அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

அரசாண்ட ஆண்டி
7

மன்னன், ஒரு சமயம் நோய்வாய்ப்பட்டான் - ஆபத்தான நிலைமை - மருத்துவர்களே, கடினம் என்று கூறிவிட்டனர். மகன் மரணப் படுக்கையில், அன்னைக்கு அகமகிழ்ச்சி! மகனிடம் கொண்ட வெறுப்பாலா? அது காரணமல்ல. எவ்வளவு வெறுப்பு இருப்பினும், பாசம் விடுமா, மகனை இழக்கத் தாய் விரும்புவாளா? காரணம், வேறு. மன்னன் இறந்துவிட்டால், ரிஷ்லுவைத் தொலைத்து விடலாம் என்ற எண்ணம், அகமகிழ்ச்சியைத் தந்தது. ரிஷ்லுவின் கொடுங்கோன்மைக்கு ஆளாகி அவதிப்பட்டவர்கள் அனைவருமே, இந்த நிலையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.

மன்னன் இறந்ததும், ரிஷ்லுவை வெட்டிப் போடுவதா, நாட்டைவிட்டு விரட்டுவதா?

ரிஷ்லு தொலைந்ததும், யாரார் எந்தெந்தப் பதவி வகிப்பது!

இவையெல்லாம் கூடப் பேசப்பட்டனவாம்.

ரிஷ்லுவுக்கும் உள்ளூரப் பயம்தான்.

மன்னனோ அனைவரையும் ஏமாற்றிவிட்டான் - பிழைத்துக் கொண்டான். ரிஷ்லு, மகிழ்ந்தான் - சதிபேசியவர்கள் மீது பாய்ந்தான்.

மற்றோர் சமயத்தில், மன்னனுக்கும் மேரிக்கும் மிகுந்த நேசம் இருந்தது - மன்னனுக்குச் சரியான தூபமிட்டும், ரிஷ்லுவை விரட்டிவிடும்படி ஏவினார்கள் தாயார். தாயும் மகனும் பேசிக் கொண்டிருந்த தனி அறைக்குச் செல்லவும் ரிஷ்லுவுக்கு அனுமதி கிடையாது. ரிஷ்லுவுக்கு அச்சமாகிவிட்டது. எனினும், கடைசி நேரத்திலே மன்னன் ரிஷ்லுவைக் கைவிட மறுத்து

விட்டான். மேரி மனமுடைந்து, இனி நமது திட்டம் பலிக்காது என்று தெரிந்துகொண்டு ஓய்ந்தே போனாள்.

அவ்விதமான ‘பிடி இருந்தது ரிஷ்லுவுக்கு. மன்னனிடம்’.

எந்த மங்கையின் விழியும் மொழியும் மன்னனுக்கு மது ஆகிவிடுவதில்லை, என்பது ரிஷ்லுவுக்குத் தெரிந்திருந்த போதிலும், இலேசாக அச்சம் தட்டியபடி இருந்தது.

முன்னம் இரு மங்கையர் மன்னன் மனத்தைக் கெடுக்க முயன்ற சம்பவம். இந்த அச்சத்தை வளர்த்தது. எனவே, மன்னனைப் பெண்களுடன் பழகவிடுவது, எப்போதாவது ஆபத்தாக முடிந்து விடக்கூடும் என்று எண்ணினான் ரிஷ்லு, ஆனால் மன்னன், தனியனாக எப்படி இருப்பான்; சோர்வு தட்டுமே! பொழுது போக்க வேண்டுமே! அதற்கென்ன செய்வது!
பதினெட்டு வயது நிரம்பிய, பார்க்க இலட்சணமாக இருந்த பகட்டு வாலிபன் ஒருவன் கிடைத்தான் ரிஷ்லுவுக்கு. பெயர் சின்க் - மார்ஸ். இந்த இளைஞனை அரண்மனை உடை அதிகாரியாக ரிஷ்லு நியமித்தான். மன்னனுடன் பழக, சின்க் - மார்ஸ், எனவே அவனிடம் தாராளமாகப் பேசவும், தன் எண்ணங்களைத் தைரியமாக எடுத்துச் சொல்லவும் மன்னனுக்கு முடிந்தது - அதிலே ஓர் இன்பம் கண்டான். பெண்களுடன் பழகுவது கூடக் கூச்சமாக இருக்கிறது, இவனுடன் பேசுவதும் பழகுவதும் மகிழ்ச்சி தருகிறது என்று நினைத்தான் மன்னன்.

சின்க் - மார்ஸ், ஓர் அசடன். ரிஷ்லுவிடமிருந்து மன்னனைப் பிரித்துவிட முடியும், மன்னனைத் தன் விருப்பப்படி ஆட்டிவைக்க முடியும் என்று எண்ணினான். சதி புரிவோர், அவனைப் பயன்படுத்திக் கொண்டனர். மன்னனின் தம்பி, காஸ்டனும் உடந்தை.

அதுபோது, ரிஷ்லு, ஸ்பெயின் மீது போர் தொடுத்திருந்
தான்.

உடலிலேயோ புண் - சீழ் வடிந்து கொண்டிருந்தது - காய்ச்சல் குறையவில்லை - மருத்துவர் உடலிலிருந்து அடிக்கடி இரத்தத்தை வெளியிலே எடுத்தவண்ணம் இருந்தனர். நோயைக் குறைக்க. மரணப்பாதையிலே சென்று கொண்டிருக்கும் நேரம் அந்த நேரத்திலும், தன் ஆதிக்கத்தைக் குலைக்க ஒரு சதி நடக்கிறது என்று தெரிந்ததும், ரிஷ்லு சீறும் புலியானான். சதி
யிலே தேர்ந்தவர்களெல்லாம் சாய்ந்திருக்கும்போது, அலங்காரப் பொம்மை போன்ற சின்க் - மார்ஸ் எம்மாத்திரம். அவன் தன் திட்டம் வெற்றியாகப் போகிறது என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தான். ரிஷ்லுவோ அவனைச் சிக்கவைக்கும் ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருந்தான்.

