அந்த மறையாத வானவில்,
மங்காத மணம், என் வாழ்விலே, நான் கண்டறியாத களிப்பைத்
தந்திடவே, நான் ஆரியனின் அடிபணிந்தேன்; திறம் வியந்தேன்.
அவனது இனத்தைப் புகழ்ந்தேன். ‘எனக்கு இன்ப உலக வாழ்வு
தந்த ஏந்தலே’ என்று தொழுதேன். அவன் என் நிலையையும், என்னிடம்
இழைந்து கிடந்த மருதத்தின் மனதையும் நன்கு தெரிந்துகொண்டு,
நாகரிகமான நாட்டியப் பொம்மைகள் என்று எம்மை மனதிலே தீர்மானித்துக்
கொண்டான். அவன் எதன் பொருட்டு இவைகளைச் செய்கிறான் என்று
எண்ணிப் பார்க்கும் நிலையை நான் கடந்துவிட்டேன். அந்த
நிலா முகவழகியின், நேர்த்தியான நேசத்திலே நான் நெஞ்சையும்
நினைப்பையும் இழப்பேன். தேவஜோதியே என்று கூறி என்னைத்
தஞ்சமென்றடைந்த அந்த வஞ்சியோ, கொஞ்சியும் குலவியும்,
வாலிபக் கோலத்தைக் காட்டியும், என்னை மகிழ்வித்தாள்.
பாவம் என்னுடன் சரசமாடுவதை அவள், பக்தியில் ஓர் பாகம்
என்று கருதினாள்.
“ராதையும் ருக்மணியும், கோபிகையரும் பிறரும் பெற்ற பேறு,
இந்தச் சாமான்யளுக்குக் கிடைத்ததே! எவ்வளவு பூர்வ புண்ணியமிருந்தால்
இது கிடைக்கும் ஐயனே!” செந்தாமரைக் கையனே. என்று என்னிடம்
கூறினாள். தேவனிடம் சரசமாடுவது பக்திப்பாசுரம் என்று எண்ணினாள்.
ஆரியன் சொற்படி கேட்ட என் சொல்லை நம்பினாள். ரோஜாவிலே
முள் இருந்து பறிக்கும் நேரத்திலே கையை குத்துவதுபோல்,
அவளது சரசத்திலே பக்தி சாயல் இருப்பதுகாண, என் மனம் சற்று
வேதனைப்பட்டது. சாமானிய மானிடன்! கலிங்கத்திலே பிறந்து,
கட்கத்தை நம்பி வாழும் களத்துக் கூளம்! என்பது தெரிந்தால்,
அவள் என்னைத் தீண்டுவாளோ! சந்தேகமே! பருவம் அவளுக்கு
அந்த நினைப்பைக் கொடுப்பினும், அரசி என்ற நிலை அவளைத்
தடுத்துவிட்டிருக்கும். நானும் “தேவஜோதி” என்ற “தில்லு”க்கு
உடன்பட்டிராவிட்டால் வான வீதியிலே உலவும் மதி கண்டு மகிழ்வதுபோல்
மருதம், உப்பரிகை மீது உலாவுவதைக் கண்டு மகிழ்வதோடு தீர்ந்துவிட்டிருக்கும்.
கண்களுக்கு விருந்து கருத்துக்கு நோய் என்று இருக்கும்!
பிரதி இரவும், நறுமணம் வீசும் தைலம் பூசிய கூந்தலில் முல்லை
சூடி, முருவலுடன், மருதம், கோயில் வருவாள். நான் தேவ
வடிவும், வாலிபத் துடிப்பும் கொண்டு அவளை வரவேற்பேன்.
அவள் தொழுவாள், நான் தழுவிக் கொள்வேன். “தேவா” என்று
அடிமூச்சுக் குரலாலே என்னை அழைப்பாள். அணைப்பைத் தளர்த்தாமல்
‘அன்பே!’ என்று நான் கூறுவேன். இதழ்கள் பிறகு இணைபிரியா,
சில நிமிடங்கள்! இந்த இன்பம், பல நாள், பல வாரம், பல மாதம்,
அவள் “தாய்” ஆகும் நிலை பெறும்வரை! திருக்கோயிலிலே, தேவ
பூசாரியின் திருவருளால், நடந்த திருவிளையாடல், இந்த அளவு
வரை சென்றது. பகவத் பிரசாதத்தைத் தாங்கும் புண்ணியம் பெற்றேன்,
என்று பூரித்தாள் அந்தப் பூவை. தேவன் என்ற பாவனையையும்
மறந்து, தந்தை என்ற நிலையிலே, “ஊர் அறிந்தால்?” என்று
கேட்டேன் மருதத்தை கள்ளமற்ற அவள் மெல்லச் சொன்னாள், “தேவா!
