அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

கபோதிபுரக் காதல்
3

இந்நிலையிலே, ராதாவைப்பற்றி ஊரிலே, பழித்தும் இழித்தும் பேசத் தொடங்கினார்கள். இதுவும் அவள் காதில் விழுந்தது. அவள் கவலை அதிகமாகிவிட்டது.

கடைசியில், காரியஸ்தன் கருப்பையா தான் கைகொடுத்து உதவினான். மெல்ல மெல்ல, மந்திரம் ஜெபிப்பதுபோல ஜெபித்து, “ஏதோ சிறுபிள்ளைத்தனத்தில் துடுக்குத்தனத்தில் நடந்துவிட்டது. இனி ஒன்றும் நடவாது. ராதாவை அவள் வீட்டிலேயே விட்டு வைத்தால் ஊரார் ஒரு மாதிரியாகப் பேசுகிறார்கள்” என்று மெதுவாக ராதாவின் புருஷனிடம் கூறினான். ராதாவின் கணவன் உள்ளபடி வருந்தினான். வருத்தம்போக மருந்து தேடினான். அவனுக்கு அபின் தின்னும் பழக்கம் கற்றுக் கொடுக்கப்பட்டுவிட்டது! மாலையில் அபினைத் தின்றுவிட்டு, மயங்கி விழுந்துவிடுவான். இரவுக் காலத்தில் கவலையற்றுக் கிடக்க, அபினே அவனுக்கு உதவிற்று.

கருப்பையாவின் முயற்சி கொஞ்சம் கொஞ்சமாகப் பலிக்க ஆரம்பித்தது. ஊரில் திருவிழா வந்தது. திருவிழாக் காலத்தில் உறவினர்கள் வருவார்கள். அந்த நேரத்தில் ராதா வீட்டில் இல்லாவிட்டால், கேலியாகப் பேசுவார்கள் என்று கூறினான். “ஆனால் நீயே போய் அவளை அழைத்து வா” என்று கூறினான். காரியஸ்தன் கருப்பையா, ராதாவை அழைத்து வந்து வீட்டில் சேர்த்தான். ராதாவும் மிக அடக்க ஒடுக்கமாகப் பணிவிடைகள் செய்துகொண்டு வந்தாள். புருஷனுக்கு மனைவி செய்ய வேண்டிய முறையில் துளியும் வழுவாது நடந்தாள்.

ராதா வீடு புகுந்ததும், வீட்டிற்கே ஒரு புது ஜோதி வந்துவிட்டது சமையல் வேலையிலே ஒரு புது ரகம் வீடு வெகு சுத்தம் தோட்டம் மிக அலங்காரமாக இருந்தது. மாடு கன்றுகள் நன்கு பராமரிக்கப்பட்டன. பண்டங்களைப் பாழாக்குவதோ வீட்டு வேலையாட்களிடம் வீண் வம்பு வளர்ப்பதோ, சாரதாவின் சுபாவத்திலேயே கிடையாது. ராதாவின் நடவடிக்கையைக் கண்ட அவள் புருஷன், இவ்வளவு நல்ல சுபாவமுள்ள பெண், அன்று ஏன் அவ்விதமான துடுக்குத்தனம் செய்தாள். எவ்வளவு அடக்கம், எவ்வளவு பணிவு, நான் நின்றால் உட்காரமாட்டேனென்கிறாள். ஒரு குரல் கூப்பிட்டதும், ஓடோடி வருகிறாள். வீட்டுக் காரியமோ, மிக மிக ஒழுங்காகச் செய்கிறாள். இப்படிப்பட்டவள் அந்தப் பாவியின் துடுக்குத்தனத்தால் கெட்டாளே தவிர, இவள் சுபாவத்தில் நல்லவள்தான் என்று எண்ணினான்.