சின்க் - மார்ஸ், மன்னனுடன உல்லாசமாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறான். ரிஷ்லுவின் ஆள், மன்னனைத் தனியே கண்டு, ரிஷ்லு தந்த கடிதத்தைக் கொடுத்தான் - மறுகணம், சின்க் - மார்ஸ் அவன் ‘சகாக்களுடன், கைது செய்யப்படுவதற்கு, மன்னன் உத்தரவு பிறப்பித்தான்.

ஸ்பெயின் நாட்டுடன் கூடிக்கொண்டு பிரான்சுக்குத் துரோகம் செய்ய, சின்க் -மார்சும் அவன் துணைவர்களும் திட்டமிட்டனர் என்பதை விளக்கும், கடிதம், ரிஷ்லுவால் மன்னனுக்கு அனுப்பட்டது. சின்க் - மார்ஸ் கட்டிய மனக்கோட்டை தூள்தூளாயிற்று.

சின்க் - மார்சும் அவன் துணைவர்களும் தூக்கிலிடப் பட்டனர்.

ரிஷ்லுவுக்கு இதற்குமேல் ஆதிக்கம் செலுத்த உடல் இடம் தரவில்லை. எப்போதும் உடலைத் துளைத்துக் கொண்டிருந்த நோய், இப்போது உடலை அழுகவே செய்துவிட்டது. பிழைப்பது முடியாத காரியம் என்பது விளங்கிவிட்டது. நார்போன் எனும் நகர் சென்று, ரிஷ்லு, ‘உயில்’ எழுதிவைத்து விட்டான். மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏறக்குறைய எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது என்ற திருப்தி இருந்தது ரிஷ்லுவுக்கு.

நெடுநாட்களாக ரிஷ்லுவுக்கு இருந்து வந்த பயம், லூயி மன்னனுக்கு குழந்தையே பிறக்காததால், மன்னனுக்குப் பிறகு, காஸ்டன் என்னும் இளவல் மன்னனாவானே, என்பது. இந்தப் பயம், ஒழிந்துவிட்டது. நீண்டகாலமாக ஒதுக்கி வைத்திருந்த ஆன் அரசியிடம், மன்னன் எப்படியோ சமாதானமானான். 1638இல், ஓர் ஆண்மகவு பிறந்தது. அந்தச் ‘சேதியை முதலில் வந்து சொன்னவருக்கு, ரிஷ்லு வைரத்தால் செய்யப்பட்ட ரோஜா மலர் ஒன்று பரிசு தந்தானாம்.
மரணப் படுக்கையிலே ரிஷ்லு - மனக்கண்முன் என்ன தெரிகிறது!

ஈடு எதிர்ப்பற்ற ஆதிக்கம் செலுத்திய காட்சிகள்.

எவர் பேச்சுக்கும் இணங்காமல், தன்னிடம் கட்டுப் பட்டுள்ள மன்னன்.

மேரி - முயன்று பார்த்துத் தோற்று, மனம் உடைந்து அங்கும் இங்கும் அலைந்து மாண்டேபோனாள்.

காஸ்டன் - மன்னன் தம்பி, இனித் தனக்கும் அரச பதவிக்கும் சம்பந்தம் இல்லை என்பது புரிந்து விட்டதால், பெட்டியிலிட்ட பாம்புபோலாகிவிட்டான்.

எதிர்த்தவர்கள்? கல்லறையில்! ஜோசப் பாதிரியார்? நல்ல உழைப்பாளி. அவரும் மறைந்துவிட்டார்.

லூகான் நகர பழங் கட்டிடம், அதிலிருந்து புறப்பட்ட பயணம், பாரிஸ் போற்றும் மாளிகையிலே வந்து முடிந்தது.

ரிஷ்லுவின் வாழ்க்கையைப் பொறுத்தமட்டிலே, மகத்தான வெற்றி என்றுதான் கணக்கிடவேண்டும்.

போட்ட திட்டப்படி காரியம் நடந்தேறியது - ஓர் அரசை, தன் கரத்திலே வைத்து, விருப்பப்படி விளையாட முடிந்தது.

பிரபுக்கள் கொட்டமடங்கிவிட்டது. வெளிநாடுகளிலேயும் புகழ் பேசப்படுகிறது. இவை போதுமான சாதனைகள்தாம் என்ற மனத்திருப்தி நிச்சயமாக ரிஷ்லுவுக்கு ஏற்பட்டிருக்கும்.

1642ஆம் ஆண்டு, டிசம்பர் நாலாம் நாள் ‘ரிஷ்லு இறந்தான். அன்று மக்கள் மகிழ்ந்து பல்வேறு இடங்களில் ‘சொக்கப்பானை கொளுத்தினராம்!’

போப்பாண்டவர் இதைக் கேள்விப்பட்டதும், “ஆண்டவன் ஒருவர் இருந்தால், கார்டினல் ரிஷ்லு அவரிடம் பதில் சொல்லித் தீரவேண்டும். ஆண்டவன் இல்லை என்றால், அவன் கீர்த்தியுடன் வாழ்ந்தான் என்றுதான் பொருள்படும்.” என்று கூறினாராம்.
எதையும் திட்டப்படி செய்யும் பழக்கமுள்ள ரிஷ்லு, தனக்குப் பிறகு, தன் ‘செல்வத்தை யாரார் எப்படி எப்படிப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும், திட்டமாக எழுதி வைத்து விட்டுத்தான் மரணத்தை நோக்கிப் பயணமானான்.

எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்பது, ரிஷ்லுவுக்கு இருந்துவந்த ஆவேசம் - அந்த ஆவேசத்தின் முன்பு, எந்தப் பண்பும் தலைகாட்டவில்லை.

தன்னைச் சுற்றிலும் பகைவர்கள் இருக்கிறார்கள். எந்த நேரத்திலும் ஆபத்து வரக்கூடும் என்று எண்ணிக் கொண்டதால், யார் எதிர்ப்புக் குரல் கிளப்பினாலும், உடனே அவர்கள்மீது முழு பலத்துடன் பாய்ந்து தாக்கி அழித்துவிடுவதில், காட்டு மிருகத்தின் குணத்தையும் திறத்தையும் ரிஷ்லு பெற்றிருந்தான்.

எத்தகைய சந்தர்ப்பத்தையும் நிகழ்ச்சியையும் தன் ஆதிக்க நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதிலே, ரிஷ்லு காட்டிய ஆற்றல், வெகு சிலரிடமே காணமுடியும்.

ஆதிக்கம் தேடும்போது, ரிஷ்லு, இரை தேடும் புலி! மோப்பம் பிடித்தும், இரை தொலைவில் தெரிந்ததும், பாய்ந்து தாக்கியும், இரத்தத்தைக் குடிக்கும் புலிபோல், ஆதிக்கம் பெற வழி காண்பதிலும், கண்ட வழியில் பாய்ந்து செல்வதிலும், புலி போன்றிருந்தான் ரிஷ்லு.

இரை தேடி அலையும்போது, காட்டு மிருகம், வேறு எதனையும் பொருட்படுத்தாதல்லவா - அதே குணம் ரிஷ்லுவுக்கு இருந்தது.

ரிஷ்லு, சிறுவனாக இருந்தபோது, களைத்தும் இளைத்தும், இருமியும் நடுங்கிக் கொண்டும் இருந்தபோது, அன்புடன், அவனை வளர்த்த அருமைத் தாயார், பிணமாகி இருபத்தொரு நாட்களான பிறகே, ரிஷ்லு சவ அடக்கச் சடங்குக்குச் சென்றான். தாயார் இறந்துவிட்டார்கள். உடனே வருக! - சேதி கிடைக்கிறது - பதறவில்லை. பதைக்கவில்லை, பெற்ற தாயைக் காண ஓடவில்லை. சவ அடக்கம் செய்யவேண்டும். உடன் வருக! செல்லவில்லை!! நாலு நாட்களாகக் காத்துக் கிடக்கிறோம், தாங்கள் வந்துதான் சவ அடக்கம் நடைபெற வேண்டும். செல்லவில்லை. அவசரமான அலுவல் - இப்படி அப்படி அசையமுடியாது - தாய் இறந்தார்களா, தாங்கொணாத் துக்கம்தான், ஆனால் என் செய்வது, காரியம் இருக்கிறதே, முடிந்ததும் கடுகிச் செல்லலாம் - என்றுதான் எண்ணினான் ரிஷ்லு.

எப்படி மனம் இடங்கொடுத்தது என்றுதான் எவரும் கேட்பர். ரிஷ்லுவின் மனம் அப்படிப்பட்டது.

ஆட்சிக் குழுவிலே ரிஷ்லுவுக்குச் செயலாளர் பதவி தரப்பட்டது. அப்போதுதான் தாயார் இறந்த செய்தி வந்தது, இருபத்தோர் நாள் கழித்தே ஊர் சென்று, சவ அடக்கம் செய்தான் ரிஷ்லு.

ஊர் என்ன எண்ணும், என்ன சொல்லும் என்பது பற்றிப் பயப்படுவதில்லை.

பேரவைக் கூட்டத்திலே முதன்முதல் பேசியதும் பலரும் பாராட்டினர் - ரிஷ்லு அவ்வளவுடன் திருப்தி அடையவில்லை. அந்தச் சொற்பொழிவை அச்சிட்டு, எராளமாக வழங்கிட ஏற்பாடு செய்தான். எதையும் அரைகுறையாக விட்டுவைப்பது, ரிஷ்லுவின் முறையல்ல. பிரன்ச்கெஜட் எனும் பிரசார இதழைத் துவக்கி, திறமையான - ஆசிரியர் மூலம் நடத்தச் செய்து, அதன் மூலம் ரிஷ்லு, தன்னைப் பற்றியும் தன் ஆட்சி முறையைப் பற்றியும் பிரசாரம் செய்துவந்தான்.

காற்று இல்லை, வெளிச்சம் இல்லை, மலர் இல்லை, மகிழ்ச்சி இல்லை, வெள்ளிச் சாமான் இல்லை, பட்டு விரிப்பு இல்லை என்று ஆயாசப்படும் நிலையில், லூகான் நகர தேவாலய அதிபராக இருந்துவந்த ரிஷ்லு “அரசுக்காக! பிரான்சுக்காக” பணியாற்றிப் பெற்றநிலை எப்படி இருந்தது! மன்னனுக்கு, தன் உயிலின்படி 1,50,000 பவுன் வைத்திருந்தான்! இதை, மன்னர், பண நெருக்கடியின்போது உபயோகித்துக் கொள்ளவேண்டும் என்ற குறிப்புடன். மன்னனுக்குப் பணம் தந்துவிட்டுச் சாகும்நிலை இருந்தது ரிஷ்லுவுக்கு.

