சாளுக்கியன், சைவத்தின்
மேன்மையை வெற்றிக்குக் காரணம் என்பதை விளக்கினது, கலங்கிக்
கிடந்த வைணவருக்கு, மேலும் கலக்கத்தைக் கொடுத்தது. அவர்களுக்கு
ஆத்திரமாகத்தான் இருந்தது. அவன்மீது அடங்காக் கோபம் ஏற்பட்டது.
அவன் பொய்யுரைத்திருப்பின், கோபம் பொங்கிப் பிறகு அடங்கிவிட்டிருக்கும்.
ஆனால் அவன் சொன்னதை எண்ணிப் பார்க்கப் பார்க்க, அவன்
உரையிலே உண்மை இருக்கக் கண்டனர். காணவே, கோபம் மேலும்
மேலும் கொதித்தது!
அந்தச் சாளுக்கியன் அடிமைதான்! ஆனால் அவன் சொன்னது உண்மை.
வெற்றிக் களிப்பு, அந்த வேதனையை மாற்ற முடியாது. எந்தப்
புலிகேசி களத்திலே பிணமாக்கப் பட்டானோ, அவனுடைய வெற்றி
முரசு, பல்லவத்தின் தலை நகரத் தலைவாயிலில் கேட்டதை அத்தமிழ்
வீரர்களறிவர். மகேந்திரன் காலத்தில் நேரிட்ட அந்த விபத்தைச்
சாளுக்கியன் கவனப்படுத்தினான். என்ன கர்வம்! என்ன ஆணவம்!
தோற்றோடிய துஷ்டன், துடுக்குத்தனமாகவும் பேசுகிறானே!
வெற்றி வீரர்களாக இருக்கும் நம் எதிரிலேயே, நம்மை இழிவாகப்
பேசுகிறானே! என்று கோபம் பிறந்தது முதலில். ஆனால் உடனே
தணிந்து விட்டது. அவன் உரைத்ததோ உண்மை! ஓர் நாள், காஞ்சிபுரம்,
பல்லவத்தின் தலைநகரம், இன்றோ நாளையோ, இரவோ, பகலோ,
இப்போதோ, இன்னும் சற்று நேரத்திலோ, சாளுக்கியனிடம்
சிக்கிச் சீரழியும் என்று வீரர்கள் எல்லாம் விசாரப்பட்ட
நிலை இருந்தது. தோல்வி! துயரம்! வெட்கம்! வேதனை! அதனைத்
தான், பிடிபட்ட சாளுக்கியன் கவனப்படுத்தினான். பிழை அல்ல,
உண்மை.
ஆம்! அந்த நாள், அவர்கள் கவனத்துக்குக் கொண்டு வரப் பட்டதும்,
பழைய நிகழ்ச்சிகள் பலவும் மனக்கண் முன் தோன்றின.
பல்லவ சாம்ராஜ்யத்தைப் பதைக்க வைத்த புலிகேசி, அவர்கள்
மனக்கண்முன் வந்து நின்றான்.
புலிகேசி, இராஷ்டிரகூடர், கடம்பர், கொங்கணர், இலாடவர்,
சேதிநாட்டவர், கலிங்கர், கோசலர், வேங்கி நாட்டவர் என்று
பல்வேறு நாட்டவரை வென்று புகழ் பெற்றவன். சாளுக்கியாதிபதி
சமர் செய்து வைரம் ஏறிய வீரனானான்! எங்கும் வெற்றியே கண்டான்.
புலிகேசியின் புகழ், வடக்கே இமயம் வரை மட்டுமல்ல, பாரசீக
மண்டலம் வரை பரவிற்று. பாரசீக மன்னன் வெற்றிப் பவனி வரும்
புலிகேசியிடம் தோழமை கொண்டாடுவதைத் தனக்குற்ற பெருமை
எனக்கொண்டான். இமயம் தடுத்திராவிட்டால், அதற்கு அப்பாலுள்ள
நாடுகளையும் ‘ஒரு கை’ பார்த்திருக்கக் கூடியவனே புலிகேசி.
