தமிழ்! தமிழ்!
“என் சுவாமி! என்ன அபசாரம் செய்து விட்டேன்?”
“அபசாரம் செய்யவில்லையா? உனக்கு விசேஷ ஆணவம் பிடித்துவிட்டது.
எதற்கும், எப்போதும், தமிழ்! தமிழ்! என்று கூவுகிறாய்.
தமிழில் பேசு; தனித்தமிழைத் தேடு; தமிழிலே எழுது; தமிழில்
பாடு என்று கிளர்ச்சிகள் செய்கிறாய். தமிழர் நாகரிகம், தமிழர்
நிலை என்று பேசுகிறாய். தமிழ்நாடு என்று கேட்கிறாய். உன்
தொல்லை வளர்ந்து விட்டது.”
“இதுவா அபசாரம்? தமிழன் தமிழை எழுத்தில், எண்ணத்தில், இசையில்
காண, கேட்க விரும்புகிறேன். இது எப்படித் தவறாகும்?”
தமிழ் இசை ஏன்
“தமிழ் இசை ஏன்? இருக்கிற இசை போதாதா? இத்தனைக் காலமாக
இருந்து வந்த ‘சுஜனஜீவனா’ இனிமை ததும்பும் ‘சுனோசுனோ’வும்
இருக்கும் போது, தமிழ்ப் பாடல்கள் என்று வேறு ஏன் வேண்டும்?”
“தமிழனுக்குத் தமிழ்ப்பாடல் வேண்டாமா?”
“தமிழா, நீ இங்ஙனம், எதிலும் தமிழ், தமிழ் என்று பேசிக்
கொண்டே போகிறாய் அது எங்கு கொண்டுபோய்விடும் தெரியுமோ?
நீ குறுகி, கூனி குவலயம் அறியாத் தவளையாகி விடுவாய்.”
“இல்லையே, தமிழில் எழுதும்போது, இன்பம் காண்கிறோம். தமிழ்க்
கவிதை உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. தமிழ் இசை, நெஞ்சை
அள்ளுகிறது. தமிழில் இருக்கும் இனிமையை உண்ண நான் அவாவுவது
குற்றமாயின், நான் குற்றவாளிதான். ஆனால், உமது நோக்கம்
என்ன? நீர் தமிழனா? ஆமெனில், உமக்கேன் இந்தத் தமிழ்ப்பற்று
உண்டாகவில்லை? தமிழைக் கண்டதும் ஏன் பதைக்கிறீர்? அது எழுத்தாக
வந்தால் எதிர்க்கிறீர். இசையில் வந்தால் சீறுகிறீர். நீர்
ஆரியராதலால் எதிலும் ஆரியம் இருக்கப் பாடுபடுகிறீர். ஆரியத்தை
ஒழிக்க, தமிழர் எந்தத் துறையிலே பாடுபட முன்வந்தாலும் எதிர்க்கிறீர்.
இனி உமது எதிர்ப்பைக் கண்டு, தமிழன் தன் காரியத்தைக் கவனியாது
இருக்கப் போவதில்லை. தமிழா! உன் தோள் வலிமை, தரணியெல்லாம்
அறியாதோ! என்றதோர் இசை கேட்டேன். தடுக்க முடியாத பேராவல்
கொண்டேன். தமிழே விழைவேன். அதை வளர்க்கவே முயலுவேன்.”
இது ஊரார் பல்வேறு இடங்களில் உரையாடுவதன் சுருக்கம். தமிழர்
என்ற சொல் கிளப்பிவிட்ட எழுச்சி, எங்கெங்கு ஆரியம் தங்கித்
தொல்லை தருகின்றதோ, அங்கெல்லாம், அதனை அறுத்தொழிக்கக்
கிளம்பிவிட்டது. அது கண்டு ஆரியர் தமது ஆதிக்கம் அழிவுபடுவதைத்
தடுக்க, இன்று அண்டமுட்டக் கூக்குரலிட்டுப் பார்க்கின்றனர்.
நிலவொளியைக் கண்டு குக்கல் குலைக்குமாம்!
தமிழ் நாட்டிலே தமிழ்ப்பாடல் கிடையாது. பாட வேண்டுமானால்,
தமிழ்ப் பாடகர்கள் கூச்சப்படுகின்றனர். தியாகய்யரின் கீர்த்தனங்களென்ன,
சாமா சாஸ்திரியார் சுருதிகளென்ன, மற்றுள்ள தெலுங்குக் கீர்த்தனங்களைப்
பாடினால் சங்கீத விற்பன்னர்கள் என்று பெயர் கிடைக்கும்.
தமிழில் என்ன பாடுவது! மளமளவென்று ஆறு தியாகய்யர் கிருதிகள்
பாடிவிட்டு ‘சுரம்’ இரண்டு கிருதிகளுக்குப் போட்டுவிட்டு,
ராகமாலிகையை ரசமாகப் பாடி விட்டு ஜாவளிக்குப்போய், கடைசியில்
இரண்டு தமிழ்த் துக்கடாவைக் கிடுகிடுவெனப் பாடிவிட்டு, “நீ
நாம ரூபகு” என்று மங்களம் பாடிவிடுவதைச் சங்கீத வித்வான்கள்
சம்பிரதாயமாக்கி விட்டனர். பெரிய வித்வான் என்பதற்கு இலட்சணமே
இது தான் என்று கருதிவிட்டனர். இதனை எதிர்த்து யாராவது தமிழ்ப்பாட்டுப்
பாடக்கூடாதா என்றால், நாடகமேடைபோல் ஆகிவிடுமே என்று நையாண்டி
செய்வார். இது தமிழ்நாட்டில் பல காலமாக இருந்து வரும் வாடிக்கை.
புரிந்து கொள்ள வேண்டாமா?
இசை, இன்பத்தைத் தரவேண்டுமானால், அதைக் கேட்போரின் உள்ளத்தைக்
கொள்ளை கொள்ள வேண்டுமானால், யார் முன்னால் பாடல் பாடப்படுகிறதோ,
அதை அவர்கள் புரிந்துகொள்ளக் கூடியதான மொழியில் இருக்க
வேண்டும். இது அறிவுத் துறையில் அரிச்சுவடி! இதனை ‘ஆரிய
மேதாவிகள்’ மறுக்கின்றனர்! என்ன அறிவீனம்!
நீக்ரோவின் நடனத்தைக் காண்கிறோம். கண்டுவிட்டு நகைக்கிறோம்.
