அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


என் வாழ்வு
2
                     

கம்பவுண்டருக்கு. எங்கே வேறு யாராவது வைத்தியத்துக்கு வந்து விடுகிறார்களோ, வேறு யாரேனும் இந்தச் சீனைக் கண்டால் என்ன எண்ணுவார்களோ என்ற பயம். டாக்டரின் பெயர் கெடக் கூடாது என்பதிலே கம்பவுண்டருக்கு நிரம்ப கவலை. டாக்டர் கலியாணமாகாத இளம் பிள்ளை; கண்மண் தெரியாமல் ஆட ஆரம்பித்து விட்டால், பிறகு பிழைப்பின் வாயில் மண்தான் என்பது கண்ணுசாமிக்கு, “உன் தம்பியைப் போல டாக்டரைப் பார்த்துக் கொள்; அவன் ஒன்றும் தெரியாதவன். வெள்ளை மனுஷன். அவனுடையஅப்பாவும் அப்படித்தான். சின்ன வயதிலேயே அவனுடைய அப்பா கொஞ்சம் கெட்டு அலைஞ்சவர். பிள்ளையாண்டான் நல்ல வேளையாக அப்படி எல்லாம் இல்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன். ஆனால் கலியாணமாகவில்லையே இன்னும். கண்ணும் கருத்தும் அலைகிற பருவம். காலமோ முன்னைப் போலஇல்லை. கண்ட கண்ட சிறுக்கிகளோடு எத்தனையோ பேர் காலந்தள்ளி வருவதைக் கண்ணாலே பார்க்கிறோம். நமது பையன் அப்படிப்பட்டவனல்ல. எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான். இருந்தாலும் நீயும் கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்” என்று கூறுவதுண்டு. ஆகவே கண்ணுசாமி, கம்பவுண்டர் வேலையுடன் கார்டியன் வேலையும் தனக்கு உண்டு என்று எண்ணிக் கொண்டிருந்தான். தாசியுடன் டாக்டர் பேசப் பேச, கம்ப வுண்டருக்குக் கோபம் வந்ததில் ஆச்சரிய மில்லையல்லவா! இவள் யாரடா சனியன்! சிவபூசையில் கரடி புகுந்தது போல வந்து சேர்ந்தாள். ஏதேதோ பேசுகிறாள். வெட்கமே காணோம்.

‘நம்ம டாக்டர் மருந்து வகைகளை அறிவாரே தவிர மனித சுபாவம் என்ன தெரியும் அவருக்கு. அதிலும் பெண்கள் விஷயம் என்ன தெரியும். பெண்களிலும் இத்தாசிகள் சங்கதி என்ன தெரியும்’ என்று எண்ணினான். விமலா வெளியே போனபிறகு, தானே டாக்டருக்கு புத்திமதி கூற வேண்டும் எனத் தீர்மானித்தான். அதே சமயத்தில் விமலா, டாக்டரிடம் விடைபெற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். டாக்டர் “எப்போது வீட்டுக்கு வருகிறாய் சொல்லு. உன் கதையை நான் எப்போது கேட்பது” என்றார். “பழைய பல்லவியை விடமாட்டீர்களா?” என்று விமலா கேட்டாள். “எப்படி விடுவேன்” என்றார் டாக்டர்.

“டாக்டர் சார், நான் உங்கள் வீட்டுக்கு வருவதை விட...” என்று விமலா இழுத்தாள். “ஏன் நானே உன் வீட்டுக்கு வருகிறேன். விலாசம் என்ன?” என்று சுந்தரேசன் கேட்டார். ‘ஏதேது காரியம் முற்றிவிட்டது. ‘சிறுக்கி சிரித்துக் குலுக்கிப் பேசி, டாக்டரை மயக்கியே விட்டாளே என்ன செய்வது?’ என்று கண்ணுசாமி யோசித்தான்.

“சொல்லு விமலா. நான் எப்போது வந்தால் நீ ஓய்வாக இருப்பாய்” என்று டாக்டர் கேட்டார்.

