகிறேன்
என்று எண்ணத்தை கருத்தைத் தெரிவித்தவன் நான். பேதம், பிளவு,
மனத்தாங்கல், மோதுதல் கூடாது, நல்லதன்று என்று கருதும்
போக்கு, மனப்பண்பு படைத்தவன் நான். எனவே என் வரையில் பெருந்தன்மையாகக்
கட்சிப்பணியிலிருந்து விலகுவது நல்லது என்று முடிவு கட்டியிருந்தேன்.
என் போன்ற பல தோழர்கள் பெரியாரை, பெரியார் போக்கை, அவர்
திருமண ஏற்பாட்டை ஏற்கவில்லை என்பதுமல்ல, கண்டித்தனர்; கதறினர்;
வேண்டாம் என்று வேதனை நிறைந்த உள்ளத்தோடு.
நான் மனதார தீமை என்று கருதிய ஒன்றை, நல்லதல்ல என்று தெரிந்த
ஒன்றை, பகுத்தறிவுக்குப் புறம்பானது என்று பாமரரும் ஒப்பும்
ஒன்றைத் தெரிவித்தது குற்றமா?
மனப்புண் ஆறவில்லை!
பெரியார் சமாதானம் சொல்லிவிட்டார், என் சொந்த விஷயம்;
எதிர்ப்போர், சுயநலமிகள்; சதிக்கூட்டத்தினர் என்று. மனப்புண்
ஆறவில்லை மக்களுக்கு அப்படிப்பட்ட தலைவருடன் கலந்து பணியாற்ற
மாட்டோம் என்று கூறினர். செவி சாய்க்கவில்லை; தலைவர் விலகுவார்
என எதிர்பார்த்தனர்; விலகவுமில்லை தலைவர். அவரோடு சேர்ந்து
பணிபுரிய முடியாத நிலையிலுள்ள மிகப்பெரும்பான்மையினர், கழக
முக்கியஸ்தர்கள், கூடிப் பேசினர்; ஒரு முடிவு செய்தனர்;
அந்த முடிவு தான் “திராவிட முன்னேற்றக் கழகத்” தோற்றம்.
போட்டிக் கழகமல்ல!
திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது; திராவிட கழகத்திற்குப்
போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில் தான், திராவிடர்
கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதே தான், திராவிட முன்னேற்றக்
கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கையில், கருத்துக்களில்
மாறுதல், மோதுதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே
சீர்திருத்தம், பொருளாதாரத்துறையிலே சமதர்மக் குறிக்கோள்,
அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தினின்றும் விடுதலை, ஆகிய
கொள்கைகள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடு
களாகும்.
வேலை செய்ய மனம் ஒப்பவில்லை:
கொள்கைக்கே புறம்பாக, ஜனநாயகத்திற்கே அப்பாற்பட்டுத் தமது
போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறார், பெரியார். அவர் தலைமையில்
வேலை செய்ய மனம் ஒப்பவில்லை; செயலாற்றும் வகை கிடையாது என்ற
நிலை ஏற்பட்டு விட்டது. அவர் வருத்த பாதையிலிருந்து அவரே
தவறிவிட்டார்; தடுமாறி விட்டார். தவறு என்று எடுத்துக்காட்டினோம்,
நாம் மட்டுமா? நாட்டு மக்கள் அனைவரும். இயக்கம் பெரிது;
இயக்கத்தின் கொள்கைகள் மிக மிகப்பெரியது; கொள்கையை விட்டுக்கொடுக்க
மாட்டோம்; கொள்கைக்கு இழுக்கு வர விடமாட்டோம்; தவறு செய்தது
தலைவரேயானாலும் கண்டித்திடத் தயங்கோம்; என்ற குரல், நாடெங்கும்
கேட்டது; தலைவர் தம் வழியே செல்கிறார்; தவறை உணராது; சரியென்று
சாதித்துக் கொண்டு, திராவிடர் கழகம் மன்று மாத காலமாகச்
செயலற்றுக் கிடந்தது.
