சரி என ஒப்புக்கொண்டான்
கருப்பையா. நான் வெளியே போவதற்கு, படத்தை நான் வெளியிடாதிருப்பதற்கு,
மாதா மாதம் 200 ரூபாய், தவறாமல் என் சென்னை விலாசத்துக்கு
அனுப்பிக் கொண்டு வரவேண்டும். நான் கண்டிப்பான பேர்வழி.
ஒரு முறை பணம் வருவது தவறினாலும் படம் வெளியாகும். படம்
வெளிவந்தால் என்ன ஆகும் என்பது உனக்கே தெரியும். ராதா
கர்ப்பவதியல்லவா! அவள் பிள்ளை தெருவில் அலைய வேண்டித்தான்
வரும்” என்று வேலன் “கண்டிஷன்கள்” போட்டான்.
“ஐயா உனக்குக் கருணை இல்லையா?” என்று கெஞ்சினான் கருப்பையா.
“கருணை இருந்தது சில வருஷங்களுக்கு முன்பு. இப்போது கருணை
இல்லை. இப்போது உலகமும் உல்லாசமும் எதிரே இருக்கிறது”
என்றான் அந்த உல்லாசக் கள்ளன்.
வேறு வழியின்றிக் கருப்பையா ஒப்புக்கொண்டான்.
மறுதினம் ஆயிரம் ரூபாய், (பாங்கியில் அவன் போட்டு வைத்திருந்த
பணம் அதுதான்) கொடுத்தான்.
உல்லாசக் கள்ளர்கள், வீட்டில் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு,
ஊருக்குப் பிரயாணமாயினர்.
வேலனோ, கோகிலமோ, பேச்சிலோ, நடவடிக்கையிலோ, ராதா கருப்பையா
மர்மக்காதலைப் பற்றிக் கண்டு கொண்ட
தாக, ராதாவின் புருடனுக்குக் காட்டிக் கொள்ளவேயில்லை.
“கண்ணே ராதா, போய் வரட்டுமா, ஆண் குழந்தை பிறந்தால் பிரபாகரன்
என்று பெயரிடு, பெண் பிறந்தா, கவனமிருக்குமா” என்று கொஞ்சினாள்
கோகிலம் சாரதாவிடம்.
ராதாவின் புருடன், விருந்தாளிகளை மிக மரியாதையுடன் அனுப்பி
வைத்தார். அபின் உலகில் அலையும் அவருக்கு மர்ம சம்பவங்கள்
என்ன தெரியும் பாவம்!
கருப்பையாவுக்கும், சாரதாவுக்கும் மாதா மாதாம் 200 ரூபாய்
சேகரிப்பது தவிர வேறு வேலை கிடையாது.
கருப்பையா ஓய்ந்த வேளையில் எல்லாம், எந்தக் கணக்கை எப்படி
மாற்றுவது எப்படிச் சூது செய்வது என்ற யோசனையிலேயே இருந்தான்.
வீட்டில் தன் புருஷனின் பரம்பரைச் சொத்துகளைக் கொஞ்சங்
கொஞ்சமாகக் கணவனுக்குத் தெரியாமல் திருடித் திருடிக்
கருப்பையாவிடம் தந்து வந்தாள் ராதா.
செக்கு இழுத்து இழுத்து மாடு கெட, எண்ணெயைத் தடவித் தடவிப்
பிறர் மினுக்குவதைப் போல ராதாவும் கருப்பையாவும் பாடுபட்டு,
திருடி, சூது, சூழ்ச்சி செய்து பணம் சேர்த்துச் சேர்த்து
அனுப்ப அதனை வைத்துக்கொண்டு ஆனந்தமாக விஸ்கியும் பிராந்தியும்
வாங்கிக் குடித்துச் சிரித்தான் சிங்காரவேலன்.
“இப்படியும் எனக்குத் தொல்லை வருமா, நீ செய்த வேலைதானே.
பாவி உன்னால்தானே நான் இப்பாடுபடுகிறேன். திருடுகிறேன்.