“ஓய்வா! எப்போதுந்தான் ஓய்வு! ஆனால் நீங்கள் வருவது அவ்வளவு நன்றாக இருக்குமா! ஊரார் ஏதாவது தவறாக...” என்று விமலா கூறினாள். “ஊராருக்கு நமது விஷயத்தைப் பற்றி என்ன கவலை? நான் ஊராரைக் கேட்கிறேன். நீ ஏன் இதைச் செய்தாய், அதைச் செய்தாய் என்று. நான் வருவதால் எனக்கு ஏதாவது தடையாயிருக்குமா? அதைக் கூறு. சாக்கு வேண்டாம்” என்று டாக்டர் கண்டிப்பாகப் பேசினார். “சரி, நாளை மாலை 6 மணிக்கு வாருங்கள். மருந்தும் கையோடு எடுத்துக் கொண்டு வந்து விடுங்கள்” என்றாள் விமலா. “சார் மணிபர்சை இங்கே போட்டு விட்டீர்களே, இதோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிக் கொண்டே, டாக்டர் கீழே தவறவிட்ட மணிபர்சை, கண்ணுசாமி டாக்டரிடம் தந்தான். தரும்போதே விமலாவை முறைத்தான். விமலாவுக்குக் கண்ணுசாமியின் குறும்பு தெரிந்து விட்டது. பணத்தைப் பிடுங்கிக் கொள்வாள் என்றும் காசாசைப் பிடித்தவள் தாசியென்றும், கண்ணுசாமி டாக்டரிடம் கூறாமற் கூறவே, மருந்து எடுத்துக் கொண்டு வந்து விடுங்கள் என்ற தான் கூறிய உடனே மணிபர்ஸ் என்ற பேச்சைப் பேசினான் என்பதைத் தெரிந்த கொண்டாள். கண்ணுசாமியின் குறும்பைப் போல எத்தனையோ குறும்புகளைக் கண்டவள் விமலா. அவளிருந்து வந்த உலகம், ஒரு தனிச் சர்வகலாசாலை. கண்ணுசாமி அதன் அரிச்சுவடி மட்டுமே அறிவான்.

விமலா மெள்ளச் சிரித்துக் கொண்டே, “டாக்டர் சார், எதெதை எங்கெங்கே வைத்து வைக்க வேண்டும் என்பதே உமக்குத் தெரியவில்லையே” என்று கூறினான். கண்ணுசாமிக்கு கோபம் மூண்டு விட்டது. “யாரைச் சாக்கிட்டு இதைச் சொன்னாய்” என்று விமலாவை நோக்கிக் கேட்டு, விமலா சிரிப்பை அடக்கிக் கொண்டு பயந்த பாவனையுடன் “கம்பவுண்டர் என்ன சொல்கிறார்; எனக்குத் தெரியவில்லையே; மணிபர்சை ஜேபியில் வைக்காது டாக்டர் வேறு எங்கேயோ போட்டு விட்டாரே என்று, எதெதை எங்கெங்கு வைக்க வேண்டுமோ அங்கங்கே வைக்க வேண்டுமென்று சொன்னேன். இவருக்கு ஏன் டாக்டர் கோபம் வருகிறது” என்று டாக்டரைக் கேட்டாள். கண்ணுசாமி சரேலென, உள் அறைக்குச் சென்று விட்டான். விமலா சிரித்துக் கொண்டே “நான் போய் விடுகிறேன் டாக்டர். என் விலாசம் உங்கள் கம்பவுண்டருக்குத் தெரியும். நான் அவர் தங்கை வீட்டில்தான் குடியிருக்கிறேன்” என்றாள். உள்ளே சென்ற கண்ணுசாமி ஓடிவந்தான் வெளியே. “சீ! நாயே! போ வெளியே! என் தங்கை வீடாம். அவள் யாரடி என் தங்கை!” என்று கூவினான். “ஏன் உங்க மரகதம் வீட்டில் தானே நான் இருக்கிறேன்; உன் தங்கைதானே மரகதம்! அவள் சொல்லித்தான் நான் இங்கு வந்தேன்” என்றாள் விமலா. “டாக்டர் சார், நான் வேலையை விட்டுப் போய் விடட்டுமா, இந்த விதண்டாவாதக் காரியை வெளியே துரத்துகிறீர்களா? இரண்டிலொன்று சொல்லுங்கள் சீக்கிரம். இவள் வேண்டுமென்றே என்னைக் கேவலப் படுத்துகிறாள்” என்று கண்ணுசாமி கண்கலக்கத்தோடு கூறினான். டாக்டருக்கு ஒன்றுமே புரியவில்லை. மரகதம் யார்? அவள் வீட்டில் தாசி விமலா எப்படிக் குடியிருக்க முடியும்? கண்ணுசாமி நல்ல குலமாயிற்றே? என்று யோசித்தார். விமலாவின் கூரிய பார்வை, டாக்டர் சுந்தரேசனின் மனத்திற்குள் உள்ளதைக் கண்டுபிடித்துவிட்டது. டாக்டரே என் கதையைக் கேட்க வேண்டும்மென்று ஆவல் கொண்டீர்களே, அதைவிட ருசிகரமான கதை, உங்கள் கம்பவுண்டர் தங்கை மரகதத்துடையது. இங்கே கூறினால் கண்ணுசாமிக்குக் கோபம் கொதித்துக் கொண்டு வரும். அது சகஜம். மரகதம் கண்ணுசாமியின் தங்கை. ஆனால் வெளியே வந்து விட்டவள்” என்றாள். “வெளியே வந்துவிட்டவளா!” என்றார் டாக்டர்.