கழகம் கொள்கையில் வழுவாது:
திராவிடர் கழகம் எதற்காகப் பாடுபட்டதோ, எவருடைய நன்மைக்காக,
எந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்ததோ, அதே மக்களுக்காக,
ஏழை எளியவர்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க, தாழ்ந்த மக்களை
உயர்ந்தோராக்க, வாழ வழியற்ற மக்களுக்கு வாழ்க்கைப் பாதை
வகுத்துக் கொடுக்க, இல்லாமையை இல்லாததாக்க, கொடுமையை ஒழித்துக்
கட்ட “எல்லோரும் ஓர் குலம்” என்ற ஏற்பாட்டை வகுக்க, ஏற்படுத்தப்பட்டதோ,
அதே கொள்கை வழி நின்று குறிக்கோளைப் புறக்கணிக்காது பாடுபட்டு
வரும் திராவிட முன்னேற்றக் கழகம்.
கொள்கைக்காகவே விலகினோம்:
கொள்கை பிடிக்காமலோ, கோணல்புத்தி படைத்தோ, அல்ல நாங்கள்
விலகியது, வெளியேறியது; கொள்கை வேண்டும், அதுவும் நல்ல
முறையில் நடத்தப்பட வேண்டும்; நாடும் மக்களும் நலம் பெறும்
முறையில் கொள்கைக்குக் குந்தகம் விளைவிக்கும் காரியத்திற்குப்
பக்கபலமாக இருந்து, பணியாற்ற முடியாது; என்ற நிர்ப்பந்த
நிலையிலே தான் விலகினோம், விலக நேரிட்டது. பெருந்தன்மை
வேண்டும் என்ற ஒரே காரமத்தினால்தான் மோதலைத் தவிர்த்து,
கழகத்தைக் கைப்பற்றும் பணியை விடுத்து விலகினோம், அதுமட்டுமல்லாமல்,
தலைவர் எல்லோர் மீதும் நம்பிக்கையில்லை, நம்ப முடியாது;
என்று வேறு கூறியிருக்கிறார். சோம்பேறிகள், செயலாற்ற முடியாத
சிறுவர் கூட்டம்; உழைக்கத் தெரியாதவர்கள், என்று குற்றம்
சாட்டியிருக்கிறார்! யாரைப் பார்த்து? உழைத்து உழைத்துக்
கட்சியைக் கழகத்தை உருவாக்கிய உண்மைத் தொண்டர்களை, நிர்வாக
உறுப்பினர்களை, தம் வாழ்வையும் பாழ்படுத்திக் கொண்ட இளைஞர்களைப்
பார்த்து!
திறத்தைக் காட்டுவோம்!
ஒரு குடும்பத் தலைவன் சதா தன் மக்களில் சிலரைப் பார்த்து,
“நீ சோம்பேறி, வேலைக்கு லாயக்கற்றவன், வீணன், என்று தூற்றிக்
கொண்டே இருந்தால், மகன் நிலை என்னவாகும்? உண்மையிலேயே உழைக்கும்
மகன் உள்ளம் உடைந்து தானே போவான். அது மட்டுமா? சற்று விவேகமும்
ரோஷமும் படைத்த மைந்தன் வீட்டை விட்டு வெளியேறி, தொழில்
புரிந்து தன் நிலையைப் பலப்படுத்தி, தகப்பனைக் கூப்பிட்டுப்
“பார் அப்பா! வீணன், வேலைக்கு லாயக்கற்றவன், சோம“பேறி என்று
கூறினீரே, பாரும் எனது திறத்தை, செயலாற்ற விடவில்லை நீர்.
சதா எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுக் கொண்டு எங்களை எரிச்சலோடு
ஏசினீர். பாரும் எமது வேலையை, வேலையின் திறத்தை, வெற்றியை”
என்றுதானே கூறுவான்? காட்டுவான்.
அது போலவே தான் நாமும் நம்மை மதியாத, இகழ்ந்த, தூற்றின,
துச்சமென மதித்த, தலைவரின் தலைமையை விட்டு வெளியேறித் தனி
குடித்தனம், தனி முகாம், தனிக்கட்சி, திராவிட முன்னேற்றக்
கழகம் அமைத்திருக்கிறோம். நாம் உழைத்து உருவாக்குவோம்
இந்தக் கழகத்தை.