ஆனால் நீக்ரோவுக்கு நெஞ்சு இழைகிறது. நீக்ரோ நடனத்தைக்
கண்டு! ஏன்? அதனைப் புரிந்து கொள்கிறான்.
நேற்று சித்தூர் பாடினார் அருமையாகப் புஷ்பராகத்தை ஜொலிக்கச்
செய்து என்று கூறினால், புஷ்பராகம் என்று ஒரு ராகம் இருப்பதா
எண்ணிக் கொள்ள எத்தனையோ பேர்கள் உண்டு. அது அவர்கள் குற்றமல்ல;
வராகம் என்று இன்னொரு ராகம் இருப்பதாக நம்பினாலும் நாம்
ஆச்சரியப்படுவதில்லை. ராக விஷயங்கள், மக்களில் நூற்றுக்கு
எத்தனைப் பேருக்குத் தெரிய முடியும்? கருப்பையா என்பதற்குச்
சுப்பையா என்று கையொப்பமிடும் பேர்வழிகள் நிரம்பியுள்ள
நாட்டிலே நாம் இருக்கிறோம்.
கச்சேரிகளுக்குச் சென்று திரும்பியவர்கள், இன்னின்ன பாடல்கள்
இன்ன ரசத்துடன் பாடப்பட்டன என்பதைப் பேசுவதைவிட மிருதங்கக்காரரின்
உச்சிக்குடுமி இத்தனை முறை அவிழ்ந்துவிட்டது; வித்துவான்
மூன்று முறை பால் குடித்தார், பிடில் வாசிப்பவரின் முகம்
சில சமயங்களிலே மாருதி வேடமாயிருந்தது என்று; இவைகளை அதிகமாகப்
பேசுவதைக் கேட்கிறோம். காரணம், அவர்கள் கேட்ட பாடல்களில்
பல அவர்களுக்குப் புரிவதில்லை.
பெரும்பாலும் தியாகராஜ கீர்த்தனங்களைப் பாடுகிறார்கள். அதிலே
அடிக்கடி ராமா ராமா என்று வருவதைத் தெரிந்து கொண்டிருப்பார்களே
ஒழிய, அதன் கருத்தை அறிந்து கொண்டவர்கள் அதிகம் பேர் இருக்க
முடியாது. தமிழ்நாட்டிலே தெலுங்குக் கீர்த்தனங்களுக்குப்
பொருள் விளங்க முடியுமா? ஆந்திர நாட்டிலே ‘அரவம்’ தெரிகிறதா?
ராஜா சர் செய்த பேருதவி
எனவே, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியால் அவர்கள் தமிழோடு
இசை பாட மறந்தவர்களுக்குத் தமிழ்ப்பாடல்கள் பாட ஓர் நல்ல
சந்தர்ப்பத்தை உண்டாக்கி வைத்தார். நல்லதோர் தொகையை நன்கொடையாக
ஒதுக்கிவைத்து, தமிழ்ப் பாடல்கள் இயற்றவும், பாடவும் ஆர்வம்
வர ஒரு கண்டார். அதற்காகக் கூடிய சிதம்பரம் மகாநாட்டிலே
இசை வல்லோர் கூடித்தமிழ்ப் பாடல்களே பெரும்பாலும் பாடப்பட
வேண்டும் என்று தீர்மானித்தனர்.
இசையில் ஆர்வம் புகுந்து இழுக்குச் செய்வதைத் தடுக்க, தமிழ்நாடு
தமிழ்ப்பாடல் கேட்பதைத் தர, கொடை வள்ளல் ராஜா சர் அவர்கள்
செய்த இந்த பேருதவிக்குப் பார்ப்பனர்கள் எதிர்ப்புக் காட்டுகிறார்கள்.
தமிழரின் எண்ணம் ஈடேறச் செய்வது கண்டு சீறுகின்றனர், தெலுங்குக்கீர்த்தனங்களுக்கும்,
இந்துஸ்தானி துக்கடாக்களுக்கும் வக்காலத்து வாங்கிக் கொண்டு
வாதாடுகின்றனர். தமிழர் மறுமலர்ச்சி கண்டு ஆத்திரமடைந்து
ஆர்ப்பரிக்கின்றனர். ‘இந்து’ பத்திரிகை இசையில் தமிழ்புகுந்து
கண்டு, குட்டி தலையங்கமெழுதி குறும்புத்தனமாகக் கண்டிக்கத்
துணிந்துவிட்டது.
ஆரியரின் இந்தி எதிர்ப்புக் கண்டு தமிழர் அஞ்சத் தேவையில்லை.
தமிழ்நாட்டிலே தமிழே இருத்தல் வேண்டும். தமிழருக்குத் தமிழ்
இசையே தேவை. அதுவே அவர்களுக்கு இன்பத்தைத் தரும் பார்ப்பனரின்
பிழைப்பு பாதிக்கப்படும் என்று பதைத்துப் பயன் இல்லை. ஆரியத்தை
இலக்கியம்; எண்ணம், இசை முதலிய எல்லாத் துறைகளிலுமிருந்து
விரட்டி ஒழித்தால் தான் தமிழர் தமிழராக வாழ முடியும். ஆகவே
தமிழர்கள் இந்த ஆரிய எதிர்ப்பைக் கண்டு தளராமல் தனிழ் தமிழ்,
தமிழ் இசை ஆகியவற்றிற்கு உழைத்துத் தமிழ்நாடு தனி நாடாவதையும்
கண்டு களித்து வாழும்வரை உழைக்க முன்வர வேண்டும்.
இதற்குமா எதிர்ப்பு?
தமிழ் வளர்ச்சி, தமிழர் முன்னேற்றம் என்ற சொற்களைக் கேட்டால்
போதும், உடனே ஒரு கூட்டத்தார் மற்ற மொழிகளுக்குக் கேடு;
மற்ற வகுப்பினருக்குத் தீங்கு என்று நினைத்துக் கொள்ளுகிறார்கள்.
அதனால் உடனே இவைகளுக்கு எதிர்ப்புகளுடைய வீபரீத உணர்ச்சி
காரணமாகவே, மொழிச் சண்டை, வகுப்புச் சண்டை நமது நாட்டில்
வலுத்து வருகின்றன. உண்மையிலேயே இத்தகைய நிலை ஏற்படுவதற்கு
நாம் வருந்துகிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒரு
மகாநாடு நடைபெற்றது. தமிழ் நாட்டில் உள்ள புகழ்பெற்ற இசைவாணர்கள்
இசைக் கலை அன்பர்கள், தமிழன்பர்கள், அனைவரும் அங்குக் கூடினர்.
