அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


கலிங்கராணி
6
                     

களத்திலே கணவர் இறந்த செய்தி கேட்டுச் சித்தம் சோர்ந்திருந்த சேயிழையார்கள், விழா நடப்பதுகண்டு விம்மினர்; மறைந்த மணியை நினைத்து அழுதனர்; உண்ணவும் மனமின்றிச் சுருண்டுகிடந்தனர். மனோஹரமான மாளிகை நெடுநாட்கள் பூட்டப்பட்டு, கலனாகிப் புழுதி படிந்து கிடக்கும் கோலம்போல, அம்மாதர், திலகமின்றித், திருவிழிகளில் ஒளியின்றி, மேனியில் பளபளப்பின்றி, ஆடை திருத்தமின்றி, சீவாது, சிரிக்க முடியாது, சிவந்த கண்களுடன், சோக பிம்பங்களாகிக் கிடந்தனர். போர் என்ற சொல்லைக் கேட்டதும் புண்பட்ட மனம் கொப்பளித்தது. “நாட்டின் நலன், மன்னனின் கீர்த்தி, இவைகளுக்காக என் வாழ்விலே இக்கதி! கூரான வாளோ, வேலோ அவர் மார்பிலே பாய்ந்தபோது எப்படி அலறினாரோ? என்ன துடித்தாரோ? என்ன எண்ணி அழுதாரோ? என்ன கோரம்? எவ்வளவு கொடுமை? ஏன், சண்டை எனும் ஓர் சுழல், வாழ்க்கைப் பூங்காவைப் பாழாக்குகிறது? மலர் வனத்திலே ஏன் இக்கள்ளி?” என்று கூறிக் கதறினர். நிலவிலே கறைபோல் மகிழ்ச்சியிலே மூழ்கிய சோழ மண்டலத்திலே, இக்காட்சியும் இருக்கத்தான் செய்தது? போர் விளையாட்டா!

நடனராணியின் நிலையோ, விசித்திரமான வேதனை! காதலன் களத்திலே காட்டிய தீரத்தை, அவனது போர்த்திறன் கண்டு பகைவர்கள் மருண்டோடியதை, அவனது அஞ்சாத செயலைக் கூறிப் பின்னர், அத்தகைய வீரன் அயர்வறியாத் தீரன், சோழ மண்டலச் சூரன், கடைசியில் கலிங்க நாட்டானிடம் கைக்கூலி பெற்றான், மன்னனைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தான். துரோகியானான். தொண்டைமான் அவனை நாட்டை விட்டே துரத்திவிட்டார், என்று கூறக்கேட்ட நடனராணி, மூர்ச்சித்து கீழே சாய்ந்து, “என் காதலனா துரோகி! நன்னெறியன்றி வேறறியா வீரனா துரோகி! சோழ நாட்டுக்காக தன் உயிரையும் தரும் தூய்மையான உள்ளம் படைத்த உத்தமனா துரோகி! நான் நம்பேன்! என் அருமைக் காதலனை நானறிவேன் நன்கு. அவருக்குக் குள்ளநரிச் செயல் தெரியாது. குலப் பெருமைக்கே குவலயத்தில் வாழ்கிறோம் என்றே கூறும் கண்ணியரல்லவோ? நாட்டைக் காட்டிக் கொடுக்கவா களம் புகுந்தார்! கடும்போர் புரிந்தார்! எதிரிகளைத் கண்டதுண்டமாக்கினார்! இல்லை! இல்லை! இதில் ஏதோ சூது இருக்கும்; என் சுந்தரரூபன் மீது யாரோ சதி செய்திருக்கின்றனர்” என்று அழுது கூறினாள். அம்மங்கையோ திகைத்தாள்; தலை அசைத்தாள்; தேம்பும் நடனாவைக் கண்டாள்; என்ன செய்வதென்றறியாது விழித்தாள். நடனா அம்மங்கையின் அடியினைப் பற்றிக் கொண்டு, நீர் பெருகும் நேத்திரங்களால் அவளை நோக்கி, “தேவி! உமக்கே தெரியும். இந்த உயிரை நான் எவர் பொருட்டு வளர்த்து வருகிறேன் என்று. அவரைப் பிரிந்து நான் வாழ்வேனா? அவர் மதிப்புக்குப் பங்கம் வந்த பிறகு, எனக்குத் தங்கக் கோட்டை கிடைப்பினும் சகிப்பேனா? அவரையும் என்னையும் அரசனின் ஆக்கினை பிரிக்கிறது; மலரையும் மணத்தையும் வேறாக்குவதோ? கண்ணிலிருந்து ஒளியை நீக்கிடுவதோ? என் மணாளரை இழந்திடநான் சம்மதியேன். அவர் ஒரு குற்றமும் செய்திருக்க முடியாது; செய்யும் வகையுமறியார். செந்தமிழ்நாட்டுச் சிங்கம், சூது வாது அறியாதார். அவரை மீட்டுத்தர வேண்டுகிறேன். என் உயிரை எனக்குத் தானம் தரக் கோருகிறேன், நாடெங்கும் விழா நடக்கிறது; வீதிகளிலே பூச்சூடி மங்களம் பாடிக் காதலரைத் தேடிக் காரிகையர் நடமாடுகின்றனர். பூங்காவிலே, மரநிழலிலே, களத்திலே காட்டிய வீரத்தைக் கூறி, காதலியின் கன்னத்தைக் கீறி, நெஞ்சிலே காதல் ஊறிட உரையாடி, உல்லாசமாகப் பல்லாயிரவர் இருக்க, வீரத்திலே எவருக்கும் இளைக்காத என் வேந்தர், வேற்றூரிலோ, காட்டிலோ, மேட்டிலோ, கடும் குளிரிலோ, சுடும் வெயி
லிலோ, நாடோடியாகச் சுற்றவும் நான் இங்குக் கதறவுமான நிலை வரவா கலிங்கப்போர் மூண்டது! கலிங்கப் போர், வீரர் பலரின் உயிரைக் குடித்ததோடு திருப்பதியடையக் கூடாதா! போரின் பசி தீரவில்லையா! என் மனதைப் புண்ணாக்கி, என்னைச் சித்திரவதை செய்யவும் வேண்டுமா! என்னைப் பாரும் அம்மையே! என் வாழ்வு என்ன கதியாவது! சோழ மண்டலத்திலேயிருந்து துரத்தப்பட்ட பிறகு. தமிழனை, மற்ற இரு மற வேந்தரும் மதிப்பரோ? இடந்தருவரோ? என் மன்னனின் வாழ்வு இதுபோலவா ஆகவேண்டும்?” என்று கூறினாள்.