அவர் என்றைக்கேனும் கண்டுவிட்டால், எங்கே பச்சைக்கல் பதக்கம்
என்று கேட்க ஆரம்பித்தால் நான் என்ன செய்வேன்” என்று சிந்தை
நொந்து கருப்பையாவைக் கேட்பாள். அவன் பலமுறை சாதகமாகவே
பதில் கூறினான். சஞ்சலமும் சலிப்பும் அவனுக்கும் ஆத்திரத்தை
மூட்டிவிடு
மல்லவா? “சரி! என்னைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அவன்
படத்தைக் காட்டிவிடட்டும். நான் ஒன்றும் சந்நியாசி அல்ல!
உனக்குத்தான் ஆபத்து. ஓட வேண்டியதுதான் நீ வீட்டை விட்டு”
என்று மிரட்டினான்.
“படுபாவி! என்னைக் கெடுத்ததுமின்றி, மிரட்டியுமா பார்க்கிறாய்.
நீ நாசமாய்ப் போக, உன் குடிமுழுக” என்று ராதா தூற்றினாள்.
ஆனால், மாதம் முடிகிறது என்றதும், இருவரும் தகராறுகளை
விட்டுவிட்டு, பணத்தைச் சேர்த்து அனுப்புவதிலே அக்கறையாக
இருப்பார்கள். ஏன்! வயிற்றுலுள்ள குழந்தை வாழ்க்கையில்
இழிசொல்லோடு இருக்கக் கூடாதே! அதற்குத்தான்!
“பாவி, படத்தைக் காட்டி, என் முரட்டுக் கணவன் என்னைத்
துரத்திவிட்டால், என் குழந்தையின் கதி என்னவாகும் கண்டவர்
ஏசுவார்களே, அதோ அந்தப் பிள்ளை, வீட்டை விட்டு ஓடிவிட்டாளே
ராதா, அவள் பிள்ளை என்றுதானே தூற்றுவார்கள்.
நான் செய்த குற்றம், என் குழந்தையின் வாழ்க்கையைக் கெடுக்குமே
என்று எண்ணும்போது ராதாவின் நெஞ்சு ‘பகீர்’ என்றாகும்.
மாதங்கள் ஆறு பறந்தன. மாதம் தவறாது பணம் போய்ச் சேர்ந்தது.
ஓர் ஆண் குழந்தையும் ராதாவுக்குப் பிறந்தது. கருப்பையாவின்,
கணக்குப் புரட்டுகளும், ராதாவின் திருட்டுகளும் அதிகரித்தன.
இருவருக்கும் இடையே சச்சரவும் அதிகரித்தது. இவர்களின்
நல்ல காலத்திற்கு அடையாளமாக, ராதா புருஷனின் அபின் தின்னும்
வழக்கமும் அதிகமாகிக் கொண்டே வந்தது.
இதே நேரத்தில் கருணானந்த யோகீசுரருக்கும், பரந்தாமனுக்கும்
சச்சரவு வளர்ந்தது. மனச்சோகத்தை மாற்ற காவியணிந்த யோகியின்
சேவையை நாடிய பரந்தாமன். காவி பூண்ட கருணானந்தன், காசாசை
பிடித்த கயவன் என்பதை உணர்ந்தான். அவனுக்குத் தன் நிலைமையில்
வெறுப்பு ஏற்பட்டது.
யோகியைக் கண்டிக்கத் தொடங்கினான். ஊரை ஏய்க்க உருத்திராட்சமா?
கண்டவரை மயக்க காவியா விபூதி பூசிக்கொண்டு, விபரீதச்
செயல் புரிவதா? என்று கேட்க ஆரம்பித்தான். யோகி ஒரு திருட்டு
போகி, என்பது பரந்தாமனுக்குத் தெரிந்ததும், இப்படிப்பட்டவனிடம்
சிக்கி, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமோ, வீணுக்கு
உழைத்தோமே, என்று வருந்தினான்.