“ஆமாம்! வெளியே வந்துவிட்டவளென்றால், என்னைப் போலத் தாசியாகப் பிறந்தவளல்ல, விதியின் வசத்தால் விபசாரி ஆனவள். நாளைக்கு அவள் கதையைக் கூறுகிறேன். வாருங்கள்” என்று கூறிவிட்டு, வெளியே போய்விட்டாள்.

தாசி விமலாவின் சாதுர்யம் டாக்டருக்குச் சந்தோஷத்தை மட்டுமே தந்தது. ஆனால் கம்பவுண்டர் கண்ணுசாமியின் தங்கை விஷயமாக, விமலா கூறினதைக் கேட்டு, அவருக்குத் தூக்கி வாரிப் போட்டு விட்டது. கண்ணுசாமி எவ்வளவு நல்ல மனுஷன். அவனுக்கு இப்படி ஒரு தங்கை இருக்க வேண்டுமா? என்று எண்ணினார். கண்ணுசாமியின் கோபமும் கலக்கமும், சுந்தரேசனுக்குக் கவலையை உண்டாக்கி விட்டது. அவனுடைய மனம் சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக, விமலாவின் வரலாறும் வேண்டாம், மரகதத்தின் கதையும் வேண்டாம். அவர்கள் தொடர்பே வேண்டாம் என்றுகூட எண்ணினார். ஆனாலும் நல்ல புத்திசாதுரியமுள்ள விமலாவுக்கு ஒரு ரௌடி எப்படி நாயகனானான், நற்குடியிற் பிறந்த மரகதம் எப்படிப் பொதுமகள் ஆனாள் என்ற கதையைக் கேட்டே தீர வேண்டு மென்ற ஆவல், சுந்தரேசனை விட்டு அகலவில்லை. மேலும் விமலாவிடம் ஏதோ ஒருவித பாசம் அவனுக்கு ஏற்பட்டது.

மறுநாள் மாலை குறிப்பிட்டபடி டாக்டர் சுந்தரேசன் விமலாவைக் காணச் சென்றான். கையில் கவனமாக மருந்தும் கொண்டு போனான். மருந்து பாட்டில், அவன்மீது ஊராரின் தூற்றல் பாணம் பாயவொட்டாது தடுக்கும் கவசமாக இருந்தது. டாக்டர் மருந்து கொடுக்கச் செல்கிறார் என்ற சாக்குக்கு அது பெரிதும் உதவுகிறதல்லவா! சுந்தரேசனுக்குக், கதையைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் எவ்வளவு இருந்ததோ அந்த அளவுக்கு மேலேயே பயமும் இருந்தது. ரௌடி ரங்கன் அங்கு இருந்து ஏதாவது வெறியிலே உளறினால் என்ன செய்வது என்ற கவலை. ஜுரத்துக்கு மருந்தும், புண்ணுக்குப் பூச்சும் போடத் தெரியுமே யொழியக், குடியனின் கோணல் சேட்டையைத் தவிர்த்துக் கொள்ள டாக்டருக்கு என்ன தெரியும் பாபம்! நல்ல வேளையாக ரங்கன் அங்கு இல்லை. உள்ளே நுழையும் போதே மலர்ந்த முகத்துடன் விமலா டாக்டரை வரவேற்றாள். பல வருஷங்களாகப் பழகியவள் போலப் பேசி உபசரித்தாள். வைத்தியசாலையில் இருந்தபோது அவள் காட்டிய சாமர்த்தியத்தைவிட வீட்டில் அவள் சமர்த்து டாக்டருக்கு அபாரமாகத் தோன்றிற்று.