நான்குநாட்கள் தமிழிசை கச்சேரிகள் நடத்தினர். தமிழிசையைப்
பற்றி பலர் பேசினர். அம்மாநாட்டில் ஒரு சிறந்த முடிவும்
செய்யப்பட்டது.
தமிழ் வளர்ச்சியில் நல்லகாலம்
“சங்கீதப் பள்ளிக்கூடங்களில் தமிழ்ப்பாட்டுக்களையே சொல்லிக்
கொடுக்க வேண்டும்; சபைகளில் தமிழ்ப் பாட்டுக் களையே பாடவேண்டும்”
என்று அம்மகாநாட்டினர் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி வைத்தனர்.
இத்தீர்மானத்தை எல்லா இசைக் கலைவாணர்களும் ஒப்புக் கொண்டனர்.
நமது நாட்டுப் பத்திரிகைகள் பலவும், இசைத் தமிழ் வளர்ச்சிக்கு
வந்திருக்கும் நல்ல காலத்தைப் பற்றி நாவாரப் புகழ்ந்தன.
தமிழ்க் கலை வளர்ச்சியிற் கருத்துடையவர்கள் அனைவரும் உள்ளங்
குளிர்ந்தனர். இத்தகைய மகாநாட்டுக்குக் காரணமாக இருக்கும்
அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனர் செட்டிநாட்டு அரசர் சர்
அண்ணாமலைச் செட்டியாரவர்களைப் பாராட்டினர். அவருடைய அரும்பெரும்
முயற்சிக்கு வாழ்த்துக் கூறினர்.
தமிழில் இசைப் பாடல்கள் இயற்றுவதற்குப் பரிசளிப்பதற்காகவும்,
அவற்றைப் பாடுவோரைப் பாராட்டு வதற்காகவும் செட்டிநாட்டு
அரசர் அவர்கள் பெருந்தொகையை நன்கொடையாக அளித்துள்ளனர்.
இச்சிறந்த வேலையைத் தனது செல்வப் பிள்ளையாகிய அண்ணாமலைப்
பல்கலைக் கழகத்தின் மூலமே செய்வதற்கு முன்வந்தார்.
முத்தமிழ்
தமிழ் மொழியே, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்று
முப்பிரிவையுடையது. இவற்றுள் இசையென்பது இயற்றமிழிலும் உண்டு;
நாடகத் தமிழிலும் உண்டு; தமிழே இசையுருவாக அமைந்தது. இசையே
தமிழில்தான் முதன்முதலில் தோன்றியதென்பது பல தமிழாராய்ச்சியாளர்களின்
முடிவு. தமிழாராய்ச்சியுடைய இசைவாணர்களுடைய முடிவும் இதுதான்.
இத்தகைய இசைத்தமிழ் இடைக்காலத்தில் குன்றிவிட்டது. இசைவாணர்கள்
பலர் தமிழ்ப் பாடல்கள் பாடுவதே அவமானமெனக் கருதியிந்தனர்.
பொருள் விளங்காத பாடல்களை பாடி வந்தனர்.
ஆனால், பல ஆண்டுகளாகப் பல தமிழன்பர்கள் இசைத்தமிழ் வளர்ச்சியடைய
வேண்டுமெனக் கூறி வந்தனர். ஒவ்வொரு சங்கீத மகாநாடுகளிலும்
இதுபற்றிப் பேசப்பட்டது. இம்முயற்சி காரணமாக இசைவாணர்கள்
பலரும், சபைகளில் தமிழ்ப் பாடல்கள் பாடவும் தொடங்கினர்.
அப்பாடல்களை இசைக் காதலர்கள் சுவைக்கவும் தொடங்கினர். தமிழ்ப்
பாடல்களைத் தமிழ் மக்கள் சுவைக்கின்றனர் என்பதை அறிந்தவுடன்,
இசைவாணர்களுக்கும் தமிழ்ச் ‘சாகித்யம்’ பாடுவதில் ஊக்கம்
வளர்ந்து வந்தது.
அண்ணாமலை நகரில், பல்கலைக் கழகத்தில் இசைவாணர்களின் கூட்டத்தில்,
தமிழன்பர்களின் ஒத்துழைப்பின்பேரில், செய்யப்பட்ட முடிவு
இசைவாணர்களுக்கு ஊக்கமளிக்கும்; இசைக்காதலர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும்!
இதில் ஐயமில்லை.
அறிவுக்குப் பொருந்துமா?
ஆனால் ஒரு சிலர், அண்ணாமலை நகரில் செய்யப்பட்டிருக்கும்
அருமையான முடிவைக் குறைகூறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள்
தமிழிலேயே இசைபாடுவது என்று தொடங்கினால் கர்நாடக சங்கீதம்
அழிந்து போய்விடும்; தியாகராஜ கீர்த்தனங்கள் மறைந்து போய்விடும்;
தமிழில் கர்நாடக சங்கீதத்தை அமைக்க முடியாது; என்னும் வாதத்துக்கு,
நம் மாகாணப்பத்திரிகையாகிய ‘இந்து’வும் ஆதரவளித்து வருகிறது.
கர்நாடக சங்கீதம் ஒருநாளும் அழியாது. கர்நாடக சங்கீதத்தை
அமைத்துப் பாடக்கூடிய பாடல்கள் தமிழில் ஏராளமாக இயற்றிக்
கொள்ளலாம். இதற்குச் செட்டிநாட்டு அரசரின் நன்கொடை பேருதவி
செய்யும். தமிழ்நாட்டில் பண்டுதொட்டு நிலவி வரும் சங்கீதம்
கர்நாடக சங்கீதமாகும். ஆகையால் தமிழ்ப் பாடல்கள் பாடுவதால்
கர்நாடக சங்கீதம் அழிந்துவிடும் என்பது தமிழரின் தன்மையை
அறியாதவர் கூற்று. தியாகராஜ கீர்த்தனைகள் மறைந்துவிடுமென்று
கூறுவதும் தவறு. அவற்றையும் இசைவாணர்கள் பாடிக்கொண்டுதான்
இருப்பார்கள். ஆதலால் கர்நாடக சங்கீதம் போய்விடும். தியாகராஜ
கீர்த்தனை மறைந்துவிடும் என்று காரணங்கூறி, தமிழிசையை வளர்க்கும்
முயற்சிக்குத் தடை செய்வது சிறிதும் அறிவுக்குப் பொருந்தாக
செயலேயாகும்.
