அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


கலிங்கராணி
2
                     

அம்மங்கையும், நடனராணியும் அரண்மனைக்குள் சென்றனர். குலோத்துங்கச் சோழனின் தேவி, தியாகவல்லி அவர்களை எதிர்கொண்டழைத்து, “மங்கா! மன்னர் காஞ்சீபுரம் போகிறாராம். என்னையும் வரச் சொன்னார். காலையில் புறப்படுகிறேன். நீயும் வருகிறாயோ?” என்று கேட்க, “நான் வரவில்லை அம்மா” என்று அம்மங்கை கூறிவிட்டாள். செய்தி கொண்டுவந்த மருதன், அம்மங்கையை வணங்கிவிட்டு, “தேவீ! இதோ இந்தப் பஞ்சவர்ணக்கிளியை வீரமணி தங்களிடம் தரச் சொன்னார்” என்று கூறிக் கிளியைத் தர, அம்மங்கை ஆச்சரியப்பட்டு, நடனராணியை நோக்கியபடி, “கேட்டாயோ நடனம், வீரமணி கிளியை எனக்குத் தரச் சொன்னானாமே” என்று கூறிட, நடனம் “நாட்டிலேயும் காட்டிலேயும் கிடைக்கும் எந்த உயர்தரப் பொருளும் தங்களுக்குக் குடிபடைகள் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்” என்று கூறினாள். ஆனால், நடனராணிக்குக் கொஞ்சம் மனக்கஷ்டந்தான். இதைத் தெரிந்துகொண்டாள் ஆரியப்பெண் கங்காபாலா! ஆகவே, இருவரிடையேயும் விரோதத்தை மூட்டிவிட வழி கிடைத்துவிட்டது என்று எண்ணிக் களித்தாள். நடனராணி இருக்கும்வரை, அரண்மனையிலே தனக்குச் சரியான செல்வாக்குக் கிடைக்காது என்று கங்காபாலா கருதினாள்.

அம்மங்கையிடம் தனக்குச் செல்வாக்கு ஏற்பட்டுவிட்டால், ஆரிய குலத்துக்கே சோழ மண்டலத்திலே உத்தியோகம் உயர்ஸ்தானம் கிடைக்கும்படி செய்யமுடியுமல்லவா! பஞ்சவர்ணக்கிளியுடன், அம்மங்கை படுக்கையறை சென்று, தங்கக் கூண்டிலே கிளியை விட்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில், நடன ராணியிடம், பாலா “நடனம்! என்னடி பரிசு வேறு யாருக்கோ விழுந்துவிட்டது போலிருக்கிறதே. உனக்கல்லவா கிளியை அவர் அனுப்பியிருக்க வேண்டும். எதற்காக அரசகுமாரிக்கு அனுப்பினார்?” என்று கேட்டாள். அவள் பேச்சு, கோபத்தையும் ரோஷத்தையும் நடனத்திடம் மூட்ட வேண்டுமென்று இருந்தது. இந்தச் சூதை ஒருவாறு தெரிந்துகொண்ட நடனராணி, பாலாவின் நாவை அடக்கினாள்.

மந்தச் செவியன் மருதன் செய்த இந்தச் சங்கடத்தை ஏதுமறியாத வீரமணி, நடனத்தை எண்ணியபடி கச்சி சென்று, மன்னன் வருகிறார் என்ற செய்தியை, கச்சிநகர்க் காவலனிடம் கூறிவிட்டு, மன்னனை வரவேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதிலே ஈடுபட்டிருந்தான்.

மன்னன் தன் பரிவாரங்களுடன், காட்டைக் கடந்து, கச்சி நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.

உறையூரிலிருந்து தியாகவல்லி தன் சேடியருடன், மன்னன் கட்டளைக்கிணங்கக் கச்சிநகர் செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தாள். அம்மங்கை சென்றால், தானும் உடன் செல்லலாம், சென்றால் வீரமணியைக் காணலாம், என்று நடனம் எண்ணினாள்.

இதற்குள், யானைப்பாகர் யானையைக் கட்டுத்தறியினின்றும் நீக்கி அலங்கார அணிகள் பூட்டி, பிடரியின்மீது பொன் பூ வேலைப்பாடமைந்த மெத்தை வைத்துத் தைத்த அம்பாரியை அமைத்து, மலர்மாலைகளைச் சூட்டி யானையை அரண்மனை வாயிலிலே கொண்டு வந்து நிறுத்தினர். குதிரைப்படையினர் சிலரும், காலாட் படையில் ஒரு சிலரும், இரண்டோர் தேரும் அணி வகுத்து நிறுத்தப்பட்டன. தியாகவல்லி, இந்தப் பரிவாரம் புடைசூழ, நகர இராசவீதி வழியே சென்று உறையூரைக் கடந்து கச்சிநகர் போகலானார்.

மன்னனும் பரிவார சகிதம் கச்சிநகர் புகுந்த அன்று, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. காஞ்சிபுரத்திலே குதூகலம் சொல்லி முடியாது. வீதிகளிலே புது மணல் பரப்பி, நகர மாந்தர் தோரணங்கள் அமைத்து ஊரை அலங்கரித்தனர். மாளிகைகளுக்குப் புதுச்சுண்ணம் பூசினர். வாழை கமுகு கட்டினர். மகர தோரணமமைத்தனர். ஒவ்வொருவரும் தத்தமது மனையிலே மணவினை நடத்தல் போலவும் விழா நடப்பது போன்றும் கருதி மகிழ்ந்து, புத்தாடை அணிந்து புன்முறுவலுடன் மன்னன் வருகையை எதிர்நோக்கி நின்றனர்.