“நான் என் நிலைமையைப்பற்றி மட்டுமே கவனித்தேன், என் சுகம்,
என் மன ஆறுதல் என் அமைதியைப் பற்றி அக்கறை கொண்டனேயன்றி,
என்னிடம் காதல்கொண்டு கட்டுகளில் சிக்கிக் கலங்கிய காரிகையின்
கஷ்டத்தைப் போக்க நான் என்ன செய்தேன். அவள் எக்கதியானாள்?
அவள் பக்கத்தில் அல்லவா நான் நின்று பாதுகாத்திருக்கவேண்டும்
அதுதானே வீரனுக்கு அழகு. நான் ஒரு கோழை. எனவேதான், கோணல்
வழி புகுந்தேன்” என்று மனங்கசிந்தான்.
நாளாகவாக, பரந்தாமனுக்குக் கருணானந்த யோகியிடம் வெறுப்பும்
கோபமும் வளர்ந்தது. உலகின் முன் அவனை இழுத்து நிறுத்திவிட
வேண்டுமென்று எண்ணினான்.
இந்நிலையில் சென்னை வந்து சேர்ந்தார் கருணானந்தர் தமக்கெனப்
புதிதாகத் தயாரிக்கப்பட்டிருந்த மடத்தில் தங்கினார்.
சென்னை, நாகரித்திலும் படிப்பிலும் மிக முன்னேறிய நகரமாயிற்றே,
இங்கே யோகியின் தந்திரம் பலிக்காது என்று பரந்தாமன் எண்ணினான்.
ஆனால், சென்னையைப்போல கருணானந்தருக்கு ஆதரவு தந்த ஊரே
இல்லையெனலாம். அவ்வளவு ஆதரவு தந்துவிட்டது சென்னை.
சீமான்களெல்லாம் சீடர்களாயினர். மேனாட்டுப் படிப்பில்
தேறியவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், பத்திரிகைகாரர்கள்
யாவரும், சீடர்களாயினர்.
கருணானந்தரின் தோழரொருவர், ஒரு பிரபல பத்திரிகையில்
இருந்தார். அவர் யோகியின் குணாதியசங்களைப் பற்றி, கட்டுரைகள்
வெளியிட்டார். அவருடைய ‘தத்துவமே’ உலகில் இனி ஓங்கி வளருமென்றார்.
அவர் சர்வமத சமாஜத்தை உண்டாக்குவார் என்று கூறினார்கள்
பலர்.
அவருடைய கொள்கைக்கும் அரவிந்தர் கொள்கைக்கும் அதிக வித்தியாசமில்லை
என்று வேறொருவர் கூறினார்.
மடத்தின் வாயிலில் மணி தவறாது மோட்டார்கள் வரும். விதவிதமான
‘சீமான்கள்’ அவருடைய பக்தி மார்க்கத்தைக் கேட்டு ஆனந்திப்பர்.
பரந்தாமன் திடுக்கிட்டுப் போனான். சென்னையின் நாகரிகம்
அதன் கட்டடங்களிலும், மக்கள் உணவிலும் உல்லாச வாழ்விலும்
காணப்பட்டதேயன்றி, உள்ளத்திலே மிகமிகக் குருட்டுக் கொள்கைகளே
இருப்பதைக் கண்டான். உலகை ஏமாற்றும் ஒரு வஞ்சகனிடம் ‘வரம்’
கேட்க பலர் வருவது கண்டு, சிந்தை மிக வெந்தான்.
ஆஹா! பகட்டு வேஷத்துக்குப் பாழும் உலகம் இப்படிப் பலியாகிச்
சீரழிகிறதே என்று வாடினான். இனி இந்த வஞ்சக நாடகத்தில்
தான் பங்குகொள்ளக் கூடாது என்று தீர்மானித்தான். நாள்
முழுவதும் அத்தீர்மானம் வளர்ந்து வலுப்பட்டது. ஒருநாள்
நடுநிசியில் பரந்தாமனின் உள்ளம் பதைபதைத்தது.