அம்மங்கை ஏதும் கூறாதவளாய், அரசனைக் கண்டு பேசுவோம் என்று எண்ணிக்கொண்டு, நடனராணியைத் தேற்றும்படி தோழியருக்குக் கூறி விட்டுத் தனது அந்தப்புரம் சென்று சோகத்துடன், தன் அறைக்குள் நுழைந்தாள்; திடுக்கிட்டாள். ஏனெனில், அங்கு, ஆரியமாது கங்காபாலா புன்னகையுடன் நிற்கக் கண்டாள். புருவத்தை நெறித்தபடி, “புன்னகைக்காரி! ஏது இங்கு வந்தது?” என்று பாலாவை அம்மங்கை கேட்டிட, கங்காபாலா, “தேவி! இன்றாவது உமது கண்கள் திறந்திருக்கும், கபட நாடகத்தைக் கண்டுகொண்டிருப்பீர்கள் என்று தான் வந்தேன்” என்று கூறினாள். “கபடமும், நாடகமும்! மீண்டும் உளறல்” என்றாள் அம்மங்கை மஞ்சத்தின் மீது படுத்துக்கொண்டு, கங்காபாலா விசிறிக்கொண்டு, உபசாரத்துக்கு வீசிக் கொண்டே “என் கன்னத்தில் அறைந்தீரே! களத்திலே நடந்தது கேட்டபிறகு தெரிந்ததா உண்மை? கபட வேடக்காரனின் கதை வெட்ட வெளிச்சமாகிவிட்டது பார்த்தீர்களா? ஊர் கொதிக்கிறது தாயே! கலிங்கனுக்கு நாட்டைக் காட்டிக் கொடுத்தவனைக் கழுகுக்கு இரையாக்க வேண்டியதை விட்டுக் கருணாகரர் சாதாரணத் தண்டனை தந்தாரே என்று மக்கள் கோபிக்கின்றனர். அம்மே! அதுமட்டுமல்ல! நடனாவின் மீதும் மக்களின் கோபம் திரும்பி இருக்கிறது. பாபம் அவள் சூதுவாதறியாத சுந்தரி! கொஞ்சம் பேராசை! சபலபுத்தி! அவனிடம் மயங்கினாள்; அவனை அவள் ஒரு சாதாரண போர்வீரன் என்றே நினைப்ப
தில்லை, புவியாளப் பிறந்தவன் என்றே கருதி வந்தாள். அவன் அப்படிச் செய்து வைத்தான்” என்று மெல்ல மெல்ல விஷ வாடையை வீசினாள்.