கார்டினல் அரண்மனை எனும் உயர்தர மாளிகை, வைரக் கற்கள் பதித்த தங்க ஆபரணம், வெள்ளிப் பேழைகள் ஆகியவற்றை மன்னனுக்குத் ‘தானம்’ தர முடிந்தது, ரிஷ்லுவால்.

நெருங்கிய உறவினர்களுக்கு ஏராளமான நிலபுலனும், தோட்டம் மாளிகையும், ஜெமீன்களும் இனாம்களும், பகிர்ந்தளித்தான்.

ரிஷ்லுவின் உயிலிலே குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளி விவரத்தைக் கவனிக்கும்போது, பிரான்சிலே இருந்து வந்த எந்தப் பரம்பரைச் சீமானுக்கும் இல்லாத அளவு சொத்து சேர்ந்தது என்பது விளக்கமாகிறது.

மன்னன் ரிஷ்லுவுக்கு, கொழுத்த வருமானமுள்ள தேவாலயங்களையும், ஜெமீன்களையும் வழங்கி இருந்தான்.

கார்டினல் பதவிமூலம் கிடைத்த வருமானம் சாமான்ய மானதல்ல.

நார்மண்டி பகுதியிலே ரிஷ்லுவுக்கு இருந்த பண்ணை மட்டும் ஆண்டுக்கு அரை இலட்சம் பவுன் வருமானம் அளித்தது. இதுபோல வளமான பண்ணைகள், பிரான்சிலே பல்வேறு இடங்களில் ஐந்து இருந்தன.

மேலும், அன்றைய ஆட்சி முறையின்படி, அரசாங்கக் காரியத்துக்காக வசூலிக்கப்படும் எல்லாத் தொகையிலும், ரிஷ்லு, ஒரு பகுதி சொந்தமாக்கிக் கொள்ளும் உரிமை இருந்தது. நமக்கு வேண்டியது இது, என்று ரிஷ்லு கண்ணியம் பேசவில்லை.

புகழ் எப்படிக் குவிந்ததோ, அதைவிட வேகமாகச் செல்வம் ரிஷ்லுவிடம் குவிந்தது.

வீடு வாசல் தோட்டம் துரவு எனும் அசையாப் பொருள் களை நீக்கி, பணமாகமட்டும், உயிலின்படி, உறவினர்களுக்கும் ஊழியர்களுக்குமாக ரிஷ்லு தந்த தொகை ஏறக்குறைய முப்பது இலட்சம் பிரöஞ்சு பவுன் என்றால் ரிஷ்லுவிடம் குவிந்திருந்த செல்வத்தின் அளவு எவ்வளவு என்பது ஒருவாறு விளங்கும்.

ஒவ்வோர் அரசியல் குழப்பமும் இலாபகரமான பதவியைத் தந்தவண்ணமிருந்தது, ரிஷ்லுவுக்கு.

மன்னனுக்கு மகிழ்ச்சி ஏற்படும்போதெல்லாம், ரிஷ்லுவுக்கு புதுப் பண்ணைகள் கிடைக்கும்.

பல பதவிகள் ஒரே காலத்தில் - ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி வருமானம்! செல்வம் குன்றெனக் குவியத்தானே செய்யும்.

இவ்வளவு பெரும் பொருளைச் சேகரித்த ரிஷ்லு, வாழ்க்கையிலே ஆடம்பரமற்று, செலவின்றி இருந்தானோ எனில், அதுவுமில்லை; மாளிகைகள் பொறாமைப்படும் செலவு.

பாதுகாப்புக்காக மட்டும் ஆயுதம் தாங்கியவர்கள் நூறு பேருக்குமேல் - சம்பளத்துடன்.

பல்லக்கிலே சவாரி, பரிவாரம் சூழ!

மாளிகையிலே உயர்தரமான அலங்காரப் பொருள்கள்.

குதிரைக் கொட்டில்கள் இரண்டு, அவைகளில் உயர் தரமான குதிரைகள்.

மருத்துவர்கள், உடலை அவ்வப்போது கவனிக்க வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

நாட்டின் பிரபுக்களின் ரிஷ்லுவுக்கு வேண்டியவர்களுக்கு அடிக்கடி விருந்து வைபவம் நடத்தி வைக்கப்படும் - செலவு தாராளமாக.

ரிஷ்லுவுக்கு ஆடை அணிவிக்க மட்டும் ஐந்து ஆட்கள்.

குறிப்புத் தயாரிப்போர், கடிதம் எழுதித் தருவோர் ஆகியவர்கள் மூவர் - நல்ல சம்பளம்.

ஆண்டொன்றுக்கு ரிஷ்லுவின், வீட்டுச் செலவு மட்டும் இன்றைய பிரெஞ்சு நாணய முறைப்படி 36,96,000 பிராங்குகள், என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

ரிஷ்லுவைப் பேட்டி காண்பது மன்னனைக் காண்பதைவிடக் கடினம் என்று கூறத்தக்க விதமாக, ஆடம்பரம் இருந்துவந்தது.