உமது லீலா விநோதத்தை நான் என்ன கண்டேன்? தங்கள் சித்தம்போல்
நான் நடப்பேன்” எனக்கு, தேவப் போர்வையைக் கழற்றி எறிந்துவிட
எண்ணம் பிறந்து “மருதம்! என் கண்ணே! உன்னை நான் ஏமாற்றிவிட்டேன்”
என்று துவக்கினேன், உண்மையைக் கூறிட. ஆரியனின் புனைந்துரையை
நம்பியே அவளோ, புன்னகையுடன், “என்னை ஏமாற்றுவது உமது
திருவிளையாடலிலே ஒன்று போலும்!” என்று கூறி, முத்தமிட்டாள்.
என் சித்தம் தடுமாறிற்று. பொன்விலங்கு எனக்கும் அவளுக்கும்!
அதன் திறவுகோல், அந்தப் பூசாரியிடம். சாலையிலும் சோலையிலும்,
சிற்சில சமயங்களிலே அரண்மனையிலும் யாருங்காணாத சமயத்திலே
நாங்கள் சரசமாடினோம். என் சுமையை இறக்கச் சமயமட்டும்
கிடைக்கவில்லை. நான் தேவனாகவே இருந்தேன் - திருக்கோயிலிலேயே,
என் மகள் பிறந்தாள் - பாகீரதியின் மாலையை உதிர்த்து, தூவினான்
ஆரியன்.
‘தங்கள் வரப்பிரசாதம்’ என்று குழைந்து கூறினாள் மருதம்,
தலைகுனிந்து நின்றேன் ஒரு விநாடி. பிறகு அந்தக் குழந்தையைக்
கண்டேன். வாரி அணைத்தேன், முத்தமிட்டேன், கண்களில் நீர்
கசிந்திட நின்றேன். பாவனையையும், பாசாங்கையும் வென்றேன்.
கபடத்தைக் கொன்றேன். திட மனதுடன் “மருதம்! நமது குழந்தை
மீது ஆணையிட்டு இதைக் கூறுகிறேன், என்னை நம்பு, நான் தேவனுமல்ல,
ஜோதியுமல்ல, உன் போல் மானிடப் பிறவிதான், நான் கலிங்க
நாடு, தொழில், போர் புரிவது; நான் இந்தப் பக்கம் வந்தபோது,
ஆரியன். என்னை தேவ சொரூபம் என்றுரைத்து உனக்குத் தந்தான்.
நீ எனக்கு உல்லாசந் தந்தாய்! அதன் விளைவு, இதோ விளையாடுகிறது.
இனி இந்த மானிடனை நீ ஏற்றுக் கொள்வதும், தள்ளுவதும் உன்
இஷ்டம். இனி இந்தத் தேவபாவனையை நான் தாங்கேன்” என்று கூறினேன்,
என் தேவ கிரீடத்தை வீசி எறிந்தேன், மலர் மாலைகளை பிய்த்து
எறிந்தேன், அணிகளைக் கழற்றி வீசினேன், அவள், “தேவா! தேவா!”
என்று கூறித் தேம்பினாள். நான் மயக்கமுற்றேன். பிறகு என்ன
நடந்ததென்பது எனக்குத் தெரியாது. பல நாட்களுக்குப் பிறகு,
நான் கலிங்கத்தில் என் வீட்டிலே காய்ச்சலுடன் இருக்கக்
கண்டேன். யாரோ பல்லக்கில் கொண்டுவந்து என்னை விட்டுப்
போயினர், என்று கூறினர். மீண்டும் மலர்புரி போகத் துணிவு
பிறக்கவில்லை. சேதியை வெளியே சொல்லவும் பயமாக இருந்தது!