குலோத்துங்கனின் கீர்த்தி, மக்களின் மனத்தைக் கவர்ந்திருந்தது. மூவேந்தருள் சிறந்தும், முடிமன்னர்கள் பலரைத் தனக்குக் கப்பம் செலுத்துவோராகப் பெற்றும், வடநாட்டவர் அஞ்சிட வாழ்ந்த வல்லமை மிக்க மன்னன் ஆட்சியிலே இருப்பதை ஓர் பெருமை எனக் கருதிய மக்கள் மன்னனைக் காணவும், கண்டு களிப்படையவும், போற்றவும், வாழ்த்தவும், சமயம் வாய்த்ததைக் கண்டு மகிழ்வுற்றனர். கவிவாணர்கள் இனி நம்மை வறுமைவிட்டது என்று எண்ணினர். சிற்பிகள் நமது திறனைக்காட்டி மன்னன் மகிழ்ச்சியைப் பரிசாகப் பெறுவோம் என்று கருதிக் களித்தனர். இசை வல்லோர் புதுப் பண்கள் அமைத்தனர். ஆடலழகியரும் சதங்கைக்கு மெருகிட்டனர். வீரர்கள் தத்தமது ஆயுதங்களைச் சரிபார்த்துக் கொண்டனர். சிலம்பக் கூடங்களிலே சிரிப்பு! மாடமாளிகைகளிலே மகிழ்ச்சி! ஊரெங்கும் குதூகலம். கச்சிநகரே புத்துருப் பெற்றதோ என்று வியக்கும் வண்ணம் நகர மாந்தர், நானாவிதமான முறைகளிலே ஊரை அலங்கரித்துவிட்டனர். ஊர்ப்புறத்தே கச்சிக் காவலன், படைகளுடன், காத்திருந்தான். அரச பவனிக்காக யானை, குதிரை, தேர்கள் அணி வகுத்து நிறுத்தி வைக்கப்பட்டன. மன்னன் ஊர்ப்புறத்தே வந்ததும், முரசு முழங்கிற்று. முரசொலி கேட்டதும், “வந்துவிட்டார் மன்னர், மன்னர் வருகிறார்!” என்று ஊரே உற்சாகத்துடன் ஒலித்தது. பவனி நடந்தது. தோற்கருவி, துளைக் கருவி, கஞ்சக் கருவி, நரம்புக் கருவி ஆகிய பல்வேறு இசைக் கருவிகள் ஒலித்தன! வாழ்த்தொலி கடலொலி போல் கிளம்பிற்று. “மன்னர் மன்னவா! வருக! எம்மை வாழ்விக்கும் இறையே வருக! மூவேந்தருக்கு முதல்வா வருக! முத்தமிழ் வளர்க்கும் வித்தகா வருக!” என்று பராக்குக் கூறினர் பாணர். “வையகம் போற்றும் மன்னர் வாழ்க! வாகை சூடிய வேந்தர் வாழ்க! சோழ குல ஜோதி வாழ்க!” என்று மக்கள் ஆனந்த ஆரவாரம் செய்தனர். வீதிகளிலெல்லாம் மக்கள் திரள் திரளாக நின்று மன்னனை வாழ்த்தி வரவேற்றனர். மாடங்கள் மீது மங்கையர் நின்று மன்னன் மீது மலர் தூவினர். சிறு பிள்ளைகள் யானை, குதிரை, சேனையைக் கண்டு வியந்தனர். ஆடம்பர ஊர்வலத்துக்குப் பிறகு மன்னன் சித்திர மண்டபம் சென்று தங்கினான். சித்திர மண்டபம், முத்தமிழ் மண்டபமாயிற்று. விழாக்காண வெளியூரிலிருந்தும் பலர் வந்திருந்தனர். விருந்தும் வேடிக்கையும். அமோகம். மன்னன் சின்னாட்கள் அங்குத் தங்கினான். இதற்குள் ஏழிசை வல்லியாரும் வந்து சேர்ந்தனர். ஒவ்வொரு நாளும் அறிஞர்கள் உரையும், ஆடலழகிகளின் நடனமும், இசை விருந்தும் நடைபெற்றன. பல புலவர்கள் நமது நூற்களை அரங்கேற்றினர்! புதுப்பண்களைப் பாடிக் காட்டி இசைவாணர்கள் பரிசுகள் பெற்றனர். ஓவியக்காரரும், தத்தமது திறனை மன்னன்முன் காட்டி மகிழ்வித்தனர். மன்னன் பரிசுகள் பல வழங்கி அவர்களை மகிழ்வித்தான்.

ஆனந்தமாகச் சில நாட்கள் கழிந்த பிறகு, மன்னன் அரச காரியங்களைக் கவனிக்கலானான். காட்டைத் திருத்தத் திட்டங்கள், கானாறுகளை நீர்ப்பாசனத்துக்குப் பயன்படுத்தத் திட்டங்கள், உழவுமுறைப் பற்றிப் புது ஏற்பாடுகள், பாலங்கள் அமைக்கும் திட்டங்கள் போன்றவற்றைப் பற்றி நிபுணர்களுடன் மன்னன் கலந்து பேசினான். மக்களின் வாழ்க்கையிலே குறைபாடுகள் உள்ளனவோ என்று விசாரித்தான். அது சமயம் பருத்த உடலும், நரைத்த தலையும் படைத்த கிழவரொருவர், மன்னனிடம் வந்து நின்று, “மன்னவா! உன் ஆட்சி கண்டு ஆனந்திக்காதவர் இல்லை. தமிழகத்தின் தனிச்சிறப்பை நீ விளக்குகிறாய், ஆனால்...” என்று இழுத்தாற்போல பேசிடவே, மன்னன். “முதியோரே! ஆனால்... என்றீர்; முடித்தீரில்லையே! நான் மன்னன், ஆனால் உம்போன்ற பெரியோர்களின் மொழிதான் எனக்குச் சட்டம். உமது மனதிலே குறையுளதேல் தயங்காது கூறுக” என்று கேட்க, அம்முதியோர். “எனக்கொன்றும் குறை இல்லை கொற்றவனே! ஆனால், காலப்போக்கு என் நெஞ்சை வருத்துகிறது” என்றார். “என்ன காலப்போக்கிலே உள்ள குறை தெளியக் கூறுமின்” என்று மன்னன் அன்போடு வினவினான். முதியோர், “அரசே! இரண்டோர் நாட்களுக்கு முன்பு இங்கோர் ஆரியப் பண்டிதன் தனது கலை பற்றிப் பேசிடக் கேட்டீர். அவன் போன்றோர் செய்து வைத்த பிரசாரம், காலப்போக்கைக் கெடுத்துவிட்டது, என்பதே என் போன்றவர்களின் அபிப்பிராயம். தமிழகத்திற்கு ஆரியம் புதியதோர் ஆபத்தோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். அவ்வளவே என் குறை” என்றுரைத்தார். மன்னன் சற்றுநேரம் யோசித்து விட்டு, “பெரியவரே! அஞ்சாதீர்! அவர்களின் கலை, நீர்மேல் எண்ணெய்போல் தமிழகத்திலே மிதப்பதை நானும் கண்டேன். நாளாவட்டத்தில் அதை நீக்குவோம், இது உறுதி. ஆரியர், தமிழகத்திலே தமது ஆதிக்கத்தைப் புகுத்தார்; புகுத்த முயன்றால், கனக விசயர் கண்ட கதியே காண்பர்” என்று உறுதி கூறித் தேற்றினான்.