சாளுக்கிய நாட்டின் புகழொளியாய் விளங்கிய புலிகேசி பெற்ற
எல்லா வெற்றிகளையும் மிஞ்சிவிட்டது. ஹர்ஷனுடன் போரிட்டுப்
பெற்ற வெற்றி, சாம்ராஜ்யாதிபதி எனவும், சமரில்வல்லவனெனவும்
புகழ் பெற்றவன் ஹர்ஷன். வடநாட்டிலே அவன் அமைத்த வல்லரசு,
தென்னாட்டையும் விழுங்கிவிடக் கூடியதோ என்று எவரும் அஞ்சக்கூடியதாகவே
இருந்தது. வடநாட்டுச் சிற்றரசர் களின் சிரம் தன் அடிதொழ,
மணிமுடி பூண்டு மகோன்னதமாக வாழ்ந்து வந்த ஹர்ஷன், தனக்கு
இணை யாரும் இல்லை என்று இறுமாந்திருந்ததில் ஆச்சரியமில்லை.
அவனுக்கு ஈடும், எதிர்ப்பும், சாளுக்கியத்திலிருந்து கிளம்பிற்று.
புலிகேசி போர் தொடுத்தான். தோல்வி கண்டறியாத ஹர்ஷனைத்
தோற்கடித்தான். புலிகேசியின் புகழ், இந்த வெற்றியினால்
உச்சநிலை அடைந்ததும், சாளுக்கிய நாட்டுக்குப் பெருமதிப்பு
பிறந்தது.
மகேந்திரன், மதிவாணர்களின் தோழன்; இசைவாணர் கட்கு நண்பன்;
மாவீரர்கட்குத் தலைவன். பல்லவ நாடு பலவகை வளங்களுடன் விளங்கிடவே,
மகேந்திரன், கலை இன்பத்திலே மூழ்கினான். மலைகளைக் கோயிலாக்கினான்.
காவியரும் ஓவியரும் களி கொள்ளும் விதத்திலே, செல்வத்தை
அள்ளித் தந்தான். இன்பபுரியாகத் திகழ்ந்தது பல்லவ நாடு.
பூங்காவை அழிக்கப் புயல் கிளம்புவது போல, கலை இன்பத்தில்
ஈடுபட்டிருந்த காவலனின் மன அமைதியைக் கெடுக்கவும், பல்லவ
நாட்டின் சுதந்திரத்தை மாய்க்கவும், புலிகேசி புறப்பட்டான்.
தலைநகருக்கு வெளியே சென்று, தாக்க வரும் சாளுக்கியப் படையை
எதிர்ந்து நின்று பார்த்தான். பல்லவன். முடியவில்லை. பல்லவனின்
படை வரிசையைப் புலிகேசி பிளந்திடலானான். களத்திலே நிலைமை
மோசமாகி வருவதை உணர்ந்தான் மகேந்திரன். கடைசி வரை அங்கேயே
நின்று போரிட்டு, களத்திலே பிணமாவதா, அன்றி வரவிருக்கும்
ஆபத்தினின்றும் அந்தச்சமயம் எப்படித் தப்புவது என்ற முறையைக்
கவனிப்பதா என்று யோசித்தான். ஆவேசத்துடன் போரிடும் சாளுக்கியப்
படையிடம் தோற்றால், தோல்விக்குப் பிறகு, வெற்றி வெறியுடன்
அப்படை முன்னேறிச் செல்லும்; தலைநகருக்குள் நுழையும்.
தலைநகரமோ கலைக்கூடம். சிற்பிகளின் சிந்தனைகளைச் சித்தரித்துக்காட்டும்
மாட மாளிகைகள்! இசை பயிலும் இடங்கள்! கூத்தர் தங்கும்
கூடங்கள்! நல்லற மன்றங்கள்! பள்ளிகள்! இவை எல்லாம் பாழ்
படுமே! பல்லவனின் உள்ளமெலாம் அதனையே எண்ணிற்று. எண்ணிடவே,
என்ன செய்தேனும் தலைநகரை, கலைக்கூடத்தை, காஞ்சிபுரத்தைக்
காப்பாற்றியாக வேண்டும் என்று உறுதி பிறந்தது. ஆம்! காஞ்சிபுரத்துக்குள்ளே
சென்று தங்கிவிட வேண்டும். அந்நகர் கலைக்கூடம் மட்டுமல்ல,
எதிரி சுலபத்திலே பிடிக்க முடியாத கோட்டையுங்கூட! மதிற்சுவர்கள்
பலமானவை.
மகேந்திரன், தன் படைவீரர்களை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரத்துக்கு
வந்து சேர்ந்தான். உள்ளே, முஸ்தீபுகளைப் பலப்படுத்தினான்.