தமிழர்கள், தமிழின் உயிர்ப்பகுதியாக இசைத்தமிழை வளர்க்கவே,
இம்முயற்சியில் தலையிட்டிருக்கின்றனர். இம்முயற்சி செட்டிநாட்டு
அரசரின் அறச் சிந்தையாலும், நன்கொடையாலும் நிறைவேறத் தொடங்கியிருக்கிறது.
இனி இம்முயற்சியை யாரும் தடுக்க முடியாது. இம்முயற்சியை
பொதுமக்களும் ஆதரிக்கின்றனர். இசைவாணர்களும் போற்றுகின்றனர்.
தமிழன்பர்களும் பாராட்டுகின்றனர். ஆதலால் இசைத் தமிழ் இனி
வளர்ச்சியடையும் என்பது உறுதி.
அன்றியும், அண்ணாமலை மகாநாட்டில் முடிவு கண்டு, சிலருக்கு
ஆத்திரம் உண்டான காரணம் விளங்கவில்லை. அங்கு வேற்றுமொழிக்கோ,
கலைக்கோ எதிரான முடிவு ஒன்றுமே செய்யப்படவில்லை அங்குக்
கூடியிருந்தவர்களுக்கு அத்தகைய உணர்ச்சி, எண்ணம் சிறிதுகூட
இருந்ததாகத் தெரியவில்லை.
அண்ணாமலை மாநாட்டுத் தீர்மானத்தில் தமிழ்ப் பாடல்களைப் பாடவேண்டும்.
என்றுதான் தீர்மானம் செய்திருக்கின்றனர். தெலுங்குப் பாடல்கள்
கூடாது. தியாகராஜ கீர்த்தனைகளை பாடக்கூடாது என்று சொல்லவில்லை.
தெலுங்கின், மீதோ, தியாகராஜ கீர்த்தனத்தின் மீதோ, எந்தத்
தமிழன்பர்களுக்கும் தமிழிசைப் புலவர்களுக்கு வெறுப்பில்லை;
பகைமை இல்லை.
செட்டிநாட்டு அரசர் வகுப்புவாதக் கருத்துடன் இக்காரியத்திற்கு
உதவி செய்யவில்லை; அரசியற் கருத்துடனும் இம்முயற்சிக்குத்
துணைசெய்யவில்லை. செட்டிநாட்டு அரசரை நன்றாக உணர்ந்தவர்கள்,
அவரால் அதிக உதவிபெற்று வருகிறவர்கள் எந்த வகுப்பினர் என்பதை
அறிவார்கள். அவர் எந்த அரசியல் கட்சியிலும் கலந்துகொள்ளவில்லை;
அரசியலை விட்டு விலகியே இருக்கிறார். ஆதலால் தமிழிசையை வளர்க்க
வேண“டும் என்னும் அவருடைய நோக்கத்திற்கு, வகுப்பு வெறுப்பையோ,
அரசியலையோ காரணமாகக் கூறமுடியாது.
தமிழ்க் கலை விரோதிகள்
தமிழர்கள் தமிழ்ப் பாடல்கள் வேண்டுமென்று கேட்பது பிறமொழியின்
மீது வெறுப்பாகுமா? தமிழில் நல்ல பாடல்கள் இயற்ற முயல்வது
பிற மொழிக்குச் செய்யும் கெடுதியாகுமா? தமிழ்க்கலையை வளர்ப்பதற்குத்
தமிழர்களும், தமிழன்பர்களும் செய்யும் முயற்சிக்குக் கூடவா
தடை விளைவிக்க வேண்டும்? தமிழ்க் கலை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை
போடுகிறவர்களைத் தமிழ்ப்பகைவர்கள், தமிழ்க் கலை விரோதிகள்,
தமிழரின் எதிரிகள், என்று கூறத்தொடங்கினால், அதை இல்லை
என்று கூறமுடியுமா?
முஸ்லீம்கள் தங்கள் கலைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறவில்லையா?
அவைகளின் தனித்தன்மையை அழியாமற் காப்பாற்ற வேண்டும் என்பதையும்,
ஒருகாரணமாகக் காட்டித் தானே அரசியலிலும் பாதுகாப்புக் கேட்கின்றனர்.
அவர்கள் தங்கள் கலைகளையும் அவற்றின் கருத்துக்களையும் காப்பாற்ற
முயல்வதை, யாரேனும் குற்றமென்று கூற முடியுமா? தடுக்க முடியுமா?
தமிழ்க் கலை வளர்ச்சிக்கு மாத்திரம் ஏன் முட்டுக்கட்டை போட
வேண்டும்? ஏன் வகுப்பு வாதம் கற்பிக்க வேண்டும்?
அண்ணாமலை மகாநாட்டுத் தீர்மானம் ஒரு வகுப்பினரால் நிறைவேற்றப்பட்டதன்று;
ஒரு கொள்கையினரால் நிறைவேற்றிய தன்று; பல வகுப்பினரும்
பல கொள்கையினருமே கூடிச் செய்த முடிவுதான் அது. பார்ப்பனர்,
பார்ப்பனர் அல்லாதோர் அனைவரும் அம் மகாநாட்டிற் கலந்து
கொண்டனர். அம்மகாநாட்டின் முடிவைப் பற்றி குறைகூற, வீண்
வகுப்புவேற்றுமையையும், மொழிவேற்றுமையையும் கிளப்பி விடுவதற்குக்
காரணம். நமக்கு விளங்கவில்லை. “இந்து பத்திரிகை கூட இந்த
வீண் கிளர்ச்சிக்கு ஆதரவளிப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இம்மாதிரியே தமிழ்க் கலை வளர்ச்சிக்காகச் செய்யப்படும் எல்லா
முயற்சிக்கும், ஒரு கூட்டம் தடை செய்து கொண்டிருந்தால்,
இறுதியில் தமிழல் நிலை எப்படி முடியும்? தமிழ்க் கலை வளர்ச்சிக்கு
உதவி செய்ய வேண்டியதே தமிழன்பர்கள் கடமை; தமிழ் நாட்டில்
உள்ளவர்கள் கடமை.”
தாய் மொழியிலேயே எல்லாம்
தமிழ்நாட்டைப் போல் வேறு எந்த நாட்டிலும் அந்த நாட்டின்
மொழியல்லாத வேறு மொழியிற் சங்கீதம் பாடுவதைக் கேட்க முடியாது.