காவலர்கள், ரிஷ்லுவைக் கண்ணிமைபோல் காத்துவந்தனர். பகலில் ரிஷ்லு, இருக்கும் அறையிலேயே ஆயுதம் தாங்கிய படைவீரர் காவலுக்கு இருப்பர். இரவில், பக்கத்தறையில் இருப்பர். துளிச் சத்தம் கேட்டாலும் எழுந்தோடி வரவேண்டும் என்று உத்தரவு. யாராவது ரிஷ்லுவைக் காணச் சென்றால், ஐந்து இடங்கில் படைவீரர்கள், வருபவர்களைச் சோதனையிட்ட பிறகே, ரிஷ்லு உள்ள அறைக்கு அழைத்துச் செல்வர், அங்கு - படை வீரர் காவலிருப்பர்.
கோலகலமான வாழ்க்கைதான்! - ஏராளமான செலவு - ஆடம்பரம் - எல்லாம், அரசுக்காக! பிரான்சுக்காக!
கார்டினல் ரிஷ்லு, குன்றெனக் குவிந்திருந்த செல்வத்தில் மன்னனுக்கும், உறவினருக்கும், அவனிடம் கைகட்டிக் காத்துக் கிடந்த ஊழியர்களுக்கும் தந்திருக்கிறானே தவிர, ஏதேனும் பொது நலத்துறைக்கு மக்கள் நலனுக்கு, ஒதுக்கினானா என்றால், இல்லை! மக்களுக்காகவா, ரிஷ்லு வாழ்ந்தான்! அரசுக்காக! பிரான்சுக்காக!!

உயிலிலே, ஒரு புள்ளி விவரம் அவனுடைய உள்ளக் கிடக்கையை எடுத்துக் காட்டுகிறது. 30,000 ஒரு சீமானுக்குத் தரும்படி, குறிப்பு இருக்கிறது - “அவருக்கும் பணமுடை என்பது எனக்குத் தெரியும். ஆகவே அவருக்கு இந்த உதவித் தொகையைத் தருக,” என்று கூறப்பட்டிருக்கிறது. கனிவு, எந்தத் திக்குக்கு என்பது விளங்குகிறது.

அரசுக்காக! பிரான்சுக்காக! என்ற சொற்களைத் திறம்படப் பயன்படுத்தி, கொடுமைகளைக் கூசாமல் செய்து, ஆதிக்க வெறியனாய் வாழ்ந்து, பெரும் செல்வத்தைச் சேகரித்துக் கொண்ட ரிஷ்லுவின், வாழ்க்கை முறையை, ஆதிக்கத்தைத் தேடி அலைபவர்கள், திருவாசகமென்று இன்றும் எண்ணுகின்றான்.

ஓயாத உழைப்பு, கூர்மையான புத்தி, அளவற்ற ஆற்றல், எந்தத் துறையினும் இணையற்ற சமர்த்து என்று பாராட்டுகின்றனர்.

உலகம், போட்டிப் பந்தய மேடை அல்ல - கூட்டுறவுச் சாலை, என்ற புனிதக் கோட்பாட்டைமதியாதார், இரும்புக் கரத்தினரை, ஈவு இரக்கமற்ற நெஞ்சினரை, அவர்களின் வெற்றி கண்டு, பாராட்டுவது, வாடிக்கையாகிவிட்டது.
மனிதனைச் சிங்கம் பிய்த்து எறிந்ததை, திராட்சைக் கொத்தைத் தின்றபடி இரட்சித்திடவில்லையா, ரோம் நாட்டு மமதையாளர்கள். பொதுநோக்கு, பொதுநலம், மக்கள் முன்னேற்றம் எனும் எதற்கும் பற்றுக்கொள்ளாது, சிறக்க வாழவேண்டும், ஈடு எதிர்ப்பின்றி ஆட்சி செலுத்த வேண்டும், என்று முயன்று, வெற்றி பெறுபவர்களைப் பாராட்டுவது, அது போன்றதேயாகும் மதத்துறைத் தலைவர்கள் உண்டு. அரசியல் துறைத்தலைவர்கள் இருக்கிறார்கள் - கார்டினல் ரிஷ்லு, மதத் துறையில் தலைமைபெறப் பணியாற்றியபடி இருந்துகொண்டே, அரசியல் துறையில் ஆதிக்கம் பெற்ற ஓர் அபூர்வமான சர்வாதிகாரி.
பார்லிமெண்டுகளைப் பஜனை மடங்களாக்குவோர் உண்டு. பஜனை மடங்களில் பார்லிமெண்டு நடத்துவோர் உண்டு. இந்த ரிஷ்லு, பஜனை மடத்தில் இருந்தபடியே பார்லிமெண்டுக்குத் தன்னைத் தயாரித்துக் கொண்டிருக்கும் தனி வழி கண்டறிந்து பயன் கண்டவன்.

மதத்துறையில் ஈடுபட்டு, அதிலே மாசுகளைக் களைந்தெறிந்து, மாண்புகளைப் பெருகச் செய்து, அத்தகைய மார்க்கத்தின் மூலம் மக்கட் சமுதாயத்துக்கு உயர்வும் உய்யும் வழியும் கிடைத்திடச் செய்வதற்காகப் பணியாற்றிடும் பெரு நோக்குடையார் பலர் உண்டு - பலர் பணியாற்றிப் பலன் காணாது பதறினர்.

சிலர், மதத்துறையிலே பெருமளவுக்குச் செல்வாக்குத் தேடிக்கொண்டு, அந்தச் செல்வாக்கைக் காட்டி அரசுகளைப் பணிய வைக்கவும், ஆட்டிப் படைக்கவும், முயன்றனர் - வெற்றியும் கண்டனர்.

சில அரசியல் தலைவர்கள், அந்தத் துறையிலே தமக்குக் கிடைத்த செல்வாக்கைக் கொண்டு மதத்துறையிலேயும் தமது ஆதிக்கம் நுழையும்படி செய்து வெற்றி பெற்றனர்.