சாளுக்கியப் படைக்கும் பல்லவப் படைக்கும் இடையே, பலமான
மதில்! கலைக்கூடம், கோட்டையாகி விட்டது. முற்றுகையிட்டான்
சாளுக்கியன். காஞ்சிபுரத்தைக் கைப்பற்றுவது அவ்வளவு எளிதானதல்ல
என்பதைக் கண்டான். வேட்டைக்காரரிடமிருந்து தப்பி, சிங்கம்
தன் குகைக்குள்ளே நுழைந்து கொண்டது போலிருந்தது மகேந்திரன்
நிலைமை. இந்திய உபகண்டத்திலே, பல்வேறு இடங்களிலும், தன்
பண்பால், உயர் மதிப்புப் பெற்று விளங்கிய காஞ்சிபுர மக்கள்,
அதுகாலை, கலக்கமடைந்து, காலமெல்லாம் செலவிட்டுக் கருத்தைச்
செலவிட்டு அமைத்த கலைக்கூடங்கள், சாளுக்கியனால் அழிந்துபடுமோ
என்று அஞ்சினர். சமணம், பௌத்தம், வைணவம், சைவம் எனும்
மதத் துறைகள் ஒவ்வொன்றுக்கும், ஆங்கு பேராசிரியர்கள்
இருந்தனர்; பல்கலைக்கழகங்கள் இருந்தன; வணிகர்கள், வெளிநாட்டு
வேந்தர்கட்கும் நுண்ணறிவு கூறிய பண்பினர் இருந்தனர்; நாளந்தா,
தட்சசீலம் முதலிய வடநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குப்
பேராசிரியர்களைத் தந்து உதவிய, சான்றோர் மன்றமாக விளங்கிய
காஞ்சிபுரம், இனிச் சாளுக்கியப் படைக்கு இரையாவதோ! இதற்கோ
இத்துணை எழிலும் செல்வமும், கலையும் உயர்நிலையும் பெற்றோம்,
வளர்த்தோம் என்றெண்ணி ஏங்கினர்.
சாளுக்கிய மன்னன் புலிகேசி, மகேந்திரன் மருட்சி அடைந்தது
கண்டு மகிழ்ந்து, அடியோடு பல்லவ நாட்டை அழித்தொழிப்பதைவிட,
அங்கு தனக்குப் பணிந்த நிலையில் பல்லவ மன்னன் இருந்து
அரசாள்வது சிறந்தது என்று எண்ணியே, சாளுக்கியன் சென்றான்.
பல்லவனின் படைபலம் பாழ்பட்டது. செல்வம் குறைந்தது. மதிப்பு
மங்கிற்று. தோல்வித் துயரத்தால், பல்லவம் துவண்டுவிட்டது.
அதைத்தான் அந்தச் சாளுக்கியன் கவனப்படுத்தினான். பழைய
புண்ணைக் கிளறினான் - கிளறியதோடு விடவில்லை - தோல்வியால்
துவண்ட பல்லவம், மீண்டும் ஒளிபெற்றது. சைவத்தின் பலத்தினால்
என்று கூறுவதன் மூலம், புண்ணிலே வேலும் பாய்ச்சினான்,
எங்ஙனம் தாங்குவர் இந்த வேதனையை.
சைவம் வெல்கிறது! சைவம் ஓங்குகிறது! வீழ்ந்தது வாதாபியல்ல,
வைணவம் வீழ்ந்தது! என்று பல்லவ நாட்டு வைணவர்கள் பதைபதைத்தனர்.
சாளுக்கியன் எதிர்ப்பார்த்தது நடைபெறத் தொடங்கிற்று.
வெற்றிக்களிப்பினூடே வேதனை. ஆனந்தப்பட வேண்டிய மக்களுக்குள்ளே,
அச்சம், அருவருப்பு, அவநம்பிக்கை! ஆம்! அவன் எண்ணத்தின்படி,
பல்லவ நாட்டுக்குள் தீ மூண்டுவிட்டது - கலகத்தீ!
இது மூண்டுவிட்ட பிறகு, சாளுக்கியனின் மனதிலே, நம்பிக்கை
அதிகரித்தது. பரஞ்ஜோதியாரிடம் பணியாளாக இருப்பவன் என்ற
முறையிலே, பலரைக் காணச் சந்தர்ப்பம் கிடைத்ததைப் பயன்படுத்திக்
கொண்டு, சைவத்தின் மேன்மையை விளக்கும் போக்கின் மூலம்
எவ்வளவு அருவருப்பைக் கிளப்ப முடியுமோ அந்த அளவு செய்து
வந்தான்.
