அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


கலிங்கராணி
3
                     

“சரி! ஆரம்பமாய் விட்டது சதி! தேவீ! நடனம் இதைக் கொன்றுவிட்டிருக்க வேண்டும். விஷயத்தை மறைக்கவே கிளியைக் கொன்றுவிட்டாள்” என்றாள் பாலா.

அம்மங்கை, ஓங்கிக் கங்காவின் கன்னத்தில் அறைந்து என் முன் நில்லாதே! ஓடு!! என் அருமைத் தோழியின் மீது வீணான விபரீதத்தைச் சாட்டினாய், கிளியை நீதான் கொன்றிருக்க வேண்டும். கிளியையும் கொன்று கட்டுக்கதையையும் புனைந்து பேசுகிறாய். உங்கள் புராணத்திலே நடப்பது
போலவே நீ நடந்துகொண்டாய். பொல்லாங்குக்காரி! நீ ஒரு பெண்; ஆகவே உன்னைத் தூக்கிலிடச் செய்ய என் மனம் வரவில்லை போய்விடு அரண்மனையைவிட்டு” என்று கூறிவிட்டுத் தேம்பி நின்ற நடனத்தை அணைத்துக் கொண்டு, “சீ முட்டாளே! எவளோ ஒருவள் ஏதோ சொன்னால் நான் நம்புவேனோ! அவள் உறவே இனி நமக்கு வேண்டாம்; வா, நாம் போவோம்” என்று கூறி நடனத்தை அழைத்துக் கொண்டு அந்தப்புரம் போய்விட்டாள்.

கங்கா அழவில்லை! சிரித்தாள். விதை தூவி விட்டோம்; அறுவடைக்குக் காலம் இருக்கிறது என்று மனத்திற்குள் கூறிக்கொண்டு அரண்மனையை விட்டு வெளி ஏறி வெளியே நடந்தாள்.
கலிங்க நாட்டிலே கலக்கம் உண்டாகிவிட்டது. போர் தொடுக்கச் சோழன் கிளம்பினான் என்ற செய்தி கெட்டதும், ஒற்றர் ஓடோடி வந்து நடந்த வரலாற்றினைக் கூறிவிட்டனர். தூதுவரும் போர்தொடுத்தாகிவிட்டதென்று ஓலை கொண்டுவந்து கொடுத்துவிட்டனர். தமது மன்னன் வீணான விரோதத்தை வளர்த்துக் கொண்டதால், நாட்டிலே வேதனையே தாண்டவமாடப் போகிறதென்றுணர்ந்த மக்கள், கைபிசைந்து கொண்டனர். கண்களிலே மிரட்சி ஏற்பட்டுவிட்டது. போருக்குச் சித்தமாகப் படை பல இருந்தன. காட்டரண், கடலரண், மலையரண் ஆகியவைகளும் இருந்தன. ஆனால் மக்களின் மன அரண் இல்லை! மன்னனின் மமதை எனும் அரண் கிடந்தது. மதிகேடர்கள் கட்டிக் கொடுத்த மனக்கோட்டையிலே உலவிக் கொண்டிருந்தான் மன்னன்.

குலோத்துங்கனுக்கு உள் நாட்டிலேயே எதிர்ப்பு என்றும், பழைய மன்னரின் மகன் கட்சி ஒன்று இரகசியமாக வேலை செய்து வருவதாகவும், அதனால் குலோத்துங்கனிடம் குடிபடைகளுக்கு வெறுப்பு வளர்ந்திருப்பதாகவும், வெளிநாட்டின் மீது போர் தொடுக்கவோ, தொடுத்தாலும் வெற்றி பெறவோ முடியாத நிலைமையிலே சோழ மன்னன் இருப்பதாகவும், சோழ மண்டலத்து ஆரியர்கள் கூறினர் என் கலிங்க நாட்டு ஆரியர் மன்னனிடம் கூறினர். மந்த மதியினன் அதனை நம்பினான்; வம்பை, வரவேற்றான். போருக்குத் தானும் தயார் என்று பதில் ஓலை விடுத்தான். போரிட ஆயத்தமானான், சபை கூட்டினான்.

“மந்திரிமார்களே! பிரதானியரே! படைத்தலைவர்களே! குலோத்துங்கன் இந்தக் குவலயமே தனக்குச் சொந்தமெனக் கூறுகிறான். பிறர்மீது பகை கொண்டு போரிடத் துணிகிறான். சோழன் சூரன்; நாம் கோழைகளல்ல! அவன் வீரன்; ஆனால் நாம் மண் பொம்மைகளல்ல! அவனிடம் படைகள் உள்ளனவாம்; ஆனால் நம்மிடம் உள்ளவை பதுமைகள் என்றெண்ணுவதோ! கரியும் பரியும் அதிகமாம்; அதற்காகக் கர்வமும் பேதமையும் மிகுவதோ! கலிங்கத்தின்மீது குலோத்துங்கன் போர் தொடுத்துவிட்டான். நான் களம்புகச் சித்தமாகிவிட்டேன். உம்மைக் கலந்து ஆலோசிக்கவே இன்று சபை கூட்டினேன் என்று அனந்த வன்மன் கோபக்கனல் எழப் பேசித் தன் மீசையை முறுக்கினான். சபையிலே நிசப்தமாக இருந்தது. முதியவரான எங்கராயன் எனும் மந்திரியார் எழுந்து நின்று “மன்னவா! விந்தையான பேச்சு நிகழ்த்தினீர்! எம்மைக் கலந்தாலோசிக்கச் சபை கூட்டினீர் என்றீர்; ஆனால் களம்புக முடிவு செய்துவிட்டேனென்கிறீர். முடிவு கட்டிய பிறகு கலந்தாலோசித்தல் முறையோ? ஏற்றுக்கு அது? என்ன பயன்? முடிவு செய்யும் அதிகாரம் முடிதரித்த உமக்குண்டு. ஆனால் கோடிக்கணக்கான மக்களுடைய வாழ்வைத் தாங்கள் பிடி சாம்பலாகக் கருதினீர். எனவேதான் போரிட முடிவு செய்துவிட்டீர். பொதுமக்களிடை ஏதேனும் புகல இன்று சபை கூட்டுகிறீர் நன்று, நன்று உமது நியாயம்” என்றுரைத்தனர்.