ஒவ்வொரு நாட்டினரும், தங்கள் தங்கள் தாய் மொழியிலேயே எல்லாக்
கலைகளையும் வளர்ச்சி செய்து வருகின்றனர். இல்லாத கலைகளையும்
புதிதாக ஆக்கி வருகின்றனர். தமிழரைப் போலத் தாய்மொழிக்
கலை உணர்ச்சியற்றவர்களை எந்த நாட்டிலும் காண முடியாது.
இப்பொழுதுதான் தமிழ்க்கலையுணர்ச்சி, தமிழரிடம் புகுந்திருக்கிறது.
பல வழிகளில் தமிழ்க் கலைகளை வளர்க்க முயன்று வருகின்றனர்.
இம்முயற்சியில் இசைக்கலை வளர்ச்சியும் ஒன்று. இசைக்கலை தமிழுக்குப்
புதிதன“று, தமிழோடு பிறந்தது. தமிழோடு வளர்ந்தது. இன்றும்
தமிழோடு இணை பிரியாமல் இயைந்து கிடக்கின்றது. இவ்வுண்மையை
இசைவாணர் மறந்தனர். ஆதலால் இடைக்காலத்தில் மழுங்கிவிட்டது.
அதை விளக்கவே அண்ணாமலைப் பல்கலைக் கழகம் முனைந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் கலைவளர்ச்சித் துறையிலும், வீண் பகையையும்
வெறுப்பையும் கிளப்ப வேண்டாமென்று இக்கூட்டத்தார்க்கு எச்சரிக்கை
செய்கின்றோம்.
இதற்கு ஈடாகுமா?
வளைந்து வளைந்தோடும் அந்த அருவி, வெண்மணலைத் தழுவிக் கொண்டு,
தழதழத்த குரலில் பாடுவது கேளீர்! எந்தப் பாட்டு இதற்கு ஈடாகும்.
செடியும் கொடியும், தளிரும் இலையும், மலரும் கனியும், ஆடும்
காரணம் அறியீரோ! அதோ, வீசும் காற்றுடன் கலந்து வரும் இசை
கேட்டே, அவைகள் ஆடுகின்றன. நடன சுந்தரிகள் போல!
பச்சிளங்கன்று, தாயைக் கூப்பிடும் குரல் கேட்டீரோ? அதிலுள்ள
இசை இன்பமே தனியானது!
போர் வீரன், தனது உடலில் கவசமணிந்து, வாளை உரையினின்றும்
எடுக்கிறானே, அச்சமயம் கிளம்பும் ஒலி, வீர உள்ளம் படைத்தோர்க்கு
இசை!
இம்மட்டுந்தானோ! குழலா இனிது? யாழா இனிது? மக்களின் மழலையை
இனிது. ஈடு எதிர் இல்லாத இசையாகும் இது!
இங்ஙனம் மக்கள் இசை இன்பத்தை ஓடும் அருவியில், வீசும் காற்றில்
விளையாடும் கன்றின் குரலில், கொஞ்சும் குழந்தையிடம், வீரரின்
செயலில், காதலியிடம் காண்பர்! களிப்பர்!!
மலருக்கு மணம்
இசை இன்பம், இயற்கையிலும், தமது அன்புக்குரிய இடங்களிலும்
இருக்கக் காண்பர். உள்ளத்தில் களிப்புக் கொள்வர்! பிறகு
ஓடும் அருவி பாடினது என்ன? எனின், கூற இயலாது. இனிமை இருந்தது
என்று மட்டுமே சொல்ல இயலும். களிப்புடன் கருத்துக்கு விருந்தும்
இருக்க வேண்டுமாயின், இசை இன்பத்தோடு பொருள் இன்பம் இழைந்து
குழைந்து இருத்தல் வேண்டும். காதுக்கு இனிமையும், கருத்துக்கு
இனிமையும் தேவையெனில், எம்மொழியில் இசை பாடப்படுகிறது என“பதைக்
கவனித்தாக வேண்டும். இது பாடலைப் பொறுத்தமட்டில், இன்றியமையாததாகும்.
இசைக்கருவிகள், நாதத்தைத் தரும். மொழிப் பிரச்சனை அங்கு
இல்லை. ஆனால் வாய்ப்பாட்டுக்கு மொழிப் பிரச்சனை முக்கியம்.
அவர் பாடுகிறார் என்றால், “சஹானா ராக ஆலாபனம் செய்தார்,
பிறகு இந்த கிருதியைப் பாடினார். அதிலே ராம சௌந்தர்யம்
அழகாகக் கூறப்பட்டது” என்றுதான் அக்கிரகாரமும் பேசும். சாஹித்தியம்,
சங்கீதத்துக்கு. மலருக்கு மணம் போன்றது. அந்த மணம் நறுமணமாக
இருக்க வேண்டும் என்று தமிழர் கூறுகின்றனர். இது தகுமா?
இது முறையா என்று ஆரியர் ஆர்ப்பரிக்கின்றனர். ஒடிந“த உள்ளங்களை
ஒன்றாக்குவிக்கும் இசை விஷயமாக இன்று, எழும் கிளர்ச்சி இதுவரை
ஒடியாதிருக்கும் உள்ளங்களையும் ஒடித்துவிட முற்பட்டு விட்டது.
ராஜா சர் அண்ணாமலையார் ஆற்றியுள்ள அருந்தமிழ்த் தொண்டை,
இங்ஙனம் திரித்துக் கூறி, அவரது முயற்சியைக் குலைப்பது கண்டு,
நாம் மனங்கலங்கவில்லை. கொதிப்படையவு மில்லை. மாறாக களிக்கிறோம்!
ஏனெனில், வகுப்புவாத நோக்கமற்று, இசைக்கும் தமிழுக்கும்
அவர் தொண்டாற்றியதை ஆரியர் எதிப்பதன் கருத்தை அவர் உணர
இஃதோர் வாய்ப்பு! அதனை அவர் உணர்ந்து, அவரும் ஓர் வகுப்புவாதியாகிவிட்டால்
அக்கிரகாரத்தின் ஆதிக்கம் அழிவது திண்ணம். ஆகவே, இன்று ஆரியர்
கிளப்பும் எதிர்ப்பு, அவர்களுக்கே கேடு தரத்தான் போகிறது
என்று நிச்சயமாக நம்புகிறோம். அந்த நம்பிக்கை நமது மனதில்
களிப்பை ஊட்டுகிறது.