“மன்னர் மன்னவ! சிற்றரசர்கள் கப்பம் அனுப்பியுள்ளனர். கொலு மண்டபத்திற்கு அவர்களை அனுப்பவோ?” என்று வீரமணி, மன்னனைக் கேட்க மன்னன் “ஆம்” என்றுரைத்துவிட்டுக் கொலுமண்டபம் சென்றமர்ந்தான். குலோத்துங்க மன்னருக்கு திறையனுப்பிய மன்னர்கள் பலப்பலர். கன்னடர், பல்லவர், கைதவர், காடவர், துறும்பர், வங்கர், மராடர், விராடர், கொங்கணர் முதலிய பல்வேறு வட்டார மன்னர்கள். பொன்னும், மணியும், வேழமும், புரவியும், ஆரமும் புறவுமாக, பலவகை திறைப்பொருளை மன்னன் முன் குவித்துக் கும்பிட்டு ஒருபுறமொதுங்கி நின்றனர். கருணாகரத் தொண்டைமான், தூதுவர்கள் கப்பம் செலுத்திக் கொண்டிருக்கும்போதே, சற்றுச் சீற்றத்துடன் காணப்பட்டார். வீரமணியும் மற்றும் சில படைத்தலைவர்களும், மெல்ல ஏதோ பேசிக்கொண்ட மன்னனையும், தொண்டைமானையும். மாறி மாறிப் பார்த்தனர். மன்னன், கப்பம் செலுத்தியோரை ஒருபுறம் நிறுத்தி, அவரவர் ஊர் வளம் விசாரித்து,‘நம்மால் உமது மன்னனுக்கு ஏதேனும் உதவி தேவை எனில் கூசாது கூறுமின்’ என்று கேட்டு உபசரித்தான். ‘அரசர்க்கரசே! உமது ஆணையே எமது அரசுகளை எல்லாம் அரண்போல் காத்து நிற்கிறது, குறை
வேதுமில்லை’ என்றனர், திறை கொணர்ந்தோர்.

“கவிதைகள், காவியம், உயர்கலைகள், சிற்பம் முதலிய விசேடங்கள் நமது நாடுகளிலே உள்ளனவோ? நாமறியக் கூறுமின்” என்று மன்னன் கேட்க, அவரவர்கள் தத்தம் நாட்டிலே உள்ள நயங்கள் உரைத்து நின்றனர். இவை ஒன்றையும் தொண்டைமான் கவனிக்கவில்லை. அதுசமயம் தொண்டைமான், சோழ மன்னனின் படைபலக் கணக்கிலே கவனம் செலுத்தியிருந்தான், காரணத்தோடு!

மன்னன் திடீரென்று, தொண்டைமானை நோக்கி, “திறை செலுத்தத் தவறியவர் எவரேனுமுண்டோ?” என்று கேட்டான். கொலுமண்டபம் நிசப்தமாய்விட்டது. கோபக்குரலுடன், “வேந்தே! கலிங்கநாட்டு மன்னன் அனந்தவன் மட்டுமே கப்பம் செலுத்தவில்லை” என்று திருமந்திர ஓலை நாயகன் கூறினான். குலோத்துங்கன் முகத்திலே குறுநகை பிறந்தது! அதன் பொருள் என்ன என்பதை அங்கிருந்தோர் அறிவர். சபை கலைக்கப்பட்டது. தொண்டைமானின் விழியும் விஷயத்தை வெளிப்படுத்திவிட்டது! மன்னனின் புன்முறுவல். இட்ட கட்டளை, “தூக்குவீர் கத்தியை!” என்பதே! உறைகளிலிருந்து வாளை உருவிட இலட்சக்கணக்கான வீரர்கள் ‘தயார்! தயார்!’ என்றனர்.