“மன்னன், என் வேந்தன். என்று நடனா அவனைக் கூறினாள். காதல் மயக்கமாகத்தான் இருக்குமென்று நினைத்தேன்” என்று அம்மங்கை கூறிட, அதுதான் சமயம் எனக்கண்டு, கங்காபாலா, “காதல் மயக்கமல்ல, கிரீடத்தின் மீது கொண்ட மேக மயக்கம் அம்மணி! வீரமணி வேந்தன், நடனராணி அவனுக்கு ராணி! இதுவே அவர்களின் அந்தரங்கத் திட்டம். அன்று குகையிலே நடந்த சதி. வெறும் பொக்கிஷத்துக்கு என்றா எண்ணுகிறீர்கள்? தூ! வீரமணி பணத்துக்காகவல்ல அந்தப் பாதகம் செய்யத் துணிந்தது; முடிதரிக்கவே சதி செய்தான்” என்றாள் கங்காபாலா.

“போடி பொல்லாங்குக்காரி” என்று அம்மங்கை கங்காபாலாவைத் திட்டினாளே யொழிய மனதிலே, “இருக்குமோ! நடந்திருந்தால்தான் நாம் என்ன கண்டோம். வீரமணி மீது கருணாகரர் வீணாகவா தமது அதிகாரத்தைச் செலுத்தியிருப்பார் இருக்கும்; அரண்மனைகளிலே இது நடப்பதுதானே. வீர
மணிக்கு இந்த விபரீதபுத்தி இருந்திருக்கக்கூடும். யார் கண்டார்கள்? பாம்பு என்ன பார்வைக்குக் கேவலமாகவா இருக்கிறது! சிறுத்தைதான் என்ன சிரித்துக் குலுங்கி நடக்கும் சிங்காரியின் மேலாடை போன்ற போர்வையில்தான் இருக்கிறது. வீரமணியின் வெளித் தோற்றந்தானே, நடனாவுக்குத் தெரியும். அவன் துரோகிதான்! நாட்டுக்கு, நமக்கு, நடனாவுக்கு, தமிழகத்துக்கே துரோகிதான் சந்தேகமில்லை” என்று முடிவு செய்துகொண்டாள்.

ஒரு படி மேலேறிவிட்டோம் என்றுணர்ந்த கங்காபாலா, “தேவி! ஊரிலே கூடிக் கூடிப் பேசிக் கொள்கிறார்கள். அந்தத் துரோகியின் துணையாக இருந்து வந்தவளையும் நாட்டை விட்டுத் துரத்த வேண்டுமென்று” என்று ஆரம்பித்தாள். அம்மங்கை சீறி எழுந்து “சீ! இதென்னடி கொடுமை. அவன் துரோகம் செய்தால், அவள் என்ன செய்வாள்? அவனைத் தண்டித்தது முறை; அரச நீதி. அவள் என்ன குற்றம் செய்தாள்? அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அவள் என் சேடி; தோழி. அந்தக் கொடியிடையாளின் கண்களிரண்டும் குளமாகிவிட்டன; பாபம்! அவளது அழுகுரலைக் கேட்கச் சகியாமலே நான் இங்கு வந்துவிட்டேன். அவள்மீது, கரம் வைக்க எவர் துணிவர்? கண்டதும் பரிதாபம் கொள்வர். மக்கள் ஏதோ மருண்டு, ஆத்திரத்திலே பேசுகின்றனர்” என்றாள்.

“மக்களின் ஆத்திரம், மணிமுடிகளைக் கூட அகற்றியிருக்கிறதே தேவி!” என்று கங்கா கிளறினாள்.
“சதி புரியும் கூட்டமல்லடி தமிழர்” என்றாள் அம்மங்கை.