ஆனால் ராதா வெறும் யந்திரமாகத்தான் இருந்தாள். வேலையை ஒழுங்காகச் செய்தாள். ஆனால் பற்றோ பாசமோ இன்றி வாழ்ந்தாள். வாழ்க்கையில் அவளுக்கு இன்பம் என்பதே தோன்றவில்லை. புருஷனுக்கு அடங்கி நடப்பதுதான் மனைவியின் கடமை என்பதை உணர்ந்து அவ்விதம் நடந்தாளே தவிர புருஷனிடம் அவளுக்கு, அன்பு எழவில்லை. பயம் இருந்தது! மதிப்பு இருந்தது! கடமையில் கவலை இருந்தது! காதல் மட்டும் இல்லை! காதலைத்தான் அந்தக் கள்ளன் பரந்தாமன் கொள்ளைகொண்டு போய்விட்டானே! அவள் தனது இருதயத்தை ஒரு முத்தத்துக்காக, அவனுக்குத் தத்தம் செய்துவிட்டாள்.

சிரித்து விளையாடி சிங்காரமாக வாழ்ந்த ராதா போய்விட்டாள். இந்த ராதா வேறு பயந்து வாழும் பாவை. இவள் உள்ளத்திலே, காதல் இல்லை. எனவே வாழ்க்கையில் ரசம் இல்லை.

இதை இவள் கணவன் உணரவில்லை, எவ்வளவுக்கெவ்வளவு அடக்கமாக இருக்கிறாளோ அவ்வளவு அன்பு என்று எண்ணிக்கொண்டான். உலகில் இதுதானே பெரும்பாலும் பெண்கள் கடமை என்றும், புருஷனுக்கும் பெண்டுக்கும் இருக்க வேண்டிய அன்பு முறை என்றும் கருதப்பட்டு வருகிறது.

“பெண் மகா நல்லவள் உத்தமி. நாலுபேர் எதிரே வரமாட்டாள். நாத்தி மாமி எதிரே சிரிக்கமாட்டாள். சமையற்கட்டை விட்டு வெளிவரமாட்டாள். புருஷனைக் கண்டால் அடக்கம். உள்ளே போய்விடுவாள். கண்டபடி பேசிக்கொண்டிருக்க மாட்டாள்” என்று பெண்ணின் பெருமையைப் பற்றி பேசப்படுவதுண்டு. அந்தப் பேதைகள், வாழ்க்கையில் ரசமற்ற சக்கைகளாக இருப்பதை உணருவதில்லை. வெறும் இதயந்திரங்களாக, குறிப்பிட்ட வேலைகளை, குறித்தபடி செய்து முடிக்கும், குடும்ப இயந்திரம் அந்தப் பெண்கள், ஆனால் காதல் வாழ்க்கைக்கு அதுவல்ல மார்க்கம்.

செடியில் மலர் சிங்காரமாக இருக்கிறது. அதனைப் பறித்துக் கசக்கினால், கெடும். வண்டு ஆனந்தமாக ரீங்காரம் செய்கிறது! அதனைப் பிடித்துப் பேழையிலிட்டால் கீதம் கிளம்பாது, கிளி, கூண்டிலிருக்கும்போது, கொஞ்சுவதாகக் கூறுதல், நமது மயக்கமே தவிர வேறில்லை. கிள்ளை கொஞ்ச வேண்டுமானால், கோவைக் கனியுள்ள தோப்பிலே போய்க் காணவேண்டும். மழலைச் சொல் இன்பத்தை மற்றதில் காணமுடியாது. அதுபோன்ற இயற்கையாக எழும் காதல், தடைப்படுத்தப்படாமல், அதற்குச் சுவர் போடப்படாமல், அது தாண்டவமாடும்போது கண்டால் அதன் பெருமையைக் காண முடியுமே தவிர வேறு விதத்தில் காண முடியாது.