கலிங்க நாட்டு மன்னன், கெடுமதி இருந்தவாறென்னே! தமிழக முழுவதும் தலைவணங்கி நிற்கும் தன்மையினனான நம் மன்னர் மன்னனின் மாண்புகளை அறியாது போயினன். மடத்தனமிக்க மமதை கொண்டான். மண்ணில் அவன் குருதி கொட்டுமென்பதுறுதி! குலோத்துங்கனை எதிர்த்து நின்ற எவரேனும் தோற்காதிருந்ததுண்டோ. வேங்கை சீறிடின் மான் கூட்டம் பிழைக்குமோ? மூண்டுவிடும் பெரும் நெருப்பிலே பஞ்சு பிழைப்பதுண்டோ? கலிங்கக் காவலனின் ஆணவமெனும் வெண்ணை நமது அரசனின் சினமெனும் கனல்பட்டு உருகிவிடாதோ! ஒரு வேந்தனின் ஆணவத்தின் பயனாக, பாபம், அந்தக் கலிங்க மக்கள் சொல்லொணாக் கஷ்டமனுபவிக்கப் போகிறார்கள். அவர்களின் நகரங்கள் நாசமாக்கப்படும்! வயல்கள்வெளிகளாகும்! மாளிகைகள் மண்மேடுகளாகும்! இந்தக் கலிங்க மன்னன் எவ்வளவு பித்தன்! ஏனோ! வம்பை விலைகொடுத்து வாங்குகிறான். குலோத்துங்கக் கொற்றவனின் தோள்வலியை அறியாதவன்போல், அகத்தைக்கொண்டு, தான் ரட்சிக்க வேண்டிய மக்களை இம்சைக்கு உள்ளாக்கத் துணிகிறான் என்று காஞ்சியில் மன்னனுடன் வந்திருந்த படையினரிற் சிலர் பேச, மற்றவர் “போர் வந்தேவிட்டதுபோல் பேசுகிறீரே! மன்னனின் ஓலை போனதும், கலிங்கன் குளிரும் காய்ச்சலும் கொண்டு, திறையுடன் இவண்போந்து “திக்கெட்டும் புகழ் பரப்பிய தீரனே! தமிழகத்தின் ஒளியே! மன்னர் மன்னவா! என்னை மன்னித்தருள்க” என்று வணங்கிவிட்டாலோ!” - என்று வினவினர். நான் கலிங்க நாட்டைக் கண்டிருக்கிறேன். மன்னனின் குணத்தை மக்கள் கூறக் கேட்டுமிருக்கிறேன். மமதையே அந்த மன்னனுக்குத் தோழன், எனவே அவன் மன்னிப்புக் கோரான்! போருக்கே எழுவான்” என்று நரைத் தலையும் வடு நிரம்பிய உடலமும் கொண்ட ஒரு வயோதிக வீரர் கூறக்கேட்ட மற்றவர் அங்ஙனமாயின் நமக்குப் பெருவிருந்துதான், சந்தேகமில்லை” என்று கூறி, ஆரவாரித்து ஆயுதங்களைத் தூக்கிச் சுழற்றி ஆடினர்.

மன்னன் குலோத்துங்கன், படைத்தலைவன் தொண்டைமானுடன், தனியறையிலே உரையாடிக் கொண்டிருந்தான். கவலை கொண்ட முகத்தினனாக வீரமணி, அந்த அறையின் வாயிற்படியிலே காவல்புரிந்து நின்றான்.

“மன்னவா! இந்தப் போருக்காகத் தாங்கள் நேராகக் களம் புக வேண்டுமா? நான் செல்வேன் சேனைகளுடன், வெல்வேன் கலிங்கவேந்தனை, உமது கட்டளை எனும் வில்லுக்கு நான் அம்பு! என்னை எய்தால் போதாதோ?” என்று தொண்டைமான் கூறிடக் கேட்டு புன்முறுவல் பூத்த மன்னன் அங்ஙனமே யாகுக! அஞ்சா நெஞ்சரே, அன்பரே, தேவையான படைபலத்தோடு சென்று வென்று வாரும். கலிங்கனின் காதுகளில் கங்கைக்கரைக்காரரின் கூச்சலே கேட்கிறது. அதனாலேயே அவன், புயலில் குதிக்கத் துணிந்துவிட்டான். அன்றோர்நாள், ஆரிய மன்னர்களைச் சேரன் செங்குட்டுவன் வென்று, சிரமீதில் கல்லேற்றி வந்த சேதியை கலிங்கன் மறந்தான்போலும்!” என்று மன்னன் கூறினான்.

“உறையூருக்கு ஓலை அனுப்பிவிடுகிறேன். வீரமணி குதிரைப் படைக்குத் தலைமை தாங்குவான். எனது தமையனாரிடம் கரிப்படையின் பொறுப்பிருக்கும். தரைப்படைக்குத் தலைமை நானே கொள்கிறேன்” என்று தொண்டைமான் போர் முறையை விவரிக்க, மன்னன் உலவியபடி, “சேனைத் தலைவரே! உமது யுசிதம்போல் செய்யும். ஆனால் ஒன்று! கலிங்க நாடு மலையரண் கொண்டது. கலிங்க மன்னனின் மமதைக்குக் காரணமும் அதுவேதான்! எனவே மலையரணைத் தூளாக்க, யானைப் படையைச் சற்று அதிகமாகவே கொண்டு செல்லும். மேலும், கலிங்கநாட்டின் மீது, நமது படைகள் தரை மார்க்கமாகப் பாய்வதோடு கடல் மார்க்கமாகவும் நமது சேனைகள் சென்று முற்றுகையிட வேண்டுமாகையால், நமது கப்பற்படையும் தரைப்படை கிளம்பும்போது கிளம்பட்டும். கலிங்கம் அழியட்டும்.” என்று கூறினான்.

“தங்கள் ஆணையை நிறைவேற்றுவேன்” என்று கூறிப் பணிந்து நின்றான் தொண்டைமான். இரு வீரரின் முகங்களும், கோபத்தால் சிவந்திருந்தன. முத்துப்போல் அரும்பிய வியர்வையைத் துடைக்கவும் மனமின்றி மன்னன் நமது படைகளை வெளியே கூட்டு, நான் சில கூறல் வேண்டும்” என்றான்.