நேரே யோகியின் அறைக்குச் சென்று, எச்சரித்து விட்டு மடத்தை
விட்டு விலகி விடுவது என்று முடிவு செய்து கொண்டான்.
கோபத்துடன் எழுந்தான், கொத்துச்சாவியை எடுத்தான் பெட்டியைத்
திறந்தான். இரண்டு வெள்ளை வேட்டிகளை எடுத்துக்கொண்டான்.
காவியைக் களைந்து வீசினான். வெள்ளை வேட்டிகளைக் கட்டிக்கொண்டான்,
உருத்திராட்ச மாலைகளை எடுத்தெறிந்தான்.
நேரே யோகி படுத்துறங்கும் அறைக்குச் சென்றான். கதவு சாத்தப்பட்டிருந்தது,
ஆனால் கதவிடுக்கில் வெளிச்சம் தெரிந்தது.
அடிமேல் அடி எடுத்து வைத்து, கதவருகே சென்று உள்ளே நடப்பதை
நோக்கினான்.
‘யோகி’, மங்கையொருத்தியுடன் சல்லாபித்துக் கொண்டிருப்பதைக்
கண்டான்.
“கோகிலா! நீ என்னை உதவாக்கரை என்று ஒதுக்கித் தள்ளினாயே.
பார் இப்போது!” என்று யோகி கூறிட, “இவ்வளவு சமர்த்து
உமக்கு இருப்பதைக் காணவே நான் உம்மை முன்னம் வெறுத்தேன்”
என்று கோகிலம் என்று அழைக்கப்பட்ட பெண் கூறினாள்.
பரந்தாமனுக்கு ஆத்திரம் பொங்கிற்று. கதவைக் காலால் உதைத்து
உள்ளே சென்று யோகியின் கன்னத்தில் அறையலாமா என்று தோன்றிற்று.
பொறு மனமே பொறு என்று நின்றான்.
“அழகாபுரி உமக்குத் தெரியுமோ” என்றாள் கோகிலம்.
“அங்கே என்ன அதிசயம்” என்றார் யோகி.
“அங்கே ராதா என்றொரு பெண்....” என்று கோகிலம் கூறலானாள்.
தன் காதலி ராதாவின் பெயர் உச்சரிக்கப்பட்டவுடன் பரந்தாமன்
ஜாக்கிரதையாக உள்ளே என்ன பேசுகிறார்கள் என்பதை உற்றுக்
கேட்கத் தொடங்கினான். யோகியின் மடி மீது சாய்ந்தபடியே,
அவள் ராதாவின் ரசமுள்ள கதையைக் கூறலானாள்.
கோகிலம், ராதாவின் சேதி பூராவையும், ஒன்று விடாது கூறினாள்.
ஒரு ‘போட்டோ’ மூலம் தன் அண்ணன், அவளை மிரட்டுவதைக் கூறியபோது,
“இது ஒரு பிரமாதமா? இருப்பதைக் காட்டி உன் அண்ணன் மிரட்டுகிறான்.
யாரவள், ராதாவா, அவள் மிரளுகிறாள். இந்தக் கருணானந்தன்
செய்வது உனக்கென்ன தெரியுமடி, கட்டழகி” என்று கொஞ்சினான்,
யோகி வேடம் பூண்ட போகி.
“உன் சமர்த்தை உரைக்க ஒரு நாக்கும் போதாதே” என்று இசைந்தாள்
கோகிலம் கிண்டலாக.
“கேள் கோகிலா, இருப்பது கண்டு மிரள்வது, இயல்பு. இல்லாதது
கண்டு மிரள்வதை என்னென்பேன் பேதை மக்களிடம்.