“என்ன இது?”
“திருநீறு?”
“ராம! ராம!”
“ஏன்? இந்தத் திருநீறு அல்லவா பல்லவ ராஜ்யத்தைக் காப்பாற்றி,
நரசிம்ம மன்னனின் பீடம் ஆடாதபடி பார்த்துக் கொண்டது -
பாதுகாப்பளித்தது?”
“துடுக்குத்தனமாகப் பேசாதே. ஓய்! வைணவ சிரோன் மணியே!
வாயை மூடும்! வாதாபி தீக்கு இரையாகாது இருந்தால் என்ன
நேரிட்டிருக்கும்?”
“நேரிடுவது என்ன - என்ன ஐயா! மிரட்டுகிறீர்?”
‘நானா? இதுவா மிரட்டல்! உண்மையைக் கண்டு ஏன் நீர் மிரள்கிறீர்?
வாதாபி வீழ்ச்சி, பல்லவனின் மீட்சியல்லவா?’
“ஆமென்றே வைத்துக் கொள்வோம்!”
இதிலென்ன தயை! சாளுக்கியப்படையை, சாலிக்கிராமம் தடுத்துவிடவில்லை,
ஞாபகமிருக்கட்டும். ‘சாடாட்சரம்’ தடுத்தது. சடாட்சரமோ,
பஞ்சாட்சரமோ - எனக்கு அக்கறை இல்லை; எமது நரசிம்ம மன்னர்
வெற்றி பெற்றார் மன்னர், மனமறிந்த பொய் பேசுகிறீர். மாதவன்
அடியார் என்று கூறிக் கொள்கிறீர். மன்னனுக்கு வெற்றியைப்
பெற்றுத் தந்தது, இந்தத் திருநீறு. தோல்வியால் துவண்ட
பல்லவ நாட்டை வெற்றியால் ஜொலிக்கச் செய்த விசித்திர நீறு!
மதிலுக்குள் ஓடி ஒளிந்து மகேந்திரனின் காலத்தை - அவன்
மகன் காலத்தோடு ஒப்பிட்டுப் பாரும்! இடையே என்ன காண்கிறீர்?
அன்று பரஞ்ஜோதி இல்லை; விளைவு என்ன? படுதோல்வி; இன்று
பரஞ்ஜோதி இருக்கிறார். பலன்? பெருவெற்றி! திருநீற்றின்
வெற்றி - சிவனருளின் வெற்றி! - சைவத்தின் மேன்மையை ஜெகம்
அறியச் செய்தது இந்தப் பிடி சாம்பல்! பூசும் நெற்றியில்,
வாழ்க்கை வற்றாத வளமுள்ளதாகும். இது சாமான்யத் திருநீறு
அல்ல - பரஞ்ஜோதி
யின் பூஜைக்குப் பயன்படும், பரிமளத் திருநீறு - பகையை
ஒழிக்கும் பொடி - பல்லவ சாம்ராஜ்யத்தை நிலைநாட்டிய திருநீறு!
வில்லாளன், விபரீதமான விளையாட்டிலே ஈடுபட்டான். சைவத்தின்,
மேன்மையை எடுத்துக் கூறுவது மட்டுமல்ல, மதமாற்ற வேலையையே,
அதிலும் கட்டாய மதமாற்றக் காரியத்தையே துணிவுடன் செய்யலானான்.
அவன் தோற்ற சாளுக்கியன்தான் - அடிமை, சந்தேகமில்லை -
ஆனால் அவன் ‘பெரிய இடத்திலே’ படைத்தலைவர் வீட்டிலே அல்லவா
பணியாளாக இருக்கிறான். அக்கிரமக் காரியந்தான் செய்கிறான்
- கட்டாய மதமாற்றம் - ஆனால், அதற்காக அவனைக் கண்டித்தால்,
தண்டித்தால், அவன் பரஞ்ஜோதியாரிடம் முறையிட்டுக் கொள்வானே!
“என்ன துணிவு உங்கட்கு! எனது மனையிலுள்ள பணியாளைத் தண்டித்தீர்
- அது என்னையே கேவலப்படுத்தியதன்றோ! என்ன எண்ணினீர் என்னைப்
பற்றி! என் ஆற்றல் தேவைப்பட்டது. புலிகேசியை வீழ்த்த.