சித்திர மண்டபத்தை அடுத்த வெளியே படைகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. தொண்டைமான் வீரமணியை உடன் அழைத்துக்கொண்டு குதிரை மீதேறி, அணிவகுப்பை ஒழுங்கு பார்த்தான், படை முழுவதிலும் ஜொலிக்கும் முகங்களும், அவற்றுடன் போட்டியிடும் ஒளிவீசும் ஆயுதங்களுமாக இருந்தன! “இந்த வடு இன்ன களத்திலே உண்டாயிற்று. இன்ன போரிலே இன்ன விதமான வெற்றி நான் கண்டேன்” என்று பழங்கதை பேசி நின்றனர் படைவீரர்கள். வீரமணியின் வாழ்க்கையில் புதியதோர் நிலைமை, அதாவது குதிரைப் படைக்குத் தலைமை தாங்கும் பேறு கிடைத்ததால், அவன் மிக்க மகிழ்வுடனே விளங்கினான். காதலியைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற கவலையையும் மறந்தான்! புதுத் தலைவரைப் பெற்ற குதிரைப் படைவீரர்கள் களித்தனர். குதிரைகள் களம் புகும் காலம் இதுவெனக் கண்டுகொண்டு கால்களைத் தட்டி நின்றன! ‘கலிங்க வீரர்களின் மார்புகளிலே இந்தக் குளம்புகள் தாண்டவமாடும்’ எனக் கூறிக் குதிரையை வீரர்கள் தட்டிக் கொடுத்தனர். குன்றுகள் பல, வரிசையாக அடுக்கியது போன்று காட்சி தந்தன கரி வரிசை! அவைகளின் ஆரவாரம் கடலொலி போன்றிருந்தது.

பேரிகை ஒலித்தது; பேச்சு நின்றது! மன்னவன் ஓர் யானை மீதமர்ந்து, படைவரிசை நடுவே வந்து நின்றான்; புன்னகை பூத்தான்! வீரர்களின் முகமெலாம் மலர்ந்தன! “மன்னர் மன்னவன் வாழ்க! தமிழ் மாநிலம் வாழ்க!” என்று வீரர்கள் முழக்கம் செய்தனர்!

“தமிழ் மாநிலம் வாழ்க! உண்மை உரை அது; வீரர்காள்! தமிழ் மாநிலம் வாழ, அதன் கீர்த்தி பரவ, உங்கள் குருதியைப் பாய்ச்ச வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளவே இன்று இங்கு உம்மை அழைத்தேன். மண், பெண், பொன் எனும் மூன்றுக்கும் மாநிலத்திலே போர் மூளுவதுண்டு. நாம், மண் வேண்டியோ, பெண் வேண்டியோ, பொன் கோரியோ கலிங்கநாட்டின் மீது போர் தொடுக்கவில்லை. சோழவளநாடு சோறுடைத்து! நமது மணிமாடங்களிலே தேனிடையூறியச் செம்பவள இதழ்ச் சேயிழையார் தத்தமது காதலருடன் தென்றலையும் திங்களையும்வென்று வாழ்கின்றனர். மண், பெண், பொன் எனும் மூன்றிற்கல்ல இப்போர்; மானத்திற்கு! ஆம்! தமிழகத்தின் எல்லையிலே உள்ள ஓர் கொல்லை கலிங்கம்! புன்னகைப் பூந்தோட்டமல்ல! செந்தமிழ் செழிக்கும் சோலையுமல்ல! ஆனால், கலிங்கன் கப்பம் தர மறுக்கிறான்! உன் உயிர் போகாமுன்னம், உமது குருதியில் வீரம் குதித்தாடுவது நிற்காமுன்னம், தமிழகத்தின் கீர்த்தி குறையாமுன்னம், கலிங்கனோ. கடம்பனோ, வங்கனோ, எவனோ திரை தர மறுக்கிறான் எனில், நமது மானத்தை மாய்க்க நினைக்கிறான் என்றே பொருள். மூவேந்தரிலே மற்றையோர் என்ன என்னுவர்! மேலே, கங்கைக் கரையிலே உலவும் ஆரியர்கள் எவ்வளவு கேலி செய்வர்! குலோத்
துங்கனின் நாட்கள் குறுகிவிட்டன என்று கொக்கரிப்பர். சோழமண்டலத்திலே, போர்வீரர்கள் கூட்டம் கூனிவிட்டது என்று கூவுவர், உண்மை நிலை அதுவா! ஒதிய மரமே நாம்! போர்த்திறம் இழந்தோமா? தோள்வலியும் மனவலியும் இழந்தோமா? முன்னோரின் புகழுக்கு நாம் மாசுகளா? முதுமொழிகளுக்குக் கரையான்களா? ஆண்மையற்ற கூட்டமா? அஞ்சி வாழும் ஆமைகளா? நயவஞ்சக நரிகளா? நாம் ஏறுகள்! நாம் தமிழர்! கொலைவாளைத் தூக்குவோம், கொடுமை களை
வோம்! மாற்றானின் ஆயுதங்களை நமது மார்பெனும் மதிலிலே வீசச்செய்து மகிழ்வோம். வீரப்போரிலே, வெற்றி காண்போம், வீழ்ந்தாலோ, புகழ் தழுவும்பேறு பெறுவோம். மறத்தமிழரோ, கலிங்க நாட்டு மன்னன் மீது போர் தொடுத்தாகிவிட்டது. உமது குருதியைக் கொட்ட, உடலைக் களத்திலே வீழ்த்த அச்சாரம் வாங்கிவிட்டேன். ஆண்மையாளரே! சின்னாட்கள், சிங்காரத் தமிழகத்தை உங்கள் செல்வக் குடும்பத்தை, காதலை, கவிதையை, காட்சியை, மறந்து பிரிந்திருங்கள். வானமே கூடாரம்; தரையே பஞ்சணை; ஆயுதங்களே தோழர்கள்; கானாறே காதலி; போரே சரசம்; இதுவே உங்கள் வாழ்க்கையாகக் கொள்ளுங்கள். போரிடத் துணிவு பிறவாதவரே, ஒதுங்கி நில்லுங்கள் எவரேனுமிருப்பின். அவர்கள் மீது நான் காயேன். உறையூர் போகச் செலவு தருவேன். கோழைகள் வீரர்கள் கூட்டத்திலே இருத்தல் கூடாது. பதரும் மணியும் கலத்தல் வேண்டாம்! வீரர்களே, இன்றே துணிந்து கூறுங்கள், போருக்குத் தயாரா!” என்று மன்னன் உருக்கமாகப் பேசிக் கேட்டான். “தயார்! தயார்! தயார்!” என்று வீரர்கள் முழக்கம் செய்தனர். மன்னவன் சிரித்தான்.