பிடிப்பான், அடிப்பான், கடிப்பான், உதைப்பான்
பேசினாயா நமச்சிவாயா என்பான்
சிவனையோ திருநீறு எனக்கேட்பான்
என்று கேட்டு, பற்களை நறநறவெனக் கடித்து, மீசைகள் படபடவெனத்
துடிக்க, அந்த நரகலோகத் தூதர்கள், சிவபக்தி அற்றவனின்
சிரத்தில் குட்டி, கரத்தில் வெட்டி, எரிகிற கொப்பரையில்
எறிந்து, சுடுகின்ற மணலில் உருட்டி, செந்தேள் கருந்தேள்
விட்டுக் கொட்டவைத்து சித்திரவதை செய்வார். எனவே மெய்யன்பர்களே.
“மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு”
என்ற மணிமொழிப்படி, விபூதி ருத்திராட்சமணிந்த வில்வாபிஷேகனை,
வேண்டிட வேண்டும்” என நான் நரகலோகக் காட்சி பற்றி பிரசங்கிக்கும்போது
அடடா, இந்த மக்கள்தான் எவ்வளவு நம்புகிறார்கள். எத்தனை
பயம், இதைவிட ராதாவின் பயத்தை நான் கண்டு ஆச்சரியப்பட்டேன்”
– என்றான் யோகி.
“அதுவுஞ்சரிதான்” என்றாள் கோகிலம்.
“ஆகவே நீ என்னை அணைத்திட வாடி.
அணைத்திட வாடி ஆனந்தத் தோடி பாடி”
என்று யோகி ஜாவளி பாடினான், சரசமாடினான், ஜடையைப் பிடித்திழுத்தான்.
அவள் இவன் ருத்திராட்ச மாலையைப் பிடித்திழுத்தாள். பொட்டைக்
கலைத்தான் இவன். அவள் திருநீறைத் துடைத்தழித்தாள். கிள்ளினான்!
கிள்ளினாள். நெருக்கினான்! நில் என்றாள். சிரித்தான்!
சீறுவதுபோல் நடித்தாள். எழுந்தான்! அவள் படுத்தாள்.
எட்டி உதைத்தான் கதவைப் பரந்தாமன், ஆத்திரம் தாளமாட்டாது!!
மட்டி! மடையா! எனத் திட்டினான். மாது கோகிலம் மருண்டாள்.
“மானத்தைப் பறித்திடுவேன், உன் சூது மார்க்கத்தை அழித்திடுவேன்,
ஊரை இதோ எழுப்பிடுவேன், உன் சேதி உரைத்திடுவேன்” என்று
கோபத்துடன் கூறினான் பரந்தாமன்.
““பரந்தாமா! பொறு! பொறு! பதறாதே! ஏதோ நடந்தது நடந்துவிட்டது.
இவள் என் சொந்த மனைவி கோகிலம், கூறடி உள்ளதை, நான் குடும்பம்
நடத்த முடியாது திகைத்தேன். பாடுபட முயன்றேன். உலகம் ஏற்றுக்
கொள்ளவில்லை. எனவே இவ்வேடம் பூண்டேன். என் மானத்தைக்
காப்பாற்று. உன் காலடி விழுவேன்” என்று கருணானந்தன் அழுதான்.
மடத்துக்கென வரும் காணிக்கையை எண்ணினான், ஐயோ, அது வராவண்ணம்
இப்பாவிப் பரந்தாமன் செய்திடுவானே, என் செய்வது என்று
பயந்தான்.
“மோசக்கார வேடதாரியே கேள்! இனி உன் முடிவு காலம் கிட்டிவிட்டது.
நீ பிழைக்க வேண்டுமானால், அந்த ராதா போட்டோவை என்னிடம்
தந்துவிட ஏற்பாடு செய். இல்லையேல் உன்னை, கரும்புள்ளி,
செம்புள்ளி குத்தி, கழுதை மீது ஏற்றி ஊர்வலம் வரும்படிச்
செய்வேன். உஷார்” என்றான் பரந்தாமன்.
“ராதாவின் போட்டோவிலே என்ன ரசம் கண்டீர்” எனச் சாகசமாகக்
கேட்டாள் கோகிலம்.
“அதிரசம்” என்று அலட்சியமாகப் பதிலளித்தான் பரந்தாமன்.
யோகி, மங்கையின் மலரடி தொழுதான். அவள் முதலில் மறுத்தாள்.
