காந்தியடிகள், திட்டங்கள்!
காந்தியார் எப்படி தன் இயக்கத்தை
நடத்திச் சென்றார் என்பதைக் கூர்ந்து கவனித்தால் தெரியும்.
அவர் ஒரு நல்ல வேதாந்தி, சிறந்த தத்துவ ஞானி, மதத்தின் பேரால்
செல்வாக்குப் பெற்றவர். இதையெல்லாம்விட, அவர் உள்ளத்திலே
– புதைத்திருந்தது இராஜதந்திரம். அவர், ஒரு சமயம், ‘அன்னியர்
துணிகளையெல்லாம் கொளுத்துங்கள் என்று சொல்லுவார், அடுத்து
ஆண்டும் அதை செய்து கொண்டிருக்கச் சொல்ல மாட்டார். அதை விட்டுவிட்டு,
‘சுதேசித் துணியை எல்லோரும் நெய்யுங்கள்‘ என்பார், அதன்
பிறகு அதை விட்டு விடுவார், ‘எல்லோரும் உப்புக் காய்ச்சுங்கள்‘
என்பார், பிறகு உப்பு காய்ச்சு என்பார். அடுத்தபடியாக, ‘கள்ளுக்கடை
மறியல்‘ செய்யச் சொல்லுவார், அடுத்த ஆண்டில், ‘எல்லோரும்
கடவுள் பக்தி கொள்ளுங்கள்‘ என்று பிரச்சாரம் செய்வார், அவர்
திட்டவட்டமாக, இதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும்
என்று கட்டளையிடவில்லை. அடிக்கடி திட்டத்தை மாற்றிக்கொண்டே
இருந்தார். இதற்கென முன்கூட்டியே திட்டங்கள் வகத்துக் கொண்டிருந்தார்.
இதனால்தான் மிகக் குறுகிய காலத்தில் பரந்த நாட்டிற்கு சுயராஜ்யம்
கிடைத்தது.
போர் முறை வகுக்க வேண்டும்!
நாமும் நமது போர் முறையை வகுத்துக்
கொள்ள வேண்டும். எது முதலில் செய்ய வேண்டியத. எது இரண்டாவது
செய்ய வேண்டியது என்பதைத் திட்டவட்டமாக முன்கூட்டி வகத்துக்
கொள்ள வேண்டும்.
அரசியல் வாழ்வு ரங்கராட்டினம்
போலச் சுழன்று கொண்டிருப்பதாக அமையக்கூடாது, ஒவ்வொரு கிளர்ச்சியும்
முன்னேற்றத்திற்கு – புரட்சிக்கு ஒரு படிக்கட்டாக அமைய வேண்டும்.
ஆலயங்களில் அர்ச்சுனன், ‘ஆண்டவனுக்கு
அபிஷேகம் எப்பொழுது செய்வது, ஆராதனை எப்பொழுது செய்வது,
என்பதையறிந்துதான் செய்வான்.
ஆராதனையை முதலில் செய்துவிட்டு,
பின்னர் அபிஷேகம் செய்யக்கூடாதா என்றால், செய்யலாம், ஆனால்,
செய்ய மாட்டான். அவனுக்குத் தெரியும் – அபிஷேகத்துக்கப்
பிறகு ஆண்டவனுக்கு ஆடை அணிந்து அலங்காரம் செய்தபின் ஆராதனை
செய்தால்தான், இலட்சணமாக இருப்பார் ஆண்டவன் – என்று!
தோல்விகளுக்குக் காரணங்கள்!
ஆலயங்களிலே அர்ச்சகன் எப்படி
திட்டமிட்டுச் செய்கிறானோ அதைப்போல, அரசியல் கட்சிகளும்
முறைப்படி திட்டங்களைத் தீட்டிக்கொள்ள வேண்டும், திட்டவட்டமான
முறையில்லாததே தோல்விகளுக்குக் காரணமாகும்.
திராவிட நாடு வேண்டும் என்று
கேட்கிறோம், இதில் நமக்கு பலர் பகைவன்? நம் கண்ணோட்டமெல்லாம்
அவன் மீதுதான் இருக்க வேண்டும் தவிர, வேறு பக்கம் திரும்பக்
கூடாது இதை நான் சொன்னால், ‘ஓகோ, அண்ணாதுரை பிராமணர்களின்
நண்பன்‘ அதனால்தான் இப்படிச் சொல்லுகிறான் என்று சொல்லுவார்கள்.