மன்னன்: “ஓய் மந்திரியாரே! வயோதிகம் உமது உடலை மட்டுமே வளைத்துவிட்டதென்று எண்ணினேன்; உமது மதியும் வளைந்துவிட்டதென்று விளக்குகிறீர். சோழனின் சொல்லம்பு என்னைத் துளைத்தது. இனி போர் எனும் கவசம் பூண்டாலொழிய நான் வாழ்வதெங்ஙனம்? அவன் போர் என்றதும் நான் பொறு என்பதா? அவன் ‘வாள்’ என்றதும், நான் கேள் தேவனே என்று முறையிட்டு மண்டியிடவா? என்னை நீர் மன்னனெனக் கருதாதது ராஜத்துவேஷம் அதை நான் மன்னிப்பேன். என்னைப் போரிடக் கூடாது என்றுரைப்பது என்னை மானமற்றவனெனக் கூறுவதாகும். அது என் ஆண்மையைப் பழிக்குங் குற்றமாகும். அதை நான் மன்னிக்க மாட்டேன். உமது உயிர் தித்திப்பானால் வீட்டிலே இரும்; வெள்ளாட்டியருடன் விளையாடும். வீரர் ஒருவர் இருவர் உடன் வரட்டும்; களம் புகுவேன் நான்” என்று மன்னன் கடிந்துரைக்கவே, மந்திரி சோகித்து, “அரசே! ஆத்திரத்திற்குச் சாத்திரமில்லை. பிஞ்சில் பழுத்தது வெம்பிற்று என்பர். வீரம் வேறு; வீம்பு வேறு. அரசு எனும் சகடத்திலுள்ள நுகத்தடியை ஒரு பக்கம் மன்னன் மற்றோர் பக்கம் மந்திரிகள் தாங்கி இழுத்தல் வேண்டும் என்று ஆன்றோர் கூறுவர். மன்னா! காய்வதிலே கடுகத்தனையும் பயன் காண்பதற்கு இல்லை. கிழட்டுக் கோழையாக இதோ என்னைத் தாங்கள் கூறிவிட்டீர்கள். பதட்டமிக்க பாலகனே! என்று தங்களை நான் கூற முடியாது தாங்கள் மன்னர் என்ற காரணத்தால். ஒன்று கூறுவேன் அரசு எனும் எந்திரத்திற்கு மந்திரிகளே கண்கள்; மக்களே தாள்கள்; தோழரே தோள்கள்; ஒற்றரே செவிகள் என்று மேலோர் கூறுவர்” என்று சாந்தமாகவே கூறினார்.

“ஆம்! அந்தக் கண்களிலே சில மங்கிவிட்டன, அரசே, போர் புரியச் சித்தமான உமது வீரத்தைச் சபை வரவேற்கிறது! கலிங்கம் வரவேற்கிறது. வீரர் வரவேற்கின்றனர்!” என்று கூறிக்கொண்டே திசைமுகன் எனும் மந்திரி எழுந்து நின்றான். மலர்ந்த முகத்துடன் மன்னன் அவனை நோக்கி “சபாஷ்! நன்று! இஃதன்றோ நான் கேட்க விரும்பியது” என்று புகழ்ந்துரைத்தான்.

“குலோத்துங்கனின் படைகள் பூங்காவுக்குள் புகுவதுபோல் இங்கு வந்து சேருமோ! இடையே பாலாறு, குசைத்தலை, முகரி, கொல்லி, பெண்ணை, வயலாறு, மண்ணாறு, பேராறு, கோதாவரி, கம்பை, கோதமை ஆகிய பல நதிகளைக் கடக்க வேண்டும். கலிங்கத்தின் மீது பாயுமுன் அந்தப் படைகள் களைத்துப்போகும். ஆகவே, அவைகளை முறியடித்தல் எளிது என்பேன். மேலும் சோழ மண்டலம் சுபீட்சமாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பெருமையாகப் பேசப்படுகிறது. அரசே! அந்தச் சுபீட்சமே போர்த்திறனை மாய்த்துவிட்டிருக்கும், மங்கச் செய்தாவதிருக்கும். எனவே சோழனின் சூரப்புலிகளுக்குக் கலிங்கம் அஞ்சத் தேவையில்லை. அஞ்சுவோருக்கு நாம் வளைகள் பரிசு தருவோம்! வாளேந்தும் கரங்களுக்குக் கலிங்கத்தில் பஞ்சமில்லை” என்று திசைமுகன் பேசினான்.