“நானறியேன் அம்மையே! எமது நாட்டிலே மக்களுக்கு அடங்கியே மன்னர்கள் வாழ்வர்” என்றாள் கங்கா, சாதுபோல். “உன் நாடு! அது எது? ஓ! உன் மூதாதையர், முதன் முதல் சஞ்சரித்த நாடு என்று பொருளா? எனக்குத் தெரியும் அந்நாட்டு அதி ஆச்சரியப் பழக்க வழக்கங்கள். ஏனடி கங்கா! அவரில்லாவிட்டால் என்ன; அவர் கால் ஜோடு ஆளட்டும் என்று கூறின மக்கள், அயோத்தி நாட்டினர்தானே?” என்று கேட்டுவிட்டு, கைகொட்டி நகைத்தாள் அரசகுமாரி. கோபத்தை அடக்கிக் கொண்ட கங்காபாலா, “அது தேவ கதையன்றோ?” என்று விடை கூறினாள். “உங்கள் தேவ கதை கிடக்கட்டும், நீ போய் தேம்பிக் கிடக்கும் நடனாவுக்குத் தேறுதல் கூறு, போ” என்று கூறிக் கங்காவை அனுப்பிவிட்டுக் கவலையுடன், மஞ்சத்திலே மன்னனின் மகள் படுத்துக் கிடந்தாள்.

வீரமணி, நடனாவை எண்ணி ஏங்கினான். அவள் மனம் என்ன பாடுபடுமோ என்று நினைத்து நொந்தான். கலிங்கக் காட்டிலும், மேட்டிலும் சுற்றினான். பணிந்த கலிங்கரும் தன்னைக் கண்டால், கொடுமை புரிவர் என்பது அவனுக்குத் தெரியும். எனவே, ஒருவர் கண்ணிலும்படாமல் ஒளிந்து வாழலாயினான். வேடர்களுடன் வேடனானான். கல் வெட்டுவோருடன் கலந்தால் கல் வெட்டுவான். மண் சுமப்போருடன் சேர்ந்தால், மண் சுமப்பான். உலவினான். என்ன செய்வது என்று தெரியாமல். நடனாவுக்கு அரண்மனையிலே அபாரமான செல்வாக்கு இருப்பதால், எப்படியாவது அரசகுமாரி மூலமாக மன்னனின் மனத்தை மாற்றி, தன்னை மீட்பாள் என்று கருதி
னான். எவ்வளவுதான் வெளிப்படையாக, குகையிலே நடந்த விஷயத்தைக் கூறினாலும், மன்னன் நம்ப மாட்டானே என்று பயந்தான். மேலும், விஷயமோ, ஓர் ராணியுடைய வாழ்வைப் பாதிக்கக் கூடியது. ஒரு நீலமணிதான் இருந்த ஆதாரம்! அது ஒளிவிட்டதே யொழியப் பேசுமா! யார் சொல்வார்கள் தனது தூய்மையைப் பற்றி, என எண்ணி மனம் புண்ணானான். நடனாவின் இன்பக் கனவைக் கெடுத்தேன்; மன்னனின் மகிழ்ச்சியைக் குலைத்தேன்; வீரர்கள் கூட்டத்திற்கோர் கேலிக் கூத்தானேன் என்று நினைத்தான். இங்கு வீரமணி இவ்விதமிருக்க, நடனாவோ நறுமலர்த் தோட்டத்திலே உலவினாள்; மலர் பறித்தாள்; மானெனத் துள்ளி விளையாடினாள்; மடியிலே தலையைச் சாய்த்துக் கொண்டு மதுரமான மொழி பேசும் மணாளனின் நெற்றியைத் தடவினாள். இந்த இன்ப விளையாட்டிலே இருந்தவள் திடீரென அந்தகாரம் கண்டாள்; ஐயோ என்று அலறினாள்; பாம்பு! என்று பதைத்தாள்; பாரேன் உன் முகத்தை என்று கடிந்துரைத்தாள்; காலிலே முள் தைத்ததே என்று கதறினாள்; காடு மலை வனம் சுற்றினாள்; கழுகு கொத்துகிறதே என்று கூறினாள்; கலிங்கம் அழியட்டும் என்றும், காதலரே வருக என்றும், மணாளனே எனக்கு மன்னன் என்றும் குளறினாள். இவ்வளவும் படுக்கையில் ஜூர வேகத்தில்; மயக்கத்தில்!!