கார்டினல் ரிஷ்லு, இதுபோன்ற வகையினரில் ஒருவராக வில்லை - அவன் கண்ட வழியே தனி!!
ஆதிக்கம் பெறுவதற்கு மதத்துறையைச் சிலர்போல் ஏணியாக்கிக் கொள்ளவில்லை - அரசியல் ஆதிக்கம் பெறுமுன், மதத்துறையைச் சிறிது காலம் தங்குமிடமாகக் கொண்டான். மதத்துறையில் பெரும் செல்வாக்குப் பெற்றதால் அரசியல் துறையில் ஆதிக்கம் பெறலாம் என்பது பொதுவிதியானால், போப்பாண்டவரல்லவா, பிரான்சு நாட்டை ஆட்டிப்படைத் திருக்க வேண்டும். கார்டினல் ரிஷ்லுவின் கைப்பிடியில்லவா, பிரான்சு சிக்கிற்று! போப்பிடமல்லவே!!

அம்மட்டோ! அந்தப் போப்பாண்டவரைக்கூட, ஒரு சம்பவத்தின்போது, இந்த ரிஷ்லு, ‘உமது வேலையைப் பாரும்! என் துறையிலே தலையிடவேண்டாம் என்று கூறிட முடிந்தது!!

அரசுக்காக! பிரான்சுக்காக! என்ற சொற்றொடர் - ரிஷ்லு காலத்தில். இன்று ரிஷ்லுக்களாகலாமா என்று மனப்பால் குடிக்கும் சிலரும் அடிக்கடி அரசுக்காக! நாட்டுக்காக! என்று பேசி, மக்களை மயக்கவும், உலகை ஏய்க்கவும், எதிர்ப்பை ஒடுக்கவும் முடியும் என்று நம்புகிறார்கள்.

நாட்டுக்காக! என்று கூறிக்கொண்டே, எந்த அக்கிரமம் செய்தாலும் மக்கள் சகித்துக் கொள்வார்கள் என்று எண்ணுவது ஏமாளித்தனம். ரிஷ்லுவால் முடிந்ததே! என்று கூறலாம் - மக்கள் பழிதீர்த்துக் கொண்டனர். காலம் பிடித்தது அதற்கு, எனினும் பழிதீர்த்துக் கொண்டனர் - ரிஷ்லுமீதல்ல, அவன் போற்றிவந்த அரசின் மீது!!

அரசு பலமடைய வேண்டும் என்று பேசப்படும்போது ஆமாம் என்ற பதில் எளிதாகக் கிடைத்துவிடும்... ஆனால், எப்படிப் பலமடைவது என்ற கேள்வியும், மக்கள் கேட்க ஆரம் பித்தால், ஆதிக்கவாதிகள் பதில் இறுக்க இயலாது.

அரசு, மக்களுக்கு நலம்தர ஓர் ஏற்பாடு, என்ற இலட்சியத்தை மறந்து, நாடு மக்களின் உடமை என்ற உண்மையை ஏற்காது, நாடு என்றால், அதிலே காணப்படும் விரல்விட்டு, எண்ணத்தக்க பட்டுடை அணிந்த வீணர்கள் மட்டுமே என்று கருதி, அரசு என்றால், அவர்களின் வசதி கெடாதபடி மற்றவர்களைக் கண்காணித்து வருவதுதான் என்று தீர்மானித்து, ஆதிக்கம் புரிந்தவர்களால், அரசும் மேன்மையுறாது, நாடும் வளம் பெறாது.

ரிஷ்லுவுக்குத் தெரிந்த பிரான்சு, அங்கே செக்குமாடென உழைத்துக்கிடந்த பெரும்பான்மை மக்களல்ல.

மமதையால் மன்னனை எதிர்க்கக் கிளம்பும் சில பிரபுக்களும், வேற்று மார்க்கத்தவர் என்பதால் பிணங்கிக் கிடந்த சில பலரும், கீர்த்தி எனும் வெற்றுரைக்காகப் போர் மூட்டிவிடும் வெறியர் சிலரும்தான், ரிஷ்லுவுக்குத் தெரிந்தனர்.

அரண்மனை, மாளிகை, ஆலயம் இவற்றோடு நாடு முடிந்துவிடவில்லை. வயல் இருக்கிறது, வாய்க்கால் இருக்கிறது. பாதை இருக்கிறது, பள்ளம் இருக்கிறது. தொழில் இருக்கிறது, துயரம் இருக்கிறது. இங்கு, இலட்ச இலட்சமாக ஏழைகள் உள்ளனர், உழைத்த வண்ணம், உழைக்கிறார்கள் வாழ முடியவில்லை, சாவை வரவேற்கிறார்கள், நிம்மதிபெற அதனினும் சிறந்த மார்க்கம் வேறு இல்லாததால்! இந்தப் பிரான்சுக்கு அல்ல, ரிஷ்லு, முதலமைச்சரானது! அவனுடைய பிரான்சு, மன்னன், அவனைச் சுற்றி வட்டமிடும் வல்லூறுகள், அவனுக்கு விளையாட்டுக்காகப் பறந்திடும் பொன்வண்டுகள், இவை உள்ள, அரண்மனை, மாளிகை, பூம்பொழில் இந்த ஏற்பாட்டைப் பாதுகாக்க அமைந்துள்ள பாசறை, நீதிமன்றம், சிறைக்கூடம் இவை!
பிரான்சு, பெருமூச்சுவிட்டது, ரிஷ்லுவின் செவியிலே விழவில்லை - கேட்க மறுத்துவிட்டான்.
பிரான்சிலே, ஐந்தில் ஒரு பகுதி நிலம் - வயல் - மன்னனுக்குச் சொந்த உடைமை.

மற்றோர் பங்கு மத அலுவலருக்கு, பிறிதோர் பங்கு பிரபுக்களுக்கு, மிச்சம் இருந்ததைப் பொது மக்களுக்கு என்று விட்டுவைத்தனர். பொதுவளம், பொதுநலம், பொது அறம், - எதுதான் தழைக்க முடியும்!