“மகிழ்ந்தேன்! வீரர்களே, உம்மை வாழ்த்துகிறேன். கலிங்கம் சென்று, வென்று, வாகைசூடி வருமளவும், நான் காஞ்சியிலேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளேன். உங்களை விட்டுப் பிரிந்துள்ள காதலிகளின் கண்கள் கக்கும் கனலினின்றும் தப்பவே, நான் உறையூர் போகாது, இங்கிருக்க எண்ணுகிறேன்” என்று மன்னனுரைத்திட, வீரர்கள் மகிழ்ந்தனர்.

வீரமணி, மன்னனை வணங்கி, “மன்னரே, மங்கையரின் விழிகளிலே கனல் கக்குமென்றீர்கள், உண்மையே, ஆனால் காதலில் கட்டுண்டோ, கிலியால் தாக்குண்டோ, வீரர்கள் களம் புகாது, கட்டிலறை நோக்கி நடந்திடின், தமிழ் அணங்குகள், “இத்தகைய கோழையையா நான் பெற்றேன் மணாளனாக” என்று கூறிக் கண்களில் புனல் சோர நிற்பர்” என்றான்.

மன்னன், “வீரமணி மாதர் விழி பற்றிய ஆராய்ச்சியை மெத்த நுணுக்கமாகக் கண்டுள்ளானே,” என்று கூறிட, வீரமணி வெட்கித் தலை குனிந்தான். அதே வேளையில், நடனராணியும், வெட்கித் தலைகுனிந்து இருந்தாள், அரண்மனையிலே!

“அடி கங்கா! உங்கள் நாட்டுக் கதை ஏதாகிலும் சொல்லேன் கேட்போம்” என்று அம்மங்கை கேட்க, ஆரியப் பெண், “ஆயிரக்கணக்கிலே உண்டு கதைகள்; அவைகளிலே உமக்குப் பிடித்தமானது எதுவாக இருக்குமென்றே யோசிக்கிறேன்” என்று உரைத்தாள். நடனராணி “எதையாவது ஒன்று சொல்லு கேட்போம்” என்றாள். அரசிளங்குமரி “வீரக் கதைகள் கூறு” என்று கூற, நடனராணி சிரித்துக்கொண்டே, “அது கிடையாது” என்றுரைத்தாள். “ஏனில்லை ராணி? பத்துத் தலையும் இருபது கரங்களும் கொண்டு, அஷ்ட திக்குபாலகர்களை வென்று, மாயாஜாலம் மகேந்திர ஜாலம் கற்று மாவீரனெனப் பெயரெடுத்த இராவணனை எங்கள் இராமபிரான் சம்ஹாரம் செய்ததும், இலங்கையை நிர்மூலப்படுத்தியதும் வீரமில்லையோ? எங்கள் இனத்தினிடமே இந்த நடனாவுக்குத் துவேஷம். நாங்களும் வீரமான இனந்தான்” என்று கங்கா கோபித்துக் கூறினாள்.

நடனம் சாந்தமாகவே பதிலுரைத்தாள். “அடி பாலா! நீ சொன்ன கதை மனிதனுடையதல்லவே, மகா விஷ்ணுவின் அவதாரக் கதையென்று தானே உங்கள் புராணம் கூறுகிறது. அரசியார் கேட்டது, சாதாரண மக்களிலே வீரராக இருப்பவரின் கதையைத்தானே; கடவுளின் கதையல்லவே. கடவுளின் வீரம், தீரம், பராக்கிரமங்கள் பற்றிக் கதை வேண்டுமோ? கடவுள் என்றால் எல்லாவற்றையும் கடந்தவர் என்றுதானே பொருள்.

இராமரின் வீரத்தைவிட அந்தப் புராண மூலம் வாயுவாஸ்திரம், வருணாஸ்திரம், அக்னியாஸ்திரமாகியவைகளின் வேடிக்கைகள்தான் அதிகமாக விளக்கப்படுகின்றன. அரசியார் அதைக் கேட்கவில்லை; உங்கள் நாட்டு வீரர் கதை ஏதேனும் கூறச் சொன்னார்கள்;சொல்லு இருந்தால்” என்று நடனம் விளக்கினாள். கங்கா “எனக்கொன்றும் கவனமில்லை” என்று கூறி முகத்தைச் சுளித்துக் கொள்ளவே அரசிளங்குமரி “இதென்ன வம்பாகிவிட்டது. வீரக் கதை கிடக்கட்டும் மாதரைப் பற்றி கூறு” என்றாள். கங்கா மௌனம் சாதித்தாள். “நீ கூறு நடனா! பாலாவுக்குக் கோபம் அடங்கட்டும்” என்று அம்மங்கை கூறிட, நடனம் கதை சொல்லத் தொடங்கினாள். “தேவீ! இது நம் நாட்டுக்கதையல்ல, கங்கைக் கரையோரத்துக் காதல் கதை என்று ஆரம்பிக்கும்போதே, கங்கா “தேவீ! வேண்டுமென்றே நடனம் என்னை அவமானப்படுத்தப் போகிறாள், அதற்காகவே கதை சொல்ல முன் வந்தாள். நான் பூத்தொடுக்கப் போக உத்திரவு கொடுங்கள்” என்று வேண்டிக்கொண்டாள். “அம்மங்கை சரி! சரி! உங்கள் சண்டையும் வேண்டாம். கதையும் வேண்டாம்” என்று கூறிவிட்டாள்.