அரசிளங்குமரியின் சொற்படி, சென்ற கங்கா பாலா, நடனா மயக்கமுற்றுக் கீழே சாய்ந்திருக்கக் கண்டாள். அன்று முதல் பத்து நாட்கள் வரை, நடனாவுக்கு மயக்கமும் ஜுரமும் அடக்க முடியாத அளவு ஏற்பட்டது. அந்த மயக்கத்திலேதான் நடனா, தனது காதல் விளையாட்டைப் பற்றி எண்ணியும், தனக்கு வந்த கஷ்டத்தை எண்ணிக் கலங்கியும், ஜுர வேகத்தால் குளறியும், தனது படுக்கையில் புரண்டு கிடந்தாள். அரண்மனை வைத்தியர் அற்புதானந்தர், தமது மற்ற அலுவல்களை மறந்து நடனாவுக்கு அருமையான மூலிகைகளால் முறைப்படி செய்த மருந்து வகைகளை அன்புடன் கொடுத்து, “எப்படியும் அவளை உயிர்ப்பிப்பேன், நான் கைபிடித்த பிறகு, மரணம் அவளை அணுகுமா?” என்று சூள் உரைத்து, இரவு பகல் தூங்காது, நடனாவுக்கு அருகே அமர்ந்திருந்து, உபசாரம் செய்யலானார். அடிக்கடி அரசிளங்குமரியும் நடனாவைப் பார்த்துவிட்டுப் போவாள். வைத்தியரை, “மிக்க ஜாக்கிரதையாகக் கவனிக்க வேண்டும், கலை, இளமை, அழகு, தூய்மை யாவும் உம்முடைய மருந்தினால்தான் பிழைக்க வேண்டும்” என்று கூறுவாள். வைத்தியர், இளித்துக் கொண்டே, “அரசகுமாரி! அடியேனுடைய திறமையை அறியாதார் சொற்பம், ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால், அருந்தமிழர் கற்ற அரிய முறைகளை நான் அறிவேன்; மூலிகைகளின் இடமும் இயல்பும் தெரிந்தவன்; நோய் மூலங் கண்டறிவேன்; நொடியிலே தீர்ப்பேன் எப்பிணியும். நடனாவுக்கு. மனம் குழம்பி இருக்கிறது; மயக்கம் மேலிட்டுக் கிடக்கிறது; பயத்தினால் பாவை பதறியிருக்கிறாள். ஆகவே ஜுரம். இது இப்போது குறைந்து விடும்” என்று கூறி, நடனாவின் நெற்றியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே, “கொஞ்சம் இருக்கிறது போய் விடும் நோய்” என்று கூறுவான். அந்த நேரத்தில் மட்டும், வேறோர் வைத்தியர், அற்புதானந்தரின் நாடியைப் பிடித்துப் பார்த்தாலன்றோ தெரியும். காம நாடி கடு வேகமாக அவருக்கு அடித்துக் கொண்டிருப்பது! நடனாவின் நோய் குறையக் குறைய வைத்தியரின் நோய் வளர்ந்து கொண்டே இருந்தது. அவ்வளவு வசீகரமான மங்கையின் அருகேயிருந்து, உபசாரம் செய்தவரல்லர் வைத்தியர். அதுவரையில் மணமாகாதவர்; மன்னரின் ஆதரவு பெற்றவர். மயக்கமுற்ற நடனாவுக்கு மருந்து தர வரவழைக்கப்பட்டார்; அவளழகைக் கண்டு மயங்கினார்; அவள் மயக்கத்தைப் போக்க மலையுச்சியிலிருந்து மூலிகைகள் எடுத்து வரச் செய்தார். ஆனால், பாபம், அவருடைய மன மயக்கத்தைப் போக்கும் மூலிகை, அருகேதான் இருந்தது; எதிரே, மஞ்சத்தில்!