பிறகு திகைத்தாள். கடைசியில் அண்ணனிடமிருந்து அப்படத்தைத்
திருடிக்கொண்டு வருவதாகக் கூறினார்.
“புறப்படு” என்றான் பரந்தாமன்.
“போவோம்” என்றாள் கோகிலம்.
நள்ளிரவில், கோகிலமும் பரந்தாமனும் மெல்ல, சிங்காரவேலன்
ஜாகை சென்றனர்.
கோகிலம், படத்தை அதன் ‘நெகட்டிவ்’ உள்பட, திருட்டுத்தனமாக
எடுத்து, பரந்தாமனிடம் கொடுத்துவிட்டு, நீ மிரட்டினதற்காக
நான் இதனைத் தருவதாக எண்ணாதே. முன்னாளில் நீ ராதாவிடம்
கொண்ட காதல் இவ்வளவு காலத்துக்குப் பிறகும் அணையாதிருப்பது
கண்டு, மகிழ்ந்தே இதனைத் தருகிறேன். நான் அறிவேன் உன்
சேதி யாவும், அன்றொரு நாள் தோட்டத்தில் அவள் எல்லாம்
என்னிடம் கூறினாள். ஆனால் நான் நீ காதல் இழந்ததுடன், வேறு
வாழ்வில் புகுந்திருப்பாய் என்றே எண்ணினேன். இன்றுதான்
கண்டேன், அன்று அவள் தீட்டிய சித்திரம் இன்னமும் இருப்பதை”
என்று மிகுந்த வாஞ்சையுடன் கூறினாள்.
பரந்தாமனின் கண்களில் பல துளி நீர் சரேலென வந்தது.
* * *
“ஐயோ! புளிய மரத்தைப் பாருடா பொன்னா” என்று அலறினான்
பொம்மன்.
“பிணம் தொங்குதேடா பிடிடா ஓட்டம் தலையாரி வீட்டுக்கு”
என்று கூறினான் பொன்னன். கரியா, வரதா, காத்தா, முத்து
எனக் கூக்குரல் கிளம்பிற்று. அமிர்தம், கமலம், ஆச்சி அகிலாண்டம்
என்ற படைகள் வந்தன. மரத்திலே தொங்கிய பிணம், காற்றிலே
ஊசலாடிற்று. அதைக் கண்டவர்களின் குடல் பயத்தால் நடுங்கிற்று.
“கூவாதே! கிட்டே போகாதே!” என்றனர் சிலர்.
“அடி ஆறுமாதம் கர்ப்பக்காரி. அகிலாண்டம் இதைப் பார்க்கக்
கூடாது” என்று புத்தி புகட்டினாள் ஒரு மாது.
“ஐய்யய்யோ இது என் அக்கா புருஷனாச்சே” என்று அலறினாள்
வேறொரு வீரி.
“ஆமாம்! ஆமாம்! கருப்பையாதாண்டோ! அடடா? இது என்னடா அநியாயம்”
என்றான் பொம்மன்.
தலையாரி வந்தான். ஊர் கூடிற்று. கருப்பையாவின் மனைவியும்
மக்களும், மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கூடிவிட்டனர்.
கருப்பையா புளியமரத்துக் கிளையில் பிணமாகத் தொங்குவது
கேட்ட ராதாவின் முகம் வெளுத்துவிட்டது.
அவள் புருஷன் அழுதே விட்டான்.
ஊர் முழுவதும் ஒரே அர்க்களம்தான்.
ஏன் கருப்பையா தற்கொலை செய்துகொண்டான் என்பதை ஊர் அறியாது.
வருட முடிவில், வீட்டுக் கணக்குப் பார்ப்பார். அதிலே ஆயிரத்துக்கு
மேலே துண்டு விழுந்துவிட்டது. தன் மோசம் வெளிக்கு வரும்.