நமது குடும்பப் பெண்களில் எவ்வளவோ பேர் தங்கள் மன விகாரத்தை மாற்ற முகத்தில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு வாழுகின்றனர். எத்தனை பெண்கள், வாழ்க்கையின் இன்பம் என்றால், சமையற்கட்டில் அதிகாரம் செலுத்துவதும், கட்டியலறையில் விளக்கேற்றுவதும், கலர் புடவை, கல்கத்தா வளையல், மங்களூர் குங்குமம், மயில் கழுத்து ஜாக்கெட் ஆகியவற்றைப் பற்றிப் புருஷனிடம் பேசுவதும், தொட்டிலாவதுதான் என்று கருதிக்கொண்டு வாழுகின்றனர். ரசமில்லாத வாழ்க்கை, பாவம்!

அப்படிப்பட்ட வாழ்க்கைதான் ராதாவுக்கு. புருஷனோ அபின் தின்று ஆனந்தமாக இருந்தான். இந்நிலையில் தான் காரியஸ்தான் கருப்பையாவுக்கு, ராதாவின்மீது கண் பாய்ந்தது. ராதாவின் தற்கால வாழ்வுக்குத் தானே காரணமென்பது அவனுக்குத் தெரியும். அதுமட்டுமல்ல! ராதாவைத் தன் வலையில் போடுவதும் சுலபமென எண்ணினான். நாளாவட்டத்தில், பேச்சிலும் நடத்தையிலும் தன் எண்ணத்தை, ராதாவுக்கு உணர்த்த ஆரம்பித்தான்.

தாகமில்லாத நேரத்திலும், ஒரு தம்ளர் தண்ணீர் வேண்டும் என்பான். ஓய்வு கிடைக்கும் நேரத்தில் வலியச் சென்று பேசுவான். விதவிதமான சேலை வகைகளைப் பற்றிப் பேசுவான் ராதாவின் அழகை அவர்கள் புகழ்ந்தார்கள், இவர்கள் புகழ்ந்தார்கள் என்று கூறுவான்.

“உன் அழகைக்காண இரு கண்கள் போதாதோ”

என்று பாடுவான், ராதாவைக் கண்டதும் ஒரு புன்சிரிப்பு.

இவனுடைய சேட்டைகள் எதுவும், ராதாவின் புருஷனுக்குத் தெரியாது. ராதா உணர்ந்து கொள்வதற்கே, சில நாட்கள் பிடித்தன. உணர்ந்த பிறகு திகைத்தாள். விஷயத்தை வெளியில் சொல்லவோ பயமாக இருந்தது. ‘மகா யோக்கியஸ்தி தான் போடி! கலியாணமான உடனே, எவனையோ கட்டி முத்தமிட்டாய் பாவம் அந்தக் காரியஸ்தன் உனக்காக எவ்வளவோ பாடுபட்டு, கணவனுடன் சேர்த்து வைத்தான். இப்போது அவன்மீது பழி போடுகிறாய்” என்று தன்னையே தூற்றுவார்கள் என்று ராதா எண்ணினாள். அதுமட்டுமா! காரியஸ்தனைக் கோபித்துக்கொண்டால், தன் கணவனிடம் ஏதாவது கூறி, அவர் மனத்தைக் கெடுத்துவிடுவான் என்று பயந்தாள். இந்தப் பயத்தை ராதாவின் தாய் அதிகமாக வளர்த்துவிட்டாள். எனவே, கருப்பையாவின் சேட்டையை முளையிலேயே கிள்ளிவிட ராதாவால் முடியவில்லை. கருப்பையா பாடு கொண்டாட்டமாகிவிட்டது. சரி! சரியான குட்டி கிடைத்துவிட்டாள் என்று அவன் தீர்மானித்துவிட்டான்.