கவலையைப் போக்க, கட்கமெடுத்து, கங்கைக்கு மேலேயும், காமரூப
நாட்டிலுமாகப் பத்து ஆண்டுகள் திரிந்தேன். மருதம் என்ன
ஆனால், குழந்தை என்ன ஆயிற்று, கோயில் பூசாரி என்ன ஆனான்,
என்று கொந்தளிப்பு உண்டாகவே, மாறுவேடம் புனைந்து மலர்புரி
சென்று பாகீரதி கோயிலில் தங்கினேன். வந்தான் பூசாரி!
சற்று வயோதிகனாகக் காணப்பட்டான்; அவனை விசாரித்தேன்.
ஆரியன் ஆயாசப்படாது பேசினான். “ஆம்! பத்து ஆண்டுகள் பறந்துவிட்டன!
பாலப்பருவம் மாறிவிட்டது. மருதத்தின் பக்தி சிரத்தையும்
குறைந்துவிட்டது. அவள் இன்னமும் உன்னை தேவனென்றே கருதுகிறாள்!
திருவிளையாடல் தீர்ந்துவிட்டது, தேவன் மறைந்தான் என்று
தினமும் கூறுகிறாள். அன்று நீ பைத்தியக்காரத்தனமாக நடந்து
கொண்டாய். உனக்கு காய்ச்சலை வருவித்து, அவள் கண்படாமல்
மறைத்துக் கலிங்கத்துக்கு அனுப்பினேன். காளை, நீ மீண்டும்
இங்கு வந்தால் என் செய்வதென்று கலங்கினேன். வந்தால், வாளுக்குத்தான்
பாவம், இறையாகி இருப்பாய். நீ புத்திசாலித்தனமாக பத்தாண்டுகளாக
இப்பக்கமே தலைகாட்டவில்லை” என்று பேசினான். என் மனம் கொதித்தது!
எவ்வளவு துணிவு இவனுக்கு என்று கோபம் பிறந்தது; என் செய்வது!
“ஆரியரே! நான் மருதத்தை மீண்டும்...” என்று கேட்டேன்.
“முடியாது! முடியாது! அந்தப் படலம் முடிந்துவிட்டது” என்று
தீர்மானமாகக் கூறிவிட்டான் தீயன். “என் குழந்தை எங்கே?”
என்று கேட்டேன். அவன் புன்னகையுடன், தேவப் பிறவி, தேவரடியாளாக
இருக்கிறாள்! என்று திமிராகப் பேசினான். “எங்கே இருக்கிறது
குழந்தை?” என்று கெஞ்சினேன். “தெரியும்! கூற முடியாது.
அவள் வாழ்கிறாள், வசீகரமிக்க வனிதையாவாள், உனக்கேன் கவலை!
மருதம் உன் சொப்பனத்திலே கண்ட சுந்தரி என்று எண்ணிக்கொள்.
குழந்தையும் கனவிலே ஓர் கனி! மீண்டும் அவர்களுக்கும் உனக்கும்
தொடர்பு இல்லை - ஏற்படாது - ஏற்படுத்த முடியாது” என்று
கூறிவிட்டான். மலர்புரியில் அந்தச் சமயம் அவனுக்கு இருந்த
அதிகாரம், அரசிக்கே அவன் விரும்பினால் ஆபத்தைத் தரக் கூடியதாம்!
எனவே நான் அவனை எதிர்க்க அஞ்சி, “ஆரியரே, எனக்குக் குழந்தை
மீதே கவனமாக இருக்கிறது” என்று மீண்டும் கெஞ்சினேன். ஆரியன்
ஓர் நீள மணியை என்னிடம் தந்து, இது, உன் பெண்ணின் காதிலே
தொங்கிய அணி. இதை ஞாபகப் பொருளாக வைத்துக் கொள். அவள்
சுகமாக இருக்கிறாள். நீ உடனே ஊரைவிட்டுச் செல்” என்று
கட்டளையிட்டான்.
“சோழ வீரனே இதோ பார், என் கழுத்தில் தங்கச் சங்கிலியில்
கோர்த்துக் கட்டப்பட்டுள்ள இந்த நீலமணி. இதுதான் என்
கண்மணியை எனக்கு கவனமூட்டுகிறது. இந்த நீலமணியைக் காதிலே
அணிந்திருந்த பெண்ணைத்தான் நீ தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்”
என்று கூறி, கலிங்க வீரன் தன் கதையை முடித்தான். நீலமணியைக்
கையிலே எடுத்ததும், வீரமணிக்கு, கலிங்கக் கிழவன் கூறியது
மறந்துவிட்டது, “இந்த நீலமணி, நமது நடனத்தின் செவியிலே
இருப்பின், மிகமிகச் சிங்காரமாக இருக்குமே” என்ற நினைப்பு
தோன்றிற்று.