'
அறைகூவி அழைக்கின்றோம்
“கூவுங்கள் ஆரியர்களே! கொக்கரியுங்கள்! தமிழ்மீது மோதிக்
கொள்ளுங்கள்; தமிழரின் முயற்சிக்கெல்லாம் தடை செய்யுங்கள்.
தமிழ் மொழியைத் தழைக்க விடாதீர்கள்; தமிழிலே வடமொழியை
ஆங்கிலத்தை, இந்தியைக் கலக்கிக் குழப்புங்கள் தமிழன், தன்னைத்
தமிழன் என்றுரைத்தால், சீறுங்கள், தமிழ் மொழியில் இசை இருக்கட்டும்
என்றால், எதிர்த்துப் பேசுங்கள். கலைச்சொற்களுக்கு வடமொழியே
இருக்க வேண்டும் என்று வாதாடுங்கள். தமிழனைத் தாழ்ந்த ஜாதி
என்று சொல்லுங்கள். கூட இருக்கக் கூடாது என்று கட்டளையிடுங்கள்.
கோயிலிலும் குளத்திலும் இழிவுப்படுத்துங்கள். சாப்பாட்டு
விடுதிகளிலும், சாக்கடை இடத்தையே தமிழருக்குத் தாருங்கள்.
உமது ஆணவச் செயலை, திமிர் வாதத்தை, ஆரியத்தை நாம் வரவேற்கிறோம்.
ஆம்! உமது எதிர்ப்பு வளர வளரத்தான், தமிழனின் உள்ளத்தில்
வேதனை பிறக்கும். வேதனை வளர்ந்தால் அவன் வேல்பட்ட புலிபோலச்
சீறுவான். அந்தச் சீற்றம் கிளப்பிவிட்டால், நாங்கள் ‘ஜெயமுண்டு
பயமில்லை மனமே’ என்று பாடும் காலம் பிறக்கும்! ‘தமிழ் நாடு
தமிழருக்கே’ என்ற எண்ணம், உருவமாக அமையும் காலம் தோறும்.
சேரனும், சோழனும், பாண்டியனும் இறந்துபடினும், அவர்கள்
காத்தாண்ட செந்தமிழ்நாட்டில், தமிழராட்சி தோன்றும். ஆகவே
ஆரியர்களே ஆரம்பியுங்கள் உங்கள் போரை” என்று நாம் ஆரியரை
அறைகூவி அழைக்கின்றோம்.
தமிழர் ஆட்சி
ஆனால் தமிழ் இசைப்பற்றிப் பேசும்போது சொத்தைக் காரணங்களை
ஆரியர்கள் கூறுகின்றனர். அது நமக்குப் பிடிக்கவில்லை. அறிவு
படைத்த யாருக்கும் பிடிக்காது. தமிழ் இசை என்று ஆரம்பிக்கும்
தமிழன், வேறு எங்குமே தமிழ் ஆட்சிதான் தேவை என்றல்லவா கூறத்
தொடங்குவான். அது நமக்கன்றோ ஆபத்தாக முடியும் ஆகவே, முளையிலேயே
கிள்ளுவோம். தமிழ் உணர்ச்சியைத் தலைதூக்க ஒட்டாது அடிப்போம்
என்பதே ஆரியரின் நோக்கம். தமிழகத்தின் தமிழ் உணர்ச்சி,
தமிழர் என்ற உணர்ச்சியையும், தமிழ்நாடு தனிநாடு என்ற உணர்ச்சியையும்
வளர்த்துவிடும் என்ற அச்சம் ஆரியரைப் பிடித்துக் கொண்டது.
அதனை வெளிப்படையாகப் பேச வெட்கி, “இசையிலே மொழிப்போர்
என்ன? தியாகய்யர் என்னாவது?” சியாமா சாஸ்திரிகள், தீட்சிதர்
கிருதிகள், என்னாவது? என்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.
அண்ணாமலை நகரில் கூடினோர், மேற்படி கிருதிகள் அழிந்தொழிய
வேண்டும் என்று கூறினாரில்லை. அவைகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டிலே,
தமிழ் இசை இருக்கட்டும். இதற்கு ஆதரவு தேடுவோம் என்று கூறினர்.
இதற்கும் எதிர்ப்பு இருக்கிறதென்றால், பிறகு தமிழகத்துக்குத்
தேவையில்லா தவைகளைத் துரத்தும் வேலை, மும்முரமாக நடக்கும்
என்பது திண்ணம்.
தமிழில் பாட்டு இல்லையா?
“சுதேசமித்திரன்” இதுபற்றி எழுதுகையில், “நமது சங்கீத வித்வான்கள்
கச்சேரிகளில் தமிழ்ப்பாட்டுக்களை ஏன் அதிகமாகப் பாடுவதில்லை;
கச்சேரிகளை கட்டத் தகுந்த போதிய பாட்டுக்கள் தமிழில் இல்லாத
தோஷந்தான்” என்று எழுதுகிறது.
தமிழ்நாட்டிலே, தமிழர் முன்னால் பாட, போதிய பாட்டுக்கள்
தமிழில் இல்லை! இதைவிட வெட்கக்கேடான நிலைமை வேறு இருக்க
முடியுமா என்று கேட்கிறோம். தமிழனின் தன்மானம் இருக்கும்
விதம் இது!
அவனது நாட்டில் அவன் மொழியில் பாட்டு இல்லை;
ஜெர்மன் நாட்டிலே ஜெர்மன் மொழியில் பாடல்கள் உண்டு!
நீக்ரோ நாட்டிலே நீக்ரோவின் மொழியில் பாட்டு உண்டு!
வங்காள நாட்டிலே, வங்க மொழியிலே பாட்டுண்டு.
தமிழ் நாட்டிலே, தமிழ் மொழியிலே போதுமான அளவு கச்சேரிகளைக்கட்டத்
தகுந்த பாட்டு இல்லை; இது ஏன்? மித்திரன் கூறுமா? என்று
கேட்கிறோம். தமிழர் நாடோடிக் கூட்டமா? இல்லை! பழங்குடி
மக்கள்! இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள்? தமிழர் அறிவுத்துறையிலே
பழக்கமற்றவர்களா? இல்லை. பலப்பல இனத்தார் பக்குவமடையா முன்னம்,
அறிவுத் துறையில் மேலோங்கி விளங்கியவர்கள்; தமிழர் இசை
அறியாதவரா? இல்லை. அவர்களின் மொழியே இயல், இசை நாடகம் என்ற
மூன்று முத்துக்கள் கொண்டது. பின்னர் ஏனய்யா! தமிழ்நாட்டிலே
போதுமான தமிழ்ப் பாட்டுக்கள் இல்லையென்கிறீர்கள் என்று,
மித்திரனையும் மற்றோரையும் கேட்கிறோம்.