பெரியாரவர்கள், எழும்பூரில்
ஒரு கூட்டத்திலே பேசியபோது சொன்னாராம் – இதுவரையில் நமக்குச்
சாதி ஒழிப்பு வேலைதான் முதலாவதாக இருந்தது, இனி நாடு விடுதலை
பெறச் செய்வதுதான் முதல் வேலை – சாதி ஒழிப்பு வேலை இரண்டாவதுதான்‘
– என்று!
நாடு விடுதலை, பிறகு சாதி
ஒழிப்பு!
இதை அவர் சொல்லும்போது, ஏன்
இப்படித் தனது திட்டத்தை மாற்றிக் கொண்டார் என்பதற்காகக்
காரணத்தையும் கூறியிருக்கிறார். காலையிலே காபி சாப்பிடும்போது
2 நண்பர்கள் பெரியாரிடம் வந்தார்களாம், ‘சாதி ஒழிப்புக்காக
ஏன் ஐயா இப்படிப் போராட்டம் நடத்த வேண்டும்? நம் நாடு நமக்குக்
கிடைத்துவிட்டால் – ஆட்சி நம்மதாகிவிட்டால் ஒருவரியில் சட்டம்
போட்டுச் சாதியை ஒழித்து விடலாமே‘ என்று, பெரியாரிடம் சொன்னார்களாம்!
உடனே, ‘அவர்கள் சொல்வது சரிதான்‘ என்று பெரியார் மனதிலே
பட்டதாம்‘.
ஏன் அந்த நண்பர்கள் அப்படிச்
சொன்னார்கள்? அப்படிச் சொன்ன இருவரில் ஒருவர், நான் அனுப்பி
வைத்தவராகக் கூட இருக்கலாம், என்னுடைய நண்பர்கள் எங்குமிருக்கக்கூடும்.
குறிபார்த்து அடிக்க வேண்டும்!
அதே முறையில் பெரியாரவர்கள்,
இன்றைக்குத் தேவையான போர்த் திட்டத்தை வகுக்க வேண்டும்.
‘நம்முடைய எதிரி யார்?‘ என்பதைக் கவனிக்க வேண்டும். நம்
பகைமை உணர்ச்சியைத் தனிப்பட்ட ஆட்களிடம் காட்டுவதா, ஒரு
குறிப்பிட்ட கொள்கையிடத்திலே காட்டுவதா என்பதை முதலில் தீர்மானிக்க
வேண்டும். அதன்பிறகு நம்முடைய ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும்.
மரத்தைப் பார்த்துக் கல்லெறிந்தால்,
பழம் விழுந்தாலும் விழும், விழாமலும் போகும். ‘பழம் எந்தக்
கிளையிலிருக்கிறது – எதில் அடித்தால் பழம் விழும்‘ என்று
குறி வைத்துக் கல்லெறிந்தால்தான் பழம் விழும் குறி வைக்காமல்
கல்லெறிந்து கொண்டேயிருந்தால், அதில் அர்த்தமில்லை. தப்பித்தவறி
இரண்டொரு பழங்கள் விழலாமே தவிர, பொதுவாக, கல்லெறிந்ததற்கு
ஏற்ற பலனைக் காண முடியாது.
அதைப்போல போர் முறை வகுக்க
வேண்டும். தனிப்பட்ட ஆளிடம் பகைமை உணர்ச்சி காட்டக்கூடாது.
தூசு – மாசுகள் துடைக்கப்பட
வேண்டும்!
காலத்துக்கும் கருத்துக்கும்
ஏற்ற வகையில், நம் கருத்துக்களை ஆதரிக்கும் தனிப்பட்டவர்களையும்
அணைத்துக் கொள்ளும் வகையிலே – அப்படிப்பட்டவர்களும் கலந்து
கொள்ளும்படியான அழகான போர் முறையை வகுக்க வேண்டும்.
பெரியாரவர்கள் போர் முறைகளை
வகுத்தாரென்றால், அவருடைய ஆற்றலுக்கும், அறிவுக்கும், திறமைக்கும்
நல்ல பலன் கிடைக்கும், அந்தப் போராட்டத்துக்கு நல்ல ஆயுதங்களாக
நாங்கள் பயன்படு்வோம்.