எப்படி என் கதை? நவரசமும் ததும்புகிறது, பார்த்தாயா? இவ்வளவு
பாரத்தைச் சுமந்து கொண்டு நான் இப்படி இறக்க முடியும்?
வீரனே! உன்னிடம் நான் என் மனத்தில் இருந்ததைக் கூறிவிட்டேன்;
என் நிதிக்கு உன்னைக் காவலனாக்கினேன்; என் மகளைக் கண்டுபிடி;
அவள் மண்வீட்டிலிருந்தால், மாளிகைக்கு அழைத்துச் செல்;
வாழ்க்கையில் வதைந்து கிடந்தால், பணமெனும் மருந்தூட்டி,
அவள் நோயைப் போக்கு; நான் உலவிய மலர்பரியை ஒரு முறை
போய் பார்; கலிங்கரும் தமிழரும், ஆந்திரரும் தமிழரும்,
சேரரும் சோழரும் களத்திலே மோதிக்கொண்டு, சிதைகின்ற
கோரம் நீங்க வழி கண்டுபிடி! செந்தமிழ் நாட்டை அரிக்கும்
செல், எமது நாட்டை மட்டும் சும்மாவிட்டுவிடவில்லை. கங்கையிலே
உலவினர்; காவிரிக்கும் வந்தனர். அந்த ஆரியத்தை அழிக்க
ஆயுதம் உதவாது; அறிவு வேண்டும். சாகப்போகும் நான் சாந்தோப
தேசம் புரிகிறேன் என்று எண்ணி எள்ளி நகையாடாதே என்று,
கலிங்க வயோதிகன், கூறிக் கொண்டே களைத்துக் கண்களை மூடிக்
கொண்டான். அவன் கூறிக்கொண்டதை வீரமணி சரியாகக் கேட்கவில்லை.
அவனது செவியிலே, தூரத்திலே குதிரைகள் வேகமாக வரும் சத்தம்
கேட்டது. வரவர, சத்தம் அதிகரித்தது. வயோதிகனை நோக்கினான்.
மயக்கமாகிக் கிடக்கக் கண்டான். மேலே ஒரு கம்பளத்தை எடுத்துப்
போர்த்திவிட்டுக் குகை வாயிற்படி வந்து நின்றான். கருணாகரனின்
உதவி அதிகாரி சில வீரர்களுடன், குகையை நோக்கித் தன் குதிரையின்
காலடிகளை அடையாளம் கண்டுபிடித்து வரக் கண்டான். திகைத்தான்.
தான் சவாரி செய்து வந்தி
ருந்த குதிரையை அவர்கள் கண்டதும், சந்தோஷத்தால் ஆரவாரித்து,
“வீரமணியின் குதிரை! இங்கேதான் எங்காவது இருப்பான்” என்று
கூவினர். தனக்குப் பகைவரால் ஏதோ ஆபத்து வந்துவிட்டதோ
எனப் பயந்தே தன்னை அவர்கள் தேடிக்கொண்டு வருவது வீரமணிக்குப்
புரிந்துவிட்டது. ஆனால், குகையிலே, அவர்கள் நுழைந்தால்,
கிழவனைக் கைது செய்வார்கள். நிதியைக் கைப்பற்றுவார்கள்;
தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாத நிலைமை தனக்கு
உண்டாகும் என்று வீரமணி அஞ்சினான். என்ன செய்வது என்று
யோசித்தான். அவனது மனதிலே யோசனைகள் தோன்றும் வேகத்தைவிட
அதிக வேகமாக குதிரைகள் ஓடி வந்தன. அதோ குகை! என்று கூச்சல்.
குகைக்கருகே வந்தேவிட்டனர்.