தன்பாடு பிறகு நாசந்தான். இந்நிலையில் மாதக் கர்ப்பம்
தவறிவிட்டது. மருட்டி உருட்டிக் கடிதம் வந்தது. சாரதா
கைக்கு எப்பொருளும் சிக்கவில்லை. இருவருக்கும் சண்டையோ
நிற்கவில்லை. ராதா, சற்று கடுமையாகப் பேசிவிட்டாள். கருப்பையாவின்
சித்தம் கலங்கிவிட்டது. “ஒரு முழம் கயிறுக்குப் பஞ்சமா,
ஊரில் ஒரு மரமும் எனக்கில்லையா” எனச் ராதாவிடம் வெறுத்துக்
கூறினான். அப்படியே செய்தும்விட்டான். பிணமானான்! இரண்டொரு
மாதத்தில் புளியமரத்துப் பிசாசுமாவான்.
ராதாவின் நிலைதான் என்ன? சிங்காரவேலனின் மிரட்டல் கடிதம்
அவளைச் சிதைக்கத் தொடங்கிற்று.
ஊர்க்கோடியில் ஒரு மாந்தோப்பு. அதில் உள்ள கிணறு ஆழமுள்ளது.
அதுதான் தனக்குத் துணை என முடிவு செய்தாள் ராதா. அந்த
முடிவு செய்தது முதற்கொண்டு அவள் முகத்தில் வேதனை தாண்டவமாடிற்று.
விதி என்னை இப்படியும் வாட்டுமோ என்றெண்ணுவாள் வேதனைக்கோ
நான் பெண்ணாய்ப் பிறந்தேனோ என்பாள். கணவன் தன் மனைவியின்
கலக்கத்தை அறியான், அவள் உடல் இளைப்பது கண்டு, மருந்து
கொடுத்தான்.
பரந்தாமன் போட்டோவை எடுத்துக்கொண்டு அழகாபுரிக்குப்
புறப்பட்டான். இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்தான். இடியும்
மழையும் இணைபிரியாது அழகாபுரியில் அவதி தந்தது. குளம்
குட்டை நிரம்பி வழிந்து ஓடிற்று. பெருங்காற்று அடித்தது,
சாலை சோலையை அழித்தது. மரங்கள் வேரற்று வீழ்ந்தன. மண்சுவர்கள்
இடிந்தன. மாடு கன்றுகள் மடிந்தன. வெள்ளம் பெருக்கெடுத்து
ஓடிற்று. ஊர் தத்தளித்தது. வந்துள்ள வெள்ளம், தன்னைக்
கொள்ளைகொண்டு போகவேண்டும் எனச் ராதா மாரியை வேண்டினாள்.
இருட்டும்வரை ஊர்ப்புறத்தே ஒளிந்திருந்து பிறகு மெல்ல
நடந்து சாரதாவின் தாய் வீட்டை அடைந்தான் பரந்தாமன்.
நரைத்து நடை தளர்ந்துபோன அம்மாது விதவைக் கோலத்துடன்
இருந்தாள்.
“கருத்து, மிரட்டும் கடு மழையில் எங்கிருந்து தம்பி நீ
வந்தாய்” என்றாள்.
“வந்தேன் ஒரு முக்கியமான வேலையாக. நான் ராதாவைப் பார்க்கவேண்டும்”
என்றான் பரந்தாமன்.
“ராதாவையா? நீ பழைய ராதாவென எண்ணாதேயப்பா. அவள் என் மகள்தான்.
ஆனாலும் பெரிய பாவியானாள். அவள் முகத்தில் நான் விழிப்பதே
இல்லை. ஊர் சிரித்துவிட்டது” என்று சலிப்புடன் தாய் கூறினாள்.
“ராதா என்ன செய்தாள்?” என்றான் பரந்தாமன்.
“என்ன செய்தாளா? நல்ல கேள்விதான்!” என்று வெறுத்துக் கூறினாள்
தாய்.
“இதோ, இதைப்பார். இதைத்தானே நீ கூறுகிறாய்” என்று கூறிக்கொண்டே,
போட்டோவைக் காட்டினான் தாயிடம்.