சுவீகாரப் பிள்ளை:
நான் தான் அவரோடு பலத்த கருத்து வேற்றுமை கொண்டேன் என்றும்,
அவரைப் பிடிக்கவேயில்லை என்றும் பேசுவது தவறு, உண்மைக்கு
புறம்பானது. எனக்கு அவரோடு தொடர்பு ஏற்பட்டது 1935 ம்
ஆண்டில், நான் அப்போது பி.ஏ. ஹானர்ஸ் பரிட்சை எழுதியிருந்தேன்.
பரிட்சை முடிவு தெரியாத நேரம் அது அப்போது கோவைக்கடுத்த
திருப்பூரில் ஓர் வாலிபர் மாநாடு நடந்தது. அங்குதான் பெரியாரும்
நானும் முதலில் சந்தித்தோம். அவரிடம் எனக்குப் பற்றும்
பாசமும் ஏற்பட்டது.
அவரது சீர்திருத்தக் கருத்துக்கள் எனக்குப் பெரிதும் பிடித்தன.
பெரியார் என்னைப் பார்த்து “என்ன செய்கிறாய்” என்று கேட்டார்.
‘படிக்கிறேன், பரிட்சை எழுதியிருக்கிறேன்’ என்றேன். ‘உத்தியோகம்
பார்க்கப் போகிறாயா?’ என்றார். “இல்லை. உத்தியோகம் பார்க்க
விருப்பமில்லை, பொது வாழ்க்கையில் ஈடுபட விருப்பம்” என்று
பதிலளித்தேன். அன்று முதல் அவர் எனது தலைவர் ஆனார். நான்
அவருக்குச் சுவீகாரப் புத்திரனாகி விட்டேன். பொது வாழ்வில்
அன்றிலிருந்து இன்றுவரை சுவீகாரப் பிள்ளைதான் நான் அவரது
குடும்பத்தாருக்கு! இன்றும் கூட அந்தத் தொடர்பு விடவில்லை
எனக்கும் அவருக்கும் ஏன்? அவருடைய அண்ணார் பிள்ளை சம்பத்
என்னுடைய சுவீகாரப் பிள்ளை. இப்போது 14 வருடங்கள் அவரோடு
பழகினேன். 14 வருடங்களாகப் பொதுவாழ்வில் இருக்கின்றேன்.
நான் அறிந்த ஒரே தலைவர், ஒரே கட்சி!
இத்தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த தலைவர், தெரிந்த தலைவர்,
பார்த்த தலைவர் இவர் ஒருவர் தான். வேறு தலைவரின் தலைமையில்
நான் வேலை செய்ததும் கிடையாது, செய்யவும் மனம் வந்ததில்லை.
வராது. அதே காரணத்தினால்தான், இன்றுகூட திராவிட முன்னேற்றக்
கழகத்திற்கு கூடத் தலைவரை ஏற்படுத்த வில்லை; அவசியம் என்று
கருதவில்லை. இருதய பூர்வமான தலைவர், இருதயத்திலே குடியேறிய
தலைவர், நமக்கெல்லாம் அப்பொழுது நல்வழி காட்டிய பெரியார்
அமர்ந்த பீடத்தை, தலைவர் பதவியை, நாற்காலியை காலியாகவே வைத்திருக்கிறோம்.
அந்த பீடத்திலே, நாற்காலியிலே வேறு ஆட்களை அமர்த்தவோ, அல்லது
நாங்களே, அல்லது நானே அமரவோ விரும்பவில்லை.
பனையுணர்ச்சி நமக்குக் கிடையாது:
நான் மிக மிகத் தெளிவாகக் கூறிவிடுகிறேன். திராவிட முன்னேற்றக்
கழகம் எந்த விதத்திலும் திராவிடர் கழகத்திற்கு எதிரானதல்ல,
எதிர் நோக்கம் கொண்டதுமல்ல. கொள்கை ஒன்றே, கோட்பாடும்
ஒன்றே. அங்கிருந்தவரில் பெரும்பாலோர் தான் இங்கு இருக்கின்றனர்.
குடும்பத் தலைவரின் போக்குப் பிடிக்காத காரணத்தால், மக்கள்
மனையில் வசிக்கும் பண்பினைப்போல, தன்மையைப் போல, பகையுணர்ச்சி
சற்றும் கிடையாது நமக்கு.