இன்று என்னை அவமானப்படுத்துகிறீர் - என்று பரஞ்ஜோதியார்
சீறினால் என்ன செய்வது. “நீங்கள் கண்டிக்குமளவு என்ன குற்றம்
புரிந்து விட்டான் வில்லாளன்! திருநீற்றின பெருமையை எடுத்துக்
கூறினதா, குற்றம்! திருநீறு, உமக்குப் பிடிக்கவில்லை,
ஆனால் திருநீற்றுக்காரனின் தோள்வலியும், வாள்வலியும்
தேவைப்பட்டது நாட்டைக் காக்க,” என்று வெகுண்டுரைத்தால்,
என்ன செய்வது என்று கலங்கினர் - மக்கள் - குறிப்பாக, வைணவர்கள்.
மன்னனிடம் முறையிட வேண்டிய அளவு விவகாரம் முற்றிவிட்டது.
மன்னனே, ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டான்.
“அன்னிய நாட்டானின் துடுக்குத்தனம்”
“பரஞ்ஜோதியார் இப்பயனற்றவனை ஏன் பணியாளாகக் கொண்டார்?”
“பரஞ்ஜோதியாருக்குத் தெரிந்திராது, இவனுடைய செயல்.”
“ஒரு சமயம், சாளுக்கியன் சைவத்தின் பெருமையை உணர்ந்தது
பற்றி அவர் மகிழ்கிறாரோ என்னவோ!”
“அவருக்குத் தெரிந்தேதான். இவன் சைவப் பிரச்சாரத்தை இவ்வளவு
துணிவாகச் செய்கிறான் போலும்.”
“பக்கபலமில்லாமல் வெளிநாட்டான் இந்த விபரீதச் செயல் புரிவானா?”
“தன்னைக் கேட்பவர் யார் இருக்க முடியும் இந்த மண்டலத்தில்
என்று பரஞ்ஜோதியார் எண்ணுகிறார் போலும்.”
“வாதாபியே அழிந்தது, வைணவர் எம்மாத்திரமென்று எண்ணுகிறாரோ
என்னவோ?”
“சைவன் நான் - என் நாட்களிலே, அரசாங்க மதமாகச் சைவம் திகழ்வதுதான்
முறை என்று கருதுகிறார் போலும்.”
மன்னனின் செவியில் விழும்படி மட்டுமல்ல, மக்களிடம் பரவுமளவு,
விதவிதமாகப் பேசலாயினர், மேலே குறித்துள்ளபடி. சாளுக்கியன்
பூரிப்படைந்தான். தீ பரவுகிறது என்றெண்ணி வெற்றிப் பாதையிலே
விரைந்து நடக்கலானான். தான் கையாள ஆரம்பித்த முறை பலிக்கிறது
என்று தெரிந்ததும், வில்லாளன், அதைத் தொடர்ந்து நடத்தலானான்
- அவன் மட்டுமல்ல - அவன் துவக்கினான், பல சைவர்கள், அவனைத்
தொடர்ந்தனர். எங்கும் சைவத்தின் மேன்மையைப் பற்றியே பேச்சாகிவிட்டது.
வைணவர்களின் முறையீடு, மன்னன் செவி புகுந்தது, அவன் தீவிரமாக
யோசிக்கலானான்.
கைலைநாதனின் கட்டளையை உனக்குக் கூற வந்தேன் - காடு மலை
வனம் கடந்து. கருத்தறியாது நீ செய்யும் காரியத்தினால்,
உனக்கு நேரிட இருக்கும் சர்வ நாசத்தினின்றும் நீயும்,
உன் ராஜ்யமும், குலமும், தப்ப வேண்டுமானால், பாபத்தைத்
துடைத்துக் கொள்ள வேண்டுமானால், நரசிம்ம மன்னனே! நமச்சிவாயத்தின்
நல்ல தொண்டனாம் பரஞ்ஜோதியை, நரவேட்டையாடும் பழிப்பணியிலே
புகுத்தும் செயலை நிறுத்து இன்றே - இல்லையேல் சொல்லக்
கூசுகிறேன்! மன்னவா! எல்லையற்ற பரம்பொருளின் பக்தனை,
இழி தொழிலில் புகுத்தும் பாபம், உன்னைச் சும்மாவிடாது!