மூவர். வீரமணி குகை வாயற்படியண்டை நின்றுகொண்டு அவர்களை
உள்ளே விடாமல் தடுக்கத் தீர்மானித்துவிட்டான். வந்தவர்களோ
வீரமணியைக் கண்டதும் சந்தோஷத்துடன், “இதோ வீரமணி! நல்ல
வேளை. ஒரு ஆபத்தும் இல்லை.” என்று கூறிக்கொண்டே, குதிரைகளைவிட்டு
கீழே இறங்கி, குகையை நோக்கி நடந்தனர். சாதாரண காலத்திலே,
தனக்கு மேலதிகாரி வரக்கண்டால் வீரமணி காட்டும் மரியாதையைக்
காட்டாமலும், தோழர்களைக் கண்டதும் வரவேற்கும் வழக்கத்துக்கு
மாறாகவும், உருவிய வாளுடன், கடுகடுத்த முகத்துடன் வீரமணி
நிற்கக் கண்ட, மூவரும் சற்றுக் கோபமும் வெறுப்பும் கொண்டனர்.
அவர்கள் அவனருகே செல்லச் செல்ல அவன், அவர்களைப் பகைவர்கள்போல்
கருதுவது தெரியலாயிற்று. ஆகவே, அவர்கள் சற்றுப் பயந்தனர்.
“வீரமணி! இஃதென்ன விசித்திரமான நிலை! எங்களைக் கண்டு முறைப்பது
ஏன்? நாங்கள், நீ கலிங்கரிடம் சிக்கிவிட்டாய் என்று கலங்கியன்றோ
உன்னைத் தேடிக்கொண்டு வந்தோம். நீ எங்களை நோக்குவது
வேதனை தருவதாகவன்றோ இருக்கிறது” என்று கூறினர். வீரமணி,
கண்டுபிடித்துவிட்டீர்களல்லவா? இனி ஏன் இங்கு வருகிறீர்கள்.
நான் சுகமாகத்தான் இருக்கிறேன். எந்தச் சூரனும் என்னைத்
தூக்கிக்கொண்டு போய்விடவில்லை. இனி நீங்கள் போகலாம்”
என்றுரைத்தான்.
மூவரும் பொறுமையையிழந்தனர். “களத்திலே கண்ட கோரக்காட்சிகளைக்
கண்டு, மூளை குழம்பிவிட்டதோ” என்று கேட்டான் மூவரின்
தலைவன். வீரமணி மௌனமாக இருந்தான். மூவரும், குகை வாயிற்படியை
நெருங்கினர். உடைவாளை நீட்டினான் வீரமணி. “இதைத் தாண்டித்தான்,
குகைக்குள்ளே நுழைய வேண்டும்” என்று கர்ச்சனை புரிந்தான்.
மூன்று உடைவாள்கள் வெளிவந்தன. போர் மூண்டுவிட்டது முதல்
வெட்டிலேயே, மூவரின் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுவிட்டது.
போர் மும்முரமாக நடக்கையிலே, உள்ளே, கிழவன், “ஓ” என்று
அலறினான். வீரமணியின் மனம் குகைக்குள்ளேயும், விழி வெளியேயும்
என்ற நிலையாகிவிட்டது. நெருக்கடியை மறந்தான். வாளைக் கீழே
போட்டுவிட்டு, உள்ளே ஓடினான். மற்றவர்கள் பின் தொடர்ந்தனர்.
ஒரு கூச்சலுடன், கிழவன் சாய்ந்துவிட்டான்.
தீபம் அணைந்துவிட்டது. வீரமணி அவனைப் பார்த்துக் கண்ணீர்
உகுத்தான். வந்தவர்கள். “இதென்ன கோலம்” என்று கேட்டனர்.
வீரமணி இவனோர் கலிங்க வீரன். “இவனைக் காப்பாற்றவே, நான்
இங்கு வந்தேன்” என்றான்.
“துரோகி!” என்றான் வந்த தலைவன், “பாதகன்! பசுத்தோல்
போர்த்திய புலி! பாலைக் குடித்து விஷத்தைக் கக்கும் பாம்பு!”
என்று பதட்டமாகப் பேசிக்கொண்டே, வந்தவர்கள் குகையை ஆராய்ந்தனர்.
பேழையிலே பொக்கிஷம் இருக்கக் கண்டனர்.
“ஓஹோ! கலிங்கத்தானிடம் கைக்கூலி பெற்றுக்கொண்டுதான்,
கங்காணி வேலைக்கு வந்தான்” என்று இடி முழக்கமெனக் கூவினான்
வந்தவரில் தலைவன்.