பத்து நாட்களுக்குப் பிறகு நடனராணிக்கு நோய் குறைந்தது; மயக்கம் தீர்ந்தது; ஜுரம் நின்றது. வைத்தியர் பூரித்தார். அரசகுமாரி ஆனந்தங் கொண்டாள்; “நோய் போனாலும், படுக்கையிலேயே இருக்க வேண்டும்; பாலும் பழரசமும், தேனும் உணவாக இரண்டோர் மாதமிருக்க வேண்டும்; தேகத்திலே ஏற்பட்டுள்ள திடீர் அதிர்ச்சி போக ஓய்வு வேண்டும்; மூன்று வேளைச் சூரணம் முறைப்படி சாப்பிட்டாக வேண்டும்; நான் கூடவே, இருந்து உபசாரம் செய்து, குறியறிந்து குணம் செய்ய வேண்டும்” என்று குழைந்து கூறினார் வைத்தியர். அவருக்கு, அவளருகே இருக்க, அவளுக்கு உபசாரம் செய்ய, நாடி பார்க்க, நெற்றியிலே அரும்பும் வியர்வையைத் துடைக்க, அவள் அயர்ந்து தூங்கும்போது பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு அவளழகைக் கண்டு பெருமூச்செறிய இரண்டோர் மாதங்களல்ல, இரண்டோர் ஆண்டுகள் சந்தர்ப்பம் கிடைத்தாலும் சலிக்காது! அவ்வளவு இன்பமளித்தது, அவளருகே இருப்பது! ஆகவே, அவர் அரசகுமாரியிடம் கூறி, அந்தப்புரத்திலே, தனி ஜாகையிலே நடனராணி தங்கி இருந்திட வேண்டும்; பலரும் வந்து பேசிடுதல் கூடாது; தன் பார்வையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். தனிமையில் இருந்தால், வீரனை எண்ணி விம்முவாள்; உடனே ஓடிப்போன காய்ச்சல் வந்தேனென்று கூறும். பலரும் பேசினாலோ, பதைத்துப் பேசுவாள்; உடல் உரம் கெடும். எனவே, அவளை இங்கேயே தனிமையாக இருக்கச் செய்ய வேண்டும். என் சிகிச்சை முறைப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஏற்பாடு செய்து கொண்டான். ஒரு பெரிய கோட்டையை முற்றுகையிடும் படை போல, வைத்தியன் நடனாவை முற்றுகையிடுகிறான்; மோப்பம் பிடிக்கிறான் என்பதை அரசகுமாரி அறிந்துகொள்ளவில்லை. அவனது வைத்தியத் திறமையைப் பலரும் வியந்தனரேயன்றி, அவனது வயோதிகம் திடீரென வாலிப உணர்ச்சி பெற்றுவிட்டதை அவர்கள் அறியவில்லை.

நடனாவுக்கோ, வைத்தியரின் விபரீத யோசனை தெரியாது. நோய்க் குறையக் குறைய, அவளுக்கு எப்படி அரண்மனையை விட்டு வெளியே போவது? எங்கெங்கு சுற்றினால் வீரமணி கிடைப்பார்? என்ற எண்ணமே மேலிட்டது. யாரும் தனக்கு உதவி செய்ய மாட்டார்கள் என்பதையும் அவள் தெரிந்து கொண்டாள். வீரமணி போனாலென்ன! சோழ மண்டலம் ஆண் ஏறுகள் இல்லாத இடமா! என்று கூறுவரேயொழிய, தன் மனநிலையைத் தெரிந்து நடக்கும் தோழியர் இல்லை என்பதைக் தெரிந்துக் கொண்டாள். நன்றாக எழுந்து நடமாடும் சக்தி பெற்றதும், கள்ளத்தனமாக ஓடிவிட வேண்டியதுதான் என்ற தீர்மானத்துக்கு வந்தாள். அதைப் பற்றி நினைக்கவும், வெளியே போய் இதைச் செய்யலாம் அதைச் செய்யலாம் என்று யோசனைகள் செய்யவும், நடனாவுக்கு நேரமிருந்ததேயொழிய, வைத்தியரின் நிலைமையைத் தெரிந்து கொள்ள நேரமில்லை.

வைத்தியர், வெளியே போய்வரும் வழக்கத்தைக் கூட விட்டுவிட்டார். தோட்டத்துக்குச் செல்வார். மலர் தேடி நடனாவிற்குத்தர! அந்தப்புரச் சமையற்கூடம் போவார், பழம் பால் தேன் கொண்டுவர, நடனாவுக்காகவே! மற்ற நேரத்திலே, அவள் மஞ்சத்திலே, இவர் பக்கத்தில் ஒரு ஆசனத்தில் இந்த நித்யவிருந்து அவருக்கு எவ்வளவோ ருசி தந்தது. ஆனால், கனியைக் கண்டால் பறித்துத் தின்ன வேண்டுமென்ற நினைப்பு அதிகரிக்க அதிகரிக்க, வேலி முள் பாராது; தோட்டக் காவலாளி வருவானோ என்ற பயத்தையும் கவனியாது; பறிக்கத் தூண்டுமல்லவா! எவ்வளவு நாட்கள் தான் அவர் “தவங்” கிடப்பார். கடைசியில் வரங்கேட்டே தீருவது என்ற முடிவுக்கு வந்தார். வீரமணியை மறந்துவிட வேண்டும், வாழ்க்கைக்கு அவன் சரியான வழிகாட்டியல்ல, என்று துவக்கினார். அவளுடைய சலிப்பும் சங்கடமும் அவருக்கு என்ன தெரியும்! மேலும் மேலும், அதே விஷயமாகப் பேசலானார். மெல்ல மெல்ல, அவர் மனநிலையை வெளியிட்டார். நடனா மிரண்டாள்! இது ஓர் புது விபத்து, இதினின்றும் எப்படித் தப்புவேன் என்று திகைத்தாள். நிதானமாகவும், தன் உறுதியைக் காட்டும் விதத்திலும், வைத்தியருக்குக் கூறினான், முடியாது என்பதை. வீரமணியிடம் கட்டுண்டு கிடக்கும் அந்தத் கொடியிடையாளை, வைத்தியர் தமது வாக்குச் சாதுர்யம் வென்று விடும் என்று எண்ணித் தமது வேலையை மும்முரமாகச் செய்து வந்தார். ஓர் நாள் விவகாரம் முற்றிவிட்டது. வைத்தியரின் குரலில் வேதனை பிறந்தது, நடனாவுக்கு நடுக்கம் ஏற்பட்டது. வைத்தியர், சிறு குழந்தைக்குப் பெரியவர்கள் புத்திமதி கூறும் பாவனையிலே பேசினார்.