மித்திரன் ஆத்திரம்
குருடன் காணமாட்டான்; செவிடன் கேட்க இயலாது; முடவன் ஓடமாட்டான்,
அதுபோல், தன்மானத்தைப் பறிகொடுத்த இனம், தன் கலை, தன்
மொழி, தன் நிலை குலைந்து தவிக்கும். அத்தகைய நிலை தமிழனுக்கு
ஏற்பட்டால்தான், தமிழிலே பாட்டு இல்லை என்று கூறும் கேவலமான,
கொடிய, இழிவான நிலையிலே இருக்கவேண்டி வந்தது. மித்திரன்
கூறியுள்ளதை மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.
பண்டைப் பெருமை வாய்ந்த தமிழகத்திலே தமிழில் பாடல்கள் கிடைத்தன;
ஆகவே, விழியற்றவனுக்குத் தடி துணையாவது போல் வேற்று மொழியிலே,
இசை பாடக் கேட்கிறான்.
இந்த நிலைமையை மாற்றி, மற்ற எந்நாட்டிலும் உள்ளது போலத்
தமிழ்நாட்டிலே தமிழ்ப்பாட்டுக்கள் வளர, வழிசெய்யத் தமிழ்
வள்ளல் முற்படுகிறார். அதை மித்திரனும் அவரது மித்திரர்களும்
கெடுக்க முற்படுகின்றனர் அது ஏன்?
ஆரிய மித்திரர்கள் எண்ணம் அதுவல்ல! தமிழ் நாட்டிலே தமிழ்ப்பாடல்கள்
இல்லை. வேறு பாடல்கள் உள்ளன. அதைக் கொண்டு திருப்தி அடையுங்கள்
என்பது ஆரியரின் வாதம்.
தமிழ் நாட்டிலே தமிழ்ப்பாடல்களை வளர்க்க வேண்டுமென்றால்,
தமிழ்ப்பாடல்கள் பாடுவோருக்கு ஆதரவு தருவதாகவும், தமிழ்ப்
பாடல்களைப் பாடும்படி ஊக்குவிக்கக் கழகங்கள் இருந்தால் முடியுமா?
வெறும் ஏட்டில் எழுதி வைத்தால் முடியுமா? எனவே, அண்ணாமலை
நகரில் கூடினோர், சங்கீதக் கழகங்களில் தமிழ்ப்பாட்டுக்களைத்தான்
அதிகமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும், சங்கீத
சபைகளில் பெரும்பாலும் தமிழ்ப்பாட்டுக்களையே அடுக்கி வித்வான்கள்
அவற்றைப் பாடும்படி செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தனர்.
இதற்குத்தான் எதிர்ப்பு
இன்று தமிழ்ப்பாடல்கள் இருப்பினும், பாடுவதில்லை. பாடினாலும்,
கச்சேரியின் கடைசி பாகத்தின் துக்கடாக்களாகவே இருக்கும்.
பாடகரின் முழுத் திறமையும், இராக ஆலாபனத்திலும், பல்லவிகயிலும்,
கிருதிகளிலும், பாடிக்காட்டி ஓய்ந்த பிறகு “வித்வான்சாள்”
களித்தான பிறகு விஷயமறியாத சாதாரண ஜனங்களுக்கு ஏதோ இரண்டொரு
சில்லறை உருப்படிகள் பாடுவோம் என்று பாடகர், “சிக்கல் சிங்கார
வடிவேலா உனை” என்று பாடுவார். இல்லையேல், “பித்தா பிறை சூடி”
என்பார். கச்சேரி முடிகிறது என்பதற்குத் தமிழ்ப்பாடல்களைக்
அறிகுறியாக வைத்துக்கொண்டனர்.
இதற்குக் காரணம், சபை அல்ல. சபையினர் தமிழர். தெலுங்குக்
கிருதிகள் அவர்களுக்குப் புரியவில்லை. வித்வானுடைய அபார
திறமையை சபையிலே பலர் அவருடைய முகத்திலே தோன்றும் பலவித
பாவங்களைக் கண்டோ, துடையில் போட்ட தாளம், அவிழ்ந்த குடுமி,
நெகிழ்ந்த ஆடை பக்கவாத்தியக்காரருக்கும் வித்வானுக்கும்
நடக்கும். பார்வைகள், கனைப்புகள், கண் சிமிட்டல்கள், கால்
தட்டுதல் இவைகளின் மூலமாகவோ தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
முன் வரிசையிலே உள்ள சிலருக்கு வித்வானின் அருமை தெரிந்திருக்கும்.
ஆனால் சபை, முன் வரிசையோடு முடிந்து விடுகிறதா! சபையினர்
கவனிக்க முடியாத ஏனெனில், தெரிந்து கொள்ள இயலாத-மொழியிலே
பாடல்களை, வித்வான்கள் பாடுவதுதான். “வித்வ இலட்சணம்” என்ற
தப்பு எண்ணம் வளர்க்கப்பட்டு அத்தகைய பாடல்களையே போற்றும்
சங்கீத சபைகள் வளர்ந்ததினால்தான் தமிழ்ப்பாடல்கள் வளரவில்லை.
தமிழ்ப் பாடல்கள் அதிகரிக்க வேண்டுமானால், புதுப்பாடல்கள்
இயற்றப்பட்டு, அவைகளைக் கற்றுக் கொடுக்கக் கழகங்கள் உற்சாகத்தோடு
முன்வந்து, அத்தகைய பாடல்களைப் பாடும்படி, சங்கீத சபைகள்
ஊக்குவித்தால்தான் முடியும்.
தமிழிலே புதுவைக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் இயற்றிப் புத்தகக்கட்டு
நிலையத்தில் தங்கினால் பயன் என்ன? பாடகர்கள் அவைகளைப் பயில
வேண்டும். பாட வேண்டும்.
பழைய பல்லவி
தமிழ் நாட்டிலே தமிழ்ப்பாடல் தேவை என்று கருதுபவர், அண்ணாமலை
நகர மாநாட்டார் முயற்சியை எதிர்க்கார். ஆரியர் எதிர்ககாமலிரார்!