அவனுடைய வெறி விநாடிக்கு விநாடி வளர்ந்தது. “ராதா நம்மைக் கவனிக்க மாட்டாயே, தயவு இல்லையே” என்று கேட்பான், சிரித்துக்கொண்டே. “என்ன வேண்டும் கருப்பையா சொல்லேன்” என்பாள் ராதா. கருப்பையா பெருமூச்சுவிடுவான். “கொஞ்சம் தாகந்தீர, உன் கையால் தண்ணீர் கொடம்மா” என்பான். ராதா விசாரத்துடன் நீர் தருவாள். “ஏனம்மா முகம் வாட்டமாக இருக்கிறது” என்பான். “ஒன்றுமில்லையே” என்று கூறுவாள் ராதா. “அம்மாõ நீ முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டால், என் மனம் படாதபாடு படுகிறது” என்று தன் அக்கறையைக் காட்டுவான் காரியஸ்தன்.

“உன்னுடைய சிவப்பு மேனிக்கு அந்த நீலப்புடவை கட்டிக்கொண்டு, வெள்ளை ஜாக்கெட் போட்டுக்கொண்டு, ஜவ்வாது பொட்டு வைத்து நிற்கும்போது, அசல் ரவிவர்மா ஓவியம் போல இருக்கிறது என் கண்களுக்கு” என்பான்.

இவ்விதமாக, கருப்பையா, மிக விரைவில் முன்னேறிக் கொண்டே போனான். ஆனால் ஜாடை செய்து, ராதாவைப் பிடிக்க அதிக நாட்களாகும் என்பதைத் தெரிந்துகொண்டு, வாய் திறந்து கேட்டுவிடுவதே மேல் என எண்ணினான் அதற்கும் ஒரு சமயம் வாய்த்தது.

முதலாளி பக்கத்து ஊருக்குப் போனார். ஒரு பாகப் பிரிவினை மத்தியஸ்த்துக்காக, வர இரண்டு நாட்கள் பிடிக்கும்; அந்த இரண்டு நாட்களில் காரியத்தை எப்படியாவது முடித்துவிடத் தீர்மானித்துவிட்டான், கருப்பையா.

மாலை நேரம் தோட்டத்திலே, சாரதா பூப்பறித்துக் கொண்டிருந்த சமயத்தில், கருப்பையா அங்குப் போனான். சாரதாவுடன் பேச ஆரம்பித்தான். சற்றுத் தைரியமாகவே, “ராதா நீ நல்ல சாமர்த்தியசாலி.”

“நானா! உம்! என்ன சாமர்த்தியம் கருப்பையா என் சாமர்த்தியம் தெரியாதா, எட்டு மாதம் சீந்துவாரற்றுக் கிடந்தவள் தானே.”

சீந்துவாரற்றா! அப்படிச் சொல்லாதே, உன் அழகைக் கண்டால் அண்ட சராசரத்தில் யார்தான் சொக்கிவிட மாட்டார்கள்.”

“போ; கருப்பையா, உனக்கு எப்போதும் கேலிதான்”

“கேலியா இது? நீ கண்ணாடி எடுத்து உன் முகத்தைக் கண்டதில்லையா?”

“சரி! சரி! நாடகம்போல் நடக்கிறதே”

“ஆமாம்! நாடகந்தான். காதல் நாடகம்.”

“இது என்ன விபரீதப் பேச்சு கருப்பையா, யார் காதிலாவது விழப்போகிறது.”

“நான் சற்று முன்ஜாக்கிரதை உள்ளவன். தோட்டக்கார முனியனை, நாலு மணிக்கே அனுப்பிவிட்டேன் கடைக்கு.”

“நீ ஏதோ தப்பு எண்ணம் கொண்டிருக்கிறாய், கருப்பையா தயவுசெய்து அதனை விட்டுவிடு. நான் அப்படிப்பட்டவளல்ல”

“ராதா! நான் இனி மறைக்கப் போவதில்லை உன்னை எப்படியாவது கூடவேண்டுமென நான் தவங்கிடந்து வந்தேன். இன்றுதான் தக்க சமயம்.” என்று கூறிக்கொண்டே ராதாவின் கரத்தைப் பிடித்துக் கொண்டான்.