“அவன் ஒரு கொலைகாரன்; நான் இரட்சகன்! அவன் இரத்தம் குடிப்பவன்; நான் ஆபத்பாந்தவன். அவனால் எத்தனையோ குடும்பங்கள் கோவெனக் கதறின; ஆறுதலும் புன்சிரிப்பும், மகிழ்ச்சியும், நான் அளித்துள்ளேன் பல குடும்பங்களுக்கு. எத்தனையோ மாதர்கள் வயிறெரிந்து அவனைச் சபித்தனர்; எத்தனையோ தாய்மார்கள் என்னைக் கையெடுத்துக் கும்பிட்டு வாழ்த்தி இருக்கிறார்கள் தெரியுமா! எத்தனையோ இளைஞர்களின் வாழ்க்கையை அவன் பாழாக்கினான்; எத்தனையோ குடும்பங்களில் அணைய இருந்த விளக்குகளை நான் அணையாமற் செய்திருக்கிறேன். அவனுடைய கீர்த்தி, எவ்வளவோ, பேர்களைக் கல்லறைக்கு அனுப்பிற்று. அதனை யோசித்துப் பார். இவ்வளவும் நடனா, அவன் ஓர் துரோகி என்பதை மறந்து பேசுவது. அந்தச் செயலையும் கவனித்தால், அவனைக் காண்பதும் தீது என்றே கற்றோர் கூறுவர். கனியே! என்மீது கருணை காட்டு.”

வைத்தியர் பேசினார், அந்த வஞ்சிக்கொடி வேதனையுடன் புரண்டாள். விட்டானா? மேலும் தாக்கினான் வெறிகொண்ட வைத்தியன்.

“கொஞ்சும் கிளியைத் தள்ளிவிட்டு, கொத்தும் வல்லூறை வளர்ப்பார்களா! சேவை புரியும் என்னை உதாசீனம் செய்து விட்டுச் சாவைத்தரும் அவனை நேசிக்கிறாய். எட்டியை, இனிப்பென்று எண்ணுகிறாய். வேண்டாம் இந்தப் பிடிவாதம். வினயமாகக் கூறுகிறேன், உன் ஏவலுக்கு எதிர்நோக்கி நிற்பேன். உன் விழி எதைக் கூறுமோ அவ்வழி நடப்பேன். நான் மாதரிடம் மையல் கொண்டு அலைந்து திரிபவனல்லன். அந்தப் பருவமும் கடந்தவன். பெண்ணே! நீ மட்டும் என்னை அடிமை கொண்டால் போதும், உன் சேவையே, என் சிந்தனையாகக் கொண்டு வாழ்வேன்.” வைத்தியரின் மொழிகேட்டு, நடனா மன மிக நொந்தாள். அகலத் திறந்திருந்த அவளது கண்களிலிருந்து பெருகிய நீர்த்துளிகள், அவனைக் கண்டு பயந்தோடுவன போலக் கன்னத்திலே புரண்டன. வேதனையைப் பொறுத்துக் கொண்டு அந்த விவேக சிந்தாமணி வெகுண்டுரைக்காமல் சாந்தமாகவே, “வைத்தியரே! நல்ல மருந்துகள் இருக்கலாம்; ஆனால் நாடிப் பரீட்சை தெரிய வேண்டியது முக்கியமல்லவா? இல்லையேல், எந்த மூலிகை கிடைத்தும் என்ன பயன்? எந்த முறை தெரிந்தும் என்ன பிரயோசனம்? என் மனம் நாடுவது யாரை என்பதைக் கண்டறியாமல். உமது மனம்போன போக்கின்படி மொழிக்கு வழி விடுகிறீரே, அதுசரியா! நான் முழு மனதுடன் காதலிக்கும் அன்பரின் வீரத்தைக் கேலி செய்கிறீர். உமது பேச்சைக் கேட்ட பிறகு நீர் தந்த பச்சிலைப் பாகின் கசப்பு எனக்கு இனிப்பாகத் தோன்றுகிறது! ஈட்டிக்கும், வாளுக்கும், வேலுக்கும், சூலுக்கும் கணைக்கும், கழிக்கும் இடையே நின்று, போரிட்டு வெற்றி பல கண்ட வீரரை, நீர் கொலைகாரர் என்று கடிந்துரைக்கிறீர். தணலிலே வெந்து வெளியே வந்த தங்கமல்லவா அவர். அவருடைய உயிர் குடிக்க எத்தனை கூரிய வாட்கள் துடித்தன. எவ்வளவு அம்புகள் அவர் உடலைத் தைத்தன. உடலிலே எத்தனை வடுக்கள்! தேர்ச்சக்கரம், யானையின் துதிக்கை, குதிரையின் காற்குளம்பு, கோபங் கொண்ட வீரர்களின் ஆயுதம் இவைகட்குத் தப்பி வீரமாக வெற்றிக்கொடி நாட்டியவரையா நீர் தூற்றுவது, உமது பொறாமையும், துவேஷமும், போக உணர்வும் போக்க ஏதேனும் மருந்து கிடைக்கவில்லையா? என்று கூறினாள். வைத்தியரின் முகங் கோணிற்று; அகமோ ஆத்திரக் கூடாயிற்று. உடல் பதைக்க நின்றான் அவள் எதிரில்.