இந்த ஏற்பாடு, சரியா, தவறா என்று ஆராய்வது கூடத் தேவையில்லை என்று இருந்து கொண்டுதான் ரிஷ்லு-, அரசுக்காக! நாட்டுக்காக! என்று பல்லவி பாடி ஆதிக்கம் செலுத்தினான்.

பிரபுக்களின் கொட்டத்தை அடக்கும்போதுகூட, அவர்கள், மக்களை மாடுகளாக்கி, வாழ்கிறார்கள் என்பதற்காக அல்ல! ரிஷ்லுவே பெரிய பெரிய பண்ணைகளுக்கு உரிமையாளராகிவிட்டானே! ஏழை உழவனின் வியர்வையும் கண்ணீரும் கலப்பது பற்றிக் கவலை ஏன் பிறக்கும்!
உழவன், பிரபுவிடம் அடிமைப்பட்டுக் கிடந்தான். கூப்பிட்டபோது ஓடி வேலை செய்யவேண்டும். கேட்ட வரியைத் தந்தாக வேண்டும். வரி மட்டுமா? எதையும்!

பிரபுவின் இயந்திரத்தில்தான் அவன் மாவரைத்துக் கொள்ளவேண்டும்.

அவருடைய பறவைகள் உழவன் வயலிலே புகுந்து கதிர்களைக் கொத்தும், அவன் அவற்றை விரட்டக் கூடாது. அவர் அமைத்த நீதிமன்றத்தில் உழவன் கைகட்டி நிற்க வேண்டும்; அவர் சொல்வதுதான் சட்டம்!

உழவன், விளைந்ததை விற்றுத் தேவையானதைப் பெற்று வரலாம் என்று கிராமத்தை விட்டுக் கிளம்பிச் சந்தை கூடும் இடம் போவான், வழியிலே, சீமான்களின் சுங்கச் சாவடி இருக்கும், வரி கட்டினால்தான், போக அனுமதி.

இவ்வளவும் இவற்றின் விளைவாகவும் கொடுமைகள் மலிந்து கிடந்தன. அறிவாற்றல் படைத்த, எடுத்த செயலை முடித்தே தீருவதிலே வல்லமை பெற்ற ரிஷ்லு, என்ன செய்தான்? சிறு விரலையும் அசைக்கவில்லை.

மத அலுவலர்களின் போக்கோ - பிரபுக்கள் பயிற்சி பெற வேண்டிய கல்லூரியாக இருந்தது.

பட்டிக்காட்டு உழவன் விளைவதில் பத்திலோர் பாகத்தை ‘காணிக்கை’யாகத் தந்துவிட வேண்டும் - இந்தக் காணிக்கை பல கிராமங்களிலே சேகரம் செய்யப்பட்டு, ஒரு தேவாலய அதிபருக்குப் போய்ச் சேரும். மதச் சடங்குகளின் போதெல்லாம், ‘வரி’ கட்டவேண்டும்; முணுமுணுக்கக் கூடாது. கணக்குப் பார்த்தலாகாது, புண்ணியம் கிட்டாது, தேவாலயம், அருளாலயம். என்பன போன்ற திருப்பெயர்களைத் தாங்கிக் கொண்டிருந்த மத அமைப்புக்கு, தானமாகக் கிடைத்த நிலங்களிலிருந்து மட்டும் 100,000,000 பிரெஞ்சு பவுன் வருமானம் கிடைத்து வந்தது.

இந்தப் பெருந்தொகை, அஞ்ஞானத்தை விரட்ட, சன்மார்க்கத்தை நிலைநாட்ட, பயன்பட்டதா? கேட்பதே, பாபம்.

சீமான்களுக்கு, ஜெமீன்கள் பண்ணைகள் இருப்பது போல, இந்த அருளாலயங்களுக்கும் உண்டு. வருமானத்தை அவர்கள் களியாட்டத்திலே செலவிடுவர், அவர்களிடம் சிறுதொகை ஊதியம் பெற்றுக்கொண்டு. பூஜாரி, கர்த்தரின் பெருமையைக் கழனி ஆண்டிக்கு எடுத்துக் கூறிவருவான்.

புரட்சியின் போது தொகுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, மத அமைப்புக்களின் மொத்த ஆண்டு வருமானம் 170,000,000 என்று கணக்கிட்டனர்!

வரி தரமாட்டார்கள் மத அலுவலர்கள்! “எமது வாயைத் திறப்போமே தவிர, கையைத் திறக்கமாட்டோம்” என்று ஒரு மத அலுவலர் கூறினார். ஒரு சமயத்தில் இன்னொருவர், “மக்கள் பொருள் தருகிறார்கள், பிரபுக்கள் வீரத்தைத் தருவர், நாங்கள் ஜெபம் தருகிறோம்” என்று கூறினாராம்.

பண நெருக்கடியின்போது ஒரு முறை ரிஷ்லு முயன்று பார்த்தார், மத அலுவலர்களிடமிருந்து வரி வசூலிக்க பிடிவாதமாக மறுத்துவிட்டனர்; எதிர்ப்பு வலுத்தது. இந்த ஆபத்தான வேலை வேண்டாமென்றோ, என்னவோ இனம் இனத்தைக் காக்கும் போக்கிலே ரிஷ்லு, மேலே வலியுறுத்த வில்லை. அவர்களாகத் தந்த ‘தொகை’யை நன்றிகூறிப் பெற்றுக் கொள்வதுடன், அந்த அத்தியாயத்தை முடித்துக் கொண்டான்.