மதலைக்கு மதுவினைத் தருபவள் தாயல்ல, பேய்! மகேந்திரன்
மகனே! மாசிலாமணியாம் ஈசனார்க்குத் தொண்டராக உள்ள பரஞ்ஜோதியை,
‘வெட்டு குத்து’ வேலைக்கு அனுப்பும் உன்னைக் கண்டு, உலகின்
முதல்வன், கோபிக்கிறான் - சபித்திட முடிவு செய்துள்ளான்.
நீ வெற்றி பல பெறுவதற்காக, உன் கீர்த்தி பரவுவதற்காக,
உன் ராஜ்யம் வளர்வதற்காக, உன் எதிரிகளை ஒழிப்பதற்காக,
பரஞ்ஜோதியை - பக்தனை - சிவத் தொண்டனை வேலை வாங்குகிறார்
- பசுவைக் கொன்று தின்பது போன்று பாபக்கிருத்யம் அது
- வேண்டாம், பல்லவ குலாதிபா! பராக்கிரமம் உனக்கு இருந்தால்,
போரிலே நீ வெற்றி பெறு, இரவல் கேட்காதே - அதிலும் இறைவன்பால்
தொண்டு செய்யும் எமது பரஞ்ஜோதியை பாழ்படுத்தி, வெற்றியை
நாடாதே.
உண்மையை உன் உள்ளம் உணரவில்லையா! உன் தகப்பன் மகேந்திரன்
சாளுக்கியனிடம் தோற்றான் - வஞ்சம் தீர்த்துக் கொள்ள
வேண்டிய பொறுப்பு பரஞ்ஜோதியுடைய தல்ல, உன் பொறுப்பு!
தவறினாய்! தயாபரனின் தொண்டனைத் தவறான பாதையிலே திருப்பினாய்.
என்ன யோசிக்கிறாய்! பரஞ்ஜோதி இல்லாப் பல்லவ நாடு, நீரில்லா
ஆறாகுமென்றா? பேஷ்! இதற்கு நீ ஏன் பல்லவ மன்னன் என்ற பட்டத்தைச்
சுமக்கிறாய், பட்டம் உனக்கு; அரசபீடம் உனக்கு! கஷ்டமும்,
நஷ்டமும் பரஞ்ஜோதிக்கா! கைலைவாசன் உன்னைக் கேட்கிறான்,
முற்றிடா முன்னம், பழி வழியைவிட்டு நேர்வழி நடந்து, பாபத்தைப்
போக்கிக் கொள். பரஞ்ஜோதியைச் சிறையிலிருந்து விடுதலை
செய் - உன் அரண்மனை அவனுக்குச் சிறைதான்; சந்தேகம் இல்லை.
நீ தரும் அந்தஸ்து - பொன் விலங்கு; வேண்டாம் அவை. விடுதலைசெய்,
விமோசனம் வேண்டுமானால் படைக்கு வேறு தலைவனைத் தேடு -
பரஞ்ஜோதிக்கு வேலை இருக்கிறது, ஊர் கொளுத்துவது அல்ல
அவன் வேலை.
ஊராள நீ! ஊர்பிடிக்க பரஞ்ஜோதி! பல்லவனே! இது உன் பரம்பரை
நியாயமோ? வீரர் வழி வந்தவனே, விடுதலை செய். இல்லையேல்,
விண்ணவன் விடும் சாபம் உன்னையும், உன் பின் சந்ததியையும்
இலேசாய்விடாது.
மேனி எல்லாம் திருநீறணிந்த அந்தச் சாது, மிக்க சீற்றத்தோடு,
பேசினார் இதுபோல - பேசினரா - கட்டளை பிறப்பித்தார் -
கைலைநாதன் மீது ஆணையிட்டுக் கூறினார். காவலன் துளியும்
பதறாமல், சீறாமல் அவர் உரையைக் கேட்டுக் கொண்டான் - இடையிடையே
புன்சிரிப்புடன்.
மன்னன் கோபிக்குமளவு, கடுஞ்சொற்களை வீசிய காவி அணிந்தோர்,
புயலை எதிர்பார்த்து ஏமாந்தார். மன்னனைத் தன் கேலி மொழியால்,
கோபப் பார்வையால், ஆர்ப்பரிப்பால், தாக்கினான், குன்றெடுக்கும்
நெடுந்தோளனாகிய நிரசிம்மப் பல்லவன், சாந்தத்துடன் வீற்றிருந்தார்
- குறுக்குச் கேள்வி - கோபக்குறி - வெறுப்பு - ஏதுமின்றிக்
கேட்டுக் கொண்டார், வசை மொழிகளை.