நடனராணிக்கும் அம்மங்கைக்கும் விரோத மூட்டிவிட வேண்டுமென்பதே பாலாவின் திட்டம். ஏற்கனவே அம்மங்கை தன்னிடம் பிரியமாக நடக்கும்படியான வழியை உண்டாக்கிக் கொண்டாள். ஆனால், தன்னை நடத்துவதைப் பார்க்கிலும் அம்மங்கை நடனராணியையே அதிக மரியாதையாக நடத்துவது கங்காவுக்குப் பிடிக்கவில்லை. எப்படியேனும் நடனத்தை அவளிருந்த பீடத்தினின்றும் கீழே இறக்கிவிட வேண்டுமென்று துணிவு கொண்டாள்.

நடனத்துக்கு அரண்மனையிலே வளர்ந்துள்ள செல்வாக்கு வீரமணியின் உயர்வுக்கும் பயன்படும். வீரமணியின் உயர்வு தமிழரின் நிலையை உயர்த்தும். தமிழர் நிலை உயருமானால் ஆரியருக்கு அந்நாட்டிலே வேலையில்லை. ஆரிய குலத்தில் பிறந்து இன உயர்வுக்குப் பாடுபடாது இருப்பதோ! எதற்கு இந்த ஜென்மம்? என்று எண்ணி ஏங்கினாள் பாலா. தன்மீது கங்கா காய்ச்சல் கொண்டிருப்பதை ஒருவாரு நடனம் உணர்ந்தாளேயொழிய, தன்னைக் கவிழ்க்கவும் சதி செய்வாள் என்று கருதவில்லை. ‘நாம் அவளுக்கு ஒரு தீங்கும் செய்தோமில்லை; நம்மை அவள் என்ன செய்ய முடியும்?’ என்று கருதினாள். அம்மங்கையின் செவியிலே ஆரியப் பெண்ணின் கலகம் புகாது என்று நம்பினாள்.

இந்நிலையில் கலிங்க நாட்டின்மீது மன்னன் போர் தொடுத்த செய்தியைச் சேவகன் கொண்டு வந்தான். நடனம் திகைத்தாள். காதலன் வருவான் என்று எதிர்பார்த்திருந்தவளுக்குக் கலிங்கக் களம் புகுந்தான் என்றால் கஷ்டம் விளையாதோ? அவளுடைய நிலையை உணர்ந்த அம்மங்கை “நடனம்! உன் காதலனுக்குக் குதிரைப் படைத்தலைவன் பதவியைத் தந்தாராம் மன்னர். அதற்குச் சன்மானம் உண்டு, என்ன தெரியுமோ? களத்திலிருந்து வீரமணி திரும்பியதும் திருமணம். திருமணம் நடக்கும்போது பரிசாக அழகிய கிராமம் ஒன்று தரப்படும் மன்னரால். நான் ஓர் முத்துமாலை தருவேன் பரிசாக” என்று கூறினாள். நடனராணி வேதனையை மறந்து வெட்கித் தலைகுனிந்து “தங்கள் அருள் இருப்பின் போதும் அம்மையே” என்று சொன்னாள்.

பெருமூச்சை கங்கா அடக்கியபடி “எப்படியோ நடனமாடி, கண்ணையும் கையையும் காட்டி மயக்கிவிட்டாய், சரியான ஆள் சிக்கிவிட்டார், உனக்கு யோகந்தானடி நடனம். ஆனால் கலிங்கப் போரிலிருந்து உன் காதலன் திரும்பி வரவேண்டும்; கௌரி பூஜை செய்” என்று கேலி செய்ய, நடனம் வெடுக்கென்று, “கௌரி பூஜை நான் செய்துப்பயன் என்ன? அவருடைய கண் ஒளியும் வாள் ஒளியும் கூர்மையாக இருக்கும்வரை வெற்றி ஒலி கேட்டுத்தானே தீரும். அவர் சாமான்யமானவரா?” என்று பூரிப்புடன் பேசிட, இதுதான் சமயம் என்றுணர்ந்த பாலா “தொண்டைமானிடம் இவன் என்ன செய்யமுடியும்?” என்று கேட்டு நடனத்தின் வாயிலிருந்து ஏதேனும் வம்பு வெளிவராதா என்று எதிர்பார்த்தாள். “தொண்டைமான் தீரர், என் காதலரும் வீரரே! மாற்றுக்குறைந்தவரல்லர்” என்று நடனம் பதிலுரைத்தாள். கங்கா கலகலவெனச் சிரித்துக்கொண்டே “அவர் மாற்றுக் குறையாதவர்தான் ஆனால்...” என்று இழுத்தாள். “நான் மாற்றுக்குறைந்தவள் என்று கூறுகிறாயா?” என்று நடனம் கோபக்குறியுடன் கேட்கவே, அம்மங்கை மீண்டும் அமளி வந்துவிடப் போகிறதென்று அஞ்சி “கங்கை என்ன இருந்தாலும் உனக்கு வாய்த்துடுக்குத்தான்” என்று கடிந்துரைத்துப் பாலாவின் வாயை அடக்கினாள்.

“ஆமாம், நான் ஒரு நாட்டியக்காரிதான். பரத்தையின் வளர்ப்புப் பெண். இதைத்தானே நீ குறிப்பிட்டாய். இதுதானே என் மாற்றுக் குறைவு! பேஷ்! கங்கா! என் பிறப்புக்காக நான் வெட்கப்படவில்லை, என் நடனத்திற்காக நான் வெட்கப்படத் தேவையில்லை, என் நிலைக்கா நான் நாணிடவும் வேண்டியதில்லை. என்னை நான் நன்கு தெரிந்து கொண்டிருக்கிறேன், நீ உன்னை யார் என்று தெரிந்துகொள்” என்று அதிகக் கோபத்துடன் பேசிவிட்டு “தேவீ! இன்று முதல் நான் வெளியே விடுதி ஏற்படுத்திக்கொண்டு வாழ விரும்புகிறேன். உத்திரவு தர வேண்டும்” என்று அம்மங்கையைப் பணிவோடு கேட்க, அம்மங்கை திகைத்து நிற்கையிலே, “ஆமாம், தனி ஜாகை அவசியந்தான் உனக்கு. சதிகாரர்கள் கூடிட இரகசிய இடம் வேண்டாமோ?” என்று பாலா கூறினாள்.