நம் தலைவர் பெற வேண்டிய பலனை
– வெற்றியைப் பெற வில்லையே என்ற கழிவிரக்கத்துடன் பேசுகிறேன்.
சுற்றியிருந்து துதிபாடுபவர்களைப்போல் நான் இதைச் சொல்லவில்லை.
இயக்கத்திலே வெற்றிக்குத் தடையாக இருக்கின்ற இன்னல்கள்,
இடுக்கண்கள், தூசு – மாசுகள் துடைக்கப்பட வேண்டும், அதுவே
தலைவருக்கு நாம் செய்கிற கடமை – பெருமை தரவல்லது என்று நான்
கருதுகிறேன்.
புகழ் பாடியவன்தான் நான்
புகழ் பாடுவதைக் கசப்பாக கருதியல்ல,
நான் இதைச் சொல்வது, புகழ்பாடியவன்தான் நான், இன்றைக்குப்
பெரியாரிடத்திலேயுள்ளவர்கள் சொல்லும் புகழ் வார்த்தைகளில்
பெரும்பாலானவை என்னால் சொல்லப்பட்டவைதான், நான் புதிது புதிதாகச்
சொல்லிவந்த வார்த்தைகளைத்தான் இன்று அவர்களும் சொல்லி வருகிறார்கள்.
அவர்கள் ஒன்றும் புதிதாகச் சொல்லி விடவில்லை.
பெரியாரவர்களுடைய அறிவாற்றல்
நாட்டுக்குப் பயன்படத் தக்க வகையிலே போர்முறை தீட்டப்பட
வேண்டும், தனி நபர்களிடத்திலே பகை காட்டும் வகையிலே போராட்டம்
அமைவதாக இருக்கக் கூடாது.
நாம் அங்கு !தி.க.வில்) இருந்தபோது
அங்கே பார்ப்பனர்களுக்கு இடம் உண்டு, பரவஸ்து இராச கோபாலாச்சாரியார்
என்னும் பார்ப்பனர் நம்மோடு இருந்து, இந்தியை எதிர்த்தபோது,
திராவிட நாட்டில் வாழும் பார்ப்பனர்களெல்லாம் திராவிடர்கள்தான்
என்ற முறையிலே பேசி வந்தோமே நினைவிருக்கிறதா – என்று திராவிடர்
கழக நண்பர்களைக் கேட்கிறேன்.
பார்ப்பனீயம் எது?
நாம் திராவிடர் கழகத்தைவிட்டு
வெளியேறிய பிறகுதான், தனிப்பட்ட ஆட்கள்மீது துவேஷம் காட்டும்
கொள்கை திராவிடர் கழகத்திலே திணிக்கப்பட்டது.
நாம் திராவிடர் கழகத்தில்
இருந்த காலத்திலேயேதான் ‘பார்ப்பனியம் என்ற சொல்லும் பிறந்து
இன்று நம்மைப் பார்த்து ‘ஈயம் பித்தளை’ என்று கேலி – கிண்டல்
செய்கிறார்கள் தி.க. தோழர்கள்! இந்த ஈயம், நம்மால் உற்பத்தி
செய்யப்பட்டதல்ல, ஈரோட்டு ஈயம்தான்! பார்ப்பனக் கொள்கைகளை
யார் யார் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்களிமெல்லாம், பார்ப்பனீயம்
இருக்கிறது என்றுதான் பொருள்.
பார்ப்பனரிடம் மட்டுமா பார்ப்பனீயம்?
‘பிரிட்டன் கொள்கைகள் எப்படி ‘பிரிட்டானியம்‘ என்று சொல்லப்படுகிறதோ,
அதைப்போல, ‘பார்ப்பனீயம்‘ என்று பார்ப்பனர் கொள்கைகளைச்
சொல்லலாம் – என்று, பெரியார் தான் முன்பு சொன்னார்! ‘தனிப்பட்ட
பார்ப்பனர்களிடத்திலே நாம் பகை கொள்ளக் கூடாது, பார்ப்பனீயம்தான்
நமக்குப் பகை‘ என்று பெரியார் சொன்ன அந்தத் தூய நிலை வளர்ந்தால்,
காட்டு மிராண்டி என்றோ, கலகம் விளைவிப்பவர்கள் என்றோ கலபத்தில்
எவரும் நம்மைப் பார்த்துச் சொல்லிவிட முடியாது.