துடுக்குத்தனமான அவனது பேச்சுக்குச் சபையிலே பலர் சபாஷ் கூறினர். போர் கூடாது என்று வாதிட்ட எங்கராயன் எனும் மந்திரியாரின் மதிவழி செல மன்னன் மறுத்துவிட்டான். மதங்கொண்ட யானை போல் ஆர்ப்பரித்தான். நெருப்புப்பொறி எத்துணைச் சிறிதாயினும் அது தங்க இடங் கிடைத்துவிட்டால், தங்குமிடத்தை அழித்தொழிக்கும் வகைபோல் கலிங்க மன்ன
னின் கெடுமதி எனும் சிறு தீப்பொறி தங்க இடமளித்ததால், கலிங்கமே அழியும் நிலையைப் பெற வேண்டியதாயிற்று.

“குலோத்துங்க மன்னனுக்கு நான் எளியவனாக இருக்கலாம், திசைமுகா! அவன் ஏவும் படைகளுக்குமா எளியனானேன்?” என்று கலிங்க மன்னன் கடுப்புடன் கேட்டான். “மன்னவ! மாற்றாருக்கு நமது வலிமையைக் காட்டச் சந்தர்ப்பமின்றி வாடினேன்.வெற்றி மாலையைத் தங்கட்கு விரைவில் தருவேன். ஏன்? சோழனின் சுந்தரகுமாரி அம்மங்கையின் கரத்தையும் தர இயலும்; சோகம் விடுக! உறுதியுடன் நமது படைகள் போரிடும். புதுப்புது ஆயுதங்கள் குவித்துள்ளேன். ஆயுத ஒளியே புதுப்புது ஆயுதங்கள் குவித்துள்ளேன். ஆயுத ஒளியே சோழனின் படைவீரரின் கண்களைக் கூச வைக்கும்” என்று தைரியம் கூறினான் திசைமுகன். சாந்தம் போதித்த எங்கராயன், “ஏனப்பா திசைமுகா! நீ புது ஆயுதங்களைப் பற்றிப் பூரிப்புடன் பேசுகிறாய். உன் பேதமையை என்னென்பேன்! சோழ நாட்டிலே படைக்கலங்கள் மிகப் பழையன! புதியனன்று! ஒளி இழந்தன, வளைந்தன. இன்று அவைகளை உலைக்கூடங்களிலே காய்ச்சியும் தட்டியும், நீட்டியும், மடக்கியும் சரி செய்துகொண்டிருப்பார்கள். புது படைக்கலன்கள் உன்னிடம் போரறியாக் காரணத்தால், பழைய ஆயுதம், அங்கு போரிட்டுப் போரிட்டும் பழகியதால்! உன் ஆயுதம் ஒளி உள்ளன; உறையிட்டுக் கிடந்தால். அவர்களின் ஆயுதங்கள் எதிரியின் உடலைக் கீறி இரத்தத்தில் இறங்கி, கரியைத் துண்டித்துப் பரியைச் சிதைத்து, ஒளி இழந்தும் வளைந்தும் போயினவை. பளபளப்பான ஆயுதம் உள்ளவனே! வளைந்த ஆயுதக்காரன் வலிமைமிக்கான், போரிலே புரண்டெழுந்தவன் என்பதையன்றோ அவனது படைக்கலங்கள் காட்டுகின்றன. உனக்கு ஆயுதம் பளபளப்பு! குலோத்துங்கனுக்கோ கீர்த்தி ஒளிவிட்டு வீசுகிறது! வீரன் உடலில் பல வடுக்கள் உள்ளன! வீம்புக்காரனுக்கு வடு இராது, முன்னவன் போர்க்களம் புகுந்தவன் என்பதன் அத்தாட்சி அந்த வடுக்கள், பின்னவன் போகப்புரட்டன் என்பதற்கு அத்தாட்சி. வடுவற்ற வடிவமாக அவனிருத்தல். கலிங்கத்தின் நிலையை உன் கர்வம் எனும் அளவுகோல் கொண்டு அளக்கிறாய்” என்று கண்டித்தார். மன்னன் வெகுண்டு, “நீர் கலிங்கநாட்டு மந்திரியா? சோழனின் ஒற்றரா? என்று கேட்டுக் கொதித்தான். ஆனால் அந்தச் சமயத்தில் அவன் சிந்தையை மருட்டிடும் சம்பவம் நடந்தது. ஓடோடி வந்த வேலையாள் ஒருவன், “அரசே! வீரமணி என்ற குதிரைப் படைத்தலைவன் நதிகளைக் கடந்துவிட்டான். கலிங்கத்தின் எல்லையிலே அவனது குதிரைப்படை புகுந்துவிட்டது” என்ற செய்தியைக் கூறினான். மன்னன் திசைமுகனைப் பார்த்தான்; திசைமுகன் திக்கெட்டும் மாறி மாறி நோக்கியபடி நின்றான்.

“மலைக்காதே மன்னா! வீரமணி குதிரைப்படையுடன் வரட்டும்; ரமணிபோல், அவன் ரணகளத்தை விட்டு ஓடும்படி செய்ய நமது படைகளை ஏவுகிறேன். சளைக்காதே; சமரிலே சங்கடங்கள் நேரிடுவது சகஜந்தான்; ஆனால், சோழனின் சைன்யத்தை நமது வீரமெனும் சண்டமாருதத்தால் அழித்தொழிப்போம். இளிக்காதே எங்கராயா! திசைமுகனின் தீர்மானம், இலேசென்று எண்ணாதே. நிற்காதே காவற்காரனே! ஓடிச்சென்று, என் உத்திரவை படைத்தலைவர்களிடம் கூறு, முரசு கொட்டு, தோள் தட்டு, வாள்வீசு! வாகைதேடு!” என்று வெறி பிடித்தவன்போல் திசைமுகன், மன்னனைப் பார்த்து ஓர் மொழியும், மதியுரைத்த மந்திரியைப் பார்த்து ஓர் மொழியும், வேலையாட்களைப் பார்த்து வேறோர் மொழியுமாகப் பேசினான்.