“வாயை மூடு! உளறாதே! உன் நீச நாக்கைத் துண்டித்து நரிக்கு
விருந்திடுவேன்.” என்று வீரமணி கோபத்துடன் கூறினான்.
வந்த தலைவன், வீரமணி சாய்ந்து கிடந்த கிழவனைப் பார்த்துக்
கொண்டே இருக்கையில், பாய்ந்து பிடித்துக் கொண்டான்.
மற்றவர்கள் உடனே கைகால்களைக் கட்டிக் கீழே உருட்டினர்.
மிக விசித்திரமான காட்சி! சீறிடும் புலிகள் மூன்று சிரித்தன!
ஒரு கிழச்சிங்கம் செத்துக் கிடந்தது; ஒரு ஏறு, கைகால்
கட்டுண்டு கீழே உருண்டு கிடந்தது! ஏராளமான பொக்கிஷம்!
“போ, புலிகேசா! போய் எனது படையைக் கூட்டிவா!” என்று
தலைவன் உத்தரவிட்டான். அவனும் உத்தரவிற்கிணங்க, விரைந்து
சென்று, படையுடன் வந்து சேர்ந்தான். “பிணம் இங்கே கிடக்கட்டும்!
பொக்கிஷத்தை மூட்டைகளாக்கிக் குதிரைகள் மீது போடுங்கள்,
இந்தத் துரோகியின் கைகால்களில் இரும்புத்தளைகள் போட்டுக்
குதிரை மீது இறுக்கிக் கட்டுங்கள். குலோத்துங்கனின் உப்பைத்
தின்று, அவனுக்கே துரோகம் செய்ய எண்ணிய நீசனுக்குத் தக்க
தண்டனையைத் தொண்டைமான் தருவார்” என்று தலைவன் உறுமினான்.
வீரமணி வாய் திறக்கவில்லை. ஆனால், அவன் உடல் பயத்தால்
உதறிற்று.
வீரமணியை இழுத்துக்கொண்டு போய், படைத் தலைவன் முன் நிறுத்தினர்.
தொண்டைமானின் துயரம் சொல்லுந்தரத்தன்று. வீரமணி துரோகியானான்
என்பது, ஆயிரம் வேல்கொண்டு இருதயத்தைத் தாக்குவது போலிருந்தது.
வீரன்! இவனா துரோகியாவது? என்ன கொடுமை! எங்கிருந்து
பிறந்தது இம்மடமை! கேவலம் பணத்துக்காக நாட்டை, மன்னனை,
மானத்தைக் காட்டிக் கொடுத்து விடவா துணிவது. தமிழகத்திலே
இத்தகைய கள்ளி முளைத்தால், பூந்தோட்டம் காடாகுமே! பஞ்சவர்ணக்
கிளிகளுக்குப் பூனைபோல் புள்ளிமான்களுக்குப் புலிபோல்,
வீரத்தை அரிக்கத் துரோகி கிளம்பினானே. அரண்மனையிலே இவனுக்கு
எவ்வளவு மதிப்பு மன்னனுக்கு இவனிடம் எவ்வளவு அக்கரை. எனக்கு
இவனிடம் என்ன அன்பு! இவன் செயல் என்னை வேதனைக்குள்ளாக்குகிறதே
என்று எண்ணி ஏங்கினான். வீரமணியோ, தொண்டைமானின் எதிரில்
தலை குனிந்து நின்றான். திகைப்புடன் படைத்தலைவர்கள் சுற்றிலும்
நின்றனர். உருவிய வாளுடன் பாதுகாப்புப் படை நின்றது.
“வீரமணி! உண்மையைக் கூறு” தொண்டைமானின் குரல், துக்கத்தையே
காட்டிற்று. வீரமணி மௌனமாகவே இருந்தான்.
“குகையிலே இருந்தவன் கலிங்கத்தானா?”
“ஆமாம்”
“அவனைக் காப்பாற்றவே நீ துணிந்தாயா?”
“ஆம்”
“துரோகி! அங்குப் பொக்கிஷமிருந்தது உனக்குத் தெரியுமல்லவா?”
“தெரியும்”
“உன்னை அழைக்க வந்த உன் தோழர்களை எதிர்த்தாயன்றோ?”