ஐந்தாண்டுக்கு ஒரு முறை மத அலுவலர்கள், தாமாக, மனமுவந்து ஏதேனும் ‘தொகை’ தருவர் அரசர் அந்தத் தேவப் பிரசாதத்தை மதிப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பிரபுக்களுக்குத் தனித்தனி தர்பார் இருந்தது - எனவே அவர்களும் அரசுக்கு வரிசெலுத்த மாட்டார்கள்.

ஆக, அரசுக்கு வரி செலுத்தும் பெரும்பாரம், ஏழைகளின் முதுகிலே விழுந்தது.

அரசுக்காக! நாட்டுக்காக! என்று பாடிய ரிஷ்லுவுக்கு இந்த நிலைமைகளைத் திருத்தவேண்டும் என்றும் தோன்றவில்லை. அறிவும் ஆற்றலும், அரசனுக்குப் பொழுது போக்குத் தேடித்தர உதவிற்று, ஏழை அழுத கண்ணீரைத் துடைக்க அல்ல.

நீதிமன்றங்கள், பிரபுக்களின் நீதிமன்றங்கள், மத நீதிமன்றங்கள் என மூன்று வகை - இதற்குள் உட்பிரிவு வகைகள் ஏராளம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதச்சட்டம் - எப்போது எந்தச் சட்டம் பயன்படுத்தப்படும் என்பது ஏழைக்கு விளங்கவே முடியாத புதிராக இருந்தது. இந்தப் புதிர், எண்ணற்ற வழக்கறிஞர்களுக்குக் கொழுத்த வேட்டை தந்து வந்தது. 360 வகையான சட்ட முறைகள் இருந்ததாகக் கணக்கிட்டிக்கிறார்கள்.

இவற்றில் எதனையும் மாற்ற, திருத்த, மக்களுக்கு உகந்ததாக்க ரிஷ்லு முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை.

அரசர், வரிவசூலிக்க பிரான்சு முழுவதுக்கும், மொத்தமாக அறுபது பேரை நியமிப்பார். அவர்கள் ஆறு ஆண்டுகள் அதிகாரம் புரிவர். மன்னனுக்கு முன்னதாகக் குறிப்பிட்ட தொகையைக் கட்டிவிடுவர். இப்படி வரி வசூலிக்கும் உரிமை ஏலத்தில் விடப்பட்டது. அகப்பட்ட வரையில் இலாபம் என்று அவர்கள் ஏழைகளைக் கசக்கிப் பிழிந்தனர். ரிஷ்லுவின் ஒளிவிடும் கண்களில் இந்த அக்கிரமம் படவில்லை!

விருந்தொன்றின்போது, ஒவ்வொருவரும், பொழுது போக்குக்காக, கொள்ளை அடிப்பவர்களைப் பற்றி விதவிதமான கதைகள் கூறினார்களாம். அந்த விருந்திலே வால்டேர் இருந்தாராம். அவரையும் ஒரு கொள்ளைக்காரன் கதை கூறச் சொல்லி வற்புறுத்தினார்களாம். அவர், “ஒரே ஒரு காலத்தில் ஏகவரி ஏல அதிகாரி ஒருவன், இருந்தான். அவ்வளவுதான்!” என்று கதையை முடித்துவிட்டாராம். கொள்ளை அடிப்பவர்கள் எல்லாரையும் மிஞ்சக்கூடிய கொள்ளைக்காரன், இந்த வரி ஏல அதிகாரி, என்பதைச் சுவைபட வால்டேர் சொன்னார். ரிஷ்லு இது அக்கிரம முறை என்று உணரவில்லை.

எந்தத் துறையைக் கவனித்தாலும், அநீதி தாண்டவமாடிற்று, அக்கிரமம் தலைவிரித்தாடிற்று, எதையும் திருத்த ரிஷ்லு முயலவில்லை. அரசுக்காக! பிரான்சுக்காக! என்று மட்டும் பேசினான். இவ்விதமான அநீதிகளை வைத்துக் கொண்டு, எந்த அரசுதான் நிலைக்க முடியும், எந்த நாடு பிழைக்க இயலும்!

எனவேதான், புரட்சி கிளம்பிற்று - பிரான்சு, புடம் போட்ட தங்கமாவதற்கு! மக்களுக்காக அரசு! மக்களுக்காகப் பிரான்சு! என்ற முழக்கமிட்டனர், புரட்சி வீரர்கள், அறியாமல் செய்த ஒரு நன்மை உண்டு, ரிஷ்லுவால்!

கோட்டை கொத்தளங்களை அமைத்துக் கொண்டு, கொடி கட்டி ஆண்ட பிரபுக்களின் கொட்டத்தை அடக்கி, அவர்களுடைய இராணுவ பலத்தை ஒடுக்கிவிட்டான் ரிஷ்லு. இது, மக்கள் பிரான்சிலே மாபெரும் புரட்சி செய்தபோது அவர்களை எதிர்க்கும் சக்தியை, பிரபுக்கள் பெற முடியாதபடி செய்தது.

எல்லா அதிகாரங்களையும் அரசனிடம் குவித்து வைத்ததும், புரட்சிக்கு மறைமுகமாக உதவி செய்தது.

மன்னனுடைய மணிமுடி ஒளிவிட வேண்டுமென்று ஏழையின் இரத்தத்தை அபிஷேகம் செய்வித்து அரசாட்சி புரிந்தான் ரிஷ்லு. மக்கள் பதிலளிக்க நெடுங்காலம் பிடித்தது. அவர்கள் தந்த பதிலோ, பயங்கரமானது, மன்னனின் தலையை வெட்டிக்காட்டி, முழக்கமிட்டனர், மக்களுக்காக! பிரான்சுக்காக! என்று.

(திராவிடநாடு - 1955)