“போர்! போர்! கடும் போர்! சோழனின் படைகளுடன் போர்! என்ற கூக்குரலும், “எல்லை”யிலே எதிரிப்படை வந்துவிட்டதாம், குதிரைப்படை கிளப்பிய தூசி கலிங்கத்தை நோக்கி கடுகி வருகிறதாம்! வீரமணியாம், தொண்டைமானின் ‘அம்பு’ போன்றவனாம், துரிதமாகப் பாய்ந்திடும் பரிப்படையினனாம்; போர் புரிவதிலே ஆர்வமிக்கவனாம், அவன் புகழ், விரிந்த மலரின் மணமென எங்கும் வீசுகிறதாம்!” என்று வீதிகளிலே பேசிக் கொண்டனர். பல வீடுகளிலே விம்முங் குரலும், வியர்க்கும் முகமும், நீர்வீழ்ச்சியன்ன கண்களும், வெடவெடக்கும் உடலும் கொண்ட வனிதையர் வாடிக் கிடந்தனர்.

கலிங்கனின் படைகள் அவசர அவசரமாக அணி வகுக்கப்பட்டன. வீரமணியின் குதிரைப்படையினைத் தாக்க கலிங்கத்தின் பரிப்படையினர், கிளம்பினர். கிளம்புங்காலை, மன்னன் கண்முன் பிணமானாலும் ஆகலாமேயன்றிப் பேடியாகலாமோ என்றெண்ணினர். எனவே சீறினர். செந்தூள் பறக்கக் குதிரைகள் பாய்ந்தன. எல்லையை அணுகும்போதே எதிரி அணி வகுத்து நின்ற சோழனின் குதிரைப் படை மீது கணைகளைக் கடுவேகமாக விடுத்தனர். அம்புகள் பாய்ந்து வருவதால் குதிரைகளின் உடலமும், வீரர்களின் உடலமும் தைக்கப்பட்டு படைவரிசை கலைக்கப்பட்டு விட்டதால் கலைந்துபோன படையினுள்ளே புகுந்து வாட்போரிட்டு, வதைத்துவிட வேண்டும் என்பது கலிங்கக் குதிரைப் படைத்தலைவனின் கருத்து.

வீரமணி, வீரமும் யுக்தியும் அறிந்தவன். படை வரிசை கலைவது தனக்குப் பாதகமாகவும், எதிரிக்குச் சாதகமாகவுமே இருக்கும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டான். தந்திரமாக, எதிரியின் படையை நெருங்கி வருமாறு செய்து, போரிட வேண்டும் என்பது வீரமணியின் திட்டம். எனவே கேடயங்களால், தங்களை அம்புமாரியினின்றும் தடுத்துக்கொள்ளப் போர்வீரர்கள் பயிற்சி பெற்றிருப்பினும், யுக்தியாகப் போரிட வேண்டித் தன் படையைத் திருப்பிப் பின்நோக்கிப் போகும்படியும், ஆனால், வேகமாகச் சென்றபோதிலும் விநாடியிலே திரும்பி எதிர்நோக்கிப் பாயும் நோக்கத்தை மறக்கலாகாதென்றும் கூறி, உத்தரவிட்டான். சோழனின் குதிரைப் படைகள் பின்வாங்கி ஓடுகின்றன என்று நம்பிய கலிங்கக் குதிரைப் படைத்தலைவன் கைகொட்டி நகைத்து, “வீரர்காள்! விடாதீர் அந்த வீம்புக்காரரை” என்று கூறினான். கலிங்கப்படை களிப்புடன் பாய்ந்து சென்றது. வேகமாகப் பாய்ந்து வரும் வேளையிலே வீரமணி தனது குதிரைப் படையின் வரிசையை இரண்டாகத் துண்டித்து இடையே கலிங்கப்படை புகுவதற்கு வழி தோன்றிடச் செய்தான். முறையாகச் செய்யப்பட்ட இதனை உணராது, முறியடித்துவிடுவார்கள் என்று கிலிகொண்டு, சோழனின் படை பிளந்துவிட்டது என்று கலிங்கப்படையினர் கருதி, படை வரிசை இடையே ஏற்பட்ட பிளவுக்குள் பாய்ந்தனர், பாய்ந்துதான் தாமதம், வீரமணி, “தூக்குவீர் கத்தியை! தாக்குவீர் எதிரியை!!” என்று கர்ஜனை புரிந்தான். உடைவாள் உருவினர் சோழ வீரர், இடையே வந்த கலிங்கக் குதிரைகளின் கால்களைத் துண்டிக்கலாயினர்! ஒரு வெட்டு குதிரையின் காலில்! குதிரை குப்புற வீழ்ந்ததும், கலிங்க நாட்டானின் கழுத்துக்கு மற்றோர் வெட்டு! அவன் குதிரையுடன் பிணமாவான்! இத்தகைய முறையினால், கலிங்கக் குதிரைப் படையிலே பலத்த சேதத்தை உண்டாக்கி விடவே, மிகுந்திருந்த படை ஊருக்குள் ஓடிவிட்டது. கோட்டை வாயிற்கதவைத் தாளிட்டுக் கொண்டது. கோல் கொண்டோன் கோபக்கனல் உமிழும் கண்களுடன் அவர்களை நோக்கிக் “கோழைகளே! நானே நேரில் களம் வருகிறேன். நால்வகைப் படையும் நம் முன் கொண்டு வருக” என்று நவின்றான். படையும் பலமாகக் குவிந்தது; கலிங்க மன்னனின் கோபம் காட்டுத் தீ போல் காணப்பட்டது. நறநறவெனப் பற்களைக் கடித்தான். அவனுடைய முகம் சிவந்துவிட்டது. கையிலே உருவிய வாளேந்தி நின்றான். அன்று அவன் இருந்தது போன்ற வீர உருவத்துடன் அதற்குமுன் கலிங்கம் அவனைக் கண்டதேயில்லை. உறுதி கொண்டான். ஊர் அழியினும் சரியே; படைமுழுதும் பாழாயினும் சரியே; உடலில் உயிர் உள்ளமட்டும் போரிடுவேன். என்று சூள் உரைத்தான். சூரனெனக் கிளம்பினான் களம் நோக்கி.