பார்பபனீயம் என்பது பார்ப்பனர்களிடம்
மட்டும்தான் இருக்கிறது என்ற சொல்ல முடியாது, பாண்டுரங்கம்
செட்டியாரிடமும் இருக்கிறது, பஞ்சாபிகேச சாஸ்திரியிடமும்
இருக்கிறது. பஞ்சாபேகேச சாஸ்திரியாவது கொஞ்சம் பயந்து பேசுவார்.
பாண்டுரங்கம் செட்டியாரோ, நிமிர்ந்தபடி பேசுவார் சாதி ஒழியக்கூடாது
என்று!
தமிழ்நாட்டுக்கு நல்ல காலம்!
ஆகவோதான், தனிப்பட்ட ஆட்களிடம்
வெறுப்புக் காட்ட வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,
என்னைக் கூட்டிப் பேச வேண்டுமென்று பெரியாரவர்கள் உள்ள படியே
நினைத்தால், அதைவிட நல்ல காலம் தமிழ்நாட்டுக்கு வேறு ஒன்று
இல்லை என்றுதான் சொல்லுவேன். அப்படிப் பேசும் போது இந்த,
எனது கருத்தைத்தான் வலியுறத்திச் சொல்லுவேன்.
நேரு பண்டிதல், நான் முதலில்
சொன்ன அந்த இரண்டு பாஷைக்குத்தான் பயப்படுவார். நாட்டு மக்களின்
ஓட்டு நமக்கிருக்கிறது. இதைத் தவிர வேறு என்ன செய்தாலும்
நேரு பயப்பட மாட்டார்.
மூன்றாவது மாடியில் இருப்பவர்
மீது கல்லெறிய வேண்டுமென்றால், நாம் எங்கிருந்து கொண்டு
கல்லை வீசினால் பட வேண்டியவர் மீது படும் என்பதை முதலில்
பார்க்கவேண்டும். நாமும் இந்த உயரத்துக்கு – பக்கத்து மாடிமீது
ஏறி நின்று கல்வீசினால்தான் முடியும் அதைப்போல, நேருவை எதிர்க்க
வேண்டுமென்றால், நாம் அவரைச் சந்திக்குமிடம் சட்டசபைதான்.
‘நாமும் ஓரளவு மாடிப்படி ஏற வேண்டும் – ஜனநாயகப் பயணத்தில்
ஈடுபட வேண்டுமென்று பெரியார் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
கருப்புச் சட்டை போட்டால்தானா?
நான் திராவிடர் கழகத்திலிருந்தபோது,
கருப்புச் சட்டை போட்டுத்தானாக வேண்டுமென்று பிடிவாதம் செய்தார்கள்,
திருச்சியில் நடந்த கமிட்டிக் கூட்டத்திலே – கருப்புச் சட்டை
போட்டுக் கொண்டால் தான் பேசலாம் என்றார்கள், நானும் சரி
என்றேன் – பேச வேண்டுமென்று எனக்கு ஆசையிருக்குமானால், கருப்புச்சட்டை
போடும்படி நீங்கள் என்னை வலியுறுத்த முடியாது – என்று சொன்னேன்.
பிறகு நான் எந்த நாளும் கருப்புச் சட்டை – போடவேயில்லை.
பின்னர் ஒரு சமயம் டாக்டர் சுப்பராயன் மந்திரியாக இருந்த
காலத்தில், கருப்புச் சட்டை படைக்குத்தடை விதித்தபோது, நானே
கருப்புச் சட்டைப் போட்டுக்கொண்டு பேசப் போனேன். அந்தச்
சட்டைகூட நம் நெடுஞ்செழியனிடம் இரவல் வாங்கிப் போட்டுக்
கொண்டதாகும்.