ஆரியர் எதிர்ப்புப் பற்றி நாம் அஞ்சத் தேவையுமில்லை. தமிழர்
இசையை வளர்க்கத் தீர்மானித்து விட்டனர் என்ற செய்தியைத்
தமிழர் பொதுக்கூட்டங்கள் கூட்டி தெரிவித்துவிட்டனர். தமிழகம்
இம்முயற்சியில் முழுமனதுடன் ஆதரவு தருகிறது என்பது தெரிந்துவிட்டால்
ஆரியர் சுருண்டு விடுவர் என்பது திண்ணம். ஆரியத்தைக் காப்பாற்ற
அவர் தம் ஆட்சியிலே போலீசும், ராணுவமும், பொக்கிஷமும்
பிறவுங் கொண்டும் முயன்றே தோற்ற ஆரியர்கள் விழித்த தமிழன்
வெஞ்சினத்துடன் வீறு கொண்டெழுந்தால் என்ன செய்ய இயலும்!
தனித்தமிழ் கேட்டால், மொழிவளம் குன்றும் என்பர்; தமிழ்
இசை கேட்டால், சங்கீதக் கலை ஷீணமடையும் என்று கூறுவர்; தமிழர்
அதிகாரம் வேண்டும் என்று கேட்டால், ஆட்சியிலே திறமை குறையுமே
என்று கூறுவர். தமிழருக்குச் சமஉரிமை வேண்டும் என்று கேட்டால்,
பழங்காலப் பக்குவம் பாழாகுமே என்று பகருவர். தமிழனுக்குத்
தனிநாடு வேண்டும் என்று கேட்டால் பாரதமாதா பிரலாபிப்பாளே
என்று பரப்புவர். இது அவர்களின் ஆரியர்களின் பழைய பல்லவி.
இது இனி பலிக்காது.
எங்கே அந்தக் கலை
சேரனுடைய கொலு மண்டபத்திலே, கொண்டாட்டங்களின் போது இசைவாணர்கள்
“வாதாபிகண” பாடவில்லை.
சோழன் களிக்க “சுனோ சுனோ” பாடவில்லை.
பாண்டியன் பரிபாலனத்தின் போது, “பலூகவே எமீனா” என்று பாடவில்லை.
மூவரசர்கள் வாழ்ந்த நாட்களிலும், அதற்கு முன்பும் தியாகய்யர்,
சாஸ்திரி, தீட்சிதர் கிருதிகள் பாடவில்லை. இசையே இல்லையோ?
உண்டு! தமிழ் இசை பாடப்பட்டது. அந்த இசை இன்று எங்கே?
பொன்னும் மணியும் பொலிவுடன் விளங்க, வீரமும் ஈரமுங்கொண்டு
ஆண்ட தமிழ் மன்னர்கள் மற்றைச் செல்வங்களை வளர்த்தது போல்,
கலைச் செல்வத்தையும் வளர்த்தே வந்தனர். தமிழகத்துச் சந்தனம்
ரோம் சாம்ராஜ்யத்தில் வாடை வீசியது போலத் தமிழ்க் கலையின்
மணம் எங்கும் பரவி இன்பம் ஊட்டிற்று. எங்கே அந்தக் கலை இன்று?
சேர நன்னாட்டின் மங்கையர், வேழத்தை விரட்டிய தமது வீரக்காதலரை
வாழ்த்திப்பாடியது தமிழில்தான். வெற்றிக்கொடி பறக்க எதிரியை
விரட்டி அடித்துத் திரும்பிய சோழ மன்னர்கள் சிறப்பைத் தமிழில்தான்
பாடினார்கள்.
பாண்டியனின் குமரிகளுக்குப் பாங்கிகள் பாடியது தமிழ்ப் பாட்டுக்கள்தான்.
எங்கே அந்தத் தமிழ்ப்பாட்டுக்கள்?
கதிரவன் காய்வதை அடக்கிக் கொண்டு மேனி சிவந்து மறையும்
நேரத்தில் கடலோரத்தில் பட்டுக் கூடாரத்தினுள்ளே பக்கத்திலிருந்த
கோவலின் உள்ளம் குழைய மாதவி பாடியது. “மாரு பல்கா, கொன்னாவே
ஏமிரா” வுமல்ல “சல்சல்ரே நவ்ஜவானுமல்ல” தமிழ்! இன்று தமிழ்
இசை போதுமான அளவு இல்லை என்று கூறும் நிலை வந்தது. காரணம்
என்ன?
இழந்த இன்பம்
தமிழர் இசையை வளர்த்தது போல், வேறு இனத்தினர் வளர்க்கவுமில்லை;
தமிழர் இசையை இழந்தது போல் வேறு யாரும் இழக்கவுமில்லை.
தமிழனின் இன்றைய நிலை, இழந்த இன்பத்தைப் பற்றி எண்ணி ஏங்குவதாகவே
இருக்கிறது.
தமிழிலே நல்ல பாடல்கள் இல்லை என்பதை கேட்கும் தமிழன், தமிழ்
இசை முன்னம் இருந்த தன்மையை அறிந்தால், தலையைக் கவிழ்த்துக்
கொள்ளத்தான் வேண்டிவரும். அத்தகைய இசை இருந்தது இன்று மறைந்தது!
மறைந்தது மீண்டும் வெளிப்பட இன்று முயற்சிகள் செய்யப்படுகின்றன.
அந்த மொகஞ்சதாரோவைக் கண்டு ஆரியர்கள் மருளுகின்றனர்.
“தமிழர் காட்டுமிராண்டிக் கூட்டம். அவர்களுக்கு நாங்களே
நாகரிக போதனை செய்தோம். தமிழர் மொழி வளமறியாக்கூட்டம்.
நாங்களே நூற்கள் வகுத்தோம். தமிழர் வாழும்முறை தெரியாக்கூட்டம்.
நாங்களே அவர்களுக்குச் சட்டதிட்டம், கட்டு, காவல் கற்றுக்
கொடுத்தோம் என்று ஆரியர் கூறினர் ஆங்கிலேயரிடம். புத்தகங்களில்
எழுதினர் பொதுக்கூட்டங்களில் பேசினர். தமிழருக்கு ஆசான்
ஆரியரே என்று வெளிநாட்டாரிடம் கூறவே, வெளிநாட்டார், தமிழரை,
ஓர் “லம்பாடிக் கூட்டம் என்றே எண்ணினர்” ஒரு ராகவ ஐயங்கார்,
தமிழருக்கு “கற்பு” என்பதே தெரியாது என்றும் கூறத் துணிந்தார்!
|