இக்கூட்டத்தின் இடையே மழை பொழிந்து சற்று சங்கடத்தைத் தருவதுபோல,
இடை இடையே சிறு சிறு தூறல்கள் தூறலாம்; நம்மிடையே அது வார்த்தை
வடிவிலே வரலாம்; விசாரப்படாதீர்கள். அதுவும் அந்தப் பக்கமிருந்துதான்
வரலாம். இப்பக்கமிருந்து நிச்சயம் உண்டாகாது.
மோதுதல் வீண் வேலை:
பெரியார்தான் எங்களை மறந்தார். உதாசீனம் செய்தார், உதாவாக்கரைகள்
என்று கூறினார், மனம் நோகும்படி பேசினார், எழுதினார், நடந்தார்,
நடந்துகொண்டிருக்கிறார். நாம் அவரோடு மேலும் மேலும் போராடவோ,
மோதவோ போவதில்லை. விவேகமில்லை என்று கருதுவதால், வீண்
வேலை என்று நினைப்பதால்.
எனக்கு விளைவு தெரியாதா?
அவர் போக்கைக் கண்டித்ததால் என்ன திடீர் லாபம் ஏற்பட்டு
விட்டது. எனக்கோ, அல்லது என்னோடு நிற்கும் நண்பர்களுக்கோ?
ஒன்றுமில்லை! எனக்குத் தெரியாதா? யார் என்ன கூறுவர் என்பது
எனக்குத் தெரியும். பெரியாரைக் கண்டிப்பதால் சிலர் ஏசுவர்,
சிலர் தூற்றுவர் பற்பல விதமாக, நேற்றுவரை அறிஞன் என்று போற்றப்பட்டானே
இன்று என்ன அறிந்தான் இவன்? என்று கேலி செய்யும் கூட்டம்
கிளம்பும் என்பது தெரியும். நான் எழுதிய சினிமாக் கதையைப்
பற்பல விதமாகப் புகழ்ந்தவர்களும், என்னப்பா, அதிலே இருக்கிறது?
என்று நையாண்டி செய்வர் என்பதும் தெரியும். நேற்றுவரை எனது
‘கம்பரசத்தை’ இனிப்பாகக் கருதியிருந்தோர், இன்று பழைய காடியாகக்
கருதுவோராகக் கிளம்புவர் என்பதும் அறிவேன். நான் ரேடியோவில்,
ஆங்கிலத்தில், பாரதியார் பற்றிப் பல நாள் முன்னரே பேசியிருக்கிறேன்.
“மக்கள் கவி பாரதி” என்ற தலைப்பிலே; ஆங்கிலத்திலே அப்போது
போற்றினார். “ஆகா எங்கள் அண்ணாவைப் பார் உண்மைப் பாரதியாரைப்
படம் பிடித்துக் காட்டுகிறான்” என்று போற்றினர். இன்றோ,
“பார் பார் பயல் பாரதி விழாவிலே கலந்துகொண்டு காங்கிரசுக்கு
நல்ல பிள்ளையாகிறான்” என்று தூற்றுவர் என்றும் தெரியும்.
தெரிந்தும் கடமையுணர்ச்சி, மனிதப் பண்பு ஆகியவை என்னைப்
பெரியார் திருமணத்தைத் தகாதது என்று கூறிட வைத்தன.
எனக்கு எதிலே குறை ஏற்பட்டது?
எனது பீடத்தைக் காலி செய்து விட்டு வந்து விட்டேன் அங்கிருந்து
நானாகவே. நான் விரும்பினால், விரும்பியிருந்தால், அங்கேயே
இருந்திருக்கலாம், எல்லாவகை விருந்துகளோடும் என் நிலை என்ன
அங்கே சாமானியமானதா? எளிதில் கிடைக்கக் கூடியதா? இல்லையே!
அவர் அங்கே கடவுள் நிலையில் இருக்கிறாரென்றால், நான் தானே
அர்ச்சகன்! அவர் தம்பிரான் என்றால், நான்தானே கட்டளைத் தம்பிரான்!
அவர் தலைவர், நான் தளபதி! என்றுதான் போற்றப்பட்டேன். புகழப்பட்டேன்.