“ஒன்று கேளும் வைத்தியரே! உமது கீர்த்தி என் செவியில் வீழ்ந்தது” என்று பேச்சைத் துவக்கினாள் பாவை. அவன் முகத்திலே புன்னகை தவழ்ந்தது. “என் கீர்த்தியைக் கேட்டுமா என்னை நிராகரிக்கிறாய்” என்று கேட்டது அப்புன்னகை. “பிறகே உம்மை நான் கண்டேன்” என்றாள் நங்கை. உடனே, வைத்தியரின் முகத்தில் கவலை குடி கொண்டது. பருவ முதிர்ச்சி, உடல் தளர்ச்சி ஆகியவைகளை அவள் பார்த்தாள்; ஆகவே நம்மை ஏற்காள் என்ற எண்ணம் உண்டானதால், “மகிழ்ந்தேன்! போற்றினேன்” என்று மேலுமுரைத்தாள் அம்மயிலாள். வைத்தியனுக்குச் சந்தோஷம் மீண்டும் உதயமாயிற்று. நாம் உட்கொண்ட மூலிகை நமது முதுமையை மாற்றாமலா போய்விடும்; வயது அதிகமானாலென்ன? நமது கெம்பீரம் கெட்டாவிட்டது? அதைக் கண்டே அவள் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணினான் அந்த ஏமாளி.

அவள் மேலும் கூறினாள், “இன்றும் உமது திறமையை நான் பாராட்டுகிறேன். நான் உயிரோடு உங்கள் முன் நிற்பதே உமது அபூர்வ மருந்தின் சக்தியினால் தான் என்பதை உணருகிறேன். உமது உதவியை நான் மறக்க மாட்டேன்.” கிழவன், குமரியின் முகத்தை உற்று நோக்கினான். அந்தப் பார்வை, “உதவி செய்த என்னை உல்லாசப்படுத்து; உன்னை எனக்குத் தந்திடு.” என்று கேட்டது. அவனது நோக்கு, நினைப்பு, யாவும் நொடியிலே தூளாகும்படி, நடனா கூறினாள். “ஆனால், உம்மைக் காதலிப்பது முடியாத காரியம்; என் நெஞ்சை அவரிடம் நான் தந்து நெடுநாளாகிவிட்டன.”

வைத்தியருக்கு வலி அதிகரித்தது. விழியிலே கோபம் குதித்தெழும்பிற்று. “அவன் பிரமாதமான வீரன் என்று எண்ணுகிறாய். நடனா! அவன் போல் ஆட்கொல்லிகள் அனந்தம்; என் போல் இதமளிப்போர் இலட்சத்தில் ஒருவர் கூடக் கிடையாது” என்று கூறினார்.