சற்று ஸ்தூலசரீரமுடையவளும், சிவந்த மேனியினளும் நல்ல ஆபரணங்கள் அணிந்தவளுமான மாது தன்னை நமஸ்கரித்து “நாங்கள் செய்த பூஜாபலன்தான், இப்படிப்பட்ட பெரிய மனிதர்களை எல்லாம் இங்கே வரச் செய்தது” என்று உபசாரம் கூறியதைக் கண்ட சுந்தரேசன், விமலா குறிப்பிட்ட மரகதம், இவளாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணி, தன் எண்ணம் சரியா என்று கேட்பது போல் விமலாவைப் பார்த்தான். “இதுதான் மரகதக்கா. நேற்று சொன்னேனே” என்று சிரித்துக் கொண்டே விமலா கூறினாள். அவள் மனக்கண்முன், கண்ணுசாமி கோபத்துடன் கூச்சலிட்ட காட்சி தோன்றிற்று. “அக்கா, அவருக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமோ? நாயே, பேயே, போடி வெளியே என்று வாயில் வந்தபடி கூறினார். ஒன்றும் பதிலே பேசவில்லை” என்று விமலா மரகதத் திடம் கூறினாள். மரகதம் “கோபத்துக் கென்ன குறைச்சலம்மா. கோபம் வரத்தான் வரும். ஏனென்றால் என்னை ஏழடுக்கு உப்பரிகைமீது ஏற்றி வைத்தான், நான் கெட்டு விட்டேன்; அதுதான் அவன் நினைப்பு, பேசுவான் இப்போது பெரிய ஆசாமி போல. வாய்க்குப் பூட்டா சாவியா விமலா. அதிலும் நம்மைப் பற்றி யார் கேட்கப் போகிறார்கள் என்ற திமிர்” என்று மரகதம் கூறினாள். டாக்டர், அண்ணனைத் தங்கை தூற்றுவதோடு நிற்காமல் கண்களைப் பிசைந்து கொள்வதைக் கண்டு, “ஏனம்மா போனதை எண்ணிப் புலம்பலாமா. அதெல்லாம் ஆண்டவன் செயல்” என்றார். விமலா, ஆண்டவன் உங்களை டாக்டராகவும், என்னை இப்படியும், அக்காவை இப்படியும் கண்ணுசாமியை அப்படியுமாக எத்தனை கோலத்தில் வைத்திருக்கிறார் பாருங்களேன். அவர் உலகப்படி எப்படி போனால் என்ன என்று எண்ணுகிறாரே தவிர, இவ்வளவு அலங்கோலமாக இருக்கிறதே நமது படைப்பு என்று கவலை பிறக்கிறதா. எப்படி பிறக்கும்? சிவனாக இருந்தால் பக்கத்தில் ஒன்று, தலையில் ஒன்று. விஷ்ணு மார்பின் மீதே சாய்த்துக் கொண்டிருக்கிறாராம். பிரம்மா என்னமோ நாக்கிலே வைத்துக் கொண்டிருக்கிறாராம். இப்படி நமது “சாமிகள்” நாயகிகளுடன் ஜோராகக் காலந்தள்ளிக் கொண்டிருக்கையிலே, நம்மைப் பற்றி ஏன் கவலை வரப்போகிறது. உங்களைப் போன்றவர்களைக், கடவுள் உல்லாசமாக இருக்கிறபோது படைத்திருப்பார். என்னைப் போன்றவர்களை அவர் உடலோ, உள்ளமோ இரண்டுமே எரிச்சலாக இருக்கும்போதோ பிறப்பித்திருப்பார்” என்றாள். டாக்டர் சிரித்துவிட்டு, “ஏதேது விமலா, உனக்கு கடவுள் பக்தி கூடக் கிடையாது போல் தெரிகிறதே” என்றார். “நீங்கள் என்ன சார் கடவுளுக்கு வக்கீலா!” என்று பளிச்செனப் பதிலளித்தாள் விமலா. “சரி, போதும் வாயை மூடு விமலா! ஏதேதோ வேதாந்தமும், விதண்டாவாதமும் பேசிக் கொண்டே வந்தவரைக் காக்க வைக்கிறாய். மேலே அழைத்துக் கொண்டு போய் உட்கார வை. விசிறி கொடு. நீயேதான் கொஞ்சநேரம் விசிறிக் கொண்டு இரேன். நான் காப்பி எடுத்துக் கொண்டு வருகிறேன்!” என்று கூறினாள் மரகதம். டாக்டரை அழைத்துக் கொண்டு