“எதிர்த்தேன்”
“என்ன துணிவடா உனக்கு? ஏன் இந்தத் துரோகம் செய்தாய்?”
“துரோகமில்லை, தலைவா!”
“தூர்த்தா! என்னைத் தலைவனென்று மறுமுறை கூறாதே. உன் போன்ற
உலுத்தர்களுக்கா நான் தலைவன்! துரோகமின்றி, வேறு என்னடா
அதற்குப் பெயர்? கட்டித் தழுவிடும் காமுகன், உடல் அளவு
பார்த்தேனேயன்றி, கூடிடும் நோக்கமில்லை என்று கூறுவது
போலிருக்கிறது உன் பேச்சு. நீசா, எந்தக் கண்கள் எதிரியின்
பணத்தைக் கண்டு பூரித்தனவோ, அவை புண்ணாகட்டும். எந்தக்
காதுகளிலே, துரோகப் பேச்சுக்கு இடங்கொடுத்தாயோ, அவைகளைக்
குடைந்தெடுக்கிறேன். துரோகி! சோழ மண்டலத்திலேயா, இத்தகைய
சொரணை கெட்ட ஜென்மம் ஜனித்தது. வஞ்சக நரியே, வல்லமையுள்ள
புலிபோல் வேடமிட்டு நடித்தாயே. என் எதிரே நிற்கிறாய்
துணிவாக. உன் தலை இன்னும் பூமியிலே உருளவில்லை. கண்களிலே
நீரா? நீலிக்கண்ணீர்!”
“என்னை வெட்டிவிட உத்தரவிடுங்கள், வீணாகத் திட்ட வேண்டாம்.”
“என்ன வேதாந்தம்! வஞ்சகா! வெட்டுவதா உன்னை? கைகால்களிலே
விலங்கிட்டு, எந்தக் குதிரைமீது கெம்பீரமாகவும், பூரிப்பாகவும்
ஏறிக்கொண்டு சென்றாயோ, அதே குதிரையின் வாலிலே கட்டி,
எந்த நடனத்தின் கண்களுக்கு விருந்தாக உலவி வந்தாயோ, அவள்
கண்களுக்கு வேதனை உருவாக, காரியுமிழும் பொருளாக்கி, மூன்று
மண்டலங்களிலும் உன்னை மொட்டையடித்தத் தலையுடன் இழுத்துச்
சென்று, பிறகன்றோ உயிரைப் போக்க வேண்டும்”
“விஷயமறியாது வேதனைப்படுகிறீர். இருளிலிருந்து நீங்கிய
பிறகு எதுவும் தெரியும்.”
“என்னடா இருள்? உன் மன இருள் தவிர வேறு என்ன?”
“நீர் நம்ப வேண்டுமென்று ஏதும் கூறவில்லை. பிறகோர் நாள்
உதவவே, இதனைக் கூறுகிறேன். குகையிலே கலிங்கத்தானுடன் இவர்கள்
என்னைக் கண்டதும் உண்மை; அங்குப் பொக்கிஷம் இருந்ததும்
உண்மை; அதை நான் எடுத்துவர எண்ணினதும் உண்மை. இவர்களை
எதிர்த்தேன்; இல்லை என்றுரைக்கவில்லை. ஆனால், துரோக சிந்தனை
எனக்கு இல்லை. கலிங்க வீரனுக்குத் தந்த வாக்கின்படி நான்
நடக்க வேண்டும். அந்த இரகசியத்தை வெளியே உரைப்பதற்கில்லை.
நீர் என்னவென்று தீர்மானித்து, என்னை எப்பாடுபடுத்தினாலும்,
நான் தலை குனியத்தான் வேண்டும். எனக்குச் சோழனே மன்னன்,
சோழநாடே என் பூமி, நான் துரோகிய்ல, துரோகியல்ல! என்னை
நம்பும்”
“உன்னையா? நம்புவதா? ஓஹோ! உத்தமனே, உன்னைச் சோழநாட்டின்
ஜோதி ஸ்வரூபனாக்க வேண்டும். ஏடா! மூடர்களே, இவர் பேச்சைக்
கேட்டும், சும்மா இருக்கிறீர்கள்? கோயில் கட்டுங்கள்,
கொட்டு முழக்கு நடக்கட்டும்.”
“கொலை, இந்தக் கேலியைவிட கொடுமையாக இராது.”