இன்று அவரது “வாழ்க்கைத் துணை நலம்” ஆன மணியம்மையும் கூட
எனக்குத்தான் மற்ற எவரையும் விட அதிக மரியாதை, வரவேற்பு
காட்டியிருக்கிறார். பெரியார் எழுதுவதாகக் கூறின டிரஸ்டிலும்
என் பெயர் தானே முதலில் இருந்திருக்கும்! நான் என்ன இவ்வளவு
விருதையும் புகழையும் கெடுத்துக் கொள்ள பித்தனா? வறட்டு
ஜம்பம் பேசி, கழகத்தில் புகழ் வாழ்வைக் கெடுத்துக்கொள்ள
நான் என்ன வெறியனா? அல்லது இதை விட்டு வேறு வேலை தேட குமாரசாமி
ராஜாவிடம் ஏதாவது அப்ளிகேஷன் போட்டிருக்கிறேனா? அதுவும்
இல்லையே! எனக்கு என்ன லாபம் ஏற்படும் என்று அவரைக் கண்டிக்க
வேண்டும்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!
பெரியாரோடு மாறுபட்ட கருத்துக் கொண்டவன் என்று கூறப்படுகிறது.
சிற்சில விஷயங்களிலே நான் மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்தாலும்
நெடுநாட்களாகவே சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும்
அவைகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. முடிந்த அளவு ஒத்துழைத்தே
வந்திருக்கிறேன். முடியாத காலத்தில் மிக மிகக் கண்ணியமாக
ஒதுங்கிய இருந்திருக்கிறேன். பெரியார் காலம் வரை அவர் வழிப்படியே
நடக்கும் கழகம், பிறகு பார்த்துக் கொள்வோம், என்ற போக்கைக்
கொண்டிருந்தவன்.
கண்டித்தவரில் முன்னோடும் பிள்ளை குருசாமியே!
சில தோழர்கள் இந்தத் திருமண விஷயத்தைக் கேட்டபோதே பெரிதும்
ஆத்திரமும் ஆவேசமும் கொண்டனர்; துடிதுடித்தனர். உடனே அப்படிச்
செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும் என்று ஆவல் கொண்டனர்.
இதில் முக்கிய பங்கு கொண்டு முதல்வராய்த் திகழ்ந்தவர் தோழர்
எஸ்.குருசாமி அவர்கள் தான். அவர் கூறினார் என்னிடம், அண்ணா
நாம் சும்மா இருக்கக் கூடாது. உடனே ஒரு கண்டனக் கூட்டம்
சென்னையில் போட்டே தீர்க்க வேண்டும். கூட்டம் போடுங்கள்.
நானே தலைமை வகித்து நடத்துகிறேன், என்று வீர முழக்கமிட்டார்.
இதனைத் தடுத்து நிறுத்தியது நான் தான். அவ்விதம் ஆத்திரப்பட
வேண்டாம், வேண்டுகோள் விடுப்போம்; விளைவைப் பொறுத்திருந்து
பார்ப்போம் என்று சமாதானப்படுத்தினேன்.
ஈரோடு மாநாடே காட்டும்!
தூத்துக்குடி மாநாட்டைக் கண்டவர்கள், ஈரோடு மாநாட்டையும்
காணத்தானே நேர்ந்தது. தூத்துக்குடி மாநாடு முடிந்ததும் என்ன
பேச்சு நடந்தது. நாட்டிலே சிலரிடமாவது? தூத்துக்குடி மாநாட்டுக்கு
அண்ணாதுரை வரவில்லை, ஒழிந்தான் இதோடு. கழகத்தை விட்டு மட்டுமல்ல,
பொதுவாழ்க்கையே அவனுக்கு இனிக் கிடையாது. அஸ்தமித்து விட்டது
பொதுவாழ்வு என்று எக்காளமிட்டனர். அது மட்டுமா? தனியாக
அவன் வந்தால் அவன் வாழ்க்கையே முடிந்து விடும், என்ற நிலைதான்
என்று கூட பேசப்பட்டதாம். அப்படிப்பட்ட நிலை வெகு விரைவிலே
மாறி எனக்காகப் பெரியாராலேயே, பெரியாரின் ஊரிலேயே, ஈரோடு
நகரத்திலேயே, மாபெரும் மாநாடு எனது தலைமையில் நடத்தப்பட்டது.