ராதா திமிறினாள். பூக்கூடை கீழே விழுந்தது. மலர்கள் மண்மீது சிதறின. ராதாவின் கண்களிலே நீர் பெருகிற்று, கருப்பையாவின் கரங்கள் அவள் உடலைக் கட்டிப் பிடித்துக்கொண்டன. அவனுடைய உதடுகள், அவள் கன்னத்தில் பதிந்தன. அந்த முத்தங்களின் ஓசை கேட்டு, பறவைகள் பறந்தன. ராதா, கருப்பையாவிடம் சிக்கி விட்டாள்.

ராதா, ஜென்மம் இப்போதுதான் சாபல்யமாயிற்று. “அடி பைத்தியமே; ஏன் இவ்வளவு நடுங்குகிறாய், பயப்படாதே. இந்தக் கருப்பையாவைச் சாமான்யமாக எண்ணாதே. நான், இந்த இன்பத்துக்காக எவ்வளவு பாடுபட்டேன். எத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தேன் தெரியுமா? தேனே நான் இதற்காகத்தானே உன்னை தாய் வீட்டிலிருந்து இங்கு வரும்படிச் செய்தேன்” என்று களிப்பாய், கருப்பையா கூறினான். ராதாவின் ஆடையைப்பற்றி இழுத்தான். கன்னங்களைக் கிள்ளினான். ஒரே ஒரு முத்தம் இன்னும் ஒன்று– ஆம்? இப்படி, பலே பேஷ், என்று கொஞ்சினான்.

ராதா மயக்கத்தில் ஈடுபட்டவள்போல, அவன் இஷ்டப்படி நடந்தாள். அன்று தோட்டத்தில் ராதா தனது மூன்றாவது பிறப்பு பெற்றாள்.

அவளுடைய கன்னிப்பருவம் காதலைக் கண்டது? அது கருவிலேயே மாண்டது, அவளுடைய இரண்டாம் பிறப்பு கணவனுக்கு மனைவியாக வாழ்க்கையில் ரசமின்றி இயந்திரம் போல இருந்தது. அன்று தோட்டத்தில் சாகசக்கார கருப்பையாவிடம் சிக்கியதால் அவள் மூன்றாம் பிறப்பு வெளிக்குக் கற்புக்கரசியாகவும், மறைவில் பிறருக்குப் பெண்டாகவும் இருக்கும் வாழ்வைப் பெற்றாள்.

கணவனுக்கும் அவளுக்கும் மணமாயிற்று என்பதைத் தவிர வேறு பிணைப்பு இல்லை. அவன், அவள் கழுத்தில் தாலியைக் கடடினானே தவிர மனத்திலே அன்பு என்ற முத்திரையைப் பதிய வைக்கவில்லை. எனவே, அவள் கணவனிடம் கலந்து வாழ்வதைத் தனது கடமை, உலகம் ஏற்படுத்திய கட்டு எனக்கொண்டாளே தவிர, அதுவே தன் இன்பம் என்று கொள்ளவில்லை.

பரந்தாமனை மணந்திருந்தால், அவளைப் பதைக்கப்பதைக்க வெட்டினாலும் பாழும் கிணற்றில் தள்ளினாலும் பயப்பட மாட்டாள். பிறனுடைய மிரட்டலுக்குக் காலடியில் கோடி கோடியாகப் பணத்தைக் குவித்தாலும், நிமிர்ந்து நோக்கியிருக்க மாட்டாள் மற்றொருவனை. அவள் காதற் செல்வத்தைப் பெறவில்லை. இவள் இன்பக் கேணியில் புகவில்லை. எனவே அவள் வாழ்க்கையில் இவனிடம் எளிதில் வழுக்கி விழுந்தாள்.

உலகம் தன் குற்றத்தைத் தெரிந்துகொள்ளாதிருக்கும் மட்டும் கவலை இல்லை என்று எண்ணினாள்.