விமலா, மாடிக்குச் சென்றாள். டாக்டர், அதுவரை தாசி வீட்டுக்கு மருந்து கொடுக்கக்கூடச் சென்றதில்லை. அதுதான் முதல் தடவை. தாசிகள், வருகிறவர்களை மயக்க, படுக்கை அறையை அலங்கரித்திருப்பார்கள். உள்ளே நுழைந்த உடனே பரிமளம் மூக்கைத் துளைக்கும், பஞ்சணை கண்ணைக் கவரும். ரவிவர்மா படங்களும், பாரீஸ் லேடி போட்டோக்களும் சுவரில் இருக்கும் என்று கதைகளில் படித்ததுண்டு, கண்டதாகத் தோழர்கள் சொல்லக் கேட்ட துண்டு. தாசிகள் இவ்வித சொகுசாக அறையைச் சிங்காரித்து வைத்துக் கொண்டிருப்பதால் தான் இளம் வாலிபர்கள் சொக்கி விடுகிறார்கள் என்று அவனுடைய நண்பர்கள் கூறியதைக் கேட்டு இருக்கிறான். அவ்விதமான அலங்கார அறைக்குள் தான் செல்லப்போவதாக எண்ணிய சுந்தரேசனுக்கு விமலாவின் படுக்கை அறை, பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. வேசி வீசும் வலை என்று அவனிடம் வர்ணிக்கப்பட்ட அறை வறுமையின் வாடை வீசும் கொட்டிலாக இருந்தது. பத்து வருஷங்களுகு“கு முன்பு புதிதாக இருந்த கட்டில். அதன் மீது கோரைப்பாய், சுவரிலே பல துளைகள், ஓரிடத்தில் லட்சுமி படம். மற்றோரிடத்தில் சரஸ்வதி மற்றும் ஓர் இடத்தில் காலண்டர். சோப்பு பெட்டியின் மூடி ஒரு புறமும், அடித்தட்டு வேறுமாக அறையின் மத்தியில் சிதறிக் கிடந்தது. கிழிந்த புடவைகள் ஆணியில் தொங்கின. இரவிக்கைகள் கீழே கிடந்தன. சுவரோரமாக இரண்டொரு பீடித் துண்டுகளும் தீக்குச்சித் துண்டுகளும் கிடந்தன. கட்டிலின் மீது கிடந்த பாயை அகற்றினாள் விமலா. மெத்தை ஒன்று தெரிந்தது. இரண்டொரு தலையணையும் கிடந்தன. “உட்காருங்கள்,‘சூட்’ அழுக்காகி விட்டால், வெளுக்க வண்ணான் இருக்கிறான். சோபாவிலும் நாற்காலியிலும் உட்கார வேண்டுமா? இந்த மாதிரி சொகுசான கட்டில் எங்கிருந்து உங்களுக்குக் கிடைக்கப் போகிறது” என்று தன் வறுமையை விமலா தானே கூறிக் கொண்டாள். அது டாக்டருக்கு வருத்தமாக இருந்தது. அவள் வருத்தப்படவில்லை. “இந்த அறை, கீழே சமயலறை இதற்கு வாடகை 10 ரூபாய். மரகதம் வாய் வாழைப் பழந்தான். கை கருணைக்கிழங்கு, இந்த வீட்டில் நானொரு குடி, மற்றும் மூன்று குடித்தனம்; மொத்தத்தில் 50 ரூபாய் வாடகை வருகிறது. வேறொரு வீடும் இருக்கிறது. அதிலே 60 ரூபாய் வருகிறது. இவ்வளவும் ஐந்து வருஷத்திலே சம்பாதித்தாள், “மகா ஜாலக்காரி” என்று விமலா, மரகதத்தின் தகவலைக் கூறத் தொடங்கினாள். அதற்குள் காலடிச் சத்தம் கேட்டது. டாக்டர் திடுக்கிட்டு எழுந்தார். பழக்கமற்றவரல்லவா? அதனால் யார் வருகிறார்களோ என்ற பயம். விமலா, கையால் “உட்காருங்கள்” என்று ஜாடை காட்டினாள். பிறகு உற்றுக் கேட்டுவிட்டு, “யாருமில்லை அக்காவாகத்தான் இருக்கும்.” என்றாள். “அது எப்படி உனக்குத் தெரிந்து விட்டது” என்று டாக்டர் கேட்டார். “உங்களுக்கு எப்படி ஏதோ குழலை மார்பிலே வைத்ததும் இன்ன நோய் என்று தெரிந்து விடுகிறது. அது உங்கள் வித்தை. இது என்னுடையது” என்று விமலா கூறினாள்.