அடையும் ஆறுதல் நேரத்திலே இந்த வரவேற்புப் பத்திரம் அவர்
கண்களில் படாமலா போகும்! அப்படி அவரால் அன்பாக நடத்தப்பட்டு
வந்த நான் இல்லை! திரும்பிப் பார்த்தால் சம்பத்து இல்லை!
கும்பகோணம் போனால் வரவேற்கக் குடந்தை தோழர் கே.கே.நீலமேகம்
இல்லை! திருச்சியிலே பராங்குசமுமில்லை! மதுரையிலே முத்து
இல்லை! விருதுநகர் ஆசைத்தம்பி, தூத்துக்குடி நீதிமாணிக்கம்,
கே.வி.கே.சாமி முதலானோர் காணோம். நம் பக்கம் கோவில்பட்டி
வள்ளிமுத்து, பெத்தாம்பாளையும் பழனிச்சாமி, சென்னையிலே நடராஜன்,
கோவிந்தசாமி முதலிய யாருமே நம்மை விட்டு ஏகினர்; என்ன உழைப்பு!
உறுதி படைத்தோர்கள்! இவர்கள் இல்லையே என்ற ஏக்கம் பெரியாருக்கு
வராமலா போகும்! வந்தே தீரும்! அப்போது அவர் மகிழ்ச்சி
அடைவாரா! அவர் வேண்டுமானால் நடிக்கலாம், மகிழ்ச்சியோடு
இருப்பதாகக் காட்டிக்கொள்ளலாம் பிறர் முன். பலர் என்னைக்
கூறுவர் நான் மிக நன்றாக நடிக்கிறேன் என்று. இதெல்லாம் நான்
ஐயாவிடம், பெரியாரிடம் கற்ற பாடத்திலே ஒரு சிறு பகுதி, ஐயா
மிக மிக நன்றாக நடிப்பார் மகிழ்ச்சியோடு இருப்பது போல,
உண்மையில் மகிழ்ச்சி இருக்காது. இருக்க முடியாது, மனித உள்ளம்
படைத்த எவராலும் இயலாது.
சோம்பேறித் தனத்தின் விளைவா?
திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றத் தொடங்கி யிருக்கிறோம்.
நான் மிகவும் சோம்பேறி, பெரியார் போல் உழைக்க முடியாது
என்று கூறுகிறார்கள். நான் ஒப்புக் கொள்ளுகிறேன். பெரியார்
போல உழைக்க முடியாது என்று ஏன்? அவருக்கு உழைக்க சக்தி,
போதுமான வசதியிருக்கின்றன. அவ்வளவு வசதியும், சக்தியும்
பெற்றவனல்ல நான் என்பது மட்டுமல்ல. பெரியார் போல உழைப்பதே
தவறு, கூடாது. தேவையற்றத என்ற கருத்துடையவன் நான்; அது ஜனநாயகத்திற்கு
ஏற்றதல்ல; முரண்பட்டது என்ற கருத்தும் கொண்டவன். ஒரே மனிதர்
தானே எல்லாப் பொறுப்பையும் வகிப்பது தவறு. பிறருக்கும்
சந்தர்ப்பம், வசதியளிக்க வேண்டியது கடமை என்ற போக்கைக்
கொண்டவன். சோம்பேறி என்று கூறுவதுதான் எனக்கும் பொருந்துமா?
என்று பாருங்கள். எட்டு ஆண்டுகளாக நான“ ஒரு வார இதழ் ‘திராவிட
நாடு’ நடத்தி வருகிறேன். காஞ்சியிலிருந்து இதனை நான் ஒருவனே
நடத்தி வருகிறேன். இது சோம்பேறித்தனத்தின் விளைவா? என்று
கேட்கிறேன். இந்த பத்திரிகையிலே ஓரிரு பக்கங்களைத் தவிர,
மற்றவை யாவும் என்னாலேயே எழுதப்படுபவை. இதுவும் சோம்பேறித்தனத்தின்
விளைவா? மாலைமணி சென்னையிலும் திராவிட நாடு காஞ்சியிலும்
நடக்கின்றன. மாலைமணி தினசரிப் பத்திரிகை. இரண்டுக்கும் நான்
ஆசிரியர் வேலை பார்க்கிறேன். சோம்பேறித்தனத்தின் விளைவா?