அடுத்த நிர்வாகக் கமிட்டிக்
கூட்டத்தின்போது, வெற்ற உடம்போடு நான் உட்கார்ந்திருந்ததைப்
பார்த்து, நீடாமங்கலம் தோழர் ஆறுமுகம், பெரியாரவர்களிடம்,
‘பார்த்தீர்களா ஐயா, அண்ணாதுரை கருப்புச் சட்டை போட்டுக்
கொள்ளாமலிப்பதை‘ என்றார், அதற்குப் பெரியார் என்ன சொன்னார்
தெரியுமா? உடம்பேதான் கருப்பாயிருக்கிறதே‘, இன்னும் கருப்புச்
சட்டை எதற்குப் போடவேண்டும்? – என்று கேட்டார் இதை எதற்குச்
சொல்லுகிறேன் என்றால், பெரியார், தனக்குத் தேவை என்று கருதிய
போதெல்லாம், அவர் செய்கிற வாதத்தைப் போல் எந்த வக்கீலும்
செய்யமுடியாது, அந்த அளவுக்குத் திறமையுடன் தனது வாதத்தை
நிலை நிறுத்துவார், ஜனநாயகப் பாஷை அவருக்குத் தெரியாததல்ல
– நன்றாகத் தெரியும்!
பூனைக்குப் பால் வைத்தது போல்!
ஜஸ்டிஸ் கட்சி தோற்றுவிட்ட
பிறகு, அந்தத் தோல்வியிலே அடைந்த பீதிதான் பெரியாரவர்களுக்கு
இன்னமும் தேர்தல் என்றால் பிடிக்கவில்லை. பெரியாரைப்போல்,
காலஞ்சென்ற சௌந்திரபாண்டியன் அவர்களம் தேர்தலைப் பற்றிப்
பீதி கொண்டிருந்தார்கள். ‘தெனாலிராமன் பூனைக்குப் பால் வைத்தது
போல்‘ என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். தெனாலிராமன் கொதிக்கப்
கொதிக்கப் பாலைக் கொண்டுவந்து பூனைக்கு வைத்தானாம். பாலைக்
குடிக்க வந்த பூனைக்கு வாய் சுட்டு விட்டதால் அன்று முதல்
அது பால் குடிக்கவே பயப்படுமாம். அதேபோல், தேர்தலிலே ஜஸ்டிஸ்
கட்சி பட்ட அல்லல், இந்த இருவரையும் தேர்தல் என்றால் அஞ்சும்படிச்
செய்துவிட்டது. நானும் தேர்தல் என்றால் பயந்து ஓடியவன்தான்.
தேர்தலைக் கண்டு அஞ்சிக்கொண்டே
இருந்தால் என்ன ஆவது என்ற எண்ணத்தில்தான் பிறகு, ‘தேர்தலில்
நின்றுதான் பார்ப்போம் என்று கருதி தேர்தலில் நாம் நின்றோம்‘
டி.டி.கே. யைச் சாமானியர்களாகிய நாம் எதிர்க்க முடியுமா?‘
என்று தூரத்தில் ஓடிவிட்டால் என்ன ஆகும்? நாம் துணிந்து
நின்றோம் டி.டி.கே.பயப்படக்கூடிய அளவுக்கு நம் சக்தி பயன்பட்டது.
நம் ஆசைத்தம்பி வெற்றி பெற்றாரே, எப்படிப்பட்டவரைத் தோற்கடித்து
வெற்றி பெற்றார்? வெங்கடசாமி நாயுடுவை நாம் எதிர்க்க முடியுமா?
என்று பயந்திருந்தால், ஆசைத்தம்பி சட்டசபைக்கு வந்திருக்க
முடியுமா?
சிறுமையும் – பெருமையும் பெரியாரைச்
சேரும்!
பல எதிர்ப்புகளிடையே பெரியாரின்
எதிர்ப்பையும் கூடப் பெற்ற – நாம், 15 பேர் சட்டசபைக்குப்
போக முடிந்தது, 15 பேர் வெற்றி பெற்றது அற்ப வெற்றிதான்
என்றாலும் 17 இலட்சம் வாக்குகளை நாம் பெற்றிருக்கிறோம்.
பெரியார் மட்டும் கொஞ்சம் ஆதரவைக் காட்டியிருந்தால் – நாம்
50 பேர் சட்டசபைக்கு வந்திருந்தால் காங்கிரஸ்காரர்கள் இந்த
அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்க முடியாது. ‘மகன்
செத்தாலும் பரவாயில்லை, மருமகள் தாலியறுத்தால் போதும்‘ என்று
கருதும் கொடுமைக்கார மாமியாரைப் போல், அண்ணாதுரை மூக்கறுக்கப்பட
வேண்டுமென்று பெரியார் கருதினார், ஆனாலும், நான் மூக்கறுபடவில்லை.