இனி, இந்த உலகில், ஜோராக வாழவேண்டும். சொகுசாக உடுத்தி நல்ல நல்ல நகைகள் போட்டுக்கொண்டு, கணவர் கொண்டாட, ஆனந்தமாக வாழவேண்டும். அதற்கு காரியஸ்தன் தயவிருந்தால் கணவனைச் சரிப்படுத்த முடியும். காரியஸ்தனோ தன் கால் அடியில் கிடக்கிறான். இனி தனக்கென்ன குறை! என்று எண்ணினாள் ராதா. ராதா புது உருவெடுத்தாள். உடையிலே, தேடித்தேடி அணிந்தாள். நகைகள் புதிதாகப் போட்டாள். ஒரு நாளைக்குப் பத்து முறை முகத்தை அலம்புவாள், நிமிடத்திற்கொருமுறை கண்ணாடி முன் நிற்பாள். வலியச்சென்று, புருஷனிடம் கொஞ்சுவாள். அவள் சரசம் புரியத் தொடங்கினாள். கிழக்கணவன், அவள் வலையில் வீழ்ந்தான். கேட்டதைத் தந்தான். ராதாவே கண்கண்ட தெய்வம் என்றான். ஆனால் அவன் அறியான் பாபம், அவள் கற்பை இழந்த சிறுக்கியானாள் என்பதை.

மயிலும் மாதரும் தமது அழகைப் பிறர் காணவேண்டுமென்ற எண்ணத்துடன் இருப்பதாகக் கவிகள் கூறுவர். மயிலின் தோகை அவ்வளவு வனப்புடன் இருக்கும்போது அது பிறர் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து கிடப்பின் பயன் என்ன? கண்டோர் மனத்தில் களிப்பை உண்டாக்கும் ஒப்பற்ற பணியை அழகு செய்கிறது. அந்த அழகு, அன்றலர்ந்த பூவிலுண்டு! அந்தி வானத்திலுண்டு. அதரத்தில் தவழும் அலங்காரப் புன்சிரிப்பிலுண்டு, கிளியின் கொஞ்சுதலில், குயிலின் கூவுதலில், மயிலின் நடனத்தில், மாதரின் சாயலில் உண்டு! சிற்பத்தில் உண்டு. ஆனால் அதன் சிறப்பை முழுதும் காணவல்லார் மிகச்சிலரே. ஆனால் மாதரின் எழில் அத்தகையதன்று. அது கண்டவரை உடனே களிக்கவைக்கும் தன்மையது. காற்று வீசும்போது குளிர்ச்சி தருகிறேன் பாரீர் எனக் கூவுமா! அதன் செயல் நமக்கு அந்த இயற்கையான எண்ணத்தை உண்டாக்கும். அதுபோலவே, எந்த மாதும், என் அழகைக் கண்டாயோ எனக்கேளார், ஆனால் தம் அழகைப் பிறர் கண்டனர் களித்தனர், என்பது அவர்களுக்குத் தெரியும். அதிலே பூரிப்பும் பெருமையும் அடையாத பெண்கள் மிகமிகச் சொற்பம்.

ஆனால், அழகு, களிப்பதற்கு எங்ஙனம் உதவுகிறதோ அதைப்போலவே பிறரை அழிக்கவும் செய்கிறது. எனவேதான், புலவர்கள், மாதர்களின் விழியிலே அமிர்தமும் உண்டு. நஞ்சும் உண்டு என்றனர்.

இசைந்த உள்ளத்தை எடுத்துக்காட்டும் விழி, அமிர்தத்தை அள்ளி அள்ளி ஊட்டும்! இல்லை போடா! மூடா! எட்ட நில்! – என்ற இருதயத்துக்கு ஈட்டி போன்ற பதிலைத் தரும் விழிகள், நஞ்சுதரும்! ஆம்! அமிர்தம் உண்டு ஆனந்தப்பட்டவர்களுமுண்டு. நஞ்சு கண்டு நலிந்தவர்களுமுண்டு! ஒரே பொருள், இருவகையான, செயலுக்குப் பயன்படுகிறது! ஆனால் ராதாவின் கண்கள், அமிர்தத்தையும் ஊட்டவில்லை, நஞ்சையும் தரவில்லை! இயற்கையாக எழும் எண்ணத்தை அடக்கி மடக்கி, மாற்றிக்காட்ட, அவளது கண்கள் கற்றுக் கொண்டன!