இடையிலே பல பகுத்தறிவிப் பிரசார நாடகங்கள் எழுதியிருக்கிறேன்.
சோம்பேறித்தனத்தின் விளைவா? சில நாடகங்களில் நானே வேஷம்
போட்டு நடித்திருக்கிறேன். சோம்பேறித்தனத்தின் விளைவா?
இரண்டு சினிமா கதைகள் எழுதியிருக்கிறேன், சோம்பேறித்தனத்தின்
விளைவா? பத்துப் பதினைந்து புத்தகங்கள் வேறு வெளிவந்திருக்கின்றன;
சோம்பேறித்தனம் தான் காரணமா? இதனிடையே பலமுறை பல பிரசாரக்
கூட்டங்களுக்கும் போயிருக்கிறேன், சோம்பேறித்தனத்தின்
விளைவா? இல்லையென்பது தானே பதில்! எதற்காக இதனைக் கூறுகிறேன்,
சோம்பேறி என்று எண்ண வேண்டாம், காரியமாற்றும் திறன் உண்டு.
சக்தி இருக்கிறது; என்பதைக் காட்டத்தான். வேலை செய்யும்
திறமையும், ஆற்றலும், ஆர்வமும் நிச்சயம் உண்டு. சமீபத்தில்
தோழர் குருசாமி அவர்கள், இளைஞர் முதியோர் பற்றி ஆராய்ச்சி
நடத்தி கிழவர்கள் திறமையைப் பற்றி பெரிதும் எழுதியிருக்கிறார்கள்.
நான் என்ன துள்ளி விளையாடும் பள்ளிப் பருவத்துப் பாலகனா?
அல்லவே, நாற்பது வயதை அடைந்தவன் தான். இளைஞனின் துடிதுடிப்பும்,
கிழவரின் பொறுமையும் காரியமாற்றும் கருத்தும் ஒருங்கே கொண்ட
வயதுதான். நாற்பதைக் கடந்தவன் ஐம்பதுக்கு உட்பட்டவன், அதாவது
இந்த பத்து ஆண்டைத்தான், இளமைக்கும் முழுமைக்கும் இடையேயுள்ள
காலம் என்று கூறுவர். பெரியார் தமது சுயமரியாதைக் கோட்பாட்டை
இந்தப் பத்து ஆண்டுகளில்தான்; அதாவது நாற்பதுக்கும் ஐம்பதுக்கும்
இடையே தான், அமைத்தார் என்னாலும் செய்ய முடியும், முறைப்படி
அவசியத்திற்கேற்ற வகையில்.
எந்த நலம் கெட்டுவிட்டது?
மற்றொரு காரணம் கூறப்படுகிறது. அதாவது நான் சுயநலத்துக்காகவே
இந்த ஏற்பாட்டை எதிர்க்கிறேன் என்று எனக்குத் திராவிடர்
கழகத்திலே இருந்தபோது, எந்த நலம் கெட்டு விட்டது? ஒன்றும்
கெடவில்லையே! நாடகம் எழுதாதே என்று தடுத்தாரா தலைவர். இல்லையே!
சினிமாவுக்குக் கதை எழுதாதே என்று கண்டித்தாரா பெரியார்,
என்றாவது? கிடையாதே! சுயநலமாயிருந்தால் எனக்கு அங்கு இருப்பதால்
என்ன கெட்டு விட்டது? ஒன்றும் கெடவில்லையே! சிற்சில சமயம்
தலைவர் போக்குப் பிடிக்காது இருந்திருக்கலாம். அவர் கருத்துகள்
எனக்குப் பொருத்தமற்றதாகத் தோன்றியிருக்கலாம். அப்போதெல்லாம்
கூட முடிந்தவரை ஒத்துழைக்கத் தான் செய்தேன்; சிற்சில சமயம்
நாசுக்காக பெருந்தன்மையாக ஒதுங்கியுமிருந்தேன். அரசியல்
துறவறம் பூண்டுமிருந்தேன் சில காலம். இன்று காரணமின்றி தூற்றப்படுகிறேன்!