மன்னின் போக்குக்கண்டு, சாதுவுக்குக் கடுங்கோபமே பிறந்தது.
“நாடாளும் உன்னை நேரிலே, வாயில் வந்தபடி ஏசுகிறேன். அவமதிப்பாகவே
பேசுகிறேன்! ஆடாமல் அசையாமல், பதறாமல், சீறாமல், அவ்வளவையும்
கேட்டுக் கொள்கிறாயே - ஏன் கோபிக்க மறுக்கிறாய் - ஏன்
என்னைத் தண்டிக்காமலிருக்கிறாய் - வா, போருக்கு!” என்று,
மன்னனை மல்லுக்கு இழுத்தது, அந்தச் சாதுவின் பார்வை! அவன்,
உண்மைச் சாதுவாக இருந்தால்தானே! அவனுடைய அன்றைய போக்கு
ஆச்சரியமூட்டுவதாக கருதலாம் - அவன் சாளுக்கியன் - சாதுவல்ல!
சாதுபோல வேடமணிந்து வந்து, சைவத்தின் பெயரைக் கூறி, சாம்ராஜ்யாதி
பதியை மிரட்டினான் வில்லாளன். வேந்தன், வெகுண்டானில்லை,
“ஆவன செய்வோம். அறனடியாரே! ஆவின் பாலும், முக்கனியும்
அரண்மனை விருந்து மண்டபத்திலே தயாராக உள - வாரும்” என்று
அன்புடன் அழைத்தான்.
“நாம் வந்தது நாவின் ருசிக்காக அல்ல! நாதன் கட்டளையை நாடாளும்
உமக்கு அறிவிக்கவே வந்தோம் - இனிச் செல்கிறோம்” என்று
கூறிவிட்டு, சாது வேடத்திலிருந்த சாளுக்கியன் போய்விட்டான்.
அவன் போன பிறகு, நெடு நேரம் வரையில் மன்னன் சிரித்தான்.
“அரசனிடம் யாரோ ஒரு சாது வந்து, ஏதேதோ பேசினானாம்.”
“மிரட்டினானாம்.”
“சாபம் கொடுப்பேன் என்று கூறினானாம்.”
“மன்னன் மனம்மாறி, அவன் கட்டளையை நிறைவேற்ற இசைந்துள்ளாராம்.”
“சபை கூட்டுகிறாராமே!”
சாது - சாம்ராஜ்யாதிபதி சந்திப்பிற்குப் பிறகு, அரண்மனை
முக்யஸ்தர்கள் இதுபோல் பேசிக் கொண்டனர். அவர்கள் கூறியபடி,
அரச அவை கூடிற்று. மன்னன் நரசிம்மப் பல்லவன், வைணவர்கள்
முறையீடு பற்றியோ, வம்பு பேசிய சாதுவைப் பற்றியோ பிரஸ்தாபிக்கவில்லை.
அவையில், அன்று விசேஷ அலங்காரங்கள் செய்யப் பட்டிருந்தன.
மன்னனின் வருகைக்கு முன்பே, சபை கூடி விடுவது முறை - அன்று
சபைக்கு, மன்னனே முதலில் வந்து சேர்ந்தான். சபையில், பரஞ்ஜோதியாருக்கு
வழக்கமாகத் தரப்படும் ஆசனத்தை எடுத்துவிட்டு, வேறோர்
விலை உயர்ந்த ஆசனம் அவருக்காகப் போடச் செய்தான். வழக்கமான
விசாரணைகளை அன்று நிறுத்திவிட்டான். பரஞ்ஜோதியார் சபை
வந்ததும், தழுவிக் கொண்டான். சபை ஆரம்பமாயிற்று. மன்னன்,
ஆசனத்திலிருந்து எழுந்து நின்றபடி பேசினான், தழுதழுத்த
குரலில்.