“கரடுமுரடான பாதை! காட்டாறும் கடுவெளியும் கொண்டது. காலிடறினால் குழியில் விழ வேண்டும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை இராது. நீரோடை காதத்திற் கொன்றுமிராது. உதடுலர்ந்து, உளம் உலர்ந்து, உயிர் உலரும் நிலை! அத்தகைய கொடிய இடம்! மான்கள் தாகவிடாய் கொண்டு தத்தளித்து ஓடும். வேடுவரின் அம்புகள் வேறு பறந்து வரும். மிக்க பயங்கரமான பிரதேசம். ஆகவேதான், உன்னை அழைத்துச் செல்ல என் மனம் இடந்தரவில்லை” என்று காதலன் கூறிட “தலைவரே! முன்பு உம்மை விட்டுத்தனியே எங்ஙனம் பிரிந்திருப்பது என்ற ஒரே எண்ணத்தால் மட்டுமே உம்முடன் வருகிறேன் என்றுரைத்தேன். நான் வரலாகாதென்
பதற்காக நீர் போகும் வழிகள் பற்றிய வர்ணனையைக் கூறக் கேட்டபின், உம்முடன் வந்தே தீருவது என்று உறுதிகொண்டுவிட்டேன். என் ஆருயிரே! பயந்தேன் மிகவும்; நீர் போக இருக்கும் இடத்தின் கொடுமை என்னைக் கலங்க வைத்துவிட்டது. எவ்வளவு இன்னல்! எவ்வளவு இடுக்கண்! இத்தனையையும் நீர் சகிக்க வேண்டுமோ! நினைக்கும்போதே நெஞ்சம் திடுக்கிடுகிறது. ஆனால், அத்தகைய பிரயாணத்தைத் தாங்கள் செய்கையில் பாவியேனாகிய நான் இங்குச் சுகமாக இருப்பதா! நீர் நீருக்குத் திண்டாடுவது இங்கு எனக்குப் பானகமா! நீர் கரடுமுரடான பாதையிலே கால்கடுக்கச் செல்வது, இங்கு நான் சோலையில் சொகுசாக இருப்பதா! பசியின் கொடுமையை நீர் அனுபவிக்கப் பாதகி நான் இங்கு ருசியுள்ள உண்டி தின்று உடலைக் கொழுக்க வைப்பதா! பாறையிலே நீர் படுக்கப் பஞ்சணையா இந்த உடலுக்கு? வேண்டாம்! கூடாது! ஒருபேதும் சம்மதியேன். உமக்கு வரும் கஷ்டத்தை நான் சரி பாதி பங்கிட்டுக் கொள்வேன். உம்மை விடேன்; பிரியேன்” என்று காதலி கூறிவிட்டாளாம். வழியின் கேட்டை எடுத்துரைத்தால் வனிதை வர அஞ்சித் தன்னைத் தனியே போகவிடுவாள் என்று கருதிய காதலன் ஏதுங்கூற இயலாது நின்றானாம்.