கவலையில்லை; நேற்று நம்மை புகழ்ந்தவர் தானே, அவர்! இன்றுகூட
என் மனக்கண் முன்னே ஒரு காட்சி ஓடி வந்து நிற்கிறது. ஈரோட்டிலே
விடுதலை காரியாலயத்தில் நான் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த
காலம் அது; அப்போது விடுதலையில் சென்னை கார்ப்பரேஷன் பற்றி
ஒரு தலையங்கம் தீட்டினேன். “ரிப்பன் மண்டபத்து மகான்கள்”
என்பது அதன் தலைப்பு. அன்று மாலை நான் ஈரோட்டில் பெரியாரின்
மூன்றடுக்கு மாளிகையில், கடைசி மாடியில் உலவிக் கொண்டிருந்த
நேரத்தில் பெரியார் மூன்று மாடிகளையும் கஷ்டத்துடன் படியேறி,
கடந்து வந்து, என் முதுகைத் தட்டி அண்ணாதுரை! உன் தலையங்கம்
ரொம்ப நன்றாயிருந்தது. எனக்கு மிகவும் சந்தோஷம் என்று
வெகுவாக பாராட்டினார். இதைக் கேட்ட நான் ‘இதற்காக ஏன் இவ்வளவு
கஷ்டப்பட்டு மாடி ஏறி வரவேண்டும்? நான் சாப்பிடக் கீழே வரும்போது
சிரமமின்றிக் கூறியிருக்கலாமே இதனை என்று தெரிவித்தேன்.
அதற்குப் பெரியார், ‘என் மனதில் நல்லெண்ணம் தோன்றியது.
சந்தோஷப்பட்டேன். அதை உடனே கூறிவிட வேண்டுமென்று நினைத்தேன்.
ஏனென்றால் நான் பிறரைப் புகழ்ந்து பேசிப்பழகப்பட்டவனல்ல,
ஆகவே உடனே சொல்லி விடவேண்டுமென்று வந்து சொல்லிவிட்டேன்”
என்று சொன்னார். இந்த ஒரு சம்பவம் போதுமே எனக்கு ஆயுள்
பூராவும், அவரிடம் திட்டு வாங்கினாலும் பரவாயில்லையே. புகழ்ந்த
பிறகுதானே திட்டுகிறார். முதலிலிருந்து கடைசிவரை திட்டு
வாங்கிக் கொண்டு, இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்களே,
அதைவிட நான் மேல் லாப நஷ்ட கணக்குப் போட்டுப் பார்த்தேன்.
அவர் புகழ்ந்தது அதிகம், இகழ்ந்தது கொஞ்சம். எனவேதான் அவர்
திட்டுவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. நான் அவரிடம் வெளிப்படையாக
கொஞ்சம் அதிருப்தி தெரிவித்தது கோவை மாநாட்டில் தான்.
நான் கேட்டேன் திருவண்ணாமலையில் ஆச்சாரியாரைச் சந்தித்துப்
பேசிய இரகசியம் என்ன? கூறுங்கள் என்று வெளிப்படையாக கேட்டேன்.
இதைக் கூட நான் கேட்க முதலில் விரும்பவில்லை. ஆனால் நாட்டு
நிகழ்ச்சிகள் என்னைக் கேட்கும்படி வைத்துவிட்டன. என்னைக்
கண்ட பலர், ஏனப்பா! முன் ஆச்சாரியர் வந்தபோது கறுப்புக்கொடி
பிடித்தீர். ஜெயிலுக்கும் போனீர்கள். இப்பொழுது என்ன உங்கள்
தலைவர் இரகசியமாக சந்திக்கிறார் திருவண்ணாமலையில், என்று
கேலி செய்தனர். நையாண்டி செய்தனர். நகைப்புக்கு இடமாக இருந்தது
நிலைமை, இந்த நிலைமை தெளிவுபட, அதற்குப் பின் நான் அவரைச்
சந்தித்தது அந்த மாநாட்டில்தான் திருவண்ணாமலையில் என்ன இரகசியம்
பேசினீர்கள் என்று கேட்டேன். அதோடு நிற்கவில்லை, நடந்ததைச்
சொல்வது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கெடுதி என்று
தோன்றினால், சொல்லத் தேவையில்லை, சொல்ல வேண்டாம் என்றும்
அன்று, அங்கு, தெரிவித்திருக்கிறேன். சொல்லும்படி வற்புறுத்தவில்லை
என்றும் கூறினேன்.
|