இந்தப் பேச்சுக்குப் பிறகு, தொண்டைமான் கோபத்துடன்,
ஓங்கி ஒரு அறை கொடுத்தான் வீரமணியின் கன்னத்தில். பிறகு
உரத்த குரலிலே கூறினான். “இவனது கைக்கட்டுகளை அவிழ்த்து
விடுங்கள். இனி இவன் சோழ மண்டலத்துக்குள் நுழையக் கூடாது”
என்று தண்டனை உத்திரவைக் கூறிவிட்டு, கூடாரத்துக்குள்
சென்றுவிட்டான்.
வெற்றி ‘ஊர்வலமும், விழாவும், கொண்டாட்டமும், களிப்புமாக’
காஞ்சியிலும், தலைநகரிலும் குதூகலமாக இருந்தன. ‘கலிங்க
மன்னன் கர்வப்பட்டுக் குதித்தான்; பிடரியில் கால்பட ஓடினான்’
என்று கேலி செய்வோரும், ‘சோழச் சூரர்கள் சூறாவளிபோல்
கிளம்பிய பின்னர்க் கலிங்கக் கூளம் நிற்குமோ?’ என்று
நையாண்டி செய்பவரும், ‘தொண்டைமானின் தீரத்திற்குக் கலிங்கத்தார்
துவளாது என் செய்வர்? என்று ஏளனம் செய்வோருமாக மக்கள்
மகிழ்ந்தனர். மகனின் புகழ் கேட்டு முதுமையை மறந்து கூத்தாடும்
தாயும், ‘என் மகனின் நெஞ்சம் எஃகு; ஏறு போலும் நடையுடையான்’
என்று பெருமையுடன் கூறிப் ‘புலியின் வயிற்றிலே பூனையா
பிறக்கும்?’ என்றெண்ணிப் பூரிக்கும் தந்தையும் களத்திலே
கீர்த்தி பெற்ற காதலனைக் கட்டித் தழுவி முத்தமிட உடலும்
உள்ளமும் ஊறலெடுக்க, ஓடி ஆடி மகிழ்ந்திருந்த மங்கையரும்,
‘போர் முடிந்தது! பகைவன் தோற்றோடினான்! வீரர்கள் வீடு
திரும்புகின்றனர்!’ என்று ஆனந்த கீதம் பாடியும், நடனமாடியும்
களித்தனர். “உன் அப்பா வருகிறாரடா குழந்தாய்! வந்ததும்
கேள், ‘என்னை விட்டு இத்தனை நாள் எங்கே போயிருந்தாய்?’
என்று; பேசமாட்டேன் போ என்று சொல்லு” என்று மகனுக்குத்
தலை சீவிப் பூச்சூட்டிப் பொன்னணி பூட்டிப், பரிமளநீர்
தெளித்து, முத்தமிட்டுக் கட்டித் தழுவிக் கொஞ்சினர் குமரிகள்.
“களத்திலே, இரத்தத்தைக் கண்டு, பிணத்தைத் துவைத்து, ஊண்
உறக்கமிழந்தவர் வருகிறார், இனி அவருடைய மனமகிழ்ச்சிக்கு
என்னென்ன செய்வது? ஆமாம்! அந்தப் பச்சைநிறச் சேலையைத்தான்
கட்டிக் கொள்ள வேண்டும். அன்றோர் நாள் அதைக் கட்டிக்
கொண்டிருக்கும் போதுதானே, சோலையிலே உலவும் கோல மயிலே!
என்று என்னிடம் கொஞ்சி... உம்! என்னென்னமோ செய்தார்.
இன்று அந்தச் சேலையைத்தான் அணிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வோர் கதை சொல்லுவார் அவர். அவர் எவ்வளவு மெலிந்திருக்கிறாரோ?
எத்தனை காயங்களோ உடலில்? என்ன நிலையோ? எப்போது வருவாறோ?
என்னைக் கண்டதும் சிரித்துச் சல்லாபிப்பாரோ; அலுத்து
மௌனமாவாரோ?” என்று ஏதேதோ எண்ணி ஏந்திழையார்கள் மேகத்தைக்
கண்டு மயில் ஆடுவது போலக், கதிரோனைக் கண்டு மலரும் தாமரைபோல,
ஆடை அணி புனைந்து, மாடங்களில் உலவினர்.