உண்மையான அன்பு கனிந்திருந்தால், அக்காரிகை, தன்னைக் காதலன் நோக்கும்போது, தலைகுனிந்து நிற்பாள். பளிங்குப் பேழையின் மூடியை மெதுவாகத் திறப்பாள். கண் சரேலெனப் பாயும் காதலன்மீது! நொடியில் மூடிக்கொள்ளும்! இடையே ஒரு புன்சிரிப்பு, மின்னலெனத் தோன்றி மறையும்!

காதலற்று, வேறு எதனாலேனும், பொருள் காரணமாகவோ, வேறு போக்கு இல்லை என்ற காரணத்தாலோ, கட்டுப்பட்ட காரிகை, தன்னுடன் பிணைக்கப்பட்டுள்ளவன் தன்னைக் காணும்போது, உள்ளத்தில் களிப்பு இருப்பினும் இல்லாது போயினும், பற்களை வெளியே காட்டியும், அவன் அப்புறம் சென்றதும், முகத்தில் மெருகு அற்றுச் சோர்வதும் உண்டு! தானாக மலர்ந்த மலருக்கும், அரும்பை எடுத்து அகல விரித்ததற்கும் உள்ள வித்தியாசம் இங்கும் உண்டு!

ராதா மலராத மலர்! அரும்பு! முள்வேலியில் கிடந்தது கருப்பையா, அதனை அகல விரித்தான்! அவன் ஆனந்த மடைந்தான். ராதா ஆனந்தமடைந்ததாக நடித்தாள்! அந்நடிப்பே அவனுக்கு நல்லதொரு விருந்தாயிற்று! நடிப்பும் ஒரு கலைதானே!

கருப்பையாவுக்கும் ராதாவுக்கும் கள்ள நட்பு பெருகி வருவதைக் கணவனறியான். நல்ல தோட்டம், அழகான மாடு கன்று, இருப்பது கண்டும், பெட்டியைத் திறந்ததும் பணம் நிரம்பி இருப்பதைப் பார்த்தும் பெருமை அடைவதைப் போலவே தன் அழகிய மனைவி ராதாவைக் கண்டு பெருமை அடைந்தான்.

“என் ராதா குளித்துவிட்டு, கூந்தலைக் கோதி முடிக்காது கொண்டையாக்கி, குங்குமப் பொட்டிட்டு, கோவில் போகும்போது லட்சுமியோ, பார்வதியோ என்று தோன்றுகிறது. பூஜா பலன் இல்லாமலா எனக்கு ராதா கிடைத்தாள்” என்று அவள் கணவன் எண்ணினான்.

அந்த லட்சுமி தனது செல்வத்தை, இன்பத்தை, கருப்பையாவுக்குத் தருவதை அவன் அறியான். அறியவொட்டாது அபின் தடுத்தது. நாளுக்கு நாள் அபினின் அளவும் அதிகரித்தது. கள்ள நட்பும் பெருகிவந்தது. இவ்வளவு சேதியும் பரந்தாமன் செவி புகவில்லை.

அவன் செவியில்,

“காயமே இது பொய்யடா நல்ல காற்றடைத்த பையடா” என, கருணானந்த யோகீசுரர் செய்துவந்த கானமே. பரந்தாமன் ஒரு பாலசந்நியாசியாகக் காலந்தள்ளி வந்தான். காதலைப் பெறமுடியவில்லை. கருத்திலிருந்து சாரதாவை அகற்ற முடியவில்லை. அன்று மருண்டு, ஊரை விட்டோடி, பாழும் சத்திரத்தில் படுத்துப் புரண்டு, கள்ளரைக் கண்டு கலங்கி, கடுக நடந்து தோப்புக்குள் புகுந்து துயின்ற நாள் தொட்டு, பரந்தாமன் ஊர் ஊராக அலைந்தான்! காவி கட்டியவர்களை எல்லாம் அடுத்தான்! “சாந்தி வேண்டும் சுவாமிகளே! உலக மாயையினின்றும் நான் விடுபட அருளும் என் ஐயனே! உண்மை நெறி எதுவெனக் கூறும் யோகியே!” என்று கேட்டான் பலரிடம்.