நான் பெறுகின்ற பெருமையும், சிறுமையும் பெரியாரைத்தான் சேருமே
தவிர, என்னைச் சார்ந்ததல்ல.
என் கொள்கை பிடிக்கவில்லை
– என்னை வெறுத்து ஒதுக்கி விடுவார்கள் மக்கள் என்றால், அது
என் தப்பல்ல, என் பள்ளிக் கூடத்தின் தப்பு எனச் சொல்லுவேன்.
நான் பயின்ற பெரியார் பள்ளிக்கூடம் எனக்குச் சொல்லித் தந்த
பாடத்தின்படிதான் நான் நடப்பேன்.
தி.க. தேர்தலுக்கு வரவேண்டும்!
இனி நாம், ஜனநாயகப் பயனை அடையும்படியான
வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தனிப்பட்டவர்களிடம்
காட்டுகின்ற பகையை விட்டொழித்து, உருப்படியாக முறையாகக்
காரியங்களைச் செய்ய வேண்டும். காங்கிரசார் ஆணவத்துடன் பேசுவதை
அடக்க வேண்டுமென்றால் ஜனநாயகப் பாஷையில்தான் நாம் பேச வேண்டும்.
இதற்குச் சட்டசபை செல்லும் திட்டத்தைப் பெரியார் அவர்கள்
ஒத்துக் கொண்டு அடுத்த தேர்தலில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்
கொள்கிறேன்.
அப்படி திராவிடர் கழகம் தேர்தலில்
ஈடுபடுமானால் தி.மு.கழகம் எந்தெந்த வகையிலே உதவ முடியுமோ,
அந்த உதவிகளையெல்லாம் தாராளமாகத் தரும் என்பதை உள்ளத் தூய்மையோடு
தெரிவித்துக் கொள்கிறேன்.
அந் நிலைமை ஏற்பட்டு, சட்டசபையிலே
15 பேராக இருக்கும் நம்மவர்கள், 100 பேராக அடுத்த தேர்தலிலே
வந்தால் நேரு இப்படியெல்லாம் பேச மாட்டார். நாமே நேருவை
வரவழைத்துப் பேசச் சொன்னாலும் அவருக்குப் பேச நாக்கு எழாது.
‘காட்டுமிராண்டிகள்‘ என்று சொன்ன நேருவுக்கு ‘காட்டுமிராண்டி‘களான
நாங்கள் கோட்டையிலே உட்கார்ந்து விட்டோம் என்பதைக் காட்ட
வேண்டும். அந்தப் பாதைதான் சரி என்று திராவிடர் கழகம் ஒப்புக்
கொண்டு ஈடுபட வேண்டும். அதற்கான யோசனைகளைச் சொன்னால் நான்
கேட்கத் தயாராகயிருக்கிறேன்.
நிந்தனைக்கிடையே வளர்ந்தவன்
சட்டசபை சென்று நான் பேசிய
பிறகுதான் ‘பெரியாரை நீங்கள் போய்ப் பார்த்துச் சமரசம் செய்யுங்கள்‘
என்று அமைச்சர் என்னைக் கேட்டார். ‘நான் பெரியாரைச் சந்திக்கவும்
தயார், அதுவரை சட்டத்தை நிறுத்தி வையுங்கள்‘ என்றேன், ஆனால்
அதை நிறுத்தி வைக்க அவர்களுக்கு வக்குவழியில்லை. ‘நான் பெரியாரைச்
சந்திக்கிறேன்‘ என்று சொல்லியபோது பெரியார் நம்மை எவ்வளவுதான்
இழித்துரைத்திருந்த போதிலும், அதைப் பற்றியெல்லாம் நான்
கவலைப்படவில்லை. ஏனென்றால், சின்ன வயதிலிருந்தே நிந்தனைகளுக்கிடையே
நான் வளர்ந்தவன், பெரியாரே எனக்குச் சொல்லி கொடுத்திருக்கிறார்.
பெரியார் என்னைத் திட்டினாலும அதற்க அர்த்தமில்லை. பதிலுக்குப்
புகழ் மாலையைத்தான் பெரியாருக்குச் சூட்டுவேன் என்பதைத்
தெரிவித்துக் கொண்டு ஜனநாயகப் பாதைக்கு வருமாறு பெரியார்
அவர்களை அழைக்கிறேன்.
(நம் நாடு
- 13, 16-12-1957)