நடனராணி பழந்தமிழ்ப் பெண்களின் தன்மை கொண்டவள். எனவே, போர் இப்படி இருக்கும், இன்னின்ன ஆபத்துக்கள் உண்டு என்று பிறர் கூறிடக் கேட்டு, அத்தகைய ஆபத்தான வேலையிலே தன் அன்பன் ஈடுபட்டிருக்கும் வேளையிலே, அரண்மனையிலே தான் இருப்பதை எண்ணி ஏங்கினாள்! எவ்வளவு கஷ்டமோ! என்னென்ன ஆபத்தோ! எத்தனை அம்புகள் அவர்மீது சீறிப் பாய்ந்து வருமோ! எவனெவன் வாளை வீசுவானோ! வேல், வேழம், வெஞ்சின வீரர்கள், வாள், வீரரின் தோள், பலப்பல படைக்கலம், பாய்ந்தோடி வரும் பரிகள், இத்தனையையுங் கண்டு, வீரமணி களத்திலே இருக்கும் வேளையிலே, அரண்மனை வாழ்வா நமக்கு என்று எண்ணி நடனராணி நொந்தாள். வீரமணியுடன் கொஞ்சி விளையாடிய காட்சிகள், பலப்பல மனக்கண்முன் தோன்றித் தோன்றி அவளை வாட்டின. புன்னை மரநிழலும், முல்லைப் புதரும் அல்லி நிறைந்த ஓடையும், அரண்மனை மருங்கும் அவள்முன் தோன்றித் தோன்றிப் பரிகசிக்கத் தொடங்கின. ‘இங்கு உன்னைப் பிடித்திழுத்து இதழ் சுவைத்தானே, அந்த இன்ப விளையாட்டல்ல நடனம்; இப்போது மரணம் ஒருபுறம் நின்று கொண்டிருக்கும், அவனுடைய உயிரைப் பிடித்திழுத்து என்னை அணைத்துகொள்ள வா! என்று ஆர்ப்பரிக்கும்! அதன் அணைப்பிலே அவன் அகப்படக்கூடாது. ஆமாம்! அல்லியும், முல்லயும், அல்ல, அவனெதிரிலே! யானையுஞ்சேனையும்! குயில் கூவாது கோரமான கூக்குரல் கேட்கும். “அவன் களத்திலே நிற்கிறான்” என்று நடனராணியின் காதருகே யாரோ சதா கூறுவதுபோல் எண்ணிக்கொண்டு ஏங்கினாள். தனது காதலன் வீரன் என்பதும், வெஞ்சமர் பல புரிந்து, வீரக்கழல் அணிந்தவன் என்பதும் அறிவாள். அறிந்துமென்ன? ஆபத்து ஆபத்துத்தானே! “போர்! போர்!! என்று ஏன் அடிக்கடி இத்தகைய பொல்லாங்கு ஏற்படுகிறது?” என்றுத் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். கண்ணிலே வேல் பாய்ந்தாலும், களத்தைவிட்டு ஓடாதவன் என்ற, புகழ்மொழிக்காகப் புண்பட்டுக் கிடப்பதா! ஏன் போர் என்ற பேச்சுக்கே இடமில்லாதபடி ஓர் புதுமுறை அமைக்கக்கூடாது என்றும், குருதியிலே குளித்து, பிணத்தின் மேல் நடந்து, புகழ் தேடுவதைவிட வேறு வழியில்லையா, இந்த ஆடவர்களுக்கு! கலை, சிற்பம், காவியம் முதலியன போதாதா புகழ் தேட என்றும், ஏதேதோ எண்ணினாள் நடனராணி. அந்தப் போரின்போது அவளுக்குப் போரின் பயங்கரம் மனத்திலே புகுந்ததுபோல், வேறெப்போதும் இருந்ததில்லை, பார்க்குமிடமெங்கும் போர்க்களமாகவே தென்பட்
டது! எந்தச் சத்தமும், சண்டையிலே கிளம்பும் ஒலியெனச் செவிக்கு இருந்தது. யார் எதைப் பேசினாலும், போர்க்களப் பேச்சாகவே தோன்றலாயிற்று. இள நங்கையின் இருதயம் அனலிடுமெழுகாயிற்று. அரசிளங்குமரி நடனாவின் மனநிலை உணர்ந்தாள்; பரிதாபங் கொண்டாள். போர் மிக்கப் பொல்லாங்கானது என்று பேசி நடனாவின் நொந்த உள்ளத்திற்குச் சற்றே ஆறுதல் வரட்டும் என்று அம்மங்கை பேசலானாள்.

கலிங்கப்படைகளை நம் வீரர்கள் கண்டதுண்டமாக்குவர். அதிலே எனக்குத் துளியும் சந்தேகங் கிடையாது. ஆனால், போர் என்றால் கஷ்டம், கலக்கம் இருந்துதான் தீரும், இது சகஜம். அரைக்காத சந்தனம் மணப்பதேது! ஆயினும், எனக்கென்னமோ நடனம் போர் என்ற போக்கே பிடிக்கவில்லை. புகழ் வருகிறது என்ற போதிலும், புண் வந்த பிறகல்லவா புகழ்!

“ஆமம்மா! ஆபத்து முதலில். அதைக் கடந்த பின் அழியாப் புகழ், ஆன்றோர் அதைத்தானே அகமகிழ்ந்து வரவேற்றனர்”

“என்றாலும், உலகின் எழில் பாழ்பட்டு, மக்கள் வாழ்வு சிதைந்து, பல குடும்பங்களில் கண் கசிந்து புகழைத் தேடுவது உசிதமா என்று நான் கேட்கிறேன்.”

“போர்க்குறிக் காயமே புகழின் காயம்!”

“போடி! போரின்றி மக்கள் வாழ்ந்தால், புகழே இராதோ! புலவரின் கவிதை, புகழ் தேடித்தரவில்லையோ!”

“தருகிறது! ஆனால், புலவரும், ‘புகழ் களம் புகுந்தோர்க்கே’ என்று கூறினரே.”

“ஏதோ புகன்றனர்! எவரோ மொழிந்தனர்! எத்தனை உள்ளம் பதைக்கிறது, ஒருமுறை போர் என்றதும். இதோ வீரமணி, களம்புகுந்தது முதல் நீ விம்முறாத விநாடி உண்டா?”

“என்னை மன்னிக்க வேண்டும், தேவி! நான் கலங்குவது உண்மையே! அந்த வீரனுக்கேற்றவளல்ல நான்; கோழைத்தனம் என் உள்ளத்திலே கூத்தாடுகின்றது.”

“இயற்கைதான் தோழி! எனினும் அஞ்சாதே! வீரமணி வெற்றி மாலையுடன் வருவான். உனக்கு மாலையிடுவான். நம் படைபலம் நீ அறியாததா? இதே நேரத்தில் கலிங்கத்தில் நடக்கும் கடும் போரிலே எதிரிகள் தோற்று ஓடுவர், நமது படை முன், எந்த மன்னனின் படை நிற்க முடியும்?”