“என்னடி உளறுகிறாய்” என்று அம்மங்கை அதட்டினாள். பயந்தவள் போல் பாலா பாசாங்கு செய்துகொண்டு “மன்னிக்க வேண்டும். கோபத்தால் ஏதோ கூறிவிட்டேன். நான் அதைக் கூறியிருக்கக் கூடாது; என் மனதிலேயே போட்டு வைத்திருக்க வேண்டியதைக் கொட்டிவிட்டேன். அதைத் தயவுசெய்து மறந்துவிடுங்கள்.” என்று கூறினாள். அம்மங்கை ஒன்றும் புரியாமல் பாலாவின் கரத்தைப் பிடித்திழுத்துக் கடுங்கோபத்துடன் “விளையாடாதே! உண்மையை ஒளிக்காதே! சதிகாரர் என்று யாரைக் கூறினாய்? நடனாவுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? இப்போதே கூறு; இல்லையேல் நான் உன்னைத் தண்டிக்க ஏற்பாடு செய்வேன்” என்று மிரட்டினாள்.

“ஐய்யய்யோ! இதென்ன எனக்கொன்றும் புரியவில்லையே” என்று கைபிசைந்து நின்றாள் நடனம்.
கங்கா, “தேவீ! என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள்; நான் மட்டும் அதனைக் கூறவே மாட்டேன். அதனால் பலருக்குக் கேடு வரும். அந்த பாபம் எனக்கு வேண்டாம். என்னை வேண்டுமானாலும் வேலையைவிட்டு நீக்கி விடுங்கள்” என்று பிடிவாதமாகப் பேசவே, மேலும் கோபமுற்ற அம்மங்கை “உண்மையைக் கூறு” என்று உரத்துக் கூவினாள். “எப்படிச் சொல்வேன் தேவீ! என்னை மன்னிக்க வேண்டுகிறேன். நடனாவும் வீரமணியும் தங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்கள். நான் கூறுவதைக் கேட்டாலோ அவர்கள் இருவரையும் தூக்குமேடைக்குத் தாங்கள் அனுப்புவீர்கள்” என்றாள் பாலா. அம்மங்கை மிரண்ட பார்வையுடன் நடனத்தை நோக்க, நடனம் நீர் வழியுங் கண்களுடன் “பாலா! என்ன பழியையடி சுமத்தப் பார்க்கிறாய் கள்ளீ! காதகீ!” என்று கூக்குரலிட்டு நின்றாள்.

“நானா கள்ளி! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் நீ உத்தமி, உன் கபடத்தை வெளிப்படுத்தப் போகும் நான் கள்ளியா? கேள் தேவீ! வீரமணியும் நடனமும் பேசிக் கொண்டிருந்ததை, நான் மறைந்திருந்து கேட்டேன். குலோத்துங்கச் சோழன் பட்டத்துக்குரியவரல்லவாம், அவரைக் கவிழ்த்துவிட்டு பழைய மன்னரின் வாரிசாக உள்ள வேறு யாருக்கோ பட்டம் சூட்டப்போகிறார்களாம். மணி இதற்காகவே படையிலே சேர்ந்து பக்குவமாக நடக்கிறாராம். இவள் அரண்மனையிலே இருப்பதும் இதற்குத்தானாம். இவர்களுக்கு உதவியாக ஊரிலே யாராரோ இருக்கிறார்களாம்” என்று பெரியதோர் பழியைப் பாலா சுமத்தினாள்.

“பேயே! நான் இதனைத் துளியும் நம்ப மாட்டேன்” என்றாள் அரசிளங்குமரி.

“அதனை நானறிவேன் அம்மையே! நடனத்தின் நடிப்பு உங்களை ஏமாற்றி இருப்பதை நான் நன்கு அறிவேன். என் பேச்சை நம்ப வேண்டாம், தயவுசெய்து வீரமணி தந்தனுப்பினானே கிளி அதைப் போய்க் கேளுங்கள்” என்றுரைத்தாள் பாலா.

“பித்தமா இவளுக்கு? சதி என்கிறாள்; கிளி என்றுரைக்கிறாள். என்னடி சொல்லும் கிளி?சொன்னதைச் சொல்லும்” என்றாள் அம்மங்கை.

“ஆமாம்! சொன்னதைத்தான் சொல்கிறது. வீரமணி சொல்லிக் கொடுத்ததைச் சொல்கிறது. அதைப் போய்க் கேளுங்கள் யார் என் மனைவி?” என்று, உடனே அம்மங்கை என் மனைவி என்று கூறும். நடனாவின் உதவியைக் கொண்டு, வீரமணி சதி செய்து, அரசைக் கைப்பற்றித் தங்களையும் கைப்பற்றிவிடக் கனவு காண்கிறான். தனிமையில் கிளியுடன் பேசியிருக்கிறான் போல் தோன்றுகிறது. நான் அகஸ்மாத்தாய் இதைக் கண்டுபிடித்தேன்; கிளியை எடுத்துவரச் சொல்லுங்கள்” என்றாள்.

“விந்தையான பேச்சு! போடி கிளியை எடுத்துவா இப்படி” என்று ஒரு சேடிக்கு அம்மங்கை கட்டளையிட்டாள்.

ஓடிச் சென்ற தோழி, கிளியின் உடலைத்தான் எடுத்து வந்தாள். கிளி செத்துக் கிடந்தது.