“ஆஹா! அபசாரம், அபசாரம்! என்ன காரியம் செய்தேன்! சிவனடியாராகிய
தங்களை, சிவத்தொண்டில் ஈடுபட்டு, மெய்ஞான போதகனின் அருளைத்
தேடும் அவாக் கொண்ட மெய்யன்பராகிய தங்களைப் பாவியேன்,
படுகொலைத் தொழிலல்லவா இதுநாள் பரியந்தம் ஈடுபடுத்தி
வைத்தேன். இறைவனின் கோபத்துக்கு இலக்கானேன். என்னே என்மதி!
தங்கள் பெருமையை முற்றும் உணராது இருந்தேன்!”
“மன்னரே! ஏன் இந்த மனக்கலக்கம்? மண்டலாதிபதி யாகத் தங்களின்
சேவையில் நான் மனமுவந்து ஈடுபட்டவனன்றோ...!”
“எனக்கா சேவை! தாங்களா! தகுமா தவச்சிரேஷ்டரே! தங்களைச்
சேவை செய்யச் சொல்வதா! நானா! என்ன விபரீதமான காரியம்?
மன்னாதி மன்னர்களெல்லாம் தங்கட்குச் செய்தலன்றோ முறை...”
“அரச சேவை, என் கடமைதானே!”
“உமக்கு அரசன் யானோ! திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளன்றோ!”
“அவன் அண்டசராசரங்கட்கும் ஐயன்! ஆயினுமென்ன காவலா! நான்
போர்த் தொழில் புரிவரை மேற்கொண்டேன். தங்களவையில் இடம்பெற்றேன்.
அன்பும் ஆதரவும் பெற்றேன். மன்னருக்காகப் பணிபுரிவது,
அந்த மண்டலத்து வாழ் மக்களின் கடமைதானே? அந்தக் கடமையை
நான் களிப்புடன் ஆற்றினேன்.”
“கலக்கமடைகிறேன், கங்கையைத் தலைக்கணிந்த கடவுளின் திருத்தொண்டரை,
யான், ‘வேலை’ வாங்கும் ‘பாப’ காரியத்தில் இதுவரை ஈடுபட்டதை
எண்ணி,”
“வீண் வேதனை அடைகிறீர் வேந்தரே! நாட்டுக்குப் பணியாற்றுவது
நல்லோர் கடமை. நான் அஃதன்றி வேறென்ன செய்தேன். என்றும்
அப்பணி புரிவதே என் விருப்பம்; முறையுங்கூட.”
“முறையன்று, அறமன்று. சைவ மெய்யன்பராம் உம்மை, அறியாது
போனேன். பெரும்பழி தேடிக் கொண்டேன். இப்போதுதான் உணர்ந்தேன்
உமது பெருமையினை. அமைச்சரே! சீலராம் பரஞ்ஜோதியாருக்கு
மானியமாக்கிய ஊர்ப் பெயர் குறிக்கப்பட்ட செப்புப் பட்டயம்
எங்கே? பெற்றுக் கொள்க, பெருநெறி கண்டவரே, பிழை பொறுத்தருள்க!”
“மன்னரே! தாங்கள் மனமுவந்து அளிக்கும் இந்த மானியம்...”
“பேழையில் பொற்கட்டிகள் உள்ளன. பெருந்தகையீர்! ஏற்றுக்
கொள்க!”
“என்னே மன்னரின் கொடைத்திறன்! ஏனோ எனக்கு இத்துணைச்
செல்வம்?”
“சைவச் செல்வரே! பெருநிதியன்று யான் அளித்தது”
“ பெருநிதியன்றோ! மன்னரே! தங்கள் ஆதரவு பெற்று அவையில்
அமர்ந்த அன்றே யான் பெருநிதி பெற்றவனானேன். என் அரசர்க்குப்
பணிபுரியும் பேறு கிடைத்ததே பெருநிதியன்றோ! ஏதோ, தங்களின்
வலிமை மிகுந்த படை பலத்தைக் கொண்டு, புலிகேசியைத் தோற்கடித்தேன்
இச்சிறு செயலுக்கு எவ்வளவு பரிசு! என்னென்ன வகையான உபசாரம்!”
“உபசாரமென்று உரைத்திட வேண்டாம் உத்தமரே! என் காணிக்கை
இவை.”
“மன்னா! யான் உமது படைத் தலைவன் - பரிசு இவை - என் பணிக்கு
மெச்சி.”
“பரிசு அல்ல! தாங்கள் பணியாளரல்ல! படைத்தலைமையல்ல, தங்கள்
தகுதிக்கும் தவத்துக்கும் ஏற்ற நிலை.