அரண்மனையிலே இந்தப் பேச்சு! காஞ்சியிலே மன்னன், கோபங்குறையாது வீற்றிருந்தான். களத்திலே கடும்போர் நடந்து கொண்டிருந்தது.

இரு நாட்டுப் படைகளும் கடலைக் கடல் எதிர்ப்பதுபோல், ஒன்றை ஒன்று எதிர்த்தன. உக்கிரமான போர்! உருண்டன தலைகள்! மிரண்டன கரிகள்! பதைத்தன பரிகள்! பாரகம் செங்குருதி மயமாயிற்று! பகல் இரவு போலாயிற்று. பட்டினமும் புறமும் காட்டொலி! பயங்கரமாகப் போர் நடந்தது.

கடலிலே அலைகள் பாய்ந்து வருவதுபோல குதிரைப் படைகள் ஒன்றின்மீதொன்று, நுழை கொழிக்கும் வாயுடன் பாய்ந்தன. மலைகளை மலைகள் தாக்குவது போலிருந்தது, மதங்கொண்ட யானைகள் ஒன்றை ஒன்று தாக்குவது, தேர்களை தேர்கள் தாக்கின, மேகங்கள் ஒன்றோடொன்று மோதுவதுபோல். மின்னல் ஒளிபோல் வாள்வீச்சு வேல் வீச்சும்! புயற் காற்றிலே சிக்கிய மரங்கள் கீழே சாய்வதுபோல், வில் வீரர்கள் விடும் கணைகள் வீரர்களை வீழ்த்தின. வெட்டி வீழ்த்தப்பட்ட யானைகளின் உடல்களைக் கரையாகக் கொண்டு வீழ்ந்துப்போன வீரர்களின் குருதி ஆறென ஓடி அதிலே புதுவெள்ளம் அடித்து வரும் பலபொருள் போல், தலையறுபட்ட உடலம், கைகால் துண்டிக்கப்பட்ட உடலம், சிரங்கள், கைகள், கால்கள், குடல்கள், யானையின் துதிக்கைகள், குதிரையின் உடல் முதலியன மிதந்தன. இருகையிழந்தவாறு எதிரிலே மிரண்டு ஓடிவரும் யானையின் காலடியிலே சிக்கிக் கூழாக்கப்படுவர். குதிரை ஓடும்; கணை பாயும்; கழுத்தறுந்து ஒருபுறம் வீழும் உடலம் குதிரை மீது சாய்ந்து, கீழே இரத்தத்தைச் சொரியும்! கணைகளால் கண்ணிழந்த யானைகள், காலிடறி இரத்தச் சேற்றிலே வீழும். கையறுபட்டவர்கள். கண் இருப்பதால் களத்தின் கோரத்தைக் கண்டும், ஏதுஞ்செய்ய இயலாதால், ஐயோ!” என்று ஓர் முறை கூவுவதும், எதிரிகளைக் கண்டால், கையிழந்ததைக் கருதாது, ‘விடாதே! பிடி! வெட்டு! வீழ்த்து!’ என்று கூவுவதுமாகச் சபையிலே, மகிழ்ந்தோர் அளித்த மாலையுடன் விளங்கும் புலவர்கள்போல், எதிரியின் யானை தன் துதிக்கையால் வீரனைத் தூக்கிச் சுழற்றி கழுத்தை நெறிக்க, அந்த நேரத்திலும் நெஞ்சுறுதியுடன், வாள்கொண்டு அவன் துதிக்கையைத் துண்டிக்க, அறுபட்ட துதிக்கை மாலை போல் அவன் கழுத்திலே இருக்க, வீரன் கீழே வீழ்ந்திட, யானையின் கால் அவனை நசுக்க, இறந்து கிடக்கும் வீரர்கள் பலர்!

“மன்னவன் மிக்க வல்லமைசாலி! அவன் படைத் தலைவன் மிக்க திறமைசாலி! மிக்க வீரமுடையன சோழனின் படைகள். களத்திலே வெற்றி உண்டு. கலிங்கப் போரிலே வெல்வான். ஆனால்...” என்று ஓர் தவசி காஞ்சியில், ஒரு வீதி ஓரத்தில் நின்றுகொண்டு, எதிரே கூடியிருந்த மக்களிடைப் பேசலானான்.

போர்ச்செய்திகள் கேட்கக் கூடினர் மக்கள். தவசி ஏதோ கூறுவது கேட்க, மனம் தாளவில்லை.

“ஆனால்... என்று இழுப்பானேன்” என்றான் கூட்டத்திலே ஒருவன்.

“ஆனால்! ஆம், புறப்பகைவர்களை வெல்கிறான் மன்னன்; அகப்பகைவர்களை அழிக்கும் வகை தெரியான்” என்றார் தவசி.

“வேதாந்தம் பேசுகிறீரோ? வேலெடுக்க வகையறியாதார், நூல் கொண்டு, ஏதோ பிழைப்பர் என்பது தெரியும் எமக்கு. உமது சாத்திரத்தை இங்குக் காட்டாதீர்” என்றனர் கூட்டத்தில் பலர்.