“ஆ! படமும் எடுத்தார்களா!” என்று திகைத்தாள் தாய்.
“பயப்படாதே அம்மா, இதனைக் காட்டத்தான், நான் ராதாவைப்
பார்க்கவேண்டும்” என்றான் பரந்தாமன்.
“அநியாயம்! நீயாவது இந்தப் படத்தையாவது அவளிடம் காட்டுவதாவது
வெட்கக்கேடு” என்றாள் தாய்.
“அம்மா! நீ விஷயமேதும் அறியாய். இந்தப் படத்தை ஒரு போக்கிரி
வைத்துக்கொண்டு, ராதாவை மிரட்டிக் கொண்டிருந்தான். பாவம்
நம் ராதா, எவ்வளவு பயந்தாளோ, பதைத்தாளோ, அழுதாளோ நமக்கென்ன
தெரியும், என்னிடம் இது தற்செயலாகச் சிக்கிற்று. இதனை
ராதாவிடமே கொடுத்துவிட்டால் அவள் மனம் நிம்மதியாகும்!”
என்றான் பரந்தாமன்.
“தம்பீ, பரந்தாமா, உனக்குத்தான் அவள் மீது எவ்வளவு ஆசை.
உம்! உன்னைக் கட்டிக்கொண்டிருந்தால் அவளுக்குப் பாடும்
இல்லை, பழியும் இல்லை” என்றாள் தாய்.
“ஆமாம்! எனக்கு ராதா கிட்டாது போனதால்தான் வாழ்வுமில்லை.
வகையுமில்லை” என்று அழுதான் பரந்தாமன்.
“நாளை காலையில் நான் சேதிவிடுத்து, அவளை இங்கு வரவழைக்கிறேன்.
நீ உடையைக் களைந்துவிட்டு, வேறுதுண்டு உடுத்திக்கொண்டு
படுத்துறங்கு” என்று வேதவல்லியம்மை கூறினாள்.
‘ஆகட்டும்’ என்றான். ஆனால் அழுத கண்களுடனும் நனைந்த ஆடையுடனும்
படுத்துப் புரண்டான். அலைச்சலாலும், அடைமழையில் நனைந்ததாலும்,
மனம் மிக நொந்ததாலும், பரந்தாமனுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது.
கண் திறக்கவும் முடியாதபடி காய்ச்சல். ஊரில் மழையும் நிற்கவில்லை.
உடலில் சுரமும் நிற்கவில்லை. ஆறுகள் பாலங்களை உடைத்துக்கொண்டு
ஓடின! வயல்கள் குளமாயின. செயல் மறந்து படுத்திருந்தான்
பரந்தாமன்.
ஜூரம் முற்றிற்று. உடலும் திடீரெனச் சிவந்தது. வேதவல்லி
தனக்குத் தெரிந்த சில்லறை வைத்தியமெல்லாம் செய்து பார்த்தாள்.
ஒன்றுக்கும் ஜூரம் கேட்கவில்லை.
பரந்தாமன் அலற ஆரம்பித்தான், வேதம் அழுதுகொண்டிருந்தாள்.
ராதாவுக்குச் சொல்லி அனுப்பிப் பயனில்லை. “எப்படி நான்
அவர் முகத்தைப் பார்ப்பேன்” என்று இடிந்து போனால் ராதா.
பரந்தாமனுக்கு ஜூரம் குறைந்ததுபோல் காணப்பட்டது. ஆனால்
அம்மை வார்த்துவிட்டது. சிவந்த அவன் மேனியில் சிவப்புச்
சித்திரங்கள் பல நூறு ஆயிரம் திடீர் திடீரெனத் தோன்றின.
மயக்கமும், மருட்சியும் அதிகரித்தன. குளறலும் குடைச்சலும்
ஆரம்பமாயிற்று. புரண்டு புரண்டு படுத்ததால் அம்மை குழைந்துவிட்டது.
பார்க்கவே பயங்கரமாக இருந்தது பரந்தாமனை.