கருணானந்த யோகீசுரர், தமது சீடராக இருப்பின், சின்னாட்களில் கைலை வாழ் ஐயனின் காட்சியும் காட்டுவோம்” எனக் கூறினார். பரந்தாமன், சிகை வளர்த்தான். சிவந்த ஆடை அணிந்தான். திருவோட்டைக் கையிலெடுத்தான்.

“சங்கர சங்கர சம்போ, சிவ சங்கர, சங்கர சம்போ” என்று கீதம் பாடியபடி கிராமங்கிராமமாக யோகீசுரருடன் சென்றான்.

“ராதா! ஒரு விசேஷம்!”

“என்ன விசேஷம்?”

“நம் வீட்டுக்கு விருந்தாளிகள் வருகின்றனர் நாளைக்கு!”

“யார் வருகிறார்கள்!”

“சென்னையிலிருந்து எனது உறவினர் ஒருவர் வருகிறார். சிங்காரவேலர், என்பது அவர் பெயர். அவருடன் கோகிலம் என்ற அவர் தங்கை வருகிறாள். அவர்கள் மகா நாசுக்கான பேர் வழிகள். பெரிய ஜமீன் குடும்பம்!”

“வரட்டுமே, எனக்கும் பொழுது போக்காக இருக்கும்”

“கோகிலத்தை நீ கண்டால் உடனே உன் சிநேகிதியாக்கிக் கொள்வாய். நன்றாகப் படித்தவள் கோகிலம்.”

“படித்தவர்களா! சரி சரி! எனக்கு அல்லியரசானிமாலை தவிர வேறு என்ன தெரியும்? என்னைப் பார்த்ததும் அந்தம்மாள், நான் ஒரு பட்டிக்காட்டுப் பெண் என்று கூறி விடுவார்கள்.”

“கட்டிக் கரும்பே நீயா, பட்டிக்காட்டுப் பெண்–” என்று கூறிக்கொண்டே ராதாவின் ரம்மியமான கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினான் கணவன்.

“இதுதானே உங்கள் வழக்கம்! இது என்ன தவடையா ரப்பர் பந்தா, இப்படிப் பிடித்துக் கிள்ளுவதற்கு வரட்டும் அம்மா, சொல்லுகிறேன், நீங்கள் செய்த வேலையை....” என்று கொஞ்சினாள் ராதா.

“அடடா! பாபம் கன்னம் சிவந்துவிட்டதே! ராதா, கிள்ளினதற்கே இப்படிச் சிவந்துவிட்டதே...”

“போதும் நிறுத்துங்கள் விளையாட்டை. நான் பூப்பறிக்கப்போக வேண்டும்” என்று கூறிவிட்டு, ராதா, தன் கணவன் தன்னிடம் வசியப்பட்டு இருப்பதை எண்ணிப் பெருமை அடைந்தபடியே தோட்டத்துக்குச் சென்றாள். அங்குக் கருப்பையா காத்துக் கொண்டிருந்தான்.

“ஏது ரொம்ப குஷிதான் போலிருக்கு!” என்று கூறிக் கொண்டே, ராதாவின் கரங்களைப் பிடித்து இழுத்தான். “இது என்ன வம்பு! விடு கருப்பையா, அவர் வந்துவிட்டால் என்ன செய்வது?” என்று கூறிக் கையை இழுத்துக் கொண்டாள், அந்த வேகத்தில், வளையல் உடைந்து, கீறிக்கொண்டதால், பொன்னிற மேனியில், செந்நிற இரத்தத் துளியும் வந்தது.