தவசி சிரித்துக்கொண்டு, “வேற்படையாளரே! இந்த வேதாந்தி பேசுவது வீண் என எண்ணாதீர். நாங்கள் வளர்க்கும் ஓமத்தீயைவிட, நாட்டுப்பற்று உள்ளவர் மனத்திலே எழும் கோபத்தீயே தேவருக்கும் மூவருக்கும் ஏற்றமுடையது. நான் வீரத்தைக் குறைகூறினேனா! வெற்றி சோழனுக்கில்லை என்றுரைத்தேனா! இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்? நான், சோழன் வெளிநாடுகளிலே வெற்றி பெற்றுப் பயன் என்ன, சோழமண்டலத்திலேயே பகைவர்கள் உண்டு; அவர்களை ஒழிக்கவில்லையே, என்றுதான் கூறுகிறேன்” என்றார்.

“விந்தை! எமது மன்னனுக்கு, உள் நாட்டில் பகைவரா! ஓய்! யோகியே! ஊரார்முன் உளறுகிறீர்” என்றனர் மக்கள்.

“உண்மையை உரைத்தேன். அது உளறுவதாக உமக்குத் தோன்றுகிறது. ஊர் அழிய அழிய, உமது மன்னனின் புகழ் வளர்கிறது. நீர் களிக்கிறீர்; உமக்குக் களிப்புப் பிறக்க அங்கே, போர்க்களத்திலே கண்ணீரும் இரத்தமும் கலந்தோடுகிறது ஆறுபோல். இங்கு நீங்கள் வெற்றி விழா கொண்டாடப் போகிறீர்கள், அங்குப் பேய்கள், உமது தோழர்களின் உடலை விருந்தாக உண்டுக் கூவும்” என்றான் முனிவன்.

“பேயும் பூதமும்! பிதற்றுகிறான்” என்று நகையாடினர் மக்கள்.

“தானென்ற உலகத்தில் சிறிதுபேர்கள்,
சடைபுலித்தோல் காஷாயம் தாவடம் பூண்டு
ஊனென்ற சிவபூசை தீட்சை என்பார்
திருமாலைக் கண்ணாலே கண்டோ மென்பார்-,
கானென்ற காட்டுக்குள் அலைவார் கோடி
காரணத்தை யறியாமல் கதறுவாரே!”

என்றுரைக்கும் மனப்பான்மை கொண்டு, வீரத்தையும் மானத்தையும், உழைப்பையும் மதித்து வாழ்ந்து வந்தத் தமிழர்கள், வஞ்சகக் கருத்துக்களையும், கோழைக் குணத்தையும் வரவேற்பரோ! மானிடம் என்பதே வாள்! அதை வசமாகக் கொண்டிட இரு தோள்! மானிடம் என்பது குன்று; அதன்மீது தமிழர் நின்று வாழ்ந்த காலம் அது. அவர்கள் அக்குன்றின்மீது நின்றிருந்த கோலம், மாற்றாரின் கண்களை உறுத்திற்று. காய்ந்து கருகிய வெளியையும், கற்பாறையையும், கடுஞ்சுனையையும், கண்டு கவலையை உண்டு, கால்நடைகளை மேய்த்துக் கொண்டு வாழ்ந்து வந்த ஆரியரின் தேய்ந்த வாழ்வைக் கங்கைக்கரையின் பசும்புற்றரையும் மணி கொழிக்கும் வயலும், வயல் மருங்கே அமைந்திருந்த தோட்டங்களும் துலக்கிற்று. பச்சை கண்டு இச்சை கொண்ட நச்சு நினைப்பினர், கச்சையை வரிந்து கட்டிக் கட்கமெடுத்துப் போரிட்டு வாழும் தமிழரைப் பின்னர் கண்டனர். தங்கக் கோட்டைகளிலே வைரமணிகள்போல் ஒளி விட்டு வீசி வந்த தமிழரிடை, போரிடுவதோ இயலாது. ஆனால் என்ன? வீழ்த்த வீரம் இல்லையெனினும், வஞ்சமெங்கே போயிற்று! வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமாம். ஆரியருக்குக் காய்ந்த புல் - தர்ப்பையே - தமிழரை, தந்திரத்தால் வீழ்த்த ஆயுதமாயிற்று. “நாங்கள் இருக்கும் விதங்கண்டு நகைப்பீர் தமிழரே! எமது தேவர்கள் மகா பராக்கிரமசாலிகள்! மழை பெய்வது எமது வருணதேவனால்! நெருப்புக்கு எமது அக்கினி பகவானே கர்த்தா! காற்றுக்குக் காவலன் எமது வாயு!” என்று கட்டுக்கதைகளை விட்டனர். தமிழரிலே, தெளிவைத் துறந்தோர் நம்பினர். சந்து கண்டதும் நுழையுஞ் சர்ப்பம்போல், மூடமதி இதுதான் தக்க சமயமெனக் கண்டு, தமிழரின் உள்ளத்திலே புகலாயிற்று. அந்த நிலை வந்ததாலேயே தமிழரிடம், ஆரியமுனி, ஆண்மையை இகழ்ந்து பேசிட, அரசனைப் பழித்திட, அந்த லோகம் இந்தலோகம் என்று பிரித்துப் பேசிடத் துணிந்தான். அன்று தமிழ்ச் சமுதாயம் தலை குனிந்திருக்கவில்லை! சமுதாயத்திலே சிலரே சாய்ந்திருந்தனர். எனவே ஆரிய முனிக்குப் பேசிடல் மட்டுமே எளிதாயிற்று; நம்ப வைத்தல் முடியாது போயிற்று. எனினும் விதை தூவிவிட்டு, வானத்தை நோக்கிடும், வறண்ட நிலத்துக்காரன்போல், ஆரியன் தனது சரக்கை